மகா பெரியவா சொன்ன கதைகள்!

ரு குருவுக்கும் சிஷ்யனுக்கும் உள்ள உறவு மிக மிக அக்கறையானது, பரிசுத்தமானது என்பதையும் தாண்டி, புனிதமானதும்கூட! அந்தக் காலத்தில் குருகுலவாசம் இருந்தது. அதாவது, குருவின் ஆஸ்ரமத்துக்கோ, இல்லத்துக்கோ போய்தான் அங்கே குருவுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து, மாணாக்கர்கள் அனைவரும் கல்வி கற்றார்கள். ஏட்டுக் கல்வியோடு வாழ்க்கைக் கல்வியையும் கற்றுத் தேர்ந்தார்கள். மனிதர்கள் மட்டுமல்ல, இறை அவதாரங்களும்கூட குருகுலவாசம் செய்துதான் குருவிடம்தான் கல்வி கற்றார்கள்.
அந்த வகையில், ஸ்ரீகிருஷ்ணரும் ஸாந்தீபனி என்கிற குருவிடம் கல்வி கற்றார். தான் இறை அவதாரம் என்பதைக் காரணம் காட்டி, அவர் மற்ற பிள்ளைகளிடம் இருந்து வேறுபட்டு நடந்துகொள்ளவில்லை. குருகுலத்தில் எல்லோரும் சமம் என்கிற நியதியே பின்பற்றப்பட்டு வந்தது. ஸ்ரீகிருஷ்ணரும் அதைத்தான் பின்பற்றினார்.
அப்படிப்பட்ட ஸ்ரீகிருஷ்ணரின் குருகுலவாச அனுபவம் பற்றியும், குருவானவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது பற்றியும் தனது திவ்ய வாக்கால் இங்கே விளக்குகிறார், மகா பெரியவர். இதைப் படிக்கிறபோது, இந்நாளைய ஆசிரியர்களைப் பற்றி நாளேடுகளில் நாம் படிக்கிற செய்திகள் கவலையையும் பெருமூச்சையும்தான் வெளிப்படுத்துவதாக உள்ளன.
'நம்முடைய சாஸ்த்ர, புராணங்களிலிருந்து அன்புடைமையில், அருளுடைமையில் அந்நாள் ஆசார்யர்கள் ஆதர்ச புருஷர்களாக இருந்திருப்பது தெரிகிறது. குரு சிஷ்யர்களுக்கு இடையே பரஸ்பர ப்ரியம் போகவே கூடாது என்றுதான் பாடம் ஆரம்பிக்கும்போதே மந்த்ர பூர்வமாக வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். 'குரு- சிஷ்யர்களான நாங்கள் ஒருத்தருக்கொருத்தர் பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்...’ என்பது பாட ஆரம்பத்திலும், முடிவிலும் வருகிற உபநிஷத் பிரார்த்தனை.
'அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்பதற்கு அப்படியே ரூபகமாக அந்த ஆசார்யர்கள் இருந்திருக் கிறார்கள். கண்டிப்புச் செய்யவேண்டிய இடத்தில் எப்படி நிர்தாக்ஷண்யமாகக் கண்டித்தார்களோ, அப்படியே அன்பைக் கொட்ட வேண்டிய ஸமயத்தில் கொட்டினார்கள். பாகவதத்தைப் பார்த்தால் போதும்; இரண்டும் தெரியும். பகவானே குசேலரிடம் தாங்களிருவரும் சேர்ந்து குருகுலவாசம் செய்த நாட்களைப் பற்றி ஞாபகப்படுத்துகிறார்.
கம்ஸ வதமான பின், பகவானுக்கும் பலராமருக்கும் உபநயனமாகி, அவர்கள் ஸாந்தீபனி என்கிற பிராமணரிடம் குருகுல வாஸம் செய்கிறார்கள். ஸர்வ வித்யைகளும் அவனிடமிருந்துதான் என்றாலும், லோகத்துக்கு குரு பக்தியை உதாரணம் காட்டவே பகவானும் இப்படி ஓர் ஆசார்யனிடம் போய்ப் படித்தான் என்று பாகவதம் சொல்கிறது. ஆனாலும், பகவானுக்கு அவதார கார்யங்கள் நிறையக் காத்துக் கொண்டிருந்ததால், பன்னிரண்டு வருஷம் வித்யாப்யாஸம் செய்வது என்று வைத்துக்கொள்ளாமல், தன் திவ்ய சக்தியையும் கொஞ்சம் கைக்கொண்டு, ஒரு நாளுக்கு ஒரு சாஸ்த்ரம் வீதம் அறுபத்து நாலே நாளில் அத்தனை சாஸ்த்ரமும் கற்றுக்கொண்டு விடுகிறார் (பலராமரும்தான். அவரும் அவதாரம்தானே?).
இதிலிருந்தே கிருஷ்ணருடைய தெய்வீக ப்ரபாவத்தை குரு ஸாந்தீபனி தெரிந்துகொண்டு விடுகிறார். அதனால், பிற்பாடு சி¬க்ஷ பூர்த்தியாகி, ''என்ன தக்ஷணை தரணும்?'' என்று பகவான் கேட்டபோது, ரொம்ப நாள் முந்தி ஸமுத்ரம் அடித்துக்கொண்டு போய்விட்ட தன்னுடைய பிள்ளையை யமாலயத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்து தரவேண்டும்; அதுதான் தமக்கு வேண்டிய தக்ஷணை என்கிறார். பகவானும் அப்படியே பண்ணுகிறார். அது இப்போது நமக்கு விஷயமில்லை.
பின்னே எது விஷயம் என்றால், இப்படி தெய்வ சக்தி பொருந்தியவராக கிருஷ்ணரை அவருடைய ஆசார்யர் தெரிந்து கொண்டிருந்த போதிலும், 'சிஷ்யப்பிள்ளை என்று வந்த ஒருத்தனை ஆசார்யர் நன்றாக வேலை வாங்கி, பணியினாலும் பணிவினாலும் கட்டுப்படுத்தி சுத்தி செய்வார்’ என்று லோகத்துக்குக் காட்டவே, அவர் இந்த சிஷ்ய வேஷம் போட்டுக்கொண்டிருக்கிறார் என்றும் தெரிந்துகொண்டார். எனவே, வேலை வாங்குவதை இவர் விஷயத்திலும் விட்டுவிடக் கூடாது என்று இருந்திருக்கிறார்.

