பரம்பொருளைப் பாடிய பக்தைகள்!

அரண்மனை உப்பரிகையில் நின்று தெருவை வேடிக்கை பார்த்தாள் அந்தச்சிறுமி. ஒரே ஆரவாரம். மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் தடபுடலாக நகர்ந்து கொண்டிருந்தது. குதிரையில் அமர்ந்திருந்த மாப்பிள்ளையின் தோரணை பற்றி கிசுகிசுத்தனர் சிலர். கேட்டுக் கொண்டிருந்த சிறுமி தன் தாயிடம் கேட்டாள்... ‘அம்மா என் மணாளன் யார்?’


கள்ளங்கபடமற்ற சிறுமியின் கேள்வி தான்! புரிந்து கொண்ட தாயார், சிரித்தபடியே, அவள் கையில் வைத்திருந்த கிரிதர கோபாலனின் சிறிய சிலையைக் காட்டி, ‘இவன்தான் உன் மணாளன்’ என்றாள். அந்தக் கணமே சிறுமியின் மனத்தில் புகுந்துவிட்டான் அந்தக் கண்ணன்!  அந்தச் சிறுமி- ராதையின் அவதாரம் என வடநாட்டு வைணவ உலகம் போற்றுகின்ற மீரா பாய்! ராஜபுதனத்து அரச மாளிகையில் பிறந்து அரசியாக வாழ்க்கைப்பட்டும், ஆண்டவனைத் தேடிக் கண்டடைந்த தூய பக்த உள்ளம்!


ராஜபுத்திரச் சிற்றரசனான ரதன்சிங்கின் மகளாகப் பிறந்தாள் மீரா! அரண்மனைக்கு வந்த ஒரு துறவி, அவளின் மூன்றாவது வயதில் இந்தக்கிரிதர கோபாலனின் சிலையை அவளுக்குக் கொடுத்தார். அவளின் அன்னை வேறு, இவனே உன் மணாளன் என்று அந்தச் சிலையைக் காட்டிக் கூறியதும், இளம் சிறுமி மீராவின் உள்ளத்தில் கோபாலனே எல்லாம் ஆனான்! அந்தச்சிலையை நீராட்டுவது, அலங்கரிப்பது, பூ வைப்பது என முழு நேர மும் அதனுடனேயே பகவத் பக்தியில் கழிந்தது மீராவுக்கு!


சித்தூர் இளவரசன் போஜ ராஜனுடன் திருமணம் ஆனது மீராவுக்கு! கிரிதர கோபாலன் சிலையுடன் சித்தூர் சென்றாள் மீரா. அங்கோ மேவார் ராணாக்களின் குலதெவம் சிவனும் சக்தியும்! இவளோ கோபாலனைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்பவள். அதிலிருந்து துவங்கியது பிரச்னை. ஆனாலும், மீரா உறுதியாக இருந்தாள். ஒரு மனை விக்கான பணிகளைச் சரியாகச் செய்வாள். குடும்பப் பணிகள் முடிந்த பின், தன் தெய்வ மணாளன் கிரிதர கோபாலனைக் கவனிப்பாள். தன்னை மறந்து தெய்வ நிலையில் கலப்பாள்.


போஜன் வீரன் மட்டுமல்ல, அழகனும்கூட! மீராவின் மீது காதல் வயப்பட்டவன். அவளை உயிரினும் மேலா நேசித்தான்! ஆனால் அவனால் இவளின் தெய்வீகக் காதலைப் புரிந்து கொள்ள இயலவில்லை! மீரா கண்ணனுடன் பேசிக் கொஞ்சுவதை அவளின் நாத்தி உதா பாய், வேறு விதமாகக் கூறினாள். அறையில் வேறு ஆடவனுடன் மீரா  பேசிக் கொண்டிருப்பதைத் தன் காதால் கேட்டதாக போஜனிடம் கூறி, மீராவின் கற்புக்கு மாசு கற்பித்தாள். கோபத்தில் உருவிய வாளுடன் அறைக்குச் சென்ற போஜன் கண்டது, அங்கே கண்ணன் சிலையிடம் கொஞ் சிப் பேசிக் கொண்டிருந்த மீராவை! அப்போதே நினைத் தான், இவள் புத்தி பேதலித்துவிட்டது என்று! இருந்தாலும், தன் உயிர்க் காதலி மீராவின் மனத்தை மகிழ்விக்க, அங்கேயே கண்ணனுக்கு ஓர் ஆலயம் கட்டிக் கொடுத்தான் போஜன்!


