ஸ்ரீ நாதத்வாரா நாயகன் ஸ்ரீநாதர்!

ஸ்ரீ கிருஷ்ண பகவான் பாலகிருஷ்ணன் வடிவில் அர்ச்சாமூர்த்தியாக குருவாயூர் திருத்தலத்திலும், உடுப்பிதிருத்தலத்திலும், ஸ்ரீ நாதத்வாரா திருத்தலத்திலும் எழுந்தருளியிருக்கிறார். இம் மூன்று திருத்தலங்களிலும் சின்னக் கண்ணனாக, பாலகிருஷ்ணனாக சிறிய வடிவில் கோயில்கொண்டு அருளாட்சிபுரிகிறான். இம்மூன்று திருத்தலங்களும் திருமலை-திருப்பதியைப் போன்று இருபத்து நான்கு மணி நேரமும் மக்கள் நடமாட்டத்துடன் ‘ஜெ...ஜெ’ என்றிருக்கும் திருத்தலங்களாகும்.
வைணவர்களுக்கு தென்னகத்தில் திருவரங்கமும், திருமலையும் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியமானது வடஇந்தியாவில் நாதத்வாரா கோயில்.
‘நாதத்வாரா’ என்றால் ‘ஸ்ரீநாதரின்வாயில்’ என்பது பொருள். பிராபல்யத்திலும் செல்வச் செழிப்பிலும் இக்கோயிலைத் திருமலை திருப்பதிக்கு அடுத்தபடியாகக் குறிப்பிடுகிறார்கள். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரிலிருந்து காங்க்ரோலிக்குச் செல்லும் வழியில், சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில், ஆரவல்லி மலைத்தொடர்கள் அழகிய பின்னணியை அமைத்திருக்க, பனாஸ் நதியின் கரையில் வடஇந்தியத் திருப்பதியாக ‘ஸ்ரீநாதத் வாரா’ உள்ளது. ஸ்ரீநாதர் இங்கு பாலகிருஷ்ணனாக எழுந்தருளியிருக்கிறார். புனிதமிக்க இத்திருத் தலத்துக்கு வருகை தருகிற பக்தர்களில் பெரும் பான்மையோர் குஜராத்திகள். இக்கோயிலின் செல்வச் செழிப்புக்குக் காரணமாக இருப்பவர்களும் இவர்களே.
இந்தக் கோயிலை விட பாலகிருஷ்ணனின் விக்கிரகம் மிகவும் பழைமையானது. வைணவர்களின் குருவான ‘தாவுஜி கோஸேனா’ என்னும் வல்லபாச்சார்யார் வட மதுரைக் கோயிலொன்றில் பிரதிஷ்டை செய்து பூஜித்த விக்கிரகம் இது. ஒரு காலகட்டத்தில் இக்கோயில் கவனிப்பாரின்றி மண் மேடிட்டுப் புதையுண்டு போனது. சத்துபாண்டே எனப்பட்ட ஒரு கிருஷ்ண பக்தர் விக்கிரகத்தைக் கண்டெடுத்து கோவர்த்தனத்தில் வைத்துப் பூஜித்து வந்தார்.
முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் படையெடுப்புக்குப் பயந்து ஸ்ரீநாதரும் மற்ற விக்கிரகங்களும் இருக்க இடம் இல்லாமல் ஊர் ஊராக அலைந்தபோது, கி.பி.1671-ல் மேவார் ராணாசிங் தன்னுடைய ராஜ்யத்தில் ஸ்ரீ நாதரைப் பிரதிஷ்டை செய்தார். அவர் ‘சியத்’ என்ற கிராமத்தைக் கோயிலுக்கு மானியமாக அளித்தார். நாளடைவில் இப்பகுதி வளர்ந்து விரிவடைந்து ‘நாதத்வாரா’ என்றானது.
