மதுரை

சிவ தலங்களுள், 16 தலங்கள் மிக முக்கியமானவை. அவற்றுள் சிதம்பரம், காசி, திருக்காளத்தி, மற்றும் திருஆலவாய் ஆகிய நான்கு தலங்கள் குறிப்பிடத்தக்கவை. ‘திருஆலவாய்’ என்பது மதுரை மாநகரின் பெயர்களுள் ஒன்று. இந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே இறவாப் பேரின்ப நிலை கிடைக்கும். வாழும் காலத்திலேயே வீடு பேறு கிட்டும். சீவன் முக்தி தரும் தலம் என்பதால், சீவன் முக்திபுரம் எனும் பெயரும் இதற்கு உண்டு. மேலும், சிவராஜதானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் ஆகிய பெயர்களும் உண்டு. கோயிலில் இறைவன் நிகழ்த்திய ஆனந்தக் கூத்தால் ‘வெள்ளி அம்பலம்’ எனப்பட்டது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் கனவில் வந்த சிவனாரின் சடாமுடியிலிருந்து ‘தேனாகிய மதுரம்’ இத்தலத்தில் வழிந்திட, ‘மதுராபுரி’ என அழைக்கப்பட்டு, அது மருவி ‘மதுரை’ ஆயிற்று.

  கிரேக்க சாம்ராஜ்யத்தின் தலைநகர் ஏதென்ஸ் போல நாகரிக, கலாசாரத்தில் சிறந்து விளங்குவதால் ‘ஏதென்ஸ் ஆஃப்  தி ஈஸ்ட்’ எனப் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.

  ‘மதுரையே மீனாட்சி; மீனாட்சியே மதுரை’ என்று கூறுமளவுக்கு சக்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தத் திருக்கோயில், சக்தி பீடங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. இந்தப் பீடத்துக்கு ‘ராஜமாதங்கி சியாமள பீடம்’ என்று பெயர்.

  இங்குள்ள மீனாட்சி அம்மனின் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள 366 கோயில்களில் முதன்மையானது இது.

  மீன் போன்ற கண்கள் கொண்டவள் என்பதால், மீனாட்சி என்ற பெயர் ஏற்பட்டது. மீன் தனது முட்டைகளை, பார்வையாலேயே தன்மயமாக்குவது போல், பக்தர்களை அருட் கண்ணால் நோக்கி அன்னை மீனாட்சியும் அருள்பாலிக்கிறாள்.

  மீனாட்சி அம்மனுக்குப் பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிஷேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத்திருவழுதிமகள் போன்ற பெயர்களும் உள்ளன.

    ராமர், லட்சுமணர், வருணன், தேவர்கள் மற்றும் முனிவர்கள் பலரும் பூஜித்துப் பேறு பெற்ற தலம் மதுரை.

  விருத்ராசுரனைக் கொன்ற இந்திரன், பிரும்மஹத்தி தோஷம் நீங்க, பாண்டிய நாட்டுக் கடம்ப வனத்தில் சுயம்புலிங்கத்தை வழிபட்டுத் தோஷம் நீங்கப் பெற்றான். இந்தச் சிவலிங்கத்தைத் தேவர்களும் பூஜித்து வந்தார்கள்.

  ஒரு நாள், தனஞ்செயன் என்ற வியாபாரி கடம்பவனத்தில் கானம் ஒன்றைக் கேட்டு அருகில் சென்றபோது, லிங்கம் அவன் கண்களுக்குத் தென்பட்டது. அப்போது மணவூரை ஆண்ட குலசேகர பாண்டிய மன்னரிடம் சென்று இந்தத் தகவலைக் கூறினான். அரசன் கடம்ப வனத்துக்கு வந்து ஈசனை தரிசித்தான். பின்பு அங்கு கோயில் கட்டி, நகரத்தையும் உருவாக்கி, மக்களுடன் குடியேறினான் என்கின்றன புராணங்கள்.

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் 8 கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானம் - இந்திர விமானம் என அழைக்கப்படுகிறது. இதில் 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.

  மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரர் கருவறை விமானங்கள் தேவேந்திரனால் அமைக்கப்பட்டவை. அம்மை அருள்பாலிக்கும் கருவறை 32 சிங்கங்களும், 64 சிவ கணங்களும், 8 கல் யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமான கருவறையாகும்.

