குறை தீர்ப்பார் குரு பகவான்!

நவக்கிரகங்களில் சுபகாரகர் குருபகவான், தான் இருக்கும் இடம் மட்டுமின்றி; பார்க்கும் இடத்திலுள்ள மற்ற கிரகங்களின் தோஷத்தையும் போக்கும் வல்லமை பெற்றவர். ‘குருபார்க்க கோடி நன்மை’ என்பது பழமொழி. இனி, குரு பெயர்ச்சியன்று வழி பட உகந்த இரு கோயில்களைக் காண்போம்.
திட்டை ராஜகுரு
தஞ்சை பெருவுடையார் கோயிலை அடிப்படையாகக் கொண்ட சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று திருத்தென்குடித் திட்டை எனப்படும் ‘திட்டை’ திருத்தலம். இங்கு, வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னிதிகளுக்கு இடையே குரு பகவான் ராஜகுருவாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
திட்டை என்பதற்கு மேட்டிடம் என்று பொருள். மகாப்பிரளய காலத் திலும் மூழ்காமல் இறையருள் மிகுந்திருந்த தலம் திட்டை. இங்கு வசிஷ்டர் வழிபட்ட வசிஷ்டேஸ்வரர் கருவறை மூலவராக அருள் பாலிக்கிறார். விமானத்தில் உள்ள சந்திரகாந்தக்கல் காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டு நீராக வசிஷ்டேஸ்வரர் மீது நித்யாபிஷேகம் செய்வது வேறெங்கும் காண இயலாத சிறப்பு. சந்திரனின் வழிபாடாக இந்த அபிஷேகம் நிகழ்கிறது. வசிஷ்டேஸ்வரர் மும்மூர்த்திகளுக்கு சக்தியையும், ஞானத்தையும் அருளியவர். காலபைர வரின், பிரம்மஹத்தி தோஷம் நீக்கியவர். குரு பகவானுக்குத் ‘தேவகுரு’ என்ற பதவியை அருளியவர்.
நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்களின் நடுவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் அமர்ந்து பஞ்ச லிங்கேஸ்வரராக அருள்பாலிக்கின்றார். தவிர, தனக்கு இணையாக உயர்ந்த பீடத்தில் அன்னை சுகந்த குந்தளாம்பிகையை இருத்தியுள்ளார். பெண்களுக்கு மங்கள வாழ்வளிப்பதால் அம்பாள் மங்களாம் பிகை எனப் போற்றப்படுகிறாள். அம்மன் சன்னிதி மேல் விதானத்தில் 12 ராசிக் கட்டங்கள் உள்ளன. அந்தந்த ராசியினர் தங்கள் ராசிக்கட்டத்தின் கீழே நின்று பிரார்த்தனை செய்வதால் சகல தோஷங்களும் நீங்கப் பெறுவர் என்பது ஐதீகம். மேலும், விநாயகர், முருகர், ராஜகுரு, பைரவர் ஆகியோரும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன், கொடி மரம், விமானம் என அனைத்தும் கருங்கற்களால் உருவாக்கப்பட்ட ஆலயம். கோயிலின் வெளியே அழகிய தீர்த்தக்குளம் உள்ளது. தேவ மங்கையர்களும், தேவர்களும் முல்லை, மல்லிகை போன்ற கொடிகளாகவும், வில்வம், அரசு, பலாசம் முதலிய மரங்களாகவும் நின்று தலவிருட்சங்களாக இறைத் தொண்டாற்றுகின்றனர். வரங்களைவாரி வழங்கும் வசிஷ்டேஸ்வரர் ஆலய ராஜகுருவை வணங்கி குருவின் திருவருளையும், அம்மையப்பனின் பேரருளையும் பெற்று வாழ்வில் உயர் நிலை அடைவோம்.
சிஷ்ட குரு நாதேஸ்வரர்
கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு அருகில் உள்ளது திருத்துறையூர். கயிலை நாதன் சிவபெருமான் குருவாய் அமர்ந்து சுந்தரருக்கு உபதேசம் செய்ததிருத் தலம். ஈசன் - சிஷ்ட குரு நாதேஸ்வரர், அம்பிகை - சிவலோக நாயகி.