தினந்தோறும் இங்கு பாலகிருஷ்ணனுக்கு நடை பெறும் பூஜைகள் அலாதியானது. ஸ்ரீநாதர் என்னும் பாலகிருஷ்ணனின் நிர்மால்ய தரிசனம் அதிகாலையில் ஐந்து மணிக்கு ஆரம்பமாகிறது. இதை ‘மங்களா தர்ஷன்’ என்கிறார்கள். அடுத்தடுத்து அரை மணி நேரத்துக்கும் மேற்பட்ட இடைவெளிகளில் ‘சிருங்கார்’, ‘கவால்’, ‘ராஜ்போக்’ தரிசனங்கள் என்றும், மாலையில் ‘உத்யாபன்’, ‘போக்’,‘சயன’ தரிசனங்கள் என்றும் காலங்காலமாக முறை தவறாமல் நடை பெற்று வருகின்றன. எந்தத் தரிசனமும் முக்கால் மணி அல்லது ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடிக்காது. ஒவ்வொரு தரிசனத்துக்கும் அலங்காரம்
வேறுபடுகிறது. இத்தகைய தரிசனங்களைக் காண பக்தர்கள் கூட்டம் எப்போதும் நிறைந்திருக்கிறது.சிருங்கார் தரிசனத்தின் போது பாலகிருஷ்ணனைப் பெண் குழந்தை போல் பின்னல் போட்டு, நகைகளைப் பூட்டி அலங்கரிக்கிறார்கள். கவால் தரிசனத்தின் போது அங்கியும் சுடிதாரும் அணிவிக்கிறார்கள். இன்னொரு சமயம்மாடு மேய்க்கும் சிறுவனைப் போல் கையில் கோலுடன், தலையில் முண்டாசு கட்டி இடுப்பில் அரை வேட்டியுடன் கண்ணபிரான் காட்சி தருகிறார். ராஜ்போக் தரிசனத்தின் போது ராஜாவைப் போல் கிரீட, கேடய, கத்திகளுடன் கம்பீரமாக நிற்பார். இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல இருபத்து நான்கு விதமான அலங்காரங்கள் ஸ்ரீநாதருக்குச் செய்யப்படுகிறது. ஒவ்வொரு தரிசனத்திலும் அவருக்குப் பின்னால் கட்டப்பட்டிருக்கிற பேஜ்வாய் துணியிலிருந்து அத்தனையும் மாற்றப்படுகிறது. ஒருமுறை அணிவிக்கப்பட்ட உடைகளை மீண்டும் பயன்படுத்துவதில்லை.
மறுநாள் தரிசனத்துக்கான உடைகளைத் தைத்துக் கொடுக்க ஏழுதையல்காரர்கள் கோயிலிலேயே இருந்து வேலை செய்கிறார்கள். சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைக்கப்பட்ட நியமானுசாரங்களின்படி, ஸ்ரீநாதருக்கு அன்றாடம் அணிவிக்கப்படும் நகைகள், உடைகள், நிவேதனம் எல்லாமே கடைப்பிடிக்கப்படுகின்றன.
இந்த பாலகிருஷ்ணனுக்கு நிவேதனமாகும் உணவு வகைகள் அனைத்தும் சுத்தமான நெய்யில் தயாராகின்றன. மேலும் மசாலா, மிளகாய், புளி போன்றவை சேர்க்காமல் இவைகளைத் தயார் செய்கிறார்கள். மோர்க்குழம்பு, கத்தரிக்காய், கறிவகைகள், பாயசம், பூரி, லட்டு என்று பல வகைகள் உண்டு. இனிப்புப் பூரி, கோதுமை லட்டு, மைசூர் பாகு, பிஸ்தா மற்றும் முந்திரி பர்பி போன்ற பல வகையான இனிப்பு வகைகள் விற்பனைப் பிரசாதங்களாகக் கிடைக்கின்றன.
உணவுக்காக கடலை மாவு, கோதுமை மாவு போன்றவைகளை அரைத்துக் கொள்ள தங்கத்திலும், வெள்ளியிலும் எந்திரங்கள் உள்ளன. இங்கே சமையலுக்கான நெய் மட்டும் பல லட்சம் ரூபாய்க்கு வாங்கப்படுகிறதாம். இங்குள்ள ஊழியர்கள் அனை வருக்குமே ஸ்ரீநாதரின் பிரசாதம்தான் சாப்பாடு. மேலும், மலிவு விலையில் ஏழைகளுக்கும் இந்தச் சாப்பாட்டை விற்பனை செய்கிறார்கள்.
