முருகன் திருவிளையாடல்

குன்றிருக்கும் இடமெலாம் குமரனிருக்கும் இடமெ’ன்று குறிஞ்சித் தெய்வம் குமரனுக்குக் கோயில் கட்டி விழா எடுத்தவர்கள் நம் தமிழர்கள். ‘தமிழ்க் குமரன், தமிழ்க் கடவுள்’என்றெலாம் தமிழுடன் ஒட்டுறவாடிய குமரக் கடவுள், பக்தர்களின் மீது பாசம் கொண்டு நிகழ்த்திய திருவிளையாடல்கள் அனேகம். ஏழைக்கு மனமிரங்கி, ஏய்ப்பவரை மாயச் செயல்களால் நேராக்கி விடும் குமரவேளுக்கு, தமிழகத்தில் ஆலயங்களும் அதிகம், அடியார்களும் அனேகம்! ஔவைப் பாட்டிக்கும் அந்தக் குமரக் கடவுளுக்கும் தான் எத்தகைய நட்புறவு! தோழனா, அண்ணனா, தம்பியா, வேலைக்காரனா, மகனா, தந்தையா என்று எத்தனை அரிதாரங்களை அவன் பூசிக் கொண்டான். எல்லாம் தன் அடியார்களுக்காக! சங்க காலத்தில் இருந்து, அண்மைக் காலம் வரை, ஆறுமுகனின் அற்புதங்களை அருணகிரி நாதரும், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும்... ஏன் வாரியார் சுவாமிகள் வரையிலும் அனுபவித்துப் பாடி மகிழ்ந்தனர். அவ்வாறு தன் அடியார் பக்கலில் ஆசை கொண்டு முருகப்பெருமான் நிகழ்த்திய மெய்சிலிர்க்கும் திருவிளையாடல்களை இந்தத் தொடரில் படித்து, குணக்குன்றான குமரவேளின்அபிமானத்துக்கு உரியவர்களாவோம்!
‘சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செய்யலேவிரும்பியுளம் - நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவலைந்துழலு
மடியேனை அஞ்சலென - வரவேணும்’
(அருணகிரிநாதர்)
1962-ல் நடந்த ஒரு நிகழ்ச்சி. காஞ்சி ஸ்ரீமஹா ஸ்வாமிகளிடம் பக்தர் ஒருவர்,பழனியாண்டவன் படத்தை ஆத்துல (அகத்தில்) வெச்சுக்கப்படாதுங்கறா. குடும்பத்தையே மொட்டை அடிச்சுடுவானாம்..." என்று இழுத்தார். ஸ்ரீமஹா ஸ்வாமிகள் சிரித்து விட்டார்.
ஞான ஸ்வரூபமான பழனியாண்டவனா நம் குடும்பத்தை மொட்டையடிப்பான்? வாரி வழங்கற வள்ள லாச்சே அவன். பழனியாண்டவன் படத்தைத் தாராளமா(க) க்ருஹத்துல வெச்சுக்கலாம்" என்றார்.
பழனியாண்டவர் நாம் நினைப்பதைப் போல, மொட்டையாக இல்லை. அபிஷேக நேரத்தில் சற்று அமைதியாகப் பார்த்தால் தெரியும். நெளிநெளியாக அமைந்த திருமுடி தெரியும். ‘ஒண்மீக் குடுமியழகும்’எனத் தெளிவாகச் சொல்கிறது தலபுராணம்.அப்படிப்பட்ட பழனி மலை அடிவாரத்தில் பரந்த குளம் உள்ளது. அது சில நேரங்களில் வறண்டு விடுவதும் உண்டு. அவ்வாறு வறளும்போது, அதில் உள்ள மீன்களையெல்லாம் பிடித்துக் கரையில் குவிப்பார்கள். பிறகு பங்கு பிரிக்கப்படும்.
ஒரு முறை... குளம் குறையத் தொடங்கியதும், மீன்களைப் பிடித்துக் கரையில் குவித்தார்கள்.அதற்குள் இரவு கவியத் தொடங்கியது. குவிந்திருக்கும் மீன்களைக் காவல் காக்கப் பழனித்தேவரை நியமித்தார்கள்.
