ஏசிப் பேசியே அருள் பெற்றவர்!

இறைவன் தந்த பொன்னை விருத்தாசலம் மணிமுத்தாற்றில் போட்டுக் கமலாலயத்தில் தருக எனச் சுந்தரர் வேண்டினார். ‘ஆற்றிலிட்டுக் குளத்தில் தேடுவார் உண்டா?’ என ஊரார் கேலி செய்தனர்.எட்டுப் பாட்டுப் பாடியும் பொன் வரவில்லை.ஒன்பதாவது பாடலில் பொன் வந்தது.


தமிழ் கேட்டு மகிழ்பவன் இறைவன்" என்றார் ஒரு தமிழ் பக்தர். இல்லையில்லை! தமிழால் திட்டினாலும் கேட்டு மகிழ்பவன் இறைவன்" என்றார் அருணகிரிநாதர். அவனை அன்பால் பாடி, ஏசிப் பேசியே அருள் பெற்றவர் தம்பிரான் தோழரான சுந்தரர். சுந்தரரின் செந்தமிழ் கேட்க இறைவன்தான் எத்தனை அருள் விளையாடல் நடத்தியிருக்கிறான்.


‘தேன்படிக்கும் அமுதாம் உன்திருப்பாட்டைத் தினந்தோறும்
நான்படிக்கும் போதென்னை நானறியேன்
நா ஒன்றோ
ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும்
உயிர்க்குயிரும் தான்படிக்கும்’
என்றார் வள்ளலார்.
‘பெத்த மனம் பித்து’
கயிலையில் ஆலால சுந்தரர் என்று இறைவனின் தொண்டராயிருந்த இவர் நந்தவனத்தில் கமலினி, அனிந்திதை என்ற மங்கையர் மீது அன்புப் பார்வை செலுத்தினார். மூன்று ஜோடிக் கண்கள் சந்தித்ததை முக்கண்ணன் பார்த்து விட்டார். ஆசை தீர மண்ணில் விளையாடி விட்டு வா!" என்றார். அது சைவத்துக்கும், தமிழுக்கும், இசைக்கும் பேறானது.


திருநாவலூரில் ஆதிசைவ அந்தணராக வந்தவ தரித்த இந்த நம்பியாரூரர் (சுந்தரர்) பதினாறாம் வயதில் வேறு ஒரு பெண்ணை மணம் முடிக்க இருந்த போது பரமேசுவரன் ஓலை காட்டி ஆட்கொண்டார். இவன் எனக்கு அடிமை" என்று வழக்குப் பேசினார். பித்தனோ மறையவன்! பிழை வழக்காட வந்தான்!" என்றார் சுந்தரர். அப்படியே என்னைப்பாடு" என்று திட்டைக் கேட்டு வாங்கிக் கொண்டார்.


‘பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா!
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை;
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணை நல்லூர் அருள்துறையுள்
அத்தா! உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே!
எனப் பிறந்தது சுந்தரரின் திருப்பாட்டு. ஒரு மணம் தடுக்கப்பட்டது. ஏன்? இரு மணம் கூட்டுவிக்கத்தான்! ‘மெய்த் தாயினும் இனியான் பித்தன் எனப்பட்டான்!
ஆரூரில் இறைவனுக்குத் தொண்டு செய்து வந்த ருத்ரகணிகையான பரவையாகக் கமனிலினி பிறந்திருந்தார். (பரவை என்றால் கடல் என்றும் பொருள்) அவர் பேர் பரவை. பெண்மையில் பெரு + உம் பர் + அவை = பெரும்பாவை. விரும்பத் தக்கவள். அவளது அல்குல் பரவை. அணி முறுவல் அரும்பர் + அவை = அரும் பாவை. சீர்பரவை, அவளது ஏர் பரவை. என் ஆசையோ எழு பரவை. (ஏழு கடல் அளவு!) ஒரு பாடலில் பரவை பரவை என ஏழு கடலைக் கொண்டு வந்து விட்டார் சேக் கிழார். தம்பிரான் தோழர், இறைவனை வேண்டிப் பரவையை மணம் முடித்தார். ஆரூரில் திருநாள், அன்னதானம் செய்ய வேண்டுமே! இவருக்காகக் குண்டையூர் கிழார் வயலில் அமோக விளைச்சல் தந்தார் ஆரூர்த்தியாகேசர். நெல்லை, வீட்டில் கொண்டு தர மாட்டீரா?" என்று பாட, எத்தனை  தோழமை உணர்வு இருந்திருக்கும்! எண்ணிப் பாருங்கள்.


‘நீள நினைந்தடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே!
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப் பணியே!’
என்று பாட இரவோடிரவாகப் பூத கணங்கள் நெல் மலையை ஆரூரில் கொண்டு சேர்த்தன. ‘அவரவர் வீட்டின் முன் உள்ள நெல்லை அவரவர் எடுத்துக் கொள்க’என்ற பரந்த, உயர்ந்த உள்ளம் சுந்தரருடையது. திருக்குவளைதான் கோளிலி!
யாரைப் பாடுவது?
ஒரு ஊரில் ஒரு பணக்காரன், கஞ்சன், கோடிக் கணக்கில் சொத்து வைத்துச் சென்ற தந்தையின் திதிக்குக் கூடச் சிறிது பணம் செலவிட மறுக்கும் கஞ்சன். பின் எப்படித் திதி செய்வான்? செட்டியாரே! உம் கடையில் புது எள் வந்திருக்கிறதா? மாதிரிக்குக் கொஞ்சம் தாரும்!" என எட்டு எள்வாங்கி வந்தான் திதி கொடுக்க. வழியில் எதிரே வந்தவன் தட்டிவிட எட்டு எள்ளும் மண்ணில் விழுந்தன.
மண்ணில் விழுந்த எள்ளைப் பொறுக்கிக் கொண்டிருந்த அவனை, வள்ளலே! வள்ளலே!" எனப் புகழ்ந்தான் ஒரு புலவன். அவனா தருவான்? பூம்புகலூர் இறைவனைப் பாடு. உனக்குப் பொன், மெய்ப்பொருள், போகம், திரு எல்லாம் தருபவன் அவனே!" என்றார் சுந்தரர்.