திருக்கோயிலின் நுழைவாயிலைக் கடந்து சென்றால், மூன்று பக்கங்களிலும் சுவரும் வாயில்களும் உள்ள திறந்த முற்றம் உள்ளது- அங்கே எதிரில் கம்பிகளிட்ட பெரிய கூடம்தான், ஸ்ரீநாதரின் கருவறையாக இருக்கிறது. இது தரிசனக் காலங்களில் மட்டும்தான் திறக்கப்படுகிறது.
உள்ளே திரையால் மூடப்பட்ட அரங்குதான் ஸ்ரீநாதர் எழுந்தருளியிருக்கும் கருவறை. ஒவ்வோர் அலங்காரமும் முடிந்து அடுத்த தரிசனத்துக்காக இத்தனை மணி அளவில் நடைதிறக்கப்படும் என் பதை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கிறார்கள். சுவாமிக்குப் பல அலங்காரங்களை முடிக்க போதிய அவகாசம் தேவைப்படுவதால் இடைவெளிகள் தரிசனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு அருள்புரியும் ஸ்ரீநாதரின் சிலை தனிப்பட்ட விக்கிரகமாய் இல்லாமல் பெரிய பளிங்குப் பலகையில் செதுக்கப்பட்ட விக்கிரகமாக உள்ளதால் உடைகளையும் ஆபரணங்களையும் அணிவிக்க முடியாமல் ஒருவிதப்பசையைப் பயன்படுத்தி ஒட்டுகிறார்கள்.
பாலகிருஷ்ணனுக்கு அலங்காரம் செய்யும் உரிமை வல்லபாச்சாரியாரின் சிஷ்ய பரம்பரையில் வந்த வழித்தோன்றல்களுக்குத்தான் உண்டு. இவர்கள் ‘புஷ்டிமார்க்கிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். அதாவது இவர்கள் தங்களையே கண்ணனாகவும், ராதையாகவும் நினைத்துக் கொண்டு தெய்வத்தை வழிபாடு செய்கிறவர்கள். அதனால் இவர்கள் ஜரிகைக் குல்லாயும், சந்தனப் பொட்டும், கண்களில் தீட்டப்பட்ட மையுமாய் அலங்காரத்துடன் காணப்படுகிறார்கள். கால்களில் சதங்கை கட்டிக் கொண்டு நடனமும் ஆடுவார்கள்.
ஸ்ரீநாதருக்குரிய சன்னிதிக்கு மேலே உச்சியின் மீது வேயப்பட்ட கூரையின் மீது பெரிய கலச மேடையில் சுதர்சன சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சக்கரமே இக்கோயிலின் தன ஆகர்ஷணயந்திரம் என்கிறார்கள். இந்த மேடைக்கு நான்கு பக்கங்களிலும் காணப்படும் புலியின் உருவங்கள் நான்கு வேதங்களைக் குறிப்ப தாகச் சொல்கிறார்கள்.
சுதர்சன சக்கரத்தை அடிக்கடி அத்தரால் துடைத்துச் சுத்தப்படுத்தி அதற்குப் பூஜையும் நைவேத்தியமும் செய்கிறார்கள். இதைச் செய்வதற்கான உரிமை சத்துப் பாண்டேயின் வம்சாவளித்தோன்றல்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. அத்தர் சேவைக் கான கட்டணத்தைச் செலுத்தினால், நமக்காக
சேவார்த்தம் நடத்தி உடனுக்குடன் பிரசாதமும் கொடுக்கிறார்கள்.