அப்போதிருந்து மீராவின் ஆன்மிக வாழ்வுக்கு மேலும் ஒரு கதவு திறந்தது. ஆலயம் சத்சங்க மயமானது. அடியார் கூட்டம் திரண்டது. ஆனந்தமா நாம சங்கீர்த்தனம் ஒலித்தது! வெளி உலகில் மீராவின் புகழ் பரவியது. சாதுக்களும் பக்தர்களும் ஆலயத்தில் குவிந்தனர். மீரா அவர்களுடன் நாம சங்கீர்த்தனத்தைப் பாடி ஆடினாள்.
ஆனால் ராணி இவ்வாறு நடந்து கொள்வது, குடும்பத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. அவளுக்கு நெருக்கடிகள் தொடர்ந்தன. எல்லாவற்றுக்கும் உச்சமா வேறு ஒரு சம்பவமும் நடந்தது. முகலாயச் சக்ரவர்த்தி அக்பருக்கு மீராவின் உள்ளம் உருக்கும் பாடல்கள், தெய்வீகக் குரல் குறித்து தெரியவந்தது. மீராவின் பாடலைக் கேட்க தான்சேனுடன் கிளம்பி விட்டார். அப்போது சித்தூருக்கும் அக்பருக்கும் இடையே பெரும்பகை நிலவிய நேரம்! எனவே மீராவின் கிருஷ்ணன் கோயிலுக்கு மாறுவேடத்தில் வந்தனர் இருவரும்! கோயிலில் திரண்டிருந்த பக்தர் கூட்டமும், ஆட்டமும் பாட்டமும், அதற்கு நடுவே ஒலித்த மீரா வின் வசீகரக் குரலும் ஆடலும் கண்டு அக்பர் மெமறந்தார். அதற்குப் பரிசா, கிரிதர கோபாலன் விக்ரஹத்தின் பாதங்களில் விலை உயர்ந்த வைர மாலையை வைத்து விட்டு நகர்ந்து விட்டார்.


நாட்கள் சில கழிந்தன. பிறகே இந்த விவரம் போஜனுக்குத் தெரிந்தது. அவ்வளவுதான்! பெரும் புயலே அடித்தது! சித்தூரின் ஜன்ம சத்ருவான ஒரு மொகலாயன், மீரா வின் முகம் பார்ப்பதா? ராஜபுத்திர குலத்துக்கே இழுக்கெனக் கூறி, மன்னிக்க முடியாத குற்றமிழைத்த மீரா உடனே நதியில் விழுந்து தற்கொலை செய்து கொள்வது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. தவறு தன் பக்கம் இல்லை ஆயினும் மீரா அதனை ஏற்றாள். அடியார் குழாம் உடன் வர நதியில் இறங்கினாள். ஆனால், அங்கே மாயக் கண்ணன் இரு கரம் தாங்கி, அவளைத் தடுத்து, அங்கிருந்து விலகுமாறும், பிருந்தாவனத்துக்கு வருமாறும், அங்கே காட்சி அளிப்பதாகவும் கூறினான்.