‘எள் விழுந்திடம் பார்க்கும் ஆகிலும்,
ஈக்கும் ஈகிலன் ஆகிலும்
வள்ளலே, எங்கள் மைந்தனே என்று வாழ்த்தினும் கொடுப்பாரில்லை’
என்பதில் எத்தனை நகைச்சுவை!
‘கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும்
மிடுக்கிலாதானை வீமனே! விறல் விசயனே’
என்று பாடினாலும் அவன் தரப் போவதில்லை. பூம்புகலூரைப் பாடுமின் என்றார் சுந்தரர்.
மணி முத்தாறு எங்கே? கமலாலயம் எங்கே?
இறைவன் தந்த பொன்னை விருத்தாசலம், (பழமலை), முதுகுன்றம், விருத்தகிரி எனப்படும் தலத்தில் மணிமுத்தாற்றில் போட்டுக் கமலாலயத்தில் தருக எனச் சுந்தரர் வேண்டினார். போடும்போது கொஞ்சம் பொன்னை மடியில், மாதிரிக்கு எடுத்து வைத்துக் கொண்டார். ஆற்றிலிட்டுக் குளத்தில்
தேடுவார் உண்டா?" என ஊரார் கேலி செய்தனர். எட்டுப் பாட்டுப் பாடியும் பொன் வரவில்லை. பரவை சிரித்தாள். ஏன்? அவன் தந்த பொன்னை, தர இருக்கும் பொன்னை மாற்றுப்பார்க்க மடியில் கட்டிக் கொண்டு வந்தார் அல்லவா? தோழனை வாட விட்டு விளையாடுகிறான் ஆரூரன்.
‘ஏத்தா திருந்தறியேன் இமையோர்தனி நாயகனே
மூத்தா உலகுக்கெல்லா முதுகுன்ற மமர்ந்தவனே’
எனக் கெஞ்சி, ‘பூத்தாரும் குழலாள் பரவை இவள் தன் முகப்பே
கூத்தா தந்தருளா கொடியேன்இட்டளம் கெடவே.’
எனப் பாடினார். ஒன்பதாவது பாடலில் பொன் வந்தது. திருவாரூர்த் தல புராணம் இந்த வரலாற்றுக்குச் சுவை சேர்க்கிறது. மடியில் வைத்திருந்த பொன்னையும், குளத்தில் வந்த பொன்னையும் கமலாலயக் குளக்கரையிலிருக்கும் விநாயகரிடம் காட்டி, இரண்டும் மாற்றுச்சரியா?" என்றாராம் வன்தொண்டர். அந்தப் பிள்ளையாரும் சரி என்று சொன்னதால் அவர், ‘மாற்றுரைத்த விநாயகர்’ ஆனார் என்கிறது புராணம்.
தொகையடியார் பதம் போற்றி!
பாட்டைக் கேட்டு வாங்கிக் கொள்வதில் படுசமர்த்தன் பரமன்! அடிமையா? நானா! என் சந்ததியா? கிடையாது. நான் ஓர் அந்தணன்! நீர் ஓர் அந்தணர். யார் யாருக்கு அடிமை?" என்று வன்மை பேசி, வழக்கிட்ட தோழர் வன்றொண்டர் ஆனார். ஒவ்வொரு பாடலிலும், ‘அடியார்க்கும் அடியேன்’ என்று தோப்புக்கரணம் போட வைத்துவிட்ட இறைவன் எத்தனை சமர்த்தன்!
விறன்மிண்ட நாயனார் தலைமையில் சிவனடியார் திருக்கூட்டத்தார் தேவாசிரிய மண்டபத்தில் கூடி யிருந்தனர். சுந்தரர், இவர்கட்கு நான் தொண்டனாகும் நாள் எந்நாளோ?" எனப்பணிவுடன் ஓரமாகச் சென்று விட்டார். விறன்மிண்டரோ, இறைவா! நீ ஆட்கொண்டு விட்டாய் எனும் பெருமிதம் எங்களை மதிக்காமல் போகச் செய்கிறதா? யார் இந்தச் சுந்தரன்?" என்று கோபப்படுகிறார். சுந்தரனே, அடியார்களைப்பாடு!
நானே அடியெடுத்துத் தருகிறேன்" என்று நயமாகப் பேசித் திருத்தொண்டத் தொகை பாட வைக்கிறார்!
‘தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்;
திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்;
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்;
இளையான்தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்;’
என்று 63 தனியடியாரை, ஒன்பது தொகையடி
யாரைச் சுந்தரர் பாடியதால்தான், நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி பாட முடிந்தது. இவற்றின் அடிப்படையில்தான் மாக்கதை, பெரிய புராணம் எனும் திருத்தொண்டர் புராணம் நமக்குக் கிடைத்தது. ஆகவே, தீதிலாத் திருத்தொண்டத் தொகை தந்த நம்பியாரூரர், வன்றொண்டர். தம்பிரான் தோழர், பரவைநாதன், சங்கிலி கேள்வன், சுந்தரரை வணங்க நமக்குக் கிடைத்த பிறவியை வாழ்த்துவோம்!

Comments