அட்டதிக்கு காலதேவன்!

என்ன வினோதம் பாருங்கள்...! மனிதர்களின் உயிரைப் பறிப்பவனுக்கு, எமதர்மன் என்று திருநாமம். தீண்டினால் உயிர்ப்பலி வாங்கும் கொடிய விஷ நாகத்துக்கு நல்லபாம்பு என்று பெயர். சரி. யம தர்மராஜனிடம் வருவோம். சூரியனின் குமாரன்; காலதேவன் மற்றும் காவல்தேவன் என்று வர்ணிக் கப்படுகிறவன். சிவபெருமான் இவனை அட்டதிக்குப் பாலகர்களில் ஒருவனாக நியமித்து, தென்திசைக் காவல் பொறுப்பை அளித்துள்ளார்.
உயிர்களிடத்தில் பாரபட்சம் அற்றவன் யமதர்மன். ஒவ்வொரு உயிருக்கும் அது செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பதண்டனையை வழங்குபவன். பொதுவாக, அவன் ஒரு நீதிமான் (யமதர்மன் என்றானது இதனால்தானோ?). இறுதியாக, மரணத்தின் மூலம் உயிர்கட்கு வாழ்வில் ஏற்படும் சலிப்பை, வாழ்வில் தோன்றும் மாயையை நீக்குபவன்.
யமன் என்பது தமிழர்களுக்கு, யாமம் என்கிற பொழுதினை அல்லது காலத்தினைக் குறிக்கும் குறியீடு. இறந்தவர்களைப் பற்றி கூற வருகையில், காலமாகிவிட்டார் அல்லது இயற்கை எதிவிட்டார் என்றே சொல்கிறோம். யமன் என்பதற்கு காலன் என்கிற மற்றொரு பெயரும் உண்டு. காலா உன்னை சிறு புல்லெனவே மதிக்கிறேன்; என் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்" என்று கொதி மன நிலையில் பாடியவர் மகாகவி பாரதி. சிவபெருமான் கூட மார்கண்டேயனைக் காக்க வேண்டி, யமனின் தலை மீது இடது காலால் எட்டி உதைப்பார். அது தனி புராண வரலாறு.
பாரதிக்கு வேண்டுமானால்யம பயம் இல்லாது இருக்கலாம். ஆனால், பலருக்கும் என்பதைவிட நம் அனைவருக்குமே ஏதோ ஒரு கணத்தில் யம பயம் இருக்கத்தான் செய்யும். கடந்த ஆண்டு அப்படித்தான் ஒரு சம்பவம் ஆயிற்று. ஒரு நாள் மாலை நேரம். சேலம், தாதகாப்பட்டி பகுதியில் திடீரென பெண்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு முன்பு வாசலில்
நீர் தெளித்து, கோலமிட்டு, அகல் விளக்குகள் ஏற்றி, யமனை வழிபடத் தொடங்கி விட்டனர். இதுகுறித்து விசாரித்தால், இன்று பஞ்சாங்கத்தில் யமதர்மராஜா எருமை வாகனத்தில், பாசக்கயிறு வீசி வீதியுலா வருகிறார். அதனால், வீட்டில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும், இந்த கண்டத்திலிருந்து தப்பிக்க, வீட்டு வாசலில் விளக்கேற்றி வழிபட வேண்டும் என்றும் போட்டிருந்தது. அதனால்தான் அகல் விளக்குகள் ஏற்றி யமனை வழிபடுகிறோம்" என்றனர்.
பொதுவாகவே, நம் சமூகத்தில் காலம் காலமாக இந்தக் காலன் குறித்து (யமன் குறித்து) பல்வேறு கற்பனைகளும் பீதிகளும் தொடர்ந்து வந்து கொண்டே தான் உள்ளன. நாம் அவற்றை சற்றே ஒதுக்கித் தள்ளி விட்டு, அதன் புராண வரலாறுக்குள் பயணித்து வருவோம்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் மகம் நட்சத்திரத் தன்று யம சம்ஹாரம் நடைபெற்று வருகிறது. இறைவி அன்னை அபிராமி. கருவறையில் அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அன்னை அபிராமியின் அற்புத திருமுக அழகினைத் தரிசிக்கிறார் அபிராமி பட்டர். அபிராமி மீது அந்தாதி பாடல்களைப் பாடி, சரபோஜி மன்னருக்கு அன்றைய முழு அமாவாசை இரவினிலே பௌர்ணமிக்குரிய பூரண நிலவினைக் காட்டிய அற்புதம் நிகழ்ந்த திருத்தலம்.
