துர்கை அம்மன் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

விரதம் கடைப்பிடிக்கும் காலங்களில் வேற்று சிந்தனைகளோ அல்லது தவறான எண்ணங்களோ ஏற்படும்பட்சத்தில், அது விரதத்தை பாதிக்குமா?

 விரதம் இருக்கும்போது தேவையில்லாத சிந்தனைகள் எழுவதாகச் சொல்கிறீர்கள். தேவையில்லாத சிந்தனைகளோ தவறான எண்ணங்களோ  தானாக எப்படி வரும்? நீங்கள் நினைப்பதுதான் எண்ணமாக வருகிறது. உங்களிடம் மனக் கட்டுப்பாடு இல்லை என்று பொருள். அந்தக் கட்டுப்பாட்டை நீங்களாகத்தான் விடாமுயற்சியோடும் பயிற்சியோடும் உண்டாக்கி கொள்ள வேண்டும். விரதமிருக்கும்போது மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகளை நீங்கள் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்று தெரிகிறது. உங்களுக்கே இது தெரிவதால், நீங்கள் எளிதில் உங்கள் மனதில் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு விட முடியும். தூய மனதுடன் விரதம் இருக்க வேண்டும் என்கிற நற்சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்!





  வேப்ப மரத்தை அம்மனாகவே பாவித்து வணங்குகிறோம். வேப்பம்பூவும் அதன் அங்கம். எனவே, உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடாது என்கிறார், பெரியவர் ஒருவர். சிலர், வேப்பம்பூ பச்சடி, வேப்பம்பூ ரசம் செய்து உணவில் பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் மருந்தாகவே உட்கொள்வர். இப்படியிருக்க, அந்த பெரியவர் சொல்வது சரிதானா? விளக்குங்களேன்.


 வேம்பு என்பது, மருத்துவ குணம் அடங்கியது. கிருமிநாசினியாகச் செயல்படக் கூடியது. அம்பாளின் அடையாளமாகவும் இருப்பது.

ஒருவருக்கு வைசூரி நோய் தாக்கினால், ‘அம்மை வந்திருக்கிறாள்’ என்று சொல்வது வழக்கம். இப்படி அம்மை போட்டிருக்கும்போது உடலில் அரிப்பு எடுக்கும். சொறிந்தால், வலிப்பதோடு வடுக்களும் உண்டாகும். கையினால் சொறிவதற்குப் பதிலாக வேப்பிலையால் வருடிக் கொடுப்பார்கள். உபாதையும் அடங்கும், தழும்பும் எற்படாது.சித்திரை மாசம்தான் வேம்பு பூக்கும் காலம். அப்போது அதைப் பயன்படுத்த வேண்டும். தொன்றுதொட்டு வருவது, ஐதீகம் என்றெல்லாம் சொல்லி, வேம்பைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.

தேங்காய்க்கு மூன்று கண்கள் இருக்கின்றன. குடுமி இருக்கிறது. ‘இது பரமேஸ்வரனின் அம்சம்’ என்று சொல்லி, தேங்காயை உடைக்காமல் இருக்கிறோமா? வேம்புக்கு இன்னொரு குணமும் உண்டு. பிரம்மச்சரியம் நிலைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பால்ய காலம் முதலே வேப்ப இலையை அரைத்து, உட்கொண்டுவந்தால் திருமண எண்ணம் எழுவது தடைப்படும்.
 ஜபம் செய்யும்போது எந்தத் திசை நோக்கி உட்கார்ந்து ஜபிக்க வேண்டும்? இதுகுறித்து ஏதேனும் சாஸ்திர நியதிகள் உள்ளனவா?


முதலில் ஜபம் செய்ய வேண்டும் என்கிற எண் ணம் வேண்டும். அதன் பிறகு திசை. எப்போதும் எந்தக் காரியம் செய்வதாக இருந்தாலும் சூரியன் எந்தத் திசையில் உதிக்கிறானோ அதைப் பார்த்து
உட்கார்வது நல்லது. தெற்கு திசையை நோக்குவதைத் தவிர்க்கலாம். அதேநேரம், ஓர் இடத்தில் தெற்கை மட்டும்தான் பார்க்க முடியும். மற்ற திசைகளைப் பார்த்து உட்கார வாய்ப்பே இல்லை என்றால், தெற்கைப் பார்த்து அமர்ந்து ஜபம் செய்தாலும் தவறில்லை. மற்ற திசைகள் உசிதம்.

ஆனால், இன்றைக்கு கிழக்கு, இன்னொரு நாள் மேற்கு, அடுத்த நாள் வடக்கு என்று மனமானது திசைகளைச் சுற்றியே அலைபாயக் கூடாதே... அதற்காக, எப்போதும் கிழக்கை மட்டும் பார்த்து
உட்கார்ந்து ஜபிப்பது என்பதைக் கடைப் பிடியுங்கள்.