  மீனாட்சியம்மை கோயிலில் ஏராளமான மண்டபங்கள் உள்ளன. அவை ஆயிரங்கால் மண்டபம், நகரா மண்டபம், அஷ்ட சக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலிப்பிள்ளை மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கிளிக்கூடு மண்டபம், திருமலை நாயக்கர் மண்டபம், வீர வசந்தராய மண்டபம், திருக்கல்யாண மண்டபம், கம்பத்தடி மண்டபம், நான்கு கால் மண்டபம், மண்டபநாயக மண்டபம், திருஞான சம்பந்தர் மண்டபம், சங்கப்புலவர் உலா மண்டபம், புது மண்டபம் எனப் பல மண்டபங்கள் உள்ளன.

    நவகிரகங்களில் புதனுக்கு உரிய தலம் மதுரை. புதனுக்கு உரிய ரத்தினமான மரகதத்தில் மூலவர் மீனாட்சி சிலை உள்ளது. அதேபோல், பஞ்ச சபைகளில் வெள்ளி அம்பலம் மதுரையாகும். கால் மாறி ஆடிய கோலத்தில் நடராஜர் காணப்படுவது விசேஷம்.

  மீனாட்சி அம்மன் அரசியாக இருந்ததால், அபிஷேகங்களை பக்தர்கள் பார்க்க அனுமதி இல்லை. அலங்காரம் செய்த பிறகே பார்க்கலாம்.

    சிவபெருமானின் திருவிளையாடல்களால் பெருமைபெற்ற இந்தத் தலத்தின் பிரசாதமான தாழம்பூ குங்குமம் வேறு எங்கும் கிடைக்காது.

    இந்திரன் சிவபூஜை செய்ய ஏதுவாக, இக்குளத்தில் தங்கத் தாமரை மலர்கள் மலர்ந்ததால் இது ‘பொற்றாமரைக்குளம்’ எனப் பெயர் பெற்றது. ஆதி தீர்த்தம், சிவகங்கை, உத்தம தீர்த்தம் எனவும் போற்றப்படுகிறது.  அமாவாசை நாளில் இக்குளத்தில் மூழ்கி எழுவது பெறும் பேறு! ஒரு காலத்தில், இலக்கியத்தின் தரத்தை நிர்ணயிக்கவல்லதாய் இக்குளம் இருந்துள்ளது. இலக்கியங்களை ஏடுகளில் எழுதி இக்குளத்தில் இட்டால் நல்லவை மிதந்து வரும்; அல்லாதவை மூழ்கிவிடும் எனப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

  பொற்றாமரைக் குளத்தில் மீன் போன்ற உயிரினங்கள் காணப்படுவதில்லை என்பது ஓர் அதிசயம்.

   திருமலை நாயக்க மன்னன், மஹால் கட்ட மண் எடுத்த இடமே வண்டியூர் தெப்பக்குளம். அங்கு புதைந்து கிடந்த முக்குறுணி விநாயகர் விக்கிரகம், மீனாட்சி அம்மன் கோயில் பிராகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

  ‘திருமலை நாயக்கர் மஹால்’ திராவிடமும் முகம்மதியமும் இணைந்த கட்டடக்கலைக்குச் சான்று.

  ‘தமுக்கம்’ மைதானம் வைகையின் வடகரையில் அமைந்து உள்ளது. இங்கு ஒரு மாளிகையும் உள்ளது. இதில் சுவர்களுக்குப் பதிலாகத் தூண்கள் கூரையைத் தாங்கி நிற்கின்றன. மேல் கூரை நல்ல வேலைப்பாடு உடையது. மேல் தளம் தாமரை மலரைக் கவிழ்த்து வைத்தது போன்ற தோற்றப் பொலிவுடையது. ‘தமுக்கம்’ என்றால் யானைகள் போர் செய்யும் இடம் என்று பொருள். மதுரையில் சங்க காலத்தில் யானைப் போர் நடப்பது வழக்கமாக இருந்துள்ளது. இந்த மைதானத்தில்தான் யானைப் போர் நடக்கும்.

   ‘ஜல்லிக்கட்டு’ என்றாலே நம் நினைவுக்கு வருவது அலங்காநல்லூர்தான். இந்த ஊரில் உள்ள முனியாண்டி சுவாமி வழிபாட்டின் ஒரு அம்சமாக இருக்கிறது, ஜல்லிக்கட்டு. மேலும், மதுரையைச்சுற்றி கலாசார விளையாட்டுக்களான சேவல் சண்டை, கிடாமுட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடுவிரட்டு போன்ற போட்டிகளும் பொங்கலின்போது சிறப்பாக நடத்தப்படும்.

  மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி  நகர நிர்மாணம் உருவாக்கப்பட்டுள்ளது. பரிபாடலில் மதுரையின் நகர அமைப்பு ஒரு தாமரைப்பூவோடு ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. இது தவிர மதுரைக்காஞ்சி, திருவிளையாடற்புராணம், நெடுநல்வாடை, சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, மணிமேகலை, சிறுபாணாற்றுப்படை முதலிய இலக்கியங்களும் மதுரை நகரின் சிறப்பை வர்ணிக்கின்றன.

