ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன சிறுகதை

பழிக்குப் பழி; வஞ்சத்துக்கு வஞ்சம் என்று வீராவேச வசனங்கள் பேசி, தமக்குத் துன்பம் இழைத்தவரை என்றென்றும் நெஞ்சில் தாங்கி, தங்கள் மனத்தை கொந்தளிப்புடனேயே வைத்திருப்பது பெரும்பாலானோரின் இயல்பு!
பழிவாங்கும் எண்ணம் மனத்துள் நிலைநின்றால், ஆரோக்கிய சிந்தனைகள் எப்போதுமே எழாது! பிறகு எப்படி பகவத்தியானம் கைகூடும்!? வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டுமல்ல, வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள் கூட, தொலைக்காட்சி தொடர்களில் வரும் பழிவாங்கும் கதைகளைப் பார்த்து விட்டு அதையே வெளியிடங்களில் விவாதித்தும் வருவதைக் கண்ணுறுகிறேன்.
அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன சிறுகதைதான் நினைவுக்கு வரும்.
துறவி ஒருவர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். மரத்தின் மேலிருந்து நீரில் தேள் ஒன்று தவறி விழுந்தது. துறவி, நீரில் விழுந்த தேளை கையில் எடுத்துத் தூக்கி கரையில் போடப் போனார். ‘சாகக் கிடக்கும் தன்னைக் கைதூக்கிக் காப்பாற்றுகிறார் துறவி’ என்ற ஞானம் தேளுக்கு இல்லை. வழக்கம் போல்தன் இயல்பான குணத்தைக் காட்டி, துறவியின் கையில் கொட்டியது. வலியால் துடித்த துறவி, தேளை நீரில் தவற விட்டார். இருப்பினும் தன் இயல்பான கருணையைக் கைக்கொண்டு, மீண்டும் கையில் எடுத்துத் தூக்கி கரையில் போடப் போனார்... தேளோ மறுபடியும் கொட்டியது.
இதனைக் கரையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், துறவியிடம் கேட்டார், துறவியாரே... தேள்தான் வலி ஏற்படுத்தும் விதமாக் கொட்டுகிறதே! நீங்கள் ஏன் அதைத் திரும்பத் திரும்பகையில் எடுத்து கொட்டுப்படுகிறீர்கள். அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே" என்றார்!
துறவி கூறினார்... கொட்டுவது தேளின் குணம்; துடிக்கும் உயிரைக் காப்பது மனிதனின் குணம். அதன் இயல்பை அது விடாதபோது, என் இயல்பை மட்டும் ஏன் நான் விட வேண்டும்?"
பழிவாங்கல் என்பதும் சினம் கொள்ளலும் சாத்வீக ஆன்மிக சாதகர்க்குத் தகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மனம் ஒருநிலைப்படுதலே ஆன்ம சாதனைக்கு உகந்தது. அதற்காக சினம் கொள்ளலே கூடாது என்ப தில்லை! சான்றோர்க்கும் சினம் வரும்! அது எத்தகையது என்பதை ஔவையார் தரும் பாடல் ஒன்றில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
‘கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்து
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே - விற்பிடித்து
நீர் கிழிய எத வடு போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்’
கற்களை வெட்டிப் பிளந்தால் மீண்டும் ஒட்ட வைக்க முடியாது. அது போன்றது கயவர் சினம். பொன்னை வெட்டி உருக்கிப் பிளந்தால் மீண்டும் அது ஆபரணமாக உருமாறும். அதுபோன்றது சான்றோர் சினம். அந்த சினமும், நீரில் எயப்படும் அம்பு நீரைக் கிழித்துப் பாயும்போது இரண்டாகப் பிரியும்; ஆனால், மீண்டும் நீர் ஒன்றாகிவிடுதல் இயல்பு. அதுபோன்றது சான்றோரின் சினத்தால் விளையும் பாதிப்பு.

Comments