சத்தியப் பிரமாணம்!

நான் என் வாழ்க்கைக்கு இந்த விழுமியங்களை அளவுகோலாகக்
கொண்டு வாழ்வேன். இவற்றில் ஏதாவது ஒன்றைத் தவறினேனானால் அந்தப் பாவம் என்னை தீவிரமாகப் பீடிக்கும் என்றான் உத்தமன் பரதன். தான் எவற்றை அளவுகோல்களாகக் கொண்டு வாழ்ந்தானோ அவற்றையே சபதங்களாகக் கூறிய தோடு, அவற்றை மீறி நடப்பவன் அடையும்துர் கதிகளை தானும் அடைவேன் என்று கௌசல்யா தேவியிடம் சொல்கிறான் பரதன்" என்றார் தமது சொற்பொழிவில் பிரம்மஸ்ரீ காசீபொட்ல சத்ய நாராயணா.


கௌசல்யா தேவியைக் காண வந்த பர தனும் சத்ருக்னனும் தாயின் நிலை கண்டு துக்கம் தாங்காமல் அவளை அணைத்துக்கொண்டு அழுகின்றனர். ‘ஏனடா அழுகிறாய்? உனக்காகச் செய்ய வேண்டிய கொடூரமான செயல்களை எல்லாம் செய்து, உன் அன்னை ராஜ்யத்தை உனது கைவசப்படுத்தி விட்டாளே! இன்னும் என்ன? என்னைக்கூட வனத்துக்கு அனுப்பிவிடும் முயற்சியில் இறங்குங்கள். ஹிரண்யகர்பனான ராமன் இருக்கும் வனத்துக்கு அக்னி ஹோத்திரத்தை எடுத்துக்கொண்டு நானும் சென்று விடுகிறேன்’ என்று கௌசல்யா தேவி கூறியதைக் கேட்ட பரதனுக்கு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதைப் போல் இருந்தது.
பரதன் கௌசல்யா தேவியின் பாதங்களில் விழுந்து கதறினான். ‘அம்மா! ராமரிடம் எனக்குள்ள அன்பை நீ அறியாதவளா! எந்தக் குற்றமும் செய்யாத என்னை ஏன் இப்படி நிந்திக்கிறாய்? ராமச்சந்திர மூர்த்தி எனக்குத் தெரிந்துதான் வனம் சென்றாரென்று நீ நினைக்கிறாய் அல்லவா? இந்தப் பாவம் எனக்கு தெரிந்து நடந்திருந்தால், நான் இவ்விதம் ஆவேனாக! இப்படிப்பட்ட துர்கதிகளை அடைவேனாக’ என்று கூறி, முப்பத்தெட்டு சபதங்களை வரிசைப்படுத்துகிறான்.


சத்தியப் பிரமாணங்கள் செய்வதும் அவற்றைக் கடைப் பிடிக்காமல் விடுவதும் உத்தமர்களுக்கு கடினமான செயல். பரதன் எடுக்கும் சபதங்கள் நமக்கு மிகச் சிறியனவாகத் தோன்றலாம். ஆனால், சமுதாய விழுமியங்களை, வாழ்வின் உண்மைகளை இவை தெரிவிக்கின்றன. அறியாமல் நாம் செய்யும்  சின்னச் சின்னத் தவறுகள் கூட எத்தனை பெரிய தீமையை விளைவிக்கும் என்பதை இவை தெரிவிக்கின்றன.