  வைகுண்ட ஏகாதசி அன்று சிராத்த திதி வருமானால், மறுநாள் துவாதசி அன்றுதான் திதி செய்ய வேண்டும்’ என்று சொல்கிறார்களே, அது சரியா?


ஒருவர் தன் உடலை இழக்கும்போது, அவர் உயிர் உடலை விட்டுப் பிரியும். அந்த நேரத்தில் சூரியனின் கிரணங்கள், சந்திரனில் எந்த அளவு விழுந்திருக்கிறது என்பதை வைத்து அவர் இறந்த நேரத்தைக் குறிப்பார்கள். இதுதான் திதி. அழியாத, மாறாத கடிகாரம் இது.

சூரியனின் கிரணம், சந்திரன் மேல் ஒரு பங்கு விழுந்திருந்தால் அது பிரதமை திதி. இரண்டு பங்கு விழுந்தால் துவிதியை, மூன்று பங்கு விழுந்தால் திரிதியை. இதுதான் திதியின் அர்த்தம். அவர் எந்தத் திதியில் இறந்தாரோ அதே திதியில் செய்தால்தானே சிராத்தம் ஆகும்? இன்னொரு திதியில் பண்ணினால் அது சிராத்தம் ஆகாதே.

ஒரு சில நாட்களில் இரண்டு திதிகள் வரும். சில நாட்களில் சிராத்தமே இருக்காது. தேதியைச் சொன்னால் சரியாக வராது. நட்சத் திரத்தைச் சொன்னால் சரிப்படாது. ஏகாதசியில் வந்தால், அதைத்தான் திதியாக வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, மாற்றக் கூடாது. ஆனால், ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். தர்மசாஸ்திரத்துக்கும் மேலான கௌரவத்தை கடவுளுக்குக் கொடுப்பார் கள். அவர்கள் ஏகாதசி அன்று பகவானை வழிபடுவதால், முன்னோருக்குச் சாப்பாடு போட முடியாது. ஆகவே, பகவான் ஆராதனை முடிந்த அடுத்த நாள் முன்னோரை உபசரிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதம்தான் அப்படிச் சொல்கிறது. எல்லாரும் சொல்வதில்லை. அதை நாம் அப்படியே ஏற்றுப் பின்பற்ற வேண்டும் என்பதுமில்லை. தர்மசாஸ்திரத்துக்குத்தான் முன்னுரிமை என்றால், ஏகாதசி அன்று பட்டினியும் இருக்கலாம். சிராத்தமும் பண்ணலாம். வந்தவருக்குச் சாதமும் போடலாம்.

 ச்ரவண விரதம்’ என்றால் என்ன? இந்த விரதத்தை அனுஷ்டிப்பது எப்படி?


 திருவோணம் நட்சத்திரத்தை, ‘ச்ரவணம்’ என்பர். இதன் தேவதை ‘விஷ்ணு’ என்கிறது வேதம். எனவே, விஷ்ணுவை வழிபடுவது சிறப்பு. ஆவணி மாதம் வளர்பிறை துவாதசியுடன் வரும் திருவோணம் விசேஷமானது! இந்த நாளை, ‘ச்ரவண துவாதசி’ என்றும் அழைப்பர்.

இந்த நன்னாளில் உண்ணா நோன்பு இருந்து வாசுதேவனை வழிபட்டால், நமக்குள் இருக்கும் தவறுகள் முழுவதும் நம்மை விட்டு அகன்று விடும். இந்த வழிபாட்டு முறையை கருட புராணம் விவரித்துள்ளது. எனவே, எளிய முறையைக் கொண்ட ‘ச்ரவண விரதத்தை’ அனுஷ்டித்து, வாசுதேவனை வழிபட்டுப் பயன்பெறுங்கள்.

    விரத தினங்களில் குறிப்பாக அமாவாசை தினத்தில் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உணவில் சேர்க்கக்கூடாது என்கிறார்களே, ஏன்?


