தஹானு மகாலக்ஷ்மி

தேவி பராசக்தியே அண்ட சராசரங்களுக்கெல்லாம் தாயாக நிற்கிறாள். அந்த தேவி நவராத்திரியில் துர்கை, மகாலக்ஷ்மி, சரஸ்வதி என்று மூன்று ரூபங்களில் வணங்கப்படுகிறாள். அவர்களை நவராத்திரி ஒன்பது நாட்களிலும்
இறை சிந்தனையோடு வழிபட்டால் விரும்பும் அனைத்தும் பெறலாம். நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கையை வழிபடவும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியன. இடைப்பட்ட மூன்று நாட்கள் மகாலக்ஷ்மிக்கு உரியதாகும்.

விஷ்ணு ஆலயங்களில் தாயார் மகாலக்ஷ்மி தனிச் சன்னிதியிலும், சிவாலயங்களில் பிராகாரச்சுற்றில் கஜலக்ஷ்மியாகவும் காட்சி தருகிறாள். இவை தவிர, மகாலக்ஷ்மி தாயாருக்குப் பிரதான ஆலயங்களும் உண்டு. மும்பை மகாலக்ஷ்மி, கோலாப்பூர் மகா லக்ஷ்மி, திருச்சானூர் அலர்மேல் மங்கை தாயார், நாமக்கல் நாமகிரி தாயார் சன்னிதிகள் தனிச்சிறப்பு கொண்டவை. அதுபோன்று, மும்பை தஹானுவில் அமைந்துள்ள மகாலக்ஷ்மி ஆலயமும் தனிச்சிறப்பும், சக்தியும் கொண்டு விளங்குகிறது.
மகாராஷ்டிராவின் முக்கியமான சக்தி ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் தஹானு மகாலக்ஷ்மி தேவி இத்தலத்தில் கோயில் கொண்ட வரலாறு சுவாரஸ்ய மானது. கோலாப்பூர் மகாலக்ஷ்மி தேவி, தன்னை வணங்கிச் செல்வந்தராக விளங்கும் குஜராத்தி மக்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, தான் குஜராத்திலும் கோயில்கொள்ள ஆசைப்பட்டாள். அவள் நடந்து சென்ற இடமெல்லாம் புனிதமாயிற்று. செடி, கொடி, பறவைகள், விலங்குகள் பவித்ரமடைந்தன. கானகம் செழுமை பெற்றுக் குலுங்கியது!
அங்கு வாழ்ந்த அரக்கன் ஒருவன் மகாலக்ஷ்மியுடன் யுத்தம் செய்தான். தேவிக்கும் அரக்கனுக்கும் பயங்கர யுத்தம் நடைபெற்றது. தேவியின் கோபத்தில் கானகமே ஸ்தம்பித்தது. மகாலக்ஷ்மியின் ஆயுதம் அரக்கனின் கண்களை எரித்தும், அவன் இறக்காமல் முழு வீரியத்துடன் போர் புரிந்தான். அச்சமயம் தேவி தன் திரிசூலத்தால் அவனை வதைத்தாள்.
அசுரனைக் கொன்ற களைப்புத் தீர மகாலக்ஷ்மி அருகேயிருந்த மலையில் அமர்ந்தாள். அம் மலையின் இயற்கைக் காட்சிகளின் அழகிலும், செழிப்பிலும் மனம் மயங்கி அங்கேயே கோயில் கொண்டாள். தன் அருளை மக்களுக்கு வாரி வழங்க மனம் கொண்ட தேவி, கன்னா டாக்கூர் என்பவரின் கனவில் தோன்றி, தான் மலை மீது உறைந்திருப்பதைச் சொல்லி, தமக்குப் பூஜை செய்யும்படி ஆணையிட்டாள்.
சமீபத்திய ஆலயம் கீழே உள்ளது. தேவி கீழே கோயில் கொண்டதன் வரலாற்றைக் கூறும் சம்பவம் இது. மலை மீது தேவியைத் தரிசிக்கச் சென்ற கர்ப் பிணிப் பெண் ஒருத்தி மலை ஏற முடியாமல் மயங்கி கீழே விழ, தேவி தான் கீழே இருப்பதாகக் கூறி அருள் செய்தாள். சுயம்புவாகத் தோன்றி அவளுக்குத் தரிசனமும் தந்தாள். அவ்வாலயமே இன்று அனை வரும் வழிபடும் மகாலக்ஷ்மி ஆலயம்.
