ராமானுஜ கற்பகம்!

ராமானுஜரைப் பற்றித் தெரிந்துகொள்ள மிகச்சரியான நூல், ‘ராமானுஜ நூற்றந்தாதி.’ இந்த நூல் ராமானுஜர் காலத்திலேயே இயற்றப்பட்டு, ரங்கநாதனால் அங்கீகரிக்கப் பட்டது. அந்நூலில்தான் ராமானுஜரை, ‘என்னை ஆள வந்த கற்பகம்’ என்று போற்றுகின்றார் திருவரங்கத்து அமுதனார்" என்றார், நெய்வேலி ராம கிருஷ்ணா சேவா சமாஜத்தில், ‘ராமானு ஜர் 1000’ விழாவை ஒட்டி நடைபெற்ற, ‘என்னை ஆள வந்த கற்பகம்’ என்ற
சொற்பொழிவில் பேராசிரியர் கோகு லாச்சாரி. அந்த சொற்பொழிவிலிருந்து...
கற்பகம் என்றால் கேட்டதைத் தருவது. தேவலோகத்தில் இருப்பது. அங்கு போனால்தான் அதைப்பார்க்கலாம், கேட்கலாம். சரி, நமக்குக் கேட்கத் தெரியுமா? அந்த ஞானம்தான் நமக்கு இல்லையே.
துரியோதனன் கண்ணனிடம், ‘நீ வேண்டும்’ என்று கேட்கவில் லையே. ‘உன் படை வேண்டும்’ என்றுதானே கேட்டான்.
பாற்கடலைக் கடைந்த தேவர்கள், பெருமானிடம், ‘நீ வேண்டும்’ என்று கேட்கவில்லையே. அமுதம்தானே வேண்டுமென்று கேட்டார்கள்.
ஆனால், நமக்காக வந்த கற்பகமான ராமானுஜர், நாம் கேட்காமலேயே திருமந்திரத்தைக் கொடுத்தார். நமக்காக
சரணாகதி செய்தார்.
தேவலோக கற்பகம் எல்லாம் தரும். ஆனால், மோட்சம் தராது. நம்மை நாடி வந்த ராமானுஜரோ, நமக்கு மோட்சம் தருவதற்கே வந்த கற்பகம்.
‘ஸ்வாமி’ என்ற பெயர் ராமானுஜருக்கே பொருந்தும். ஸ்வாமி என்றால், ‘சொத்தை உடையவர்’ என்று பொருள். பகவானுக்கு எல்லோரும் உரியவர் என்பதனால் ஸ்வாமி என்கிறோம். ஆனால், ரெங்கநாதர் சரணாகதி கத்தியம் செய்த பிறகு தன்னுடைய சொத்துக்களை ராமானுஜருக்கே உரிமை ஆக்கினார். அதனால் ராமானு ஜருக்கு, ‘உடையவர்’ என்று திருநாமம்.

பகவான் நம்மை உடைய வன். ராமானுஜர் நம்மையும் பகவானையும் உடையவர். எந்த கற்பகம் வரும், வந்த பிறகு கலிகெடும் என்று காட்டியவர் நம்மாழ்வார்.
ஒரு இருட்டறை. பகவானும் நிற்கிறான். சம்சாரிகளும் நிற்கிறார்கள். பகவானுக்கு நம்மைத் தெரிகிறது. நமக்கு பகவானைத் தெரியவில்லை. ராமானு ஜர் வந்து, ஒரு விளக்கு போட்டு பகவானை நமக்குக் காட்டுகிறார். இதைத்தான், ‘பரண் அது என்னும் நற்பொருள் தன்னை’ என்கிறார் அமுதனார்.
‘குரு’ என்றால் வெளிச்சம் தருபவர் என்று பொருள். ராமானுஜ குரு என்கிற வெளிச்சம் தான் பகவானை நமக்குக் காட்டியது. அப்படிக் காட்டுவதற்காகவே வந்தது ராமானுஜ கற்பகம்."

Comments