மிருகண்டு முனிவர், அவரது மனைவி மருத்துவதி இருவரும் தீவிர சிவ பக்தர்கள். குழந்தை வரம் கேட்டு சிவனை நோக்கிகடும் தவம் புரிகின்றனர். மந்த புத்தியுடன் நூறு வயது வாழும் மகன் வேண்டுமா? நல்ல அழகு, சிறந்த அறிவுடன்கூடிய பதினாறு வயது வரை மட்டுமே உயிர் வாழக்கூடிய ஞானக்குழந்தை வேண்டுமா?" எனக் கேட்கிறார் ஈசன். ஞானக்குழந்தையே வேண்டும்" என்கின்றனர் முனி வரும் அவரது மனைவியும். மருத்துவதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறக்கிறது. அது மார்கண்டேயன் என்கிற பெயருடன் வளர்கிறது. பெற்றோர்களுக்கு, தங்கள் மகன் குறித்தான யம பயம் தொற்றிக் கொள்கிறது. குழந்தையைச் சுமந்துகொண்டு ஒவ்வொரு
சிவத்தலத்துக்கும் சென்று வழிபடுகின்றனர். மார்கண் டேயனுக்கு பதினாறாவது வயது நிறைவு பெறுகையில் நூற்றி எட்டாவது தலமாக திருக்கடவூர் (திருக்கடையூர்) வந்து சேர்கின்றனர்.
பதினாறு வயது நிறைவடையும் நாள் வரவிருந்தது. மார்கண்டேயன் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜபித்து அமிர்தகடேஸ்வரரைத் தரிசித்துக் கொண்டிருந்தான். பதினாறு வயது பூர்த்தியாகும் நாளில் யமன் அங்கு வந்தான். பயந்த மார்கண்டேயன் அமிர்தகடேஸ்
வரரைக் கட்டி அனைத்துக் கொள்கிறான். யமன் பாசக்கயிற்றினை வீசுகிறான். பாசக்கயிறு அமிர்த லிங்க ரூபமான லிங்கத்தின் மீது வீழ்கிறது. உடனே லிங்கம் பிளந்து அதிலிருந்து கால சம்ஹார மூர்த்தியாகத் தோன்றுகிறார் சிவபெருமான். யமனைத் தனது இடது காலால் எட்டி உதைக்கிறார். மார்கண்டேயன் சிவ பெருமானால் உயிர் காப்பாற்றப்படுகிறான். அதோடு, இன்றுபோல் என்றும் பதினாறாக சிரஞ்சீவி யாக வாழ அருள்புரிகிறார் சிவ பெருமான். பின்னர் பார்வதி தேவியின் வேண்டுதலால், யமனையும் அனுக்ரகிக்கிறார்.
இந்த நிகழ்வுகள் யாவுமே, திருக்கடையூர் அமிர்தகடேஸ் வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தன்று நடைபெறும், யம சம்ஹார உற்ஸவத்தன்று மண் திடலில் நடத்தப் படுகிறது. திருக்கடையூரிலிருந்து
ஒரு கி.மீ. தொலைவில் திருமணல்மேடு என்னு மிடத்தில் மார்கண்டே யருக்கு தனிக் கோயில் உள்ளது. இறைவன் ஸ்ரீ மிருகண்டேஸ்வரர். இறைவி ஸ்ரீ மருத்துவதி. மூலவர் மார்கண்டேயர்.
திருக்கடையூர் திருத்தலத் தில் சிவபெருமான் யமனையே சம்ஹாரம் செய்த
சிறப்பினால், இங்கு சிவபெரு மான் மிருத்யுஞ்சயமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அதனால் இத்திருத்தலத்து சிவனையும் அம்பாளையும், தம்பதி சமேத ராக அறுபது வயதின் போதும், எண்பது வயதின்போதும் வணங்கி வழிபடுவது அவர்களின் ஆயுள் பலத்தினைக் கூட்டும் வல்லமை தரக் கூடியதாகும். 59 வயது பூர்த்தியாகி, 60 வயது தொடங்கும்போது, ‘உக்ராத சாந்தி’,60 வயது பூர்த்தியாகி, 61வது வயது ஆரம்பமாவது
‘சஷ்டியப்த பூர்த்தி.’70வது வயது ஆரம்பமாவது,‘பீமரத சாந்தி.’எண்பதாவது வயதின்போது,‘சதாபி ஷேகம்.’தம்பதியர் இதுபோன்ற முக்கியமான வயது களில் திருக்கடையூர் இறைவனை வழிபடுவது, வாழ்வில் ஆனந்தத்தையும் நிம்மதியையும் அள்ளித் தரும்" எனக் கூறுகின்றார் தருமபுரம் ஆதினம் அமிர்தகடேஸ் வர சுவாமி தேவஸ்தான ஆலய அர்ச்சகர் விஸ்வநாத குருக்கள்.

Comments