தேவி முதலில் சாந்நித்யம் கொண்ட மலை 1,400 அடி உயரம். அங்குதான் தேவியின் சன்னிதியும் உள்ளது. அங்கு யாரும் செல்ல முடியாது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பௌர்ணமியன்று ‘துவஜ ஸ்தாபனம்’ மலைக் கோயிலில் நடைபெறுகிறது. ஆதிவாசிகளே இவ்வாலயத்தில் பூஜை செய்யத் தகுதி உடையவர்கள். அக்குடும்பத்தில் உள்ள ஒருவரே மிக நியம நிஷ்டையுடன் இருந்து இரவு பன்னிரெண்டு மணிக்குக் கொடியையும், மகாலக்ஷ்மியின் மடியை நிறைக்க பன்னிரெண்டு தேங்காகள், தாம்பூலம் இவற்றுடன் மேலே ஏறிச் செல்வார். அந்நாளில் தேவி அங்கு சஞ்சாரம் செய்வதாக ஐதீகம். அச்சமயம் அவருள் தேவியே ஆட்கொண்டு விடுவ தாகச் சொல்லப்படுகிறது. மேலே சென்று தேவிக்குப் பூஜை செய்துவிட்டு, கொடியும் நட்டு விட்டு, அங்கு தேவி ரூபமாகக் காட்சி தரும் புலியையும் தரிசித்து காலை ஏழு மணிக்குக் கீழே வந்து விடுவார்.
அதைத் தொடர்ந்து பதினைந்து நாட்கள் ‘யாத்ரா உத்ஸவம்’ மிக விமரிசையாக நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அச்சமயம் இங்கு வழிபட வருகின்றனர்.
இனி, தேவியைத் தரிசிப்போம். ஓங்கி உயர்ந்த இரு தீபஸ்தம்பங்களை தரிசித்து, ஆலயத்துள் நுழைந்தால் அலங்கார வளைவுகளுடன் பளிச்சென்று காணப்படும் முன் மண்டபம். அதைத் தாண்டிச் சென்றால் தேவியின் கருவறை. ஜாஜ்வல்லியமான முக தரிசனம் கண்களைக் கொள்ளை கொள்கிறது. இரு யானைகள் தாங்கும் தூண்களுடன் கலைநயம் மிக்க மண்டபத்துள், தேவியின் இருபுறமும் துவாரபாலகர்கள் நின்று
காட்சி தருகின்றனர். சிரத்தில் ஜொலிக்கும் தங்க கிரீடத்துடன், மூக்கில் மீன் போன்ற மூக்குத்தி அணிந்து, கருணை பொங்கும் நயனங்களுடன் பூ மாலைகள் அழகு செயக் காட்சி தருகிறாள் அன்னை மகாலக்ஷ்மி. நேரில் நிற்கும்போது தேவியின் விரிந்து பரந்த கண்கள் நம்மையே பார்ப்பது போல் தோன்றுகிறது!
நாம் சுமங்கலிகளுக்கும், சுவாசினிகளுக்கும் மஞ்சள், குங்குமம், தாம்பூலம் தருவோம். ஆனால், மராட்டியப் பெண்களோ தெய்வங்களுக்கே ‘வோட்டிபரி’ (மடியை நிரப்புதல்) செய்வார்கள். புடைவைத் தலைப்பால் தலையை மூடியபடி, மஞ்சளையும், குங்குமத்தையும் தேவி மேல் தெளித்து, தாம்பூலம், பழம், தேங்காயை தேவியின் மடியில் சமர்ப்பிப்பார்கள். பக்தியும், பணிவும் கொண்டு தேவியைத் தம் குடும்பப் பெண் போல் பாவிக்கும் மராட்டியப் பெண்களிடம் தேவி நிரந்தரமாகத் தங்கி விடுகிறாள்.
மகாலக்ஷ்மி தேவி மிகவும் சக்தியுள்ள தெய்வம் என்றும், இவளிடம் எது கேட்டாலும் நிமிடத்தில் நிறைவேறும் என்றும் ஆலயத்திலுள்ளோர் சொல்கின்றனர். தேவியின் பரிபூரண சாந்நித்தியத்தை நன்கு உணர முடிந்தது. இங்கு, நவராத்திரி ஒன்பது நாட்களும் விழாக்கோலம் பூண்டு, அற்புதமான அலங் காரத்தில் அன்னை காட்சி தருவாள். தவிர, அஷ்டமி நாட்களில் மிக விசேஷமான வழிபாடுகள் உண்டு. மும்பை செல்லும் அன்பர்கள் தஹானு மகாலக்ஷ்மி ஆலயத்தைத் தரிசித்து தாயாரின் அருளைப் பெறலாமே.
அமைவிடம்: மும்பையிலிருந்து அகமதாபாத் செல்லும் ரயில் பாதையில் 124 கி.மீ தொலைவில் உள்ள தஹானுவிலுள்ள ‘சாரோட்டி நாகா’ என்ற இடத்தில் ஆலயம் அமைந்துள்ளது.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் இரவு வரை தரிசனம் உண்டு.

Comments