தடித்த நுனி கூர்மையான ஒரு தடி, இரும்பு போன்ற தோள்கள், கறுத்த திருமேனி, ஒளிவீசும் கண்கள் ஆகியவற்றோடுதிகழும் அவர், காலையில் எழுந்ததும் நிமிர்ந்து மலையைப் பார்த்து, பழனித்தேவா!" என்று குரல் கொடுப்பார். அதனாலேயே அவ ரைப்பழனித்தேவர் என்று அழைத்தார்கள். அச்சம் தரும் தோற்றம் கொண்ட அவரைக் காவல் வைத்தால், யாராவது மீன் குவியலின் அருகில் வருவார்களா?
பழனித் தேவர் கண்ணுங் கருத்துமாகக் காவல் புரியும் அந்த இரவு வேளையில், பரதவர் பகுதியில் பெண் ஒருத்தி, பழனியாண்டவா! வறுமையில் வாடும் நான், கணவரை இழந்து துயரப் படுவது உனக்குத் தெரியாதா? என் கணவர் இருந்தால் எனக்கும் ஒரு கூடை மீன் கிடைக்குமே. என் துயரத்தை யாரிடம் சொல்வேன்?" என்று நெற்றியில் விபூதி பூசிக்கொண்டு, பழனி மலையைப் பார்த்துக் கும்பிட்டாள்.
அதேநேரம்... உருண்டு திரண்ட ஓர் உருவம் ஓசைப் படாமல், கையில் கூடை யோடு வந்து, குவிந்திருந்த மீன்களை வாரிக் கூடையில் நிரப்பிக் கொண்டு, சற்று ஓசைப் படுத்தியபடி ஓடத் தொடங்கியது. சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த பழனித் தேவர்,ஏ!நில்!நில்!" என்றபடியே துரத்தினார். வந்தவன் பிடிபடாமல் ஓடினான்.
பார்த்தார் பழனித் தேவர்; கையிலிருந்த தடியை வீசித்தாக்கினார். அடிவாங்கிய வடிவம் அப்போதே மறைந்தது. நாள் தோறும் நீ கூப்பிடும் பழனியப்பனடா நான்!" என்று ஆகாயத்திலிருந்து அசரீரி ஒலித்தது.
பழனித்தேவர் நடுங்கினார்; அப்பா! பழனியாண்டவா! இந்தப் பாவி உன்னையா அடித்தேன்?" என்று கூவியபடி மூர்ச்சையானார். மீன் கூடையுடன் மறைந்த முருகப் பெருமானோ, பரதவப் பெண் குடிசை வாசலில் நின்று, அம்மா! இந்தா உன் பங்கு மீன்" என்று குரல் கொடுத்தார். ஓசை கேட்டு வெளியில் வந்து பார்த்த பெண், யாரப்பா நீ?" எனக் கேட்டாள்.
முருகப்பெருமானோ, உதவி செய் என்று வேண்டுவது; ஓடி வந்து உதவி செய்தால், யார் நீ என்று கேட்பது; நன்றாகயிருக்கிறது உங்கள் பழக்கம்" என்ற படியே ஆகாயத்தில் பாந்து அருவமானார்.
பரதவப் பெண் பதறினாள்; வான் சுமந்த தேவர்களை வாழவைத்த பரம்பொருளே! இந்த அடியாளுக்காக மீன் சுமந்தாயா அப்பா! என் பாவம் தீர, உன் சன்னிதியில் திருத்தொண்டு செய்வதே, இனி என் வேலை" என்று கூவியபடி, பழனி மலையை நோக்கி ஓடினாள்.
பொழுது மலரத் தொடங்கியது. பழனித் தேவருக்கு மூர்ச்சை தெளிந்தது; சீ! என்ன மனிதன் நான்? தெய்வமே எனக்கெதிரில் ஓடியாடிக் காட்சி கொடுத்தும், அதைத் துரத்தி அடித்தேனே! பாவி! பாவி! என் அங்கங்களை சிதைக்க வேண்டும்" என்றவர் எழுந்தார். அடியார்களெல்லாம் அறுமுகத் தரிசனத்துக்குப் போக் கொண்டிருந்தார்கள்.
