குழந்தை வரம் தரும் ஸ்ரீ சந்தான கோபாலன்!

இராமநாதபுரத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்திலிருக்கும் திருத்தலம் திருப்புல்லாணி. இங்கு ஸ்ரீ ஆதிஜெகன்னாதர் கோயில் கொண்டுள்ளார். தாயார் ஸ்ரீ பத்மாஸினி. இந்த ஆலயத்தின் வெளிமண்டபத்தில் தெற்குதிசை நோக்கி எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன். எட்டுயானைகள் மற்றும் எட்டு நாகங் களுடன் ஆதிசேஷன் குடைபிடிக்க நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள், ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணனை வழிபட்டு, பெருமாளுக்கு  நிவேத்தியம் செய்த பாயசத்தைப் பிரசாதமாகப் பெற்று பயபக்தியுடன் அருந்தினால் குழந்தைச் செல்வம் கிட்டும் என்று கூறப்படுகிறது. இங்கு தான் தசரத மகாராஜா, புத்திர காமேஷ்டியாகம் செய்தார் என்றும் புராணம் கூறுகிறது.
தரிசன நேரம்: காலை 7:30 மணியிலிருந்து பகல் 12.00 மணி வரை.
மாலை: 5.30 மணியிலிருந்து இரவு 8:30 மணி வரை. வாகன வசதிகள் உள்ளன.


அஷ்டபுஜ கண்ணன்!


சேலம் பேளூர் திருத்தலத்தில் அமைந்துள்ள அஷ்டபுஜ பால மதன வேணுகோபாலன்
கோயிலின் மூலவர் பகவான் கண்ணன், எட்டு கரங்களுடன் காட்சிதருகிறார். இந்த கண்ணனின் வலது கன்னம் ஆண்களைப் போல் சொர சொரப்புடனும், இடது கன்னம் பெண்களைப் போல் வழுவழுப்பாகவும் இருக்கும் அற்புதத் தரிசனத்தைக் காணலாம்.
கண்ணனின் அக்கா!
விழுப்புரத்திலிருந்து காட்பாடி செல்லும் வழியில் உள்ள திருத்தலம் திருக்கோவிலூர். இங்கு மகாவிஷ்ணு உலகளந்த பெருமாளாக திரிவிக்கிரமன் ரூபத்தில் அருள் புரிகிறார். இங்கு கிருஷ்ணனின் அக்காள் மாயாவிற்கு தனி சன்னதி உள்ளது. ‘தன் தங்கைக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தைதான் தனக்கு எமன்’ என்பதை அறிந்த கம்சன், அவளுக்குப் பிறக்கும் ஆறு குழந்தைகளைக் கொன்று விடுகிறான். ஏழாவதாகப் பிறந்த ‘மாயா’வைக் கொல்ல முயற்சிக்கும்போது, அந்தக் குழந்தை அவன் கையிலிருந்து நழுவி மேல் நோக்கிப் பாய்ந்து அவனை எச்சரிக்கிறது. ‘தேவகி-வசுதேவருக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் நீ மாள்வது உறுதி’என்கிறது. அப்படி துர்க்கை வடிவில் தோன்றி எச்சரித்த மாயா, தன் தம்பி கண்ணனோடு சேர்ந்து கோயில் கொள்ள விரும்பித் தேர்ந்தெடுத்த இடம்தான் திருக்கோவிலூர். இங்கே தனி சன்னதி கொண்டிருக்கும் துர்க்கை, கண்ணனின் அக்காள் என்று புராணம் கூறுகிறது.
இதேபோல் சென்னை நங்கநல்லூரில் உள்ள உத்தர குருவாயூரப்பன் ஆலயத்தில் பகவான் கண்ணனுக்கும், மகாமாயாவிற்கும் தனிச்சன்னதி உள்ளது. இந்த ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியன்று இரவு பன்னிரண்டு மணிக்கு முதலில் மகாமாயாவிற்கு பூஜை நடைபெறும். அதற்குப் பிறகுதான் கண்ணனுக்கு பூஜை நடக்கும்.
தொட்டிலில் தூங்கும் கண்ணன்!
நாகர்கோவில் வடச்சேரிக்கு அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணண் கோயிலில் உற்சவர் விக்கிரகம் குழந்தை வடிவில் உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி அன்று அர்த்தஜாம பூஜை முடிந்ததும், அலங்கரித்த தொட்டிலில் பட்டுத் துணி விரித்து கண்ணனைப் படுக்க வைத்து நாத சுரத்தில் தாலாட்டு இசைப்பது வழக்கம். குழந்தைச் செல்வம் இல்லாத தம்பதிகள் இந்தக் காட்சியைத் தரிசித்தால் மகப் பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.
நான்கு கரங்களுடன் கண்ணன்
அகமதாபாத்திலிருந்து ராஜ்காட்-ஜாம்நகர் வழியாக துவாரகை திருத்தலத்தை அடையலாம். துவாரகையில் உள்ள கண்ணன் கோயிலை ஜகத் மந்திர் என்று அழைக்கிறார்கள். இங்கு மூலஸ்தானத்தில் மேற்கு திசை நோக்கி அருள்புரியும் பகவான் கண்ணன், நான்கு கரங்களுடன் வெள்ளி மஞ்சத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
ஆலிலை கிருஷ்ணர்
பீகார் மாநிலத்தில் உள்ள திருத்தலம் கயா. இங்கு பித்ருக்களுக்குப் பிண்டம் போட்டு வழிபடு வது வழக்கம். இங்கு விஷ்ணு பாதம் உள்ளது. மேலும், ஸ்ரீ கதாதரர் கோயிலின் முன் உள்ள பெரிய ஆலமரத்தின் கீழ் பகவான் கிருஷ்ணன் குழந்தை வடிவில் ஆலிலையில் படுத்துக்கொண்டு, வலது கால்கட்டை விரலை வாயில் வைத்து சூப்பிக் கொண்டிருக்கும் சிறிய திருஉருவைத் தரிசிக்கலாம். இவரைத் தொட்டு வணங்குவது அங்கு வழக்கத்தில் உள்ளது. குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் இவரை வழிபட குழந்தைச் செல்வம் கிடைக்கும்; மற்றவர்களுக்குத் தோஷங்கள் நீங்கி புனிதம் சேரும் என்பது ஐதிகம்.




