மாரியம்மன் பவனி வரும் முத்துப்பல்லக்கு

கடவுள் வாகனங்களில் இயற்கை வடிவான வாகனங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன வாகனங்கள், கலப்பு வடிவ வாகனங்கள், பூத கின்னர வாகனங்கள், அபூர்வ வகை வாகனங்கள், கூட்டு வாகனங்கள் எனப் பல வாகனங்கள் உள்ளன. இவையல்லாது, இறைவனும் இறைவியும் பல்லக்கில் பவனி வருவது என்பதும் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. இதர வாகனங்களைக் காட்டிலும், இறைவனோ இறைவியோ பல்லக்கில் பவனி வருகையில் அதிக அளவிலான அலங்காரங்களும், ஜொலிக்கும் மின் விளக்கு அலங்காரங்களும் பல்லக்கு வாகனத்தின் தனிச்சிறப்பு. அதிலும் இரவு நேரத்தில் மின்னொளிப் பாச்சலுடன், இறைவனையோ இறைவியையோ சுமந்து வரும் பல்லக்கினைக் காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் திரள்வது இன்றளவும் நடைபெற்று வருகிறது.
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் இயங்கி வரும் புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த எண்பத்தியெட்டு திருக்கோயில்களில் ஒன்று. தமிழகத்திலேயே மிகச் சிறப்பாக முத்துப்பல்லக்கு திருவிழா நடைபெற்று வருவது, இக்கோயிலில் மட்டும்தான். மற்ற கோயில்களில் பல்லக்கு உற்ஸவங்கள் நடைபெற்றாலும், அவையெல்லாம் சிறிய அளவிலான பல்லக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும். புன்னைநல்லூர் உற்ஸவர் மாரியம்மன் பவனி வரும் முத்துப்பல்லக்கு மிகப் பிரம்மண்டமான தாகும்.
தஞ்சையை ஆண்ட சொழப் பேரரசர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டுத் திக்குகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். தஞ்சைக்கு கிழக்காக அமையப்பெற்ற காவல் தெய்வமே புன்னைநல்லூர் மாரியம்மன் என்று ‘சோழ சம்பு’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகா ராஜாவால் இக்கோயில் உருவாக்கப் பட்டபோது, இப்பகுதி புன்னை வனக்காடாக இருந்துள்ளது.
1763களில் துளஜா மகா ராஜாவின் மகளுக்கு வைசூரியினால் கண் பார்வை மங்கியது. இத்திருத்தலம் வந்து மகா ராஜாவின் குடும்பத்தினர் வேண்டிக் கொள்ள, அப்பெண்ணுக்குக் கண்பார் வைக் கிட்டியது. இதனால் அம்பிகைக்குச் சிறிய கோயிலைக் கட்டி, திருச்சுற்று மாளிகையும் அமைத்தார் மகாராஜா. சதா சிவ பிரம்மேந்திர சுவாமிகளைக் கொண்டு, புற்று உருவா இருந்த அம்பிகைக்கு சிலை வடிவமைத்துச் சக்கர பிரதிஷ்டையும் செய்தார். மேலும், சிவ பெருமானை வழிபட கோயிலிலிருந்து சற்றுத் தொலைவில் கைலாசநாதர் கோயிலையும் கட்டினார் மகா ராஜா.
கருவறை மாரியம்மன் புற்று மண்ணால் ஆனவர் என்பதால், அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. விஷ்ணு துர்கைக்கும், உற்ஸவ அம்பாளுக்கும் நித்தியப்படி அபிஷேகம் நடைபெற்று வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அம்பாளுக்கு ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் செவிக்கப்படுகிறது. அந்த நாற்பத்தைந்து நாட்களுக்கு அம்பாளை ஒரு வெண்திரையில் வரைந்து ஆவாஹனம் செய்து அதற்குத்தான் அர்ச்சனை, ஆராதனைகள் செய்விக்கப் படுகின்றன. கருவறை அம்பாளுக்கு அந்த நாற்பத்தைந்து நாட்களிலும் தினமும் இருவேளை சாம் பிராணித்தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகிய வற்றால் அபிஷேகம் நடைபெறும்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடையில் அக்னி நட்சத்திரத்துக்கு முன்பு வருகின்ற ஞாயிற்றுக் கிழமை அன்று அம்பாளுக்கு தைலக்காப்பு அபிஷேகம் தொடங்கப்படும். தைலாபிஷேக நேரத்திலும், தைலக் காப்பின்போதும் அம்பாளுக்கு வெப்பம் அதிகமாகும். அதனைத் தணிக்க தயிர்ப்பள்ளயம், இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும்.
ஆடி மாதம் நடைபெறுகின்ற முத்துப்பல்லக்குத் திருவிழாதான் இக்கோயிலின் மிகப்பெரிய திருவிழா. இதற்கென தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் ஆதரவுடன் முத்துப்பல்லக்கு விழாக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஆவணி மாதம் பிரமோற்ஸவம், ஆவணி கடைசி ஞாயிறு அன்று திருத்தேர் உற்ஸவம் (ஒவ்வொரு ஆவணி ஞாயிறும் மிக விசேஷம்), புரட்டாசி மாதம் வசந்த உற்ஸவ தெப்பத் திருவிழா ஆகியவை இக்கோயிலின் சிறப்பு விழாக்கள்.
முத்துப்பல்லக்கு உருவாவதே பெரிய கலை. தஞ்சாவூர் கீழவாசல் அழகர்சாமி தலைமையில் இருபது பேர் கொண்டகுழுவினர், கடந்த முப்பது ஆண்டுகளாக இந்தப்பல்லக்கை உருவாக்கித் தருகின்றனர். இதனை உருவாக்கிட, அவர்களுக்கு ஏழெட்டு தினங்கள் ஆகின்றன. முழுமையான முத்துப்பல்லக்கின் நீளம் முப்பத்தைந்து அடி, அகலம் பன்னிரெண்டு அடி, உயரம் ஐம்பத்தைந்து அடி. இந்த நீள, அகல, உயர பிரம் மாண்டம்தான் புன்னைநல்லூர் மாரியம்மன் முத்துப் பல்லக்கினை நேரில் காண அனைவரையும் ஈர்க்கிறது.
நான்கு சக்கர பட்டறை மீதாக இருபுறமும் நாற்பதடி நீள ஒரே மரவாரினைக் கட்டுகிறார்கள். அதன் மீதுதான் முத்துப்பல்லக்கு முழு வடிவம் பெறுகிறது. முன்பாக, பல்லக்கை வடிவமைக்கும் இருபது கலைஞர்களும், மூங்கில் பிளாச்சுகளை அளவுகளுக்கு ஏற்றாற்போல் வெட்டி, அலங்கார வடிவங்களை உருவாக்குகின்றனர். ஜிகினாக்களை வெட்டி ஒட்டுகின்றனர். ஜொலிக்கும் முத்துக்களை (டூப்ளிகேட்) பதிக்கின்றனர். கீழே கைவேலைகள் அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் அவற்றை அந்தப் பட்டறை மீது ஏற்றி ஆங் காங்கே கட்டி, ஒட்டி மிகப் பிரம்மாண்ட முத்துப்பல்லக்கினை உருவாக்கி விடுகின்றனர். அதன் பிறகு முத்துப்பல்லக்குக்கு மின் விளக்கு அலங்காரங்கள் பொருத்தப்படுகின்றன. பூச்சரங்கள் மற்றும் பூமாலைகள் அலங்காரத்துடன் முத்துப் பல்லக்கு மிகுந்த பேரழகுடன் தோற்றமளிக்கிறது.
இக்கோயில் ஒரு பிரார்த்தனைத் தலம். கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு அம்மனிடம் வேண்டிக் கொண்டால் கைமேல் அல்ல, கண்மேல் உடனே பலன் கிட்டும். அம்மை நோய் தணிப்பதிலும், புன்னைநல்லூர் மாரியம்மன் மிகுந்த வரப்ரசாதி. கோயிலின் உள்ளே உள்ளது வெல்லக்குளம். உடலில் கட்டி, மரு உள்ளவர்கள், வெல்லத்தை அம்மன் காலடியில் வைத்து அதை வெல்லக் குளத்தில் இட வேண்டும். குலத்தில் வெல்லம் கரைவது போல அந்த பக்தர்களின் உடல் கட்டிகளும் கரைந்து போகின்றன.

