சிதம்பரம்

பூமியின் இதயம் சிதம்பரமே’ என்று கீர்த்தனை பாடுவார்கள். அப்படிப்பட்ட சிதம்பரத்தைப் பற்றிய தகவல்கள்...

 சிதம்பரம் தலத்தில் தில்லை மரங்கள்  அடர்ந்த காடாக இருந்ததால், தில்லைவனம் என்று அழைக்கப்படுகிறது. சிதம்பரத்தின் வடபகுதி பெரும்பற்று என்று அழைக்கப்பட்டது. அங்குள்ள ஈசனை புலிக்கால்களை உடைய வியாக்கிரபாதர் வழிபட்டதால் பெரும்பற்றப் புலியூர் என்ற பெயர் ஏற்பட்டது.

திருவாசகத்தில் கோயில் மூத்த திருப்பதிகம், கோயில் திருப்பதிகம் என்ற இரண்டு பதிகங்களில் மாணிக்கவாசகர் கோயில் என்று சிறப்பித்து இருப்பது சிதம்பரம் திருத்தலத்தையே ஆகும்.

 அருவ வழிபாடு எனும் உருவமற்ற வெற்றிட வழிபாடு, சிற்சபைக்கு வலப்புறத்தில் உள்ள ஒரு சிறிய அறையில் நடைபெறுகிறது. இங்கு தங்கத்தால் ஆன வில்வதள மாலை மட்டுமே தொங்கவிடப்பட்டிருக்கும். இதன் ரகசியம் இங்கு இறைவன் ஆகாயம் எனும் வெட்டவெளி வடிவில் உள்ளார் என்பதுதான். இதுவே சிதம்பர ரகசியம் என பக்தர்களால் உணரப்படுகிறது.

‘அது என்ன பெரிய சிதம்பர ரகசியமா?’, ‘தில்லை பெண் எல்லை தாண்டாள்’, ‘உங்கள் வீட்டில் சிதம்பரமா? மதுரையா?’ ஆகிய பழமொழிகள் சிதம்பரத்தை ஒட்டி அமைந்த பழமொழிகளாகும்.
 274 தேவார சைவத் திருத்தலங்களுள் சிதம்பரம் முதன்மையானது. உலக சிவ ஆகமங்கள் இரவில் வந்தடைவது சிதம்பரத்தில்தான். அதனால், சிதம்பரம் கோயிலில் மட்டும் அர்த்த ஜாம பூஜை இரவு 10.30 மணிக்கே நடைபெறும். அதுவரை கோயில் நடை திறந்திருக்கும்.

சமயக்குரவர்கள் நால்வரும் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என ஒவ்வொரு கோபுர வாசல் வழியாக வந்து தில்லை நடராஜரை தரிசித்து இருக்கிறார்கள்.

சிதம்பரம் - பஞ்சபூத ஸ்தலங்களில் இது ஆகாய ஸ்தலம்.

 நடராஜரின் ஐந்து சபைகளில் முதலாவதான கனகசபை இங்குதான் உள்ளது.

 திருமுறை சுவடிகள்  இருக்குமிடத்தை விநாயகர் வழிகாட்ட, நம்பியாண்டார் நம்பி கண்டுபிடித்த தலமும், நந்தனார் இறைவனுடன் ஜோதியாக கலந்த தலமும் - சிதம்பரம்.
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் ஒரே இடத்தில் இருந்து கொண்டு நடராஜரையும், கோவிந்தராஜரையும்  ஒருசேர தரிசித்து அருள் பெறலாம்.

  சிதம்பரம் - திருவேட்களம் அருள்மிகு சற்குணாம்பாள் உடனுறை பாசுபதேஸ்வரர் திருக்கோயிலில் வில் - அம்புடன் காட்சி தருகிறார் சிவபெருமான். அர்ஜுனனுடன் ஏற்பட்ட போரில் அர்ஜுனன் சிவனை வில்லால் அடித்த தழும்பு, அவர் நெற்றியில் இன்றும் உள்ளது. இத்தலத்தை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடியுள்ளனர்.

திருச்சிற்றம்பலம் -  இதைச் சொல்லும்போதே, நம் நினைவுக்கு வருவது, திருமுறை சுவடிகள் கிடைத்த சிதம்பரம் தலம்தான்.

சிதம்பரத்தின் நான்கு எல்லைகளில் கிழக்கில் மாரியம்மன், மேற்கில் எல்லையம்மன், வடக்கில் தில்லைக்காளி, தெற்கில் வெள்ளந்தாங்கி அம்மன் ஆகியோர் எல்லை தெய்வங்களாக இருந்து காப்பதாக ஐதீகம்.

ஸ்ரீநடராஜர் கோயிலின் மேற்கில் திருநீலகண்ட நாயனாருக்கு இளமையைத் தந்தருளிய இளமையாக்கினார் சிவாலயம் உள்ளது. இளமையாக்கினார் கோயில் தெரு என்ற பகுதியில் மேற்படி ஆலயம் உள்ளது.

சிதம்பரம் என்னும் பெயர் சித்தம்பலம் / சிற்றம்பலம் என்னும் தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது. சிற்றம்பலம் என்பதன் பொருள் சிறிய மண்டபம் அல்லது அரங்கு. சித்து என்பதன் பொருள் ஞானம். அம்பலம் என்பதன் பொருள் அரங்கு. சித்தம்பலம் என்பதன் பொருள் ஞானம் நிறைந்த அரங்கம் என்பதாகும்.