 வெங்காயமும், பூண்டும் உடல் ஆரோக்கியத் துக்கு உகந்தவை. வெங்காயத்துக்கு, ‘ரஸோனம்’ என்ற சிறப்பு பெயர் உண்டு. உடல் ஆரோக்கியத்தை நிலைநிறுத்துவதில் அரசன் என்று வெங்காயத்தைப் புகழ்வர். வெங்காயத்தை, பல மருந்துகளில் மூலப்பொருளாகவும் துணைப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். ‘பல பிணிகளைப் போக்க வெங்காயம் பயன்படும்’ என்கிறது ஆயுர்வேதம், ஆகவே, உடல் ஆரோக்கியத்தைத் தக்க வைக்கும் மருந்தாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். ஆனால், நமது அன்றாட செயல்பாட்டில் இருக்க வேண்டிய ஈடுபாட்டைத் தடுப்பதால், இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

தாமஸ உணவுகள், மனதைப் பாதிப்பதால் சிரத்தை குறையும். இதுவே சோம்பலாக மாறி, கோபதாபங்களில் சிக்கி காரியத்தையே கெடுத்து விடும். தாமஸ உணவின் குணம் வெங்காயத்திலும் உண்டு. எனவே, ‘மனதின் தூய்மையைப் பாதுகாக்க வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை எப்போதும் உணவில் தவிர்ப்பதே நல்லது’ என்கிறது தர்ம சாஸ்திரம். இவற்றை உணவில் சேர்த்துப் பழகியவர்கள், உடனே விட்டுவிட முடியாது என்பதால், ‘அமாவாசை நாளிலாவது சேர்க்காமல் இருக்கலாம்’ என்றொரு நடைமுறை தோன்றியது.

வேதம் ஓதுவோரும், சாஸ்திரங்களைக் கையாளுவோரும் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அவர்களின் மன ஓட்டம் சுணங்காமல் இருக்கவேண்டும். எனவே, பூண்டு மற்றும் வெங்காயத்தை இவர்கள் சாப்பிடாமல் இருக்குமாறு தர்ம சாஸ்திரம் நிர்பந்திக்கிறது. ஸ்ரீகிருஷ்ணரும், ‘தாமஸ’ உணவை விலக்கச் சொல்வார்.

வெங்காயம், ஆராயும் திறனைப் பின்னுக்குத் தள்ளி, ஆசைக்கு உந்துதலாகச் செயல்பட வைத்துவிடும். விபரீதத்தை சந்தித்த பிறகு, ‘ஏமாந்து விட்டோமே’ என்று எண்ணத் தோன்றும். ஆகவே, மனத்தூய்மையைப் பராமரிக்க வெங்காயத்தைத் தவிர்ப்பது நல்லது. நன்மையும் தீமையும் எல்லாப் பொருளிலும் கலந்தே இருக்கும். நன்மையை பெரிசுபடுத்திப் புகழ்வதும் தீமையை சுட்டிக்காட்டி இகழ்வதும் சரியல்ல! தீமையை எச்சரிக்கையுடன் தவிர்ப்பதே அழகு. உணவில் முதலிடம் வகிக்கும் வெங்காயத்தை, அகற்றுவது கடினம்; குறைத்துக்கொள்வது சுலபம்.
 முழு நிலவு ஒளி வீசும் நன்னாள் பௌர்ணமி. ஆனால், அமாவாசையையும் நிறைந்த நாள் என்கிறார்களே?


 பௌர்ணமியில் விரதமும், அமாவாசையில் முன்னோர்களின் ஆராதனையும் உண்டு. இந்த நாட்களில், மற்ற அலுவல்களில் இருந்து விடுபட்டு முறையாக விரதத்தையும் ஆராதனையையும் நடைமுறைப்படுத்தும்படி பரிந்துரைக்கிறது தர்ம சாஸ்திரம். அதன்படி செயல்பட்டு பயனடையலாம்.




எட்டுக் கைகள் கொண்ட துர்கை அம்மன் திருவுரு வப் படத்தை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார் என் மாமியார். வேறொரு பெரியவரோ, தெய்வப் படங்கள் எதுவானாலும் வீட்டில் வைத்து வழிபடலாம் என்கிறார். நீங்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.


 மார்க்கண்டேய புராணம், எட்டுக் கைகள் கொண்ட துர்கையை வழிபடச் சொல்கிறது. இதற்கு இந்தப் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ள அனுமதி கொடுத்ததாகத்தான் அர்த்தம். இல்லையெனில், ‘ஆராதனை செய்’ என்றே சொல்லியிருக்காது. ஆகவே, எட்டு புஜம் என்ன, ஆயிரம் புஜம் கொண்ட கடவுள் படத்தையும் வீட்டில் வைத்து வழிபடலாம்!
பாத யாத்திரையை விரதத்தின் அங்கமாகச் சொல்லலாமா? பாத யாத்திரை செய்து பகவானைத் தரிசித்து வருவதால் அதிக பலன் கிடைக்குமா?


 மாட்டுவண்டி அல்லது கார் ஆகியவற்றைப் பயன்படுத்தினாலும், கோயில் வாசல் வரை செல்லலாம். உள்ளே பாத யாத்திரையாகவே செல்ல வேண்டும்! பாத யாத்திரையாக சென் றால்தான் அதிக பலன் கிடைக்கும் என்பதெல் லாம் இல்லை! பாத யாத்திரையாகச் செல்லும் போது அடக்கம் இருக்கும்; அகங்காரம் நீங்கிவிடும். கடவுள் அளித்த கால்கள், அவனைத் தரிசிக்கச் செல்வதற்காக பயன்படுவது தனிச் சிறப்பு.

