பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர... மலர்குழல் நாயகிக்கு பச்சைப்பட்டு!

யிலாடுதுறை - கும்பகோணம் மார்க்கத்தில், குத்தாலம் எனும் ஊரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது எதிர்கொள்பாடி. திருமணஞ்சேரி எனும் தலத்துக்கு மேற்கில் அமைந்துள்ளதால், இத்தலத்தை மேல திருமணஞ்சேரி என்றும் கூறுவர்.
திருமணஞ்சேரியைப் போன்றே இந்தத் திருத்தலமும் திருமண வரம் அருளும் தலமாகத் திகழ்கிறது. மேலும், பிரிந்த தம்பதி மீண்டும் ஒன்றுசேர்ந்து வாழ வரமருளும் தலமாகவும் திகழ்கிறது எதிர்கொள்பாடி.

ஒருமுறை, இறை சித்தப்படி... கயிலையையும் சிவபெருமானையும் பிரிந்து, பூலோகத்தில் குழந்தை வரம் வேண்டி வழிபட்ட பரத்வாஜ முனிவருக்கு மகளாக வாய்த்தாள் உமையம்மை. அவளைச் சீராட்டி வளர்த்த முனிவர், உரிய வயது வந்ததும் திருமணத்துக்கு வரன் பார்க்க முற்பட்டார். அவளின் மனதில் சிவமே நிறைந்திருப்பதை அறிந்தவர், சிவபெருமானுக்கே திருமணம் செய்துவைத்தார் என்கிறது தலபுராணம். திருமணத்துக்கு வந்த மாப்பிள்ளை சிவனாரை பரத்வாஜ மகரிஷி எதிர்கொண்டு அழைத்த இடம் இவ்வூர். ஆகவே, எதிர்கொள் பாடி எனும் பெயர் பெற்றது. இதற்குப் பிறகே திருமணஞ்சேரியில் அம்மைக் கும் அப்பனுக்கும் திருக்கல்யாணம் நடந்தேறியதாம். ஆகவே, முதலில் இந்தக் கோயிலுக்கு வந்து வணங்கியபிறகு, திருமணஞ்சேரிக்குச் சென்று தரிசித்தால் மிகுந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்தத் தலத்தில், அம்பிகை அருள்மிகு மலர்குழல் நாயகியாக அருள்புரிய,  இறைவன் அருள்மிகு ஐராவதீஸ்வரர் எனும் திருப் பெயருடன் எழுந்தருளியிருக்கிறார். இந்தப் பெயருக்கும் ஒரு காரணக்கதை உண்டு.

ஒருமுறை, தேவேந்திரன் போரில் பெரும் வெற்றி பெற்று, ஐராவதம் எனும் தன் யானையின் மீது அமர்ந்து ஊர்வலம் வந்து கொண்டிருந்தான். துர்வாச முனிவர் அவனை வாழ்த்தி, இறைப்பிரசாதமாக தாமரை மலர் ஒன்றை அளித்தார். அதை, வெகு அலட்சியத்துடன் பெற்றுக்கொண்ட இந்திரன், அந்த மலரை ஐராவதத்தின் தலையில் வைத்தான். யானையோ அதைத் துதிக்கையால் எடுத்து தரையில் வீசியெறிந்ததுடன், காலால் மிதித்து அபவாதம் செய்தது. இதைக் கண்டு கோபம் கொண்ட துர்வாசர், இந்திரனையும் ஐராவதத்தையும் சபித்தார்.

சாபத்தின் காரணமாக பூமிக்கு வந்த ஐராவதம், இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வலம் வந்ததுடன், இங்குள்ள தீர்த்தத்திலும் மூழ்கியெழுந்ததால், சாப விமோசனம் பெற்றது. இப்படி ஐராவதத்துக்கு அருளியதால், இறைவனுக்கு ஐராவதீஸ்வரர் என்று திருப்பெயர். இன்றைக்கும் ஓர் யானை கர்ப்பகிரஹத்தின் உள்ளே செல்லும் அளவுக்கு இடம் இருப்பதைக் காணலாம்.

பரத்வாஜ முனிவர் தன் மாப்பிள்ளையை எதிர்கொண்டு அழைத்து மகிழ்ந்த இந்தத் திருத்தலம், நல்ல குணம் படைத்த மருமகன் அமையவேண்டி பெண்ணின் பெற்றோர்கள் வழிபட வேண்டிய தலம் என்பார்கள் பெரியோர்கள். இன்றைக்கும், மகளுக்கு வரன் பார்க்கும் முன்பு, நல்ல மாப்பிள்ளை அமைய இங்கு மகளை அழைத்து வந்து. சிவனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து வழிபட்டுச் செல்கின்றனர்.

மேலும், கணவனை அல்லது மனைவியைப் பிரிந்து வாழும் அன்பர்கள், மீண்டும் தன் வாழ்க்கைத்துணையுடன் சேர விரும்பினால், இந்தத் தலத்துக்கு வந்து வழிபடவேண்டும். இங்கு வந்து, அம்பிகை மலர்குழல் நாயகிக்கு அபிஷேகம் செய்து , பச்சைப் புடவை சாத்தி, பிரார்த்தித்துக்கொள்வதுடன் ஐராவதீஸ் வரரையும் வழிபட்டுச் சென்றால், விரைவில் பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வர்; தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; வாழ்க்கை இனிக்கும் என்பது நம்பிக்கை.

Comments