இப்போது நான் எனக்குத் தண்டனையளித்துக் கொண்டால், இவர்கள் விடமாட்டார்கள். இன்று நள்ளிரவு தாண்டட்டும். என் அங்கங்களை நான்
சிதைத்துக் கொள்கிறேன்" என்றபடியே வீடு நோக்கி நடந்தார் பழனித்தேவர். (அவர் நடக்கட்டும். அரண் மனையில் நடந்ததைப் பார்க்கலாம் நாம்!)
மன்னர் கனவில் மால்மருகன் காட்சி கொடுத்தார்; பரதவப் பெண்மணி, பழனித் தேவர் ஆகியோரின் செயல்களை விவரித்து, பழனித் தேவன் தன் அங்கங்களைச் சிதைத்துக் கொள்ளத் தீர்மானித்திருக்கிறான். ஏழைகளுக்கு உதவுவதுதான் என் கடமை. அது புரியாமல், தண்டனை அளித்துக் கொள்ளத் தீர்மானித்த பழனித் தேவனுக்கு நீ, தங்கத்தால் அலங்காரம் செய்!" என உத்தரவிட்டார்.
கனவு கலைந்தது. மன்னர் சபையைக் கூட்டினார். யாரிடமும் மன்னர் விவரம் சொல்லவில்லை; வீரர்களை அனுப்பி, பழனித் தேவரை அழைத்துவரச் செய்தார்.
பழனித் தேவரோ, ‘ஊம்! அதுவும் சரிதான். நான் செய்த தவறு, எப்படியோ மன்னருக்குத் தெரிந்திருக்கிறது. அவர் எனக்குத் தண்டனை அளிக்கத்தான் அழைத்திருக்கிறார்’என எண்ணியபடி அரசவையை அடைந்தார்.
அவரை வரவேற்ற மன்னர், உயர்ந்த பீடத்தில் அமரவைத்தார். ‘பலியாட்டுக்கு மரியாதை செய்கிறார் போலிருக்கிறது’ என நினைத்தார் பழனித் தேவர்.
மன்னரோ, பழனித் தேவரின் கைகளிலும் கால்களிலும் தங்க ஆபரணங்களைப் பூட்டினார்; ஏராளமான காணிக்கைகளை முன்னால் வைத்தார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. பின்னர் மன்னரே, பழனியாண்டவன் வந்து பழனித் தேவரைப் பற்றிச்சொன்னதை விவரித்தார்.
சபையிலிருந்தோர் அனைவரும்,‘ஆஹா! ஆஹா!’என்றார்கள். பழனித் தேவரோ, பழனித் தேவா! தண்டனை அளிக்க வேண்டிய எனக்கு, இவ்வளவு உயர்வு தந்த உன் கருணையை என் சொல்வேன்!" என்று கதறியபடியே, ஆபரணங்களையெல்லாம் கழற்றி வீசினார். முருகா! முருகா!" என்று கூவியபடி, பழனி மலையாண்டவன் சன்னிதியை அடைந்து, தெய்வமே! உன் திருவடிகளில் சேர்த்துக்கொள் என்னை" என்று விழுந்து வணங்கினார்.
அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தபோதே, பழனித் தேவரின் உடம்பிலிருந்து ஒரு ஜோதி புறப்பட்டு, இறைவன் திருவடிகளில் கலந்தது. அவரைப் பின்தொடர்ந்து வந்த அரசர் முதலானோர் வியப்புற்றுக் கைகளைக் குவித்தார்கள்.
பரதவப் பெண், நாள்தோறும் அடிவாரம் முதல் உச்சி வரை, தூமை செய்து கோலமிட்டாள்; அர்த்த ஜாம பூஜை முடிந்ததும், ‘அடியார்கள் பாதம்பட்ட இடம்’ என்று சொல்லி, அங்கப் பிரதட்சிணம் செ தாள். அவளுக்கு உண்டானதை அளிக்கும்படி, கோயில் நிர்வாகிகளுக்குக் குமரன் கட்டளையிட, அவர்களும் அப்படியே செதார்கள். தொண்டு செய்த பரதவப் பெண் பின்னாளில் பழனியாண்டவன் திருவடிகளை அடைந்தாள்.
அடியார் துயர் தீர்க்கும் ஆறுமுகவள்ளல், அவர் களை மனமறிந்து காப்பாற்றவும் செய்வார் என்பதை விளக்கும் அருளாடல் இது.

Comments