ஸ்ரீஆதிசங்கர ஜயந்தி... பெரிய புண்ணிய காலம்!'

வைகாச சுக்கிலபக்ஷ பஞ்சமி, ஸ்ரீசங்கராசாரிய ஸ்வாமிகளின் அவதார தினம். அப்பொழுது நக்ஷத்திரம் சிவபெருமானுக்கு உரிய திருவாதிரையாகவோ அல்லது ஸ்ரீராமனுக்கு உரிய புனர்வஸுவாகவோ அமையும்.

சர்வ வித்தைகளுக்கும் நாயகனான அந்தச் சதாசிவனே ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர்களாக அவதரித்தார். ஸ்ரீஆதிசங்கர ஜயந்தியானது மற்ற ஜயந்திகளைவிடப் பெரிய புண்ணிய காலம் என்று நான் நினைப்பது வழக்கம். இப்படி நான் சொல்லுவதற்கு உங்களுக்கு இரண்டு காரணங்கள் தோன்றலாம்.

‘நம்முடையது’ என்ற அபிமானத்தால் சொல்கிறேனோ என்பது ஒன்று. இப்போது பேசப்படும் விஷயம் ஸ்ரீசங்கர ஜயந்தியாதலால், அதைச் சற்று உயர்த் திப் பேசுகிறேனோ என்பது இரண்டாவது. இந்த இரண்டும் இல்லாமல், வேறு ஒரு முக்கியமான காரணத்தாலேயே ஸ்ரீசங்கர ஜயந்தியை ஸர்வ உத்கிருஷ்டமான புண்ணியகாலம் என்கிறேன்.

அது என்ன காரணம்? ஸ்ரீசங்கர அவதாரத்துக்கு முன் வைதிக மதம் ஆட்டம் கண்டபோது, அதுவரை வேத புராணங்களால் விதிக்கப்பட்ட புண்ணிய காலங்கள் எல்லாம் தத்தளித்தன. ஒரு மதத்தில் நம்பிக்கை போனால் அந்த மதப் பண்டிகைகளை யார் கொண்டாடுவார்கள். வேத தர்மத்துக்கு ஆபத்து வந்தபோது, அந்த மதத்தின் பண்டிகை எல்லாவற்றுக்கும் ஆபத்து வந்துவிட்டது. அப்போது ஸ்ரீசங்கர ஜயந்தி நிகழ்ந்ததால்தான் அந்தப் புண்ணிய காலங்கள் எல்லாம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டன.

ஸ்ரீசங்கர ஜயந்தி நிகழ்ந்திராவிடில், இன்று ஸ்ரீராம நவமியையும், கோகுலாஷ்டமியையும், சிவராத்திரியையும், நவராத்திரியையும் மற்ற புண்ணிய தினங்களையும் கொண்டாடுவோமா என்பதே சந்தேகம். மற்ற ஜயந்திகளை எல்லாம் நிலைநாட்டிய ஜயந்தியாக இதுவே இருக்கிறது. ஆகையினால்தான் ஸ்ரீசங்கர ஜயந்தியை மிக மிகப் புண்ணிய காலமாகச் சொல்கிறேன்.

தனி மனிதராக இருந்து கொண்டு அந்தச் சாமானிய பிராம்மண சந்நியாசி தேசம் முழுவதிலும் ஓர் இடம் பாக்கி வைக்காமல் திக்விஜயம் செய்து இந்த மகத்தான அனுக்கிரகத்தைச் செய்தார். ‘திக்
விஜயம்’ என்றால் அவர் செய்ததுதான் ‘திக் விஜயம்’. ஸ்ரீஆசார்யாளுடைய திக்விஜய மகிமையைக் கேட்டதற்குப் பிரயோஜனமாக நாம் அனைவரும் நம் மனத்தில் உள்ள அசட்டுத்தனங்களைப் போக்கி, நமக்குள் நாமே திக்விஜயம் செய்யவேண்டும்.

பஜகோவிந்தத்தில் ஆரம்பித்துப் பரமாத்ம தத்துவத்தில் முடிவது ஸ்ரீஆசார்யாளின் உபதேசம். ‘ஒன்றும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை; கோவிந்த கோவிந்த என்று சொல்’ என்று ‘பஜ கோவிந்த’த்தில் சொல்கிறார் ஆசார்யாள். 

எப்போதும் ‘கோவிந்த கோவிந்த’ என்று சொல்லிக் கொண்டே உண்டால், அந்த மனோபாவத்துடன் உள்ளே போகும் அன்னம், ஆத்ம தியானத்துக்கு அனுகூலம் செய்யும். அந்த அன்னஸாரம் உடம்பில் சேரச் சேர ஈசுவர ஸ்மரணம் அதிகமாகும். நாம் என்றைக்கும் போஜனத்தை நிறுத்தப் போவதில்லை. ஆகையினால் இந்தச் சின்ன அப்பியாசத்தால் கோவிந்த உச்சாரணம் என்றைக்கும் நடந்துவரும்.

கோவிந்த உச்சாரணத்துடன் சாப்பிடுகையில் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவதை நாமே நிறுத்துவோம். கண்ட வஸ்துக்களை கோவிந்த நாமத்துடன் சாப்பிடக்கூடாது என்ற கட்டுப் பாடு வரும். சித்தம் சுத்தமாவதற்கு ஆகாரம் சுத்தமாயிருப்பது மிக அவசியம். பல இடங்களில் பலவிதமான வஸ்துக்களைத் தின்னுவதே இன்றைய மனக் கோளாறுகளுக்கும் ஒழுக்கக் குறைவுக்கும் ஒரு முக்கியமான காரணம்.

ஆசார்யாள் மகிமை கேட்டதற்கு அடையாளமாக இப்படிச் சின்னச்சின்ன விஷயங்களையாவது அனுஷ்டானத்தில் கொண்டு வரவேண்டும்.

எல்லோரும் காலையில் சிறிது விஷ்ணு ஸ்மரணம், மாலையில் சிறிது சிவ ஸ்மரணம் செய்ய வேண்டும். இரவில் தூங்கும் முன்பு அம்பாளைப் பிரார்த்திக்கவேண்டும். அன்றைய தினம் ஆத்ம க்ஷேமமாகவோ, பரோபகாரமாக ஜீவகாருண்ய சேவையோ ஏதேனும் செய்தோமோ என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ‘‘அம்மா, இன்று வரை நான் செய்த தப்புக்களை மன்னித்து, நாளையிலிருந்தேனும் இந்தத் தப்புக்களைச் செய்யாமல் இருக்க ரக்ஷிப்பாய்’’ என்று காமாக்ஷியை மனமுருகி வேண்டிக் கொண்டு தூங்கவேண்டும்.

இன்று நம்மிடையே இப்படிப்பட்ட சிறிய, பெரிய அனுஷ்டானங்கள் பலவும் ஞாபகம் காட்டுகிற  அளவுக்காவது வந்திருப்பதற்குக் காரணமான ஸ்ரீஆதி ஆசார்யாளை என்றைக்கும் மறக்கக்கூடாது. நவராத்திரி, கோகுலாஷ்டமி போல் ஸ்ரீஆசாரிய பாதுகையை தினமும் பூஜிக்க வேண்டும். ஸ்ரீஆசார்யாள் அனுக்கிரகத்தில் சகல மங்களங்களும் உண்டாகும்.

(ஸ்ரீ ஆதி சங்கர ஜயந்தி மகத்துவம் குறித்து காஞ்சி  மஹா பெரியவர் அருளியது.

Comments