பக்தையின் கோபம்!

முன்பொரு காலத்தில் ஜலந்திரன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் மனைவியின் பெயர் பிருந்தை. மிகுந்த பதிவிரதா தன்மையுடையவள். தன் கணவனையே ஸ்ரீகிருஷ்ணராக நினைத்து தினமும் பணிவிடைகள் செய்து வந்தாள்.
இதற்கிடையில் ஜலந்திரனுக்கு சாகா வரம் வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. பிரம்மாவை நோக்கி கடும்தவம் செய்யலானான். தவத்தின் உக்கிரம் தாங்கமுடியாத பிரம்மா, ஜலந்திரனே! உனக்கு மரணமே கிடையாது என்று சொல்ல என்னால் முடியாது! எப்போது உன் தேகத்தின் பாதியான உன் மனைவி பிருந்தையின் பதிவிரதாய் தன்மை மாசு படுகிறதோ, அந்தக் கணம் நீ கொல்லப்படுவாய்" என்று வரம் அளித்தார். ஜலந்திரனும் மகிழ்ந்தான்.
ஆணவம் கொண்ட ஜலந்திரன், ஈரேழு உலகங்களையும் ஆட்டிப்படைத்து, தேவலோகம் சென்று ஈசுவரனையே சண்டைக்கு இழுத்தான்.
அவராலும் ஜலந்திரனை ஏதும் செய்ய முடியவில்லை.
நிலைமையின் விபரீதம் உணர்ந்த பிரம்மா, திருமாலைச் சரணடைந்தார். ஜலந்திரன் மனைவியான ஸ்ரீபிருந்தையின் பதிவிரதாய் தன்மை அவனைக் காத்து வருகிறது. ஈசுவரனாலேயே எதுவும் செய்ய முடியவில்லை. நீர்தான் ஜலந்திரன் அழிவதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும்" என்றார். அதன்படியே திருமாலும், பிரம்மனுக்கு அபயம் அளித்து அனுப்பினார்.
இதற்கிடையில் உக்கிர யுத்தத்தில் ஈசுவரனும், ஜலந்திரனும் உச்சக் கட்டத்தில் போரிடும் போது, சிவபிரானின் நிலை மிக அபாயகரமாய் இருந்தது.
அதே நேரத்தில், ஜலந்திரன் ரூபம் எடுத்து, பிருந்தையின் அரண்மனைக்குள் பிரவேசித்தார் திருமால். பிருந்தையும் தன் கணவனே வந்திருக்கிறார் என்று எண்ணி பல்வேறு பணிவிடைகள், உபசரிப்புகள் எல்லாம் செய்கிறாள். அப்படி பதியல்லாத ஒருவனை பதியென்று நினைத்து சேவைகள் செய்தவுடன், பிருந்தையின் பதிவிரதாய் தன்மை மாசடைந்து விடுகிறது.
உடனே, சிவபிரான் ஜலந்திரனின் தலையைத் துண்டித்துவிடுகிறார். துண்டிக்கப்பட்ட தலை பிருந்தையிடம் வருகிறது. திருமாலும் சுய உருவுடன் காட்சி அளிக்கிறார்.
பிருந்தை கோபமும் துயரமுமாக, கணவனுக்குப் பிறகு உன்னைத்தவிர யாரையும் நான் தொழவில்லை. என் உன்னதமான பதிவிரதாய் தன்மையை கல் மனம் கொண்டு இழக்கச் செய்த நீ கல்லாகிப் போவாய்" என்று உடலைத் தியாகம் செய்ய முற்படுகிறாள்.
அதைக்கேட்ட திருமால், பிருந்தை... உன்னுடைய விருப்பத்தை அப்படியே ஏற்கிறேன். கண்டகி நதியில் சாளகிராமமாக நான் வெளிப்படுவேன்; பக்தர்களால் ஆராதிக்கப்படுவேன். உலக நன்மைக்காக நடத்தப்பட்ட காரியங்களில் இதுவும் ஒன்று. ஆனால், பாற்கடலில் அமிர்த கலசம் தோன்றும்போது, என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பிரவகிக்கும். அந்தக் கண்ணீர் துளிகள், நிலத்தில் விழுந்து, துளசிச் செடியாக மாறும். நீதான் அந்தத் துளசி!
உன்னை எனக்கு மிகவும் பிரியமான கார்த்தீக சுத்த துவாதசியில் தாமோதரனாக வந்து மணம் புரிவேன். என்னுடைய பூஜைக்கு உன்னைத் தவிர வேறு எதுவும் உயர்ந்தது இல்லை.
அனைவராலும் பூஜிக்கப்படத் தக்கவளாக நீ விளங்குவா. உன்னை பூஜிப்பதாலேயே, என்னுடைய அருளைப் பெறுவார்கள் பக்தர்கள். உன் பதிவிரதாய் தன்மை உன்னை பூஜிக்கும் அனைத்து பெண்களுக்கும் கிடைக்கும்!" என்று அருள்பாலித்தார்.
அதுமுதற்கொண்டு துளசிச் செடியும் சாளக்கிராமமும் விஷ்ணு பூஜைக்கு உகந்ததாக ஆயிற்று.

Comments