‘சூரியனுக்கு எதிராக நின்று மல ஜலம் கழிப்பது, தூங்கும் பசுவை காலால் உதைப் பது போன்ற பாவங்களை செய்பவன் அடையும் துர்கதியை நான் அடைவேனாக’என்கிறான் பரதன். இவை, பெரிய குற்றங்களா? ஆமாம்... பெரிய குற்றங்கள்தான். அக்னி, சூரியன், சந்திரன், நீர்நிலை, வேதம் கற்ற பிராமணன், பசு, எதிர்க்காற்று இவற்றுக்கு எதிராக நின்று சிறுநீர் கழித்தால் புத்தி மந்தம் ஏற்படும். தன் அறிவைத்தானே அழித்துக் கொள்ளும் தவறுகள் இவை.
‘பணியாளனிடம் அதிக வேலை வாங்கிவிட்டு தகுந்த கூலி கொடுக்காமல் ஏமாற்றுபவன் அடையும் துர்கதியை நான் அடைவேனாக’ என்று சபதம் கூறுகிறான். இதுவும் பெரிய குற்றமே. இவ்வாறு செய்வது பாவம் என்று தர்ம சாஸ்திரமான ராமாயணம் கூறுகிறது.


‘நம்மிடம் நம்பிக்கை வைத்து ஒருவர் நமக்கொரு விஷயத்தை ரகசியமாகக் கூறினால், அதைக் கேட்டவர், அதை மற்றவரிடம் பிரச்சாரம் செய்பவர் அடையும் துர்கதியை நானும் அடைவேனாக’ என்று கூறுகிறான் பரதன். இது ஒரு பெரிய மன பலவீன நிலை. இதனையே, ‘கோள் சொல்வது’ என்கிறோம். இது ஒரு நன்றி கெட்ட நிலை.‘யாருக்கும் கொடுக்காமல் தானே உண்பவன் அடையும் துர்கதியை அடைவேனாக’ என்கிறான் பரதன். யார் மீதும் பாசம் வைக்காமல், தனக்குப் பிடித்த பதார்த்தத்தை தான் ஒருவனே தின்று தீர்ப்பது, பிடித்ததை தானமளிக்கும் குணமில்லா மனம். இதுகூட ஒரு பாவமே. காசி யாத்திரை செல்லும்போது கயையில், பிடித்த பதார்த்தம் ஒன்றை விட்டுவிடும்படி கூறுவார்கள். யோசித்து யோசித்து பிடிக்காத ஒன்றை விட்டுவிட்டு வருவோம். உண்மையில் விட வேண்டியது மாயையான இந்த லௌகீகத்தை. ஆனால், அதைத் தவிர, அனைத்தையும் விடுவோம்.


‘இரண்டு சந்தியா காலங்களான சூரியோதயம், சூரிய அஸ்தமனம் இந்தச் சமயங்களில் தூங்குபவன் அடையும் துர்கதியை அடைவேனாக’ என்கிறான். இது சொம்பேறியின் குணம். வேதமும் இதுபற்றி உரைக்கிறது. இது ஒரு பெரிய தோஷம். சூரியோதயத்துக்கு முன்பே எழுவது, இரவு ஒன்பது மணிக்கு முன் உறங்க மாட்டேன் என்று நாம் எல்லோரும் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டு வாழ வேண்டும். ‘தாகத்தால் தவிப்பனுக்கு குடிக்க நீர் தராமல் நிராகரிப்பவன் அடையும் துர்கதியை அடைவேனாக’ என்கிறான் பரதன். கருமி தன்னிடம் இருந்தாலும்  கேட்பவருக்குத் தண்ணீர் தர மாட்டான். அவன் பாவி. தண்ணீர் கூட அளிக்காதவன் வேறு எதை அளித்து விடுவான்? அவன் என்றுமே தானம் செய்பவன் என்ற நிலையை அடைய மாட்டான்.


இவ்விதம், முப்பத்தெட்டு சபதங்களை எடுக்கிறான் பரதன். அதைக் கேட்ட கௌசல்யா மாதா, ‘தனக்கு மன ஆறுதல் கிடைத்ததென்றும், தன்  உயிர் நிலைபெற்றதென்றும்’ கூறி, பரதனை அன்போடு அணைத்து, ‘நீயும் லட்சுமணனைப் போலவே தர்ம வழி விலகாதவன். சத்தியவாக்கு மீறாதவன். சத்புருஷன்’என்கிறாள். இவற்றைக் கேட்கும் நாமும் இப்படிப் பட்ட தவறுகளிலிருந்தும் துர்கதிகளிலிருந்தும் நம்மைக் காத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

 

Comments