புல்லாங்குழல் பிறந்த கதை!
கண்ணனும், புல்லாங்குழலும் உடன்பிறந்தவை போலத்தான் நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். புல்லாங்குழல் இல்லாத கண்ணனை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. குருகே்ஷத்திரத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாக தேரோட்டும் படங்களில் கூட இடுப்பில் புல்லாங்குழல் செருகப்பட்டு இருக்கும். ஆனால், போர்க்களத்துக்கு கண்ணன் புல்லாங் குழலை எடுத்துச் செல்ல வில்லை. புல்லாங்குழல் கண்ணனின் கரத்துக்கு எப்படி வந்தது என்பதைப் பார்ப்போம்.
ராதை ஜீவாத்மா, கண்ணன் பரமாத்மா. ராதா கிருஷ்ணன் உறவு என்பது காதல், பிரேமை போன்றவற்றிற்கும் அப்பாற்பட்ட தெய்வீக பந்தம். கண்ணன் மாடு மேய்த்துக் கொண்டிருப்பதை மறைந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ராதை. அப்போது எதிரே வளர்ந்திருந்த மூங்கிலில் உள்ள தேனை உறிஞ்ச வண்டு ஒன்று துளை போட்டுக் கொண்டிருந்தது. துளை போட்டு உள்ளே சென்று மறுதுளை வழியே வெளியே வந்து விட்டது. அந்தச்சமயம் பார்த்து காற்று வீச, அந்த மூங்கில் இனிய ஓசையை எழுப்பியது.
அதை உடைத்து கண்ணன் கையில் கொடுத்து ஊதச் சொன்னாள் ராதை. கண்ணன் குழலிசைக்க, பசுக்களும், பறவைகளும், வனவிலங்குகளும் தங்களை மறந்து குழலோசையைக் கேட்டு மகிழ்ந்தன. அத்தகைய மகிமை பொருந்தியது புல்லாங்குழல்!
புல்லாங்குழலுக்கும் மனித உடம்பிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டிலுமே ஒன்பது துவாரங்கள். புல்லாங்குழலுக்குள் செல்லும் காற்று இசையாகவும், மனித உடலுக்குச் செல்லும் காற்று ஆசையாகவும் பரிமளிக்கின்றன.
கலைஞன் ஒரு துவாரத்தில் காற்றைச் செலுத்தி மற்ற துளைகளில் அதை ஒழுங்குபடுத்தி இசையாக்குகிறான். இறைவன் காற்றைக் கொடுத்து ஒரு துளை நாசியால் சுவாசிக்கச் சொல்கிறான். மற்ற துளைகளை நாம் ஒழுங்குபடுத்தி, ஆசையைக் கட்டுப்படுத்தி, அமைதியை நாம் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது இதன் தாத்பர்யம்.

Comments