அந்த நிமிடம்... கணவனைப் பிரிந்து மீரா பிருந்தாவனம் சென்றாள். அங்கே சைதன்யரின் சீடர் ஜீவகோஸ்வாமியை தரிசிக்க விரும்பினாள். ஆனால் அவரோ, பெண்களைப் பார்க்கவே மாட்டேன் எனும் வைராக்யத்தில் இருந்தார். அவருக்கு மீரா ஒரு பதிலை அனுப்பினாள். அதில், ‘பிருந்தாவனத்தில் கண்ணன் ஒருவனே ஆண்; மற்றவர்கள் பெண்களே என்று இதுவரை எண்ணியிருந்தேன். இப்போது வேறு ஓர் ஆணும் இங்கே இருப்பதாகத் தெரிகிறது’ என்று பதில் அனுப்பினாள். இதைக் கண்ட ஜீவகோஸ் வாமிக்கு உண்மை தெளிந்தது. மீராவைக் காண ஓடோடி வந்து வரவேற்றார்.


போஜனுக்கு மீரா இல்லாமல் வாழ்க்கை கசந்தது. பிருந்தாவனம் வந்தவன் அவளை வருந்தி அழைத்துச்  சென்றான். சித்தூரில் சில ஆண்டுகள் வாழ்ந்தாள் மீரா. திடீரென போஜன் காலமாக, மீண்டும் துயரம் சூழ்ந்தது மீராவுக்கு. போஜனின் தம்பி விக்ரமஜித் ஆட்சிக்கு வந்தான். மீரா, குல கௌரவத்தைக் கெடுப்பதாகக் கூறி, அவளைக் கொல்ல முயற்சிகள் பல செய்தான். மலர்மாலை என்று கூறி விஷப் பாம்பைக் கூடையில் வைத்து அனுப்பினான். ஆனால் அதில் கிருஷ்ண விக்ரஹமே இருந்தது. கிருஷ்ணனுக் கான நைவேத்யம் என்று கூறி நஞ்சு கலந்த பாலைக் கொடுத்தான். அது அமுதமாக மாறியிருந்தது.


எல்லாம் அறிந்த மீரா, தன் வாழ்க்கையை தனிமையில் கழிக்க எண்ணினாள். துவாரகை விரைந்தாள். அப்போது அவளுக்குக் குருவாக அமைந்தவர் ராதாசர். அவர் அடி பணிந்து பக்தியில் திளைத்தாள் மீரா. அடுத்த சில ஆண்டுகள், துவாரகையில் கழித்தவள், தன் 49வது வயதில் கண்ணனுடன் உள்கலந் தாள். மீரா தனது பாடல்கள் சிலவற்றில் ராதாசரையே குருவாகக் குறிப்பிடுகிறாள். சித்தூரில் உள்ள மீராவின் ஆலயத்துக்கு எதிரில் ராதாசரின் சமாதி உள்ளது. தனது பாடல்களில் நாயக நாயகி பாவம் வெளிப்பட, தனது அரண்மனை வாழ்க்கை, அரச போகம் துறந்து எதிர்கொண்ட எளிய வாழ்க்கை, பிருந்தாவனக் காட்சிகள், ராணா விக்ரமஜித் செய்த கொடுமைகள், குரு ராதாசரின் உபதேசக் கருத்துகள் என அனைத்தையும் வைத்துப் பாடினாள். பிருந்தாவனத்துக் கோபியரின் தாபம் வெளிப்பட உள்ளம் உருக்கும் பாடல்கள் அவை. ஹிந்தியில் பக்தி இலக்கியக் கவிஞர்களில் சூர்தாசர், துளசிதாசருக்கு அடுத்து மீராவின் பாடல்கள் புகழ்பெற்றவை ஆயின! துவாரகையில் இருந்த காலத்தில் மீரா பாடிய குஜராத்திப் பாடல்கள், அவளை நர்சி மேத்தாவுக்கு அடுத்த இடத்தில் வைத்தது! தென்னகத்தில் பிருந்தாவனக் கண்ணனைக் காதலித்து ஒன்றிய ஆண்டாள் போல், வட நாட்டில் ஒரு மீரா என்ற கோபிகை என பக்தி உலகம் போற்றுகிறது

Comments