திருவெண்ணை நல்லூரில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ‘பித்தா’ என அடியெடுத்துத் தந்த ஈசன், அவருக்கு தவநெறி உபதேசம் தர, திருத்துறையூருக்கு வரவழைக்கிறார். பக்திப் பெருக்கோடு, சிவபெருமானை தரிசிக்க ஆலயத்துக்குள் நுழைந்த சுந்தரர், அங்கு சிவபெருமானைக் காணாமல் திடுக்கிடுகிறார். என்ன பிழை செய்தேன் நான். ஏன் தரிசனம் தரவில்லை" என உள்ளம் கலங்கித் துடிக்கிறார்.
புலம்பியபடியே திரும்பிச் செல்கையில், ஒரு வயோதிக அந்தணர், சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்து, யாரைத் தேடுகிறீர்?" என வினவ, சிவபெருமானை தரிசிக்க வந்தேன். இயலவில்லை" எனக் கூறினார். அந்தக் கோபுரத்தைப்பார்" என அந்தணர் கூறியதும், சுந்தரமூர்த்தி நாயனார் திரும்பிப் பார்க்க, இறைவன் ரிஷபாரூடராக அம்பிகையுடன் கோடி சூர்ய பிரகாசமாய் காட்சியளித்தார். ஈசனைக் கண்ட மறுகணமே, ‘மலையார் அருவித்திரள் மாமணி உந்தி’ என்ற தவ நெறிப்பதிகத்தை பாடினார் சுந்தரர். பிறகு, சிவ பெருமான் விநாயகரை சாட்சியாகக் கொண்டு சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தவ நெறி உபதேசம் தந்தமையால், ‘சிஷ்ட குரு நாதேஸ்வரர்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
இது, மிகச் சிறந்த குரு தோஷ நிவர்த்தித் தலம். இக்கோயில் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையன்று மஞ்சள் வஸ்திரம், மஞ்சள் புஷ்பம் சூட்டி, கொண்டைக் கடலை மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்பவருக்கு குருவின் திருவருளால் கோடி நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.
தவிர, கிழக்கு நோக்கிய தனிச் சன்னிதியில் ஸ்ரீநர்த்தன கணபதி காட்சி யளிப்பது வேறெங்கும் காணக் கிடைக்காத தனிச்
சிறப்பு. மேற்கு நோக்கி ஸத்யோஜாத மூர்த்தியாக சிவ பெருமானும் (அனுக்ரஹ மூர்த்தி), வடக்கு நோக்கி ஞானசக்தி ஸ்வரூபியாக சிவலோக நாயகியும், தெற்கு நோக்கி வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப் பெருமானும் காட்சியளிக்கின்றனர்.
அகத்தியர் பிரதிஷ்டை செய்த அகஸ்தீஸ்வரர், ராமர் வழிபட்ட ராமலிங்கேஸ்வரர், பீமன் வழிபட்ட பீம லிங்கேஸ்வரர், சூரியன் வழிபட்ட சூரிய லிங்கேஸ் வரர், சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் ஆதி கேசவ பக்தவத்சலப் பெருமாள், கஜலக்ஷ்மி ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. ஆலயத்தை வலம் வருகையில் ஸ்ரீவிஷ்ணு துர்கை, பிரம்மா, லிங்கோத் பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோரையும் தரிசிக்கலாம்.
சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம், பௌர்ணமி ஆகியவை விசேஷ நாட்கள். தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி 11 நாட்கள் பிரம்மோற்ஸவம், ஆருத்ரா தரிசனம், தை மாதம் ஐந்தாம் நாள் ஆற்றுத் திருநாள், மகாசிவராத்திரி மற்றும் பல உற்ஸவங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

 

Comments