ஏழூர் குலசாமி

கரூர் மாவட்டம், தோகைமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள காரனாம்பட்டி, கீழவெளியூர், செம்பாரைக் கல்லுப்பட்டி, ராக்கம்பட்டி, புரைக்கலாம்பட்டி, புதுப்பட்டி, டி.மேலப்பட்டி, செங்காயிப்பட்டி ஆகிய ஏழூர் கிராம மக்களின் ஒரு பிரிவினருக்குப் பல தலை முறைகளாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்தான் குலதெவம். அண்மையில் ரெட்டை மாட்டு வண்டிகள் மற்றும் மோட்டார் வாகன வண்டிகள் என முந்நூறு வண்டிகளில், ஆண்கள், பெண்கள், வயசுப்பிள்ளைகள் மற்றும் குழந்தைகள் என ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் குலதெய்வம் ஸ்ரீரெங்கநாதரைத் தரிசிக்க வந்து கொண்டிருந்தனர்.
வரிசை கட்டி வந்த அந்த வண்டிகள் திருச்சி, காவிரிப் பாலத்தைக் கடக்கவே ஒரு மணி நேரத்துக்கும் மேலானது. ஸ்ரீரங்கம், மேலூர் அருகே ஒரு தனியார் தென்னை மற்றும் மாந்தோப்பில் அவர்கள் தங்கி யிருந்தனர். வைகாசி மாதத்தில் இந்தக் குலதெய்வ வழிபாட்டு ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்கின்றனர். எவ்விதம் தொடங்கப்படுகிறது இந்த ஆன்மீகப் பயணம்? அவர்கள் வழிபாட்டின் வரலாறு பற்றி சிலரிடம் கேட்டபோது...
எனக்கு இப்போ வயசு அறுபத்தியொண்ணு. எங்க ஏழூர் கிராம மக்களும் அஞ்சு வருசத்துக்கு ஒரு தடவை, எங்க குலசாமி ஸ்ரீரங்கம் பெருமாளைத் தரிசித்து வழிபடுவதை, பரம்பரை பரம்பரையா தொடர்ந்து கடைபிடுச்சி வர்றோம். நான் ஒரு வயசு குழந்தையா இருந்தப்ப என்னை இங்க தூக்கி வந்திருக்காங்க. எனக்கு இது பன்னிரெண்டாவது தடவை. எது தடை பட்டாலும் தடைபடும், ஆனா, எங்க குலசாமி ஸ்ரீரங்கம் பெருமாளை வந்து கும்பிடுறது மட்டும் தடை படாது. அந்தக் காலத்துல இவ்வளவு மோட்டார் வண்டிங்க கிடையாது. அப்பல்லாம் நானூறு, ஐந்நூறு மாட்டு வண்டிகள்ல சலங்கைகள் ஒலிக்க, ‘ஜே ஜே’னு வந்துகிட்டிருப்போம்" என்கிறார் செம்பாரைக்கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம்.
இந்த ஏழூருக்கும் காரனாம்பட்டி தலைமை கிராமம். சாமி வீடுன்னு ஒண்ணு அங்கன இருக்கு. ஒவ்வொரு கிராமத்துலயும் சாமி வீடு ஒண்ணு உண்டு. ஸ்ரீரங்கத்துல எங்க குலசாமி வழிபாடு செஞ்சி நாலு வருஷம் முடிஞ்சதுக்கப்புறம், வைகாசி மாசத்துக்கு முன்னாடியே சாமி வீட்ல உத்தரவு கேட்போம். தினமும் காலைல ரெண்டு மணி நேரம், பொழுது
சாஞ்சதும் ரெண்டு மணி நேரம் சாமி வீட்ல உக்காந்து உத்தரவு கேப்போம். சுவத்துல ஒரு குறிப்பிட்ட எடத்துல ரெண்டு பல்லிங்க வந்து சகுனம் சொல்லும். அந்த சகுனம் கிடைச்சாதான் குலசாமி வழிபாட்டுக்குக் கிளம்புவோம். இந்த தடவை
எட்டாம் நாள்தான் எங்களுக்கு சகுனம்
