9ன் மகத்துவம்!

எண்களில் மிகச் சிறப்பான எண்ணாகக் கருதப்படுவது ஒன்பது. ஒன்பது என்ற எண்ணுக்கு சம்ஸ்க்ருதத்தில் நவம் என்று பெயர். நவ என்றால் புதிய, புதுமை எனப் பொருள்களும் உண்டு. ஒன்பது என்ற எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்வர்.


ஒன்பது என்ற எண்ணுக்கு வெளிநாடுகளிலும் முக்கியத்துவம் உண்டு. சீனர்களின் ஸ்வர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9 என்ற எண்ணை சிறப்பாகப் பயன்படுத்துகின்றன. புத்த மதத்தில், முக்கியச் சடங்கு களெல்லாம் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறுகின்றன. பெண்ணின் கர்ப்பம் முழுமை யடைவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்!


ஒன்பது என்ற எண் கணிதத்தில் சிறப்பு பெற்றது. ஒன்பதின் வர்க்க எண், கண எண்களைக் கூட்டினால் ஒன்பதே வரும். கூட்டலிலும், கழித் தலிலும் பெருக்கல் வகுத்தலிலும் ஒன்பதின் மடங்கு எண்களைக் கூட்டினால், ஒன்பதாகவே மீதம் நிற்கும்! ஆகவேதான் ஒன்பதாம் எண் வடிவம் மாறாதது, இயல்பை இழக்காதது என்போம். நம் நாட்டில் பாரம்பரியமாகவே, சிறப் பான விஷயங்கள் எல்லாம் ஒன்பதின் தொகுதியாகவே கூறப்படுவதுண்டு. எல்லாம் ‘நவ’ என்றே துவங்கும். நவசக்திகள் என, வாமை, ஜேஷ்டை, ரௌத்ரி, காளி, கலவிகரணி, பலவி கரணி, பலப்பிரதமனி, சர்வபூத தமனி, மனோன்மணி ஆகியோரைச் சொல்வர்.


அதுபோல், நவ வீரர்கள் என புராணம் கூறுவது, வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகே சன், வீரபுரந்திரன், வீரராக்ஷசன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன் ஆகியோரை!


இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்கு பயன்படுத்த வேண்டிய திரவியங்களாக ஒன்பது பொருள்கள் சிறப்பிடம் பெறுகின்றன. மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி ஆகியன அவை. பூஜை என்றால் விரதம் இல்லாமலா? விரதங்களும்கூட நவத்தை வைத்தே சிறப்பிடம் பெறும். சொம வார விரதம், திருவாதிரை விரதம், உமா மகேச்வர விரதம், சிவராத்ரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம் என விரதங்களும் ஒன்பதா விரவிக் கிடக்கின்றன!


நவ நிதிகள் என சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் என இந்த நிதிகள் இறைவன் தந்தருளட்டும் என நாம் வாயார வாழ்த்துவோமே!


நவகிரகங்கள் ஒன்பது எனும்போது, அவற்றுக்கான தலங்களும் புகழ் அடைந்துவிட்டன. சூரியனார் கோயில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம் என நவகிரக தலங்களாகச் சென்று வழிபடுவது மரபு.
வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கண்டகம், கவுரி பாஷாணம், வெள்ளை பாஷாணம், ம்ருதர்சிங், சிலா ஜித் இவையெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா? சித்தர்கள் போற்றிக் கொண்டாடிய பாஷாணங்கள். ஆம், நவ பாஷாணங்கள்! இப்படி சிறப்பெல்லாம் ஒன்பதில் நிலைத்திருக்க, அன்னைக்கான வழிபாடும் அதில் முடிவதில் வியப்பில்லைதான்!

Comments