சிதம்பரத்தில் ‘நாட்டியாஞ்சலி’ என்னும் முக்கியமான நிகழ்ச்சி  பிப்ரவரி மாதம் ஒவ்வொரு வருடமும் நடக்கும். அப்பொழுது நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பரதநாட்டிய கலைஞர்கள் கோயிலுக்கு வந்து நடராஜப் பெருமானுக்கு நாட்டியாஞ்சலி செலுத்துவார்கள்.

சிதம்பரத்தில் மார்கழி மாதத் திருவாதிரை மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படும். ஆருத்ரா நட்சத்திரத்துக்கு முந்தின நாள் இரவு நடராஜப் பெருமானுக்கு பலவகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும்.

பஞ்சபூதங்களில் ஆகாய சக்தியான சிதம்பரம், வாயு சக்தியான காளஹஸ்தி, பூமி சக்தியான காஞ்சி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பதாக இன்றைய விஞ்ஞானிகள் எட்டு வருட ஆராய்ச்சியின் பயனாக கண்டுபிடித்ததை திருமூலர் 5000 வருஷங்களுக்கு முன்பே சொல்லிவிட்டார்.

சிதம்பரம் கோயில் மனித உடல் தத்துவத்தை வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. நம் உடலில் 9 வாசல்கள் இருப்பதுபோலவே கோயிலுக்கும் 9 வாசல்கள். 

கோயிலின் கூரை 21, 600 தங்கத் தகடுகளால் அமைக்கப்பட்டுள்ளது. மனிதனின் ஒரு நாளைய சுவாசம் 21,600 என்பதைக் குறிக்கவே இப்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த 21,600 தகடுகளும் 72,000 தங்க ஆணிகளைக் கொண்டு பொருத்தப் பட்டுள்ளது. இது மனித உடலில் உள்ள 72,000 நரம்புகளைக் குறிக்கிறது.

பொன்னம்பலம் சற்றே இடது பக்கமாக சாய்ந்திருப்பது, மனிதனின் இதயத்தைக் குறிக்கின்றது. இதை அடைய 5 படிகள் ஏறவேண்டும். 5 படிகளும் பஞ்சாட்சர மந்திரமான, ‘சி - வா - ய - ந - ம’ என்பதை  மறைமுகமாக உணர்த்துகிறது.
சிதம்பர நகர எல்லைக்குள் தில்லைப் பெருங்கோயிலின் மேற்கில் ஒரு கி.மீ. தொலைவில் இருக்கிறது, சௌந்தரநாயகி சமேத அனந்தீஸ்வரர் கோயில். இங்கு பதஞ்சலி முனிவர் பாதி மனித வடிவமாகவும், பாதி பாம்பு வடிவமாகவும் காட்சி தருகிறார். இவர் அனுக்கிரக மூர்த்தியாக இக்கோயிலில் காட்சி தருகிறார்.

சிதம்பரம் தெற்கு வீதியில் மனித முகத்தோடு கூடிய நரமுக விநாயகர் சிலை இருக்கிறது.

சிதம்பரத்தில் 10 தீர்த்தங்கள் உள்ளன.  சிவகங்கைத் தீர்த்தம் (திருக்கு ளம்); சமுத்திரம்; புலிமேடு; வியாக்ரபாத தீர்த்தம்; அனந்த தீர்த்தம்; நாகசேரி; பிரம்மத் தீர்த்தம்; சிவப் பிரியை; திருப்பாற்கடல்; பரமானந்த கூபம்.

சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் சிலைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  ஒவ்வொரு சுதந்திர தினம்  அன்றும்,   ஸ்ரீநடராஜர் முன்பு பூஜிக்கப்பட்ட தேசியக் கொடியை தீட்சிதர்கள் மேளதாளத்துடன் எடுத்து வந்து கிழக்கு கோபுரத்தில் பறக்க விடுவார்கள்.

  இங்கு இருக்கும் சிவகாமி சுந்தரி அம்மன் கோயிலின்  பிராகாரத்தில் ‘சித்ரகுப்தருக்கு’ தனிச் சந்நிதி உள்ளது.

  சிதம்பரத்தைச் சுற்றி இருக்கும்    ஸ்ரீபிரம்மராயர் கோயிலும்,  ஸ்ரீகாருண்ய மகாமாரியம்மன் கோயிலும், வீரனார் கோயிலும் பிரசித்தி பெற்ற கோயில்கள் ஆகும்.

  ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, தன்னுடைய பக்கத்து அறையில் வேதம் படித்த ஜெர்மனியர்களை வேத மந்திரங்களை உச்சாடனம் செய்யச் சொல்வாராம். ஹிட்லரின் சின்னமான ஸ்வஸ்திக் சின்னம் இந்து மதத்தைச் சேர்ந்தது. இந்தச் சின்னத்தை 1931-ம் ஆண்டு சிதம்பரம் கோயிலின் வடக்கு கோபுரத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 காந்திஜி தமிழகத்துக்கு வந்தபோது சிதம்பரத்துக்குச் சென்றாராம். அங்கே சென்றதும் அந்த இடத்து மண்ணை எடுத்து முத்தமிட்டாராம். காரணம் கேட்டபோது, ‘நந்தனார் என்ற தூய பக்தர் நடமாடிய புனித இடம்’ என்றாராம்.

  சிதம்பரத்தில் ராஜா சர்.அண்ணாமலை செட்டியாரால் ஏற்படுத்தப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகம் பிரசித்தி பெற்றது. இந்தப் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற தமிழ்த் துறையில் தமிழறிஞர்கள் பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சோமசுந்தர பாரதியார், சதாசிவபண்டாரத்தார் போன்றோர் பணியாற்றி உள்ளனர். தமிழிசையை வளர்த்ததில் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு முக்கிய பங்கு உண்டு

Comments