வித்யானந்தம்

வீகவான் ஸ்ரீகிருஷ்ணர், ‘எப்பொழுது தியானப் பயிற்சியினால் மனதானது நெறிப் படுத்தப்பட்டதோ, அப்பொழுது மனம் அமைதியடைகிறது. மேலும், அத்தகைய மனதை உடைய யோகியானவர், தன்னுடைய மனதால் தன்னைத் தான் உணர்ந்து இன்புற்றிருக்கிறார்’ என்று கூறி யருளினார்.
ஸுகமாத்யந்திகம் யத்தத் புத்திக்ராஹ்யமதீந்த்ரியம் ஐ வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதஸ்சலதி தத்த்வத: ஐஐ(ஸ்ரீமத்பகவத்கீதை 6-21) எப்பொழுது தியானத்தில் ஆழ்ந்திருக்கும் யோகி யானவர் புலன்களுக்கு எட்டாததும், புத்தியினால் உணரப்படுவதுமான எல்லையற்ற இன்பத்தை உணரு கிறாரோ, அப்பொழுது அத்தகைய மெய்யறிவில் நிலைத்திருப்பவர் தன் உண்மையான இயல்பினின்று பிறழ்வதில்லை.
இங்கு பகவான் எல்லையற்ற ஆனந்தத்தைப் பற்றிப் பேசுகிறார். உலகில் நாம் அனுபவிக்கும் இன்பங்கள் அனைத்தும் குறையுடையவை, முழுமை யானவை அல்ல. அத்தகைய இன்பங்கள் அனைத்தும் இடத்தாலும் காலத்தாலும் பொருளாலும் மனிதர் களாலும் சூழல்களாலும் வரையறுக்கப்பட்டவை.
ஒரு காலத்தில் இன்பமாக இருக்கும் ஓர் அனுபவம், மற்றொரு காலத்தில் துன்பமாக மாறுகிறது. ஓரிடத்தில் உள்ள இன்பம் மற்றொரு இடத்தில் இருப்பதில்லை. இன்பத்தின் தரத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. நேற்று இருந்ததுபோல் இன்று அந்த இன்பம் இல்லை என்று கூறுகிறோம். பகவான் கூறும், ‘ஆத்யந்திக இன்பம்’ ஸமாதியில் பெறப்படும் ஓர் அனுபவமல்ல. அவ்வாறு இருந்தால், ஸமாதியில் மட்டும் அது தோன்றி, ஸமாதியிலிருந்து விழித்தவுடன் அது மறைந்துவிடும். நம்முடைய இயல்பான எல்லையற்ற தன்மையைப் பற்றிக் கூறுகிறார்.
இது அனுபவ இன்பமல்ல, அறிவினால் பெறப்படும் இன்பம் - வித்யானந்தம். நான் முழுமையானவன், எவ்வித குறைபாடுகளும் அற்றவன் என்ற அறிவிலி ருந்து பிறக்கும் இன்பம். எந்த அனுபவமும் அந்த அறிவை மாற்று வதில்லை. இரண்டும் இரண்டும் நான்கு என்பது ஓர் அறிவு. இன்பமோ துன்பமோ அந்த அறிவை மாற்றுவதில்லை.
அறிவினால் பெறப்படும் இந்த இன்பம், புலன்களுக்கு அப்பாற் பட்டது. அதனால்தான் அதீந்த்ரியம் என்று கூறினார். இந்த சுலோகத்தில் வேத்தி - அறிகிறான் என்று பொருள்படும் வினைச்சொல் வந்துள்ளது. இது அறிவினால் உணரப்படும் இன்பம், அனுபவிக்கப்படும் இன்பமல்ல என்ற கருத்தை அது உணர்த்துகிறது.மெய்யறிவில் நிலைத்திருக்கும் மெய்யறிவாளர் அதனின்று பிறழ்வதில்லை. நாம் சிறுவயதில் மிதிவண்டி ஓட்டப் பழகினோம். முதலில் பின்னால் ஒருவர் பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது. நமக்கு அதன் விதிமுறைகளைக் கற்றுக்கொடுத்தார்கள். பிறகு சிலகாலம், ஆளரவற்ற தெருக்களில் ஓட்டிப் பழகி யிருப்போம். பிறகு, நன்கு பழகியதும் எத்தகைய நெரிசலான, குறுகலான, போக்குவரத்து அதிகமாக உள்ள இடத்திலும் வெகு எளிதாக ஓட்டத் துவங்கி விடுவோம். அது நம்முடைய இயல்பாகிவிடும்.
அதுபோல, மெய்யறிவை ஆழ்மனதுக்குக் கொண்டு சென்றவர், ஒருபோதும் அதிலிருந்து விலகு வதில்லை. அவர் தத்துவ நிஷ்டையில் இருக்கிறார். உலக வாழ்க்கை நாடக மேடை என்பது அவருக்கு மிகத் தெளிவாக இருக்கிறது. நடிகர் எத்தனை தத்ரூப மாக நடித்தாலும், உண்மையில் தான்யார் என்பதை மறந்துவிடுவதில்லை. அதுபோல, உலக வாழ்க்கையில் எந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாலும், மெய்யறிவாளர் தமது உண்மை இயல்பை மறப்பதில்லை. எத்தகைய செயல்களில் ஈடுபட்டிருக்கும் பொழுதும், அவர் தமது உண்மை இயல்பிலிருந்து பிறழ்வதில்லை. அவர் பெற்ற ஞானம் நழுவுவதில்லை. அவருடைய மனம் ஆழமான கடல் போன்று அமைதியில் நிலைபெற்றிருக்கிறது.

Comments