அருமையிலும் அருமையான குழந்தை கிருஷ்ணன். அதே நேரத்தில் அறிதற்கரியவராக இருந்த பகவான், குருவின் ஆக்ஞைப்படி காட்டுக்குப் போய் விறகு வெட்டிக்கொண்டு வந்துகூடக் கைங்கர்யம் பண்ணியிருக்கிறார். அந்த நாட்களில் ஒன்றைப் பற்றித்தான், அப்போது தம் 'க்ளாஸ் மேட்’டாக இருந்த குசேலரிடம் நீண்ட காலத்துக்குப் பின்னால் பகவான் நினைவுபடுத்துகிறார்.
கிருஷ்ணரும் குசேலரும் ஒருநாள் இப்படி விறகுக்காக அடர்ந்த காட்டுக்குப் போனபோது நன்றாக இருட்டிவிட்டது. அதோடு பேய் மழையும் பிடித்துக்கொண்டுவிட்டது. மேடு, பள்ளம் தெரியாமல் ஒரே பிரளயமாயிற்று. திக்கு திசை புரியாமல் கும்மிருட்டு வேறு. நரலீலையிலே பகவான் நிஜமாகவே தமக்குத் திக்கு திசை புரியாத மாதிரிதான் நடித்தார். ''நானும் நீங்களும் பயந்துண்டு, துக்கப்பட்டுண்டு ஒத்தர் கையை ஒத்தர் கோத்துண்டு, ராத்ரியெல்லாம் சுத்திசுத்தி வந்தோமே! ஞாபகமிருக்கோல்லியோ?'' என்று அவரே குசேலரைக் கேட்கிறார். குருவின் வேலை வாங்கும் கண்டிப்பால் வந்தது இது.
இனிமேல் குருவின் அன்பையும் பாசத்தையும் பகவான் வாய் வார்த்தையாகத் தெரிந்து கொள்கிறோம்.
''குழந்தைகளைக் காணோமேன்னு அங்கலாய்ச்சுண்டு குருநாதரும் நம்மைத் தேடிண்டு வந்து, ஸ¨ர்யோதய ஸமயத்தில் கண்டுபிடிச்சாரே! 'ஐயோ பாவம்! எனக்காக எத்தனைக் கஷ்டப்பட்டுட்டேள்?’ என்று நம்மிடம் எப்படி உருகிப் போயிட்டார்? அதற்குப் பரிஹாரமாக நமக்கு எப்படி மனஸார அநுக்ரஹம் பண்ணி, 'உங்களுடைய நல்ல நினைப்பெல்லாம் பூர்த்தியாகட்டும். நீங்க படிச்ச வேதம் எந்நாளும் பூர்ண சக்தியோடு உங்களை ரக்ஷிச்சுண்டு இருக்கட்டும்’ என்றெல்லாம் வரம் கொடுத்தாரே!'' என்று ஞாபகப்படுத்துகிறார்.
மொத்தத்தில் குரு என்பவர், வித்யா ஸம்பத்து மட்டுமில்லாமல் குண ஸம்பத்து, அநுஷ்டான ஸம்பத்து, ஆத்ம ஸம்பத்து எல்லாம் ஒருங்கே கூடியவராக இருந்தார்.
இப்படி அவர் இருக்கும்படியாகச் செய்தது அந்தப் பழைய நாளின் குருகுல முறையே தான். சிஷ்யர்கள் ஒரு குருவின் ஆதரவில் அவருடைய க்ருஹத்திலேயே இருந்து படிப்பது என்கிற கல்விமுறையில் குரு- சிஷ்யன் ஆகிய இருவருமே சுத்தர்களாகத்தான் இருந்தாக வேண்டுமென்றிருந்தது. அந்த முறையே அவர்களை அப்படி சுத்தர்களாக உருவாக்கவும் செய்தது. சிஷ்யர்கள் கூடவே வஸித்தும் அன்பு, மரியாதைகள் செலுத்த வேண்டுமென்றால் குரு நல்லொழுக்கமுள்ளவராகவும், அநுக்ரஹ சக்தி பெற்றவராகவும் இருந்தால்தானே முடியும்?
அதேபோல், புத்தி மட்டத்திலும்கூட சிஷ்யன் கூடவே இருந்து, 'பரிப்ரச்நம்’ என்று பகவான் சொன்னபடி அவரைக் குடைந்து குடைந்து கேள்வி கேட்கிறானென்றால், அப்போது அவர், தான் போதிக்கிற சாஸ்த்ரத்தில் நல்ல ஆழ்ந்த அறிவை உண்டாக்கிக்கொண்டேயாக வேண்டியிருந்திருக்கிறது.'

Comments