  கோயிலைச் சுற்றி உள்ள ஆதித் தெரு, அதன் பின் சித்திரைத் தெரு, மாசித் தெரு, ஆவணி மூலத்தெரு என எந்தத் தெருவும் கோயிலை நோக்கிச் செல்லும் வகையில் அமைந்திருப்பது மதுரையின் தனிச்சிறப்பு.

  தெருக்களின் பெயர்கள் திசைகளையோ, தொழிலையோ, காரணத்தையோ குறிப்பதாய் அமைந்திருப்பதும் இங்கு மட்டுமே! சித்திரக்காரன் தெரு, கொல்லப் பட்டறைத் தெரு, வளையல்காரத் தெரு, நகைக்கடைத் தெரு, வெத்தலைப் பேட்டை, நெல் பேட்டை... இப்படிப் பல.

  பாரதியார் பள்ளி ஆசிரியராக இங்கு பணிபுரிந்த காலத்தில், அவர் நடைப்பயிற்சி சென்ற தெருவே  ‘பாரதியார் உலா வீதி’.

  மீனாட்சியம்மை கோயில் மட்டுமல்ல, கோயில் நகரமாம் மதுரையிலும் மதுரையைச் சுற்றிலும்  நாம் அவசியம் தரிசிக்க வேண்டிய இன்னும் பல ஆலயங்கள் உண்டு.  கூடலழகர் கோயில், இம்மையிலும் நன்மைதருவார் கோயில், தெப்பக்குளம் மாரியம்மன் ஆலயம், திருப்பரங்குன்றம் முருகன் ஆலயம், ஒத்தக்கடை யானைமலை நரசிம்மர் ஆலயம், பழமுதிர்ச்சோலை, அழகர்மலை கள்ளழகர் கோயில் ஆகியவை குறிப்பிடத்தக்கவை,  கடவுளுக்கு அடியவர் பல்லாண்டு பாடிய திருத்தலமும் மதுரையே. ஆம்! பெரியாழ்வாருக்கு கருட வாகனராய் பெருமாள் திருக்காட்சி தர, அவருக்குக் கண் திருஷ்டி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பெரியாழ்வார் பல்லாண்டு பாடினார். இப்படியான பெருமையைச் சுமந்து திகழ்கிறது மதுரை கூடலழகர் கோயில்.

  கூடலழகர் கோயில் அஷ்டாங்க விமானச் சிறப்புடையது. இந்த விமானம் ‘ஓம் நமோ நாராயணா’ என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவாகும். இந்தத் தலத்தில் உள்ள சூரிய ரதம், பக்தர்கள் தரிசிக்கவேண்டிய ஒன்று.

  மதுரைக்கு அருகில் உள்ள திருவாதவூர் மாணிக்கவாசகர் பிறந்த தலம். இங்கே இந்த அடியவருக்கு ஓர் ஆலயம் உள்ளது.

  திருப்பரங்குன்றம் மலையின் மேற்குப் பகுதியில் சுமார் 150 அடி உயரத்தில் செங்குத்தான பாறையில் ‘பஞ்சபாண்டவர் குகை’ உள்ளது. இந்தக் குகைக்குள் பாறைகள் வழுவழுப்பாக அமைந்துள்ளது. கி.மு.3-ம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட பிராமி எழுத்து சாசனமும் உள்ளது. இந்தக் குகை சுமார்  56 அடி நீளம்; 20 அடி அகலம். மலையிலிருந்து ஓடி வரும் மழைத் தண்ணீர் குகையின் வாயில் வழியாகக் குகைக்குள் செல்லாமல் வெளியிலேயே வழிந்து போகும்படி பாறையில் குழிவான தும்புகள் செதுக்கப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயில் மட்டுமல்லாது, ஒரு முகம்மதிய வழிபாட்டுத் தலமும் அமைந்திருப்பது அப்பகுதி மக்களின் நல்லிணக்கத்துக்கு உறுதுணையாக இருக்கிறது.

  ‘பேச்சிபள்ளத்தில்’ உள்ள இயற்கையான அருவி மதுரையின் மற்றும் ஒரு பெருமிதம்.