கிராமப்புறங்களில், நடந்து செல்லும் தூரத்திலேயே கோயில்கள் அமைந்திருக்கும். அங்குள்ளவர்கள் கோயிலுக்குச் செல்லும்போது, மற்ற அலுவல்களைக் கவனத்தில் கொள்ள மாட்டார்கள். எனவே அவசரம் இல்லாமல், பாத யாத்திரையாகவே செல்ல விரும்புவர். தற்போது, கால மாற்றம் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அருகிலுள்ள கோயிலுக்கும் காரில் செல்பவர்கள் ஏராளம். காரில் சென்றாலும் பரவாயில்லை... கோயில் செல்லும் பழக்கம் வளரட்டும். தாங்கள் விரும்பினால், பாத யாத்திரையாக செல்லுங்கள்.
 இறை மூர்த்தங்களுக்கு அபிஷேகித்த பாலை, வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தலாமா?


 இறைவனுக்கு அளிக்கப்படும் பொருட்கள், அவருக்கு சொந்தமாகி விடும். பிறர் பொருளைக் கவர்வது அழகல்ல. சுண்டல், பஞ்சாமிர்தம் போன் றவற்றை ஸ்வாமிக்கு நிவேதனம் செய்தபிறகு, பிரசாதமாக விநியோகிப்பார்கள். அதுபோல், அபிஷேக பாலையும் தீர்த்தமாக பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.

மாறாக அபிஷேகம் செய்த பாலை, தங்களது தனி உடைமையாக்கி காய்ச்சிப் பயன்படுத்தக் கூடாது. இறைவனின் திருவுருவம் பேசா மடந்தையாக இருப்பதால், அவரது பொருளை எவர் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று அர்த்தம் இல்லை! இறைவனுக்குத் தன்னையே அர்ப்பணிக்கும் பக்குவம் ஒவ்வொரு பக்தனுக்கும் வர வேண்டும்.

வெல்லத்தை, பிள்ளையாராக பாவித்து பூஜை செய்ய ஆரம்பித்தான் ஒருவன். பிள்ளையாருக்கு நிவேதனம் படைக்க வேண்டுமே? நிவேதனத்துக்கு பழம் வாங்கி வர அவனுக்கு மனம் இல்லை. என்ன செய்தான் தெரியுமா? அந்த வெல்ல பிள்ளையாரையே கிள்ளி, சிறிதளவு வெல்லம் எடுத்து, நிவேதனம் செய்தானாம்!

உள்ளத் தூய்மையுடனும் ஆத்மார்த்தமான பக்தியுடனும் இறைவனுக்குப் பாலபிஷேகம் செய்யுங்கள். அவர், தங்களின் ஏழ்மையை அகற்று வார்; அபிஷேக பாலை, சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தும் அவசியமும் ஆசையும் வராமல் பார்த்துக்கொள்வார். நீங்கள், உள்ளத்தளவிலும் உயர்வீர்கள். எனவே, ‘காணும் பொருட்கள் அத்தனையும் உமது படைப்பு, எனக்கு எதுவும் சொந்தமில்லை. உமது உடைமையையே உமக்கு அளிக்கிறேன். என்னை வாழ வையுங்கள்’ என்று வேண்டிக்கொள்ளுங்கள். வாழ்க்கை நிறைவுபெறும்.

? செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டைக் கழுவி, சுத்தம் செய்யக் கூடாது லட்சுமிகடாட்சம் நீங்கிவிடும் என்கிறார்களே, அது சரியா?


 தினமும் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில், சுகாதாரம் கெட்டுவிடும்; வீடும் களை இழந்துவிடும். தூசியைக் கூட்டிப் பெருக்கி வீட்டைத் துடைத்துப் பராமரிப்பது, நீண்ட நாள் வாழ்வதற்கான தகுதியைப் பெற்றுத்தரும்.

தவறான தகவல்கள் பலவும் நம் செவிக்கு எட்டுவது நமது துரதிருஷ்டம். ஒதுக்க வேண்டியவற்றில் இதுவும் ஒன்று. ‘உடலுக்கும் உள்ளத்துக்கும் சோர்வு தருவது வேண்டாம்’ என்று எவரேனும் சொன்னால், அதை நம்புவது நம் பலவீனம். உழைப்பு, சுகாதாரத்தை தூண்டும். எனவே, வீட்டை தினமும் சுத்தப்படுத்துங்கள்.

Comments