சொன்னிச்சி. அதுக்கப்புறம்தான் குலசாமி வழிபாட்டுக்குக் கிளம்பினோம்" என்கிறார் காரனாம்பட்டி கிராம முக்கியஸ்தர்களில் ஒருவரான ராமையா.
பல்லி சகுனம் சொன்னதும் உடனே கிளம்பிடுவீங்களா?" எனக் கேட்டோம்.
ஒவ்வொரு ஊருக்கும் சாமி மாடுன்னு ஒண்ணு உண்டு. மொத்தம் பதினோரு சாமி மாடுகள். சகுனம் கிடைச்சதும் அந்தந்த ஊர்ல சாமி மாடுகளை அலங்கரிச்சு, அந்தந்த ஊர்ல வீதிகளைச் சுத்தி வந்து தண்டோரா போட்டு, ஸ்ரீரங்கம் என்னைக்கி கிளம்பறதுன்னு அறி விப்போம். சாமிமாடு முதுகுல ரெண்டு பக்கமும் தம்பட்டம் கட்டி, அடிச்சி சொல்லிக் கிட்டேபோவோம். ரெண்டு மூணு நாளைக்கி இது நடக்கும். அப்ப ரெங்கநாதர் கோயிலுக்குனு உண்டியல் வசூல் பண்ணுவோம். கிளம்பற அன்னைக்கி பதினோரு சாமி மாடுகளையும் அலங்கரிச்சி, எங்க மாட்டு வண்டிகள் பயணத்தோடமேள, தாளத்தோட அழைச்சிட்டு ஸ்ரீரங்கத்துல ஒரு தோப்புக்கு வந்து சேருவோம்" என்கிறார் ராமையா.
தோப்புக்கு வந்ததும் ஏழூர் தீபக் கம்பங்களை நட்டு, சாமி மாடுகளை முன்னிறுத்தி வழிபடுவோம். மறுநாள் காலையில் கொள்ளிடம் ஆற்றில் எங்கள் பிள்ளைகளும் மற்றவர்களும் முடி காணிக்கைச் செலுத்துவார்கள். பதினோரு சாமி மாடுகளையும் அலங்கரித்து, தீபமேந்தி அந்தந்த ஊர் பூசாரிகளைக் கொண்டு வழிபாடு நடத்துவோம். அப்போது சிலருக்கு சாமி அருள் வந்து குறி சொல்வதும் உண்டு.
நெய் விளக்கு தீபங்களை ஒவ்வொரு ஊர் பூசாரிகளும் வாக்குள் சில வினாடிகள் ஏந்தி, பின்னர் அத் தீபங்களை வெளிக்கொணர்வார்கள். சாமி மாடுகளுடன் கொள்ளிடம் ஆற்றிலிருந்து கிளம்பி, வடக்கு
வாசல் வழியாகத் தாயார் சன்னிதி வந்தடை வோம். தாயாரை வணங்கி விட்டு தோப்புக்குச் சென்று, பொங்கலிடுவோம். மறுநாள் காலை, ஏழூர் உண்டியல் வசூல் பணத்தை ஒரு வெள்ளைத் துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு சென்று ரெங்கநாதரை தரிசித்த பின்கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தி விடுவோம். இத்துடன் எங்கள் குலசாமி வழிபாடு நிறைவு பெறுகிறது.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையென பாரம்பரியமாகத் தொன்றுதொட்டு, எங்கள் ஏழூர் கிராம மக்களின் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் குலசாமி வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்கிறார் காரனாம்பட்டி பாலகிருஷ்ணன்.
அவர்களின் இந்தக் குலசாமி வழிபாடு, மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அந்த ஏழூர் கிராமங்களிலும் இடைப்பட்ட நான்காண்டுகளில் பிறந்த குழந்தைகளுக்கு, இந்த வழிபாட்டின்போதுதான் முதல் முறை முடி காணிக்கை செலுத்துகின்றனர். அதுவரையில் வேறெங்கும் முடி காணிக்கைச் செலுத்துவதில்லை.

 

Comments