  மதுரை மாவட்டம், திருமங்கலம் - உசிலம்பட்டி ரோட்டை ஒட்டி, குண்டாற்றங்கரை யில் ‘ பால அனுமன் கோயில்’ அமைந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயில் உருவானது. ஆங்கிலேயர்கள் பால அனுமனுக்கு ஸ்வஸ்திக் முத்திரை பதித்த வெள்ளிக் கவசம் தந்துள்ளனர். குழந்தை இல்லாத தம்பதிகள் மனதை ஒருநிலைப்படுத்தி, அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வணங்கி, அந்த வெண்ணெயை தினசரி சாப்பிட்டு வந்தால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

  17-ம் நூற்றாண்டு முடியும் தறுவாயில், ஒரு கஷ்டமான காலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று, 18 ஆண்டுகள் மதுரையை ஆண்டவர் ராணி மங்கம்மாள். அவர் ஏற்படுத்திய வழக்கம் தான் ‘ஊஞ்சல் திருவிழா’. அதனால்தான் ஊஞ்சல் மண்டபத்தில், இன்றும் அவர் படம் அலங்கரிக்கிறது.

  பொன். பாண்டித்துரை தேவரின் முயற்சியால் 1901-ம் ஆண்டு மதுரையில் நான்காவது தமிழ்ச்சங்கம் உருவாக்கப்பட்டது.

  காந்திஜியை வேஷ்டி, குர்தா, தலைப்பாகை உடையிலிருந்து இடையில் வெறும் வேஷ்டி அணியும் நிலைக்கு மாற்றியது, மதுரையில் அவர் பார்த்த ஏழ்மையே! அந்தக் கோலத்தில் அவர் முதல்முறை பேசிய இடம், இன்றும் மதுரையில் ‘காந்தி பொட்டல்’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. பேசிய நாள் 22.9.1921. காந்தி சுடப்பட்டபோது, அவர் அணிந்திருந்த வேஷ்டி மதுரை காந்தி மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

  மங்கையர்க்கரசியார், நின்றசீர் நெடுமாறன், குலச்சிறையார் போன்ற அடியவர்களும், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, டி.என்.சேஷகோபாலன், மதுரை மணி ஐயர், மதுரை டி. னிவாசன், டி.எம்.சௌந்திரராஜன், போன்ற இசைப் பேரறிஞர்களும், ருக்மணிதேவி அருண்டேல், நர்த்தகி நடராஜ், அனிதா ரத்னம் போன்ற ஆடலரசிகளும் இங்கே பிறந்து இந்த மதுரை மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். இன்றைக்கும் பல துறைகளில் நட்சத்திரங்களாக மின்னிக்கொண்டு இருக்கும் மதுரைக்காரப் பிரபலங்கள் பலர் உண்டு.

  மதுரை மல்லி பிரசித்தி பெற்றது. சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரம், குறிஞ்சிப் பாட்டு, மதுரைக் காஞ்சி போன்ற நூல்களில் மதுரை மல்லியின் பெருமை மணம் வீசுகிறது. மதுரையைச் சுற்றி 1220 ஏக்கர் நிலத்தில் மல்லி பயிரிடப்பட்டு, 9557 டன் மலர்கள் நாள்தோறும் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

  மதுரையில் வசிக்க வந்த குஜராத்தியரின் வித்தியாசமான கலையுணர்வால் பிறந்ததே சுங்கிடிப் புடைவைகள். 100% பருத்தியில் மெல்லியதாய், பளிச் கலர்களில் கான்ட்ராஸ்ட் பார்டர்களில், அழகிய கோலம், ரங்கோலி டிசைன்களில் இருப்பது இதன் சிறப்பம்சம்!

  மதுரையின் தெரு முக்குகளிலும், மூலைமுடுக்கிலும் அதிகம் விற்கும் தனி அடையாளம் ஜிகர்தண்டா. இது கடற்பாசி, பால், சர்க்கரை, ஜவ்வரிசி, பாதாம் மற்றும் சில பொருட்களைக் கொண்டு செய்யப்படும் ருசியான, தனித்துவமான பானம்.

  ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை, கடந்த ஜனவரி 7 அன்று, இந்த உலகில் சுற்றுலா சென்று பார்க்கவேண்டிய ஆகச் சிறந்த 52 இடங்களில் ஒன்றாக நம் தமிழகத்தையும் தேர்வு செய்துள்ளது. அதனுடைய வலைத்தளத்தில், தமிழகத்தைச் சுட்டிக்காட்டுகையில், முகப்புப் படத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் நான்மாடக்கோபுரத்தை வெளியிட்டு கெளரவப்படுத்தியுள்ளதோடு, தமிழகக் கோயில்கள்- ‘இந்திய கலாசார மையத்தின் புதிய நுழைவுவாயில்’ எனச் சிறப்பித்துச் சொல்லி, அடையாளப்படுத்தியுள்ளது

Comments