கலசத்துக்கு அருகில் ஆறுவிதமான நிறங்களில் பருத்தித் துணியிலான கொடிகளும், பட்டுத் துணியிலான நீளமான ஒரு கொடியும் உயரமான கம்புகளில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆறு கொடிகள் பிருந்தாவனம், மதுரா, கோகுலம், கோவர்த்தனம், துவாரகை, பூரி ஆகிய இடங்களில் உள்ள கண்ணன் கோயில்களைக் குறிப்பவை என்றும், நீண்ட பட்டுக் கொடி நாதத்வாராவைக் குறிக்கும் என்கிறார்கள். ஸ்ரீநாதரே எல்லாவற்றையும் விடச்சிறப்பு மிக்கவர் என்பதால் இக்கொடி நீளமாக உள்ளது. இக்கொடிக் கம்புகளின் மீது தப்பித்தவறிக்கூட காகம் உட்காரக் கூடாது. உடனே கோயில் முழுவதுமே அசுத்தமானதாகக் கருதப்படும். அன்று பூஜை, நிவேதனம் எல்லாம் நின்று போகும். மறுபடியும் புதிதாகச் சமைத்துத்தான் நிவேதனம் செய்ய முடியுமாம். இதனால் இந்தப் பகுதியையே காகங்கள் அண்டாதவாறு அவற்றை விரட்ட சதா சர்வகாலமும் ஒருவர் காவல் இருக்கிறார்.
இங்கு கோயிலுக்குச் சொந்தமான கோ சாலையில் சுமார் இரண்டாயிரம் பசுக்களை வைத்துப் பராமரிக்கிறார்கள். இவை கொடுக்கும் பால் முழுவதும் கோயிலின் உபயோகத்திற்குச் சரியாக இருக்கிறதாம். கோயிலைச் சுற்றிலும், பிரா காரத்திலும் மலிவு விலையில் காய்கறி வகைகள், பழங்கள் விற்கிறார்கள். பக்தர்கள் சேவார்த்த மாக இவைகளை வாங்கிமடப் பள்ளியில் கொடுக்கிறார்கள்.
முடி காணிக்கை செலுத்துதல், பிரார்த்தனை தேங்காய் கட்டித் தொங்க விடுதல் என்று பலவித மான நேர்த்திக் கடன்களைப் பக்தர்கள் செலுத்துகிறார்கள்.
வடநாட்டவர்களுக்குத் தீபா வளி சமயம்தான் கணக்கு வழக்குகள் ஆரம்பிப்பதற்கான புது வருடம் தொடங்குகிறது. அப்போதும் கிருஷ்ண ஜெயந்தி, தசரா போன்ற விழாக்காலங்களிலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு லட்சொப லட்சம் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். ஆலயத்தின் ஒரு பக்கம் வேத கோஷமும் மற்றொரு பக்கம் கீத கோவிந்தமும் ஒலிக்கிறது. கடல் போல் ஆர்ப்பரிக்கும் கூட்டத்தின் ஆரவாரம் செய்விகளை அடைக்கிறது. திரை எழுகையில் ‘ஜெய்...ஜெய்...ஸ்ரீநாத் ஜீ’, ‘ஸ்ரீநாத் மகராஜ் ஜீ ஜெய்’, ‘ஜெய்... கிருஷ்ணா ஜெய்’ என்றெல்லாம் உணர்ச்சிவசப் பட்டு கோஷமிடுகிறார்கள். பக்திப்பெருக்கால் பலர் கண்ணீர் சிந்துகிறார்கள்.
நாதத்வாரா ஓவியங்கள் மிகவும் பிரசித்த மானவை. ராசலீலையும், கிருஷ்ணனும்தான் இந்த ஓவியங்களுக்கான அடிப்படை.
ஸ்ரீநாதருக்கு திருமணங்கள், கிரகப்பிரவேசம், பிறந்த நாள், உபநயனம் எல்லாவற்றுக்கும் பக்தர்கள் அழைப்பிதழ்களை அனுப்பிவைக்கிறார்கள். ஆலய நிர்வாகத்தினர் அவர்களுக்கு வாழ்த்தும் பிரசாதமும் அனுப்பிவைக்கிறார்கள்.

 

Comments