மனம் மகிழ அருள்புரியும் மனமகிழ்ந்த ஈஸ்வரர்!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடிக்கு கிழக்கே ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ‘இடையவலசை’ கிராமத்தில்  சாந்நித்தியத்துடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் மனமகிழ்ந்த ஈஸ்வரர். இங்கு அவருக்குத் துணையாக தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் இறைவி மனமகிழ்ந்த ஈஸ்வரி. 63  நாயன்மார்களில் ஒருவரான இளை யான்குடிமாறர் பிறந்து முக்தியடைந்த தலம்தான் இளையான்குடி என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னெடுங்காலம் முன், இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னர் கோச்சடையான், தீராத வெண்குஷ்ட வியாதியினால் பீடிக்கப்பட்டிருந்தார். பல வைத்தியர்களைப் பார்த்து சிகிச்சை பெற்றும் நோய் நீங்கவில்லை. பின்னர் ஒருமுறை இளையான்குடியில் அருள்புரியும் ராஜேந்திர சோழீஸ்வரர் ஆலயத்திலுள்ள தெய்வ புஷ்கரணி குளத்தில் ஸ்நானம் செய்து, இறைவனை வழிபட்டபோது, அதுவரை மன்னரை வாட்டிய வெண்குஷ்டம் மறைந்துவிடுகிறது. அதனால் மன்னரின் மனம் மகிழ்ச்சி அடைந்தது. அதேவேளையில் சிவபெருமான் அசரீரியாக தனக்கு ஓர் ஆலயம் எழுப்புமாறு மன்னருக்கு கட்டளை பிறப்பித்தார். அதனால் இடையவலசை என்ற இடத்தில் சிவபெருமானுக்கு ஆலயம் அமைத்தார், கோச்சடையான். அங்கே தான், பிரதிஷ்டை செய்த ஐயனுக்கு மனமகிழ்ந்த ஈஸ்வரர் என்ற திருப்பெயர் சூட்டினார். மன்னரின் மனம் மகிழச் செய்த ஐயனுக்கு மனமகிழ்ந்த ஈஸ்வரர் என்ற பெயர் பொருத்தம்தானே?! அதேபோல் அம்பிகைக்கும் மனமகிழ்ந்த அம்பிகை என்ற திருநாமம் சூட்டினார்.

இங்கு பரிவார மூர்த்தங்களாக விநாயகர், முருகன் அருள்புரிகின்றனர். இந்தக் கோயிலின் தொன்மையை ஆலயத்தின் முன்புறம் இருக்கும் கல்வெட்டுகளில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

காலப்போக்கில் ஆலயம் இருந்த இடம் வனாந்திரமாக ஆகிவிடவே, கோயில் சிதிலம் அடைந்துவிட்டது. 1973-ம் வருடம்தான் இடையவலசை கிராம மக்கள் சிதைந்த கோயிலை சிறிய அளவில் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்தனராம். தற்போது, வாரத்தில் செவ்வாய், வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் செய்யப் படுகின்றன.

ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் இருந்து 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு மகேசனின் அருள்பெற்று மனம் மகிழ வரம்பெற்று வரலாம்.

Comments