ஆடி மாதம், கடைசி ஞாயிற்றுக்கிழமை இக்கோயிலில் முத்துப்பல்லக்குப் பெருவிழா. அன்று காலை ஊர் மக்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கைலாசநாதர் கோயிலிலிருந்து பால் குடம் சுமந்து, பகல் பன்னிரெண்டு மணியளவில் மாரியம்மன் கோயிலுக்கு வந்து சேர்வார்கள். மதியம் இரண்டு மணிக்கு உச்சிக்கால பூஜை. அதன் பின்பு மாலை நான்கு மணியிலிருந்து சுவாமி அலங்கார மண்டபத்தில், உற்ஸவர் மாரியம்மனுக்கு இரவு ஏழு மணி வரைக்கும் அலங்காரம் நடைபெறும்.
அலங்கார மண்டபம் எதிரே, இசைக்கலைஞர்கள் பலர் இசைக் கச்சேரி நிகழ்த்திக் கொண்டிருப்பர். இரவு பன்னிரெண்டு மணியளவில் மல்லாரி இசையினைக் கேட்டபடி, உற்ஸவர் மாரியம்மன் உள் பிராகாரம் வலம் வருவார். இரவு ஒரு மணியளவில் அம்பாள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளியவுடன் முத்துப்பல்லக்கு வீதியுலா தொடங்கி விடும். நான்கு ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்பாள் திருக்கோயில் வந்து சேர, காலை ஆறரை மணியாகி விடும். தொடர்ந்து ஏழு மணியளவில், மீண்டும் மல்லாரி இசை கேட்டபடி, மாரியம்மன் கருவறை முன்மண்டபம் வந்து சேர்வாள்.
இந்த ஆண்டு புன்னைநல்லூர் மாரியம்மன் முத்துப்பல்லக்கு திருவிழா, ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை (ஞாயிறு) அன்று நடைபெற உள்ளது" எனக் கூறுகிறார் அர்ச்சகர் ஆர்.சுரேஷ் குருக்கள்.
தரிசன நேரம்: திங்கள் முதல் சனி வரை காலை
5.30 மணி முதல் இரவு 9 வரை.
ஞாயிறு மட்டும் காலை 4.30 மணி முதல் இரவு 10.30 வரை. தொடர்புக்கு: 04362 267740

Comments