மல்லிகார்ஜுனரே என் மணாளன்!

கர்நாடகத்தின் இன்றைய ஷிமோகா மாவட்டத்தில் உள்ள உடுத்தடி என்ற கிராமம். சிவபக்தர்களான நிர்மல் ஷெட்டி, சுமதி தம்பதியர் இடைவிடாது இறைவனிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தனர். செல்வ வளம் இருந்தும், வசதிகள் பல இருந்தும், வீட்டில் கொஞ்சி விளையாட மழ லைச் செல்வம் இல்லையே என்ற கவலை விடாது துரத்திக் கொண்டிருந்தது. மல்லிகார்ஜுனரிடமே மன்றாடினர்.
அவர்களின் பக்தியின் விளைவால் நல்முத்தா ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மகாதேவி என்று பெயரிட்டனர். பெற்றோரின் பக்தியும் சிவன் அருளால் பிறந்த தன்மையும் ஒன்றுசேர, சிவபெருமானையே எல்லா மாக்கற்பனை செய்து வளர்ந்தாள் மகாதேவி. கன்னடமும் சமஸ்கிருதமும் அவளிடத்தே குறைவறக் குடிபுகுந்தன. துருவித் துருவிக் கேள்வி கேட்டு, சிறுவயதிலேயே ஞானத்தை நிறைவாக்கிக் கொண்டாள். சாஸ்திர ஞானமும், சமயப் பற்றும், தத்துவ நாட்டமும் வீரசைவப் பிரிவைச் சேர்ந்த அவளை மல்லிகார்ஜுனரையே பரம்பொருளென வழிபடச் செய்தது!
கண்ணையும் கருத்தையும் கவரும் கன்னியாக வளர்ந்தாள் மகாதேவி. பருவத்தின் வாயிலில் நின்று தெய்வீக அழகுடன் திகழ்ந்த மகாதேவிக்கு தகுந்த கணவன் கிடைக்க வேண்டுமே என்று பெற்றோர் கவலையுற்றனர். அவள் வய தொத்த தோழிகளுடன் பேசும்போது, திருமணம் குறித்த பேச்சும் எழும். அப்போது மகாதேவி தெளிவாகச் சொல்வாள்... ‘ஸ்ரீசைலநாதனான மல்லிகார்ஜுனரே என் மணாளன்.’அதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் தோழிகள்,‘இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா? நன்கு தெரிந்த யாரை யாவது மணந்துகொண்டு மகிழ்ச்சியாக இரு’என்று அறிவுரை கூறுவர்.
அதற்கு மகாதேவி... அழகு மயில் குன்றில்தான் ஆடும்; குப்பை மேட்டில் அல்ல! அன்னம் குளத்தில்தான் நீந்தும்; குட்டையில் அல்ல! தளிர்விடும் மா மரத்தில்தான் குயில் கூவும்; மணமிலா மலர்களை வண்டு நாடாது!" என்று பதி லளித்து மனத்தால் மல்லிகார்ஜுனரையே வரித்தாள். அவ ளின் உறுதியான பதில் கேட்டு, பெற்றோர் மிரண்டனர். கவலையுற்றனர்.
இந்நிலையில்தான் ஒரு நாள்... தன் வீட்டின் மேல் மாடத்தில் நின்று கொண்டிருந்த மகாதேவியைக் கண்டான் அந்நாட்டு மன்னன் கௌசிகன். மகாதேவியின் தெய்வீக அழகு அவனைக் கவர்ந்திழுத்தது. அவனும் இளவயதும், அழகும், நற்குணங்களும் நிரம்பப் பெற்றவன்தான். கண்டதும் காதலானது; மகாதேவியை மணந்துகொள்ளத்தம் வீட் டாரை பேச்சுவார்த்தைக்கு அனுப்பிவைத்தான் மன்னன். மகாதேவியின் பெற்றோரோ, பெண்ணிடம் பேசி சம்மதம் தெரிந்துகொண்டு பின்னர் சொல்வதாகக் கூறினர். ஆனால், எல்லோருமே இப்போது மகாதேவியின் முன் நின்றனர். அவளது பதிலை எதிர்பார்த்து.
முதலில் மறுத்துவிட்ட மகாதேவி பின்னர் தெளிவாகச் சொன்னாள்... ‘நான் மன்னனிடமே முடிவைத் தெரிவிக்கிறேன்’ என்று! இப்போது கௌசிகனே அவள் முன் வந்து நின்றான். மகாதேவியின் பேரழகை நேரில் கண்ட, அதுவும் மிகுந்த அணுக்கத்தில் கண்ட அவன் மனம், அவளின் பால் மயங்கியது.அவனது உள் மனத்தே ஆசை மிகுந்தது.
அவனது எண்ணத்தைப் புரிந்துகொண்ட மகாதேவி, மன்னனிடம் சொன்னாள்...‘என் வேண்டுகோளைத் தாங்கள் நிறைவேற்றினால், நான் தங்களை மணப்பேன். என் விருப்பத்தை நிராகரித்தால் நான் உடனே தங்களை விட்டு நீங்கி விடுவேன்" என்றாள்.

மன்னன் என்ற மிதப்பில் கௌசிகன் சொன் னான்...‘நான் இந்த நாட்டின் அரசன். இவை எல்லாமே உன்னுடையது. என்ன கேட்டாலும் தருகிறேன்.’
‘மன்னா எனக்கு இவை எதுவுமே வேண்டாம். நீங்கள் ஒரு சிவபக்தன் ஆக வேண்டும். அது போதும்!’ என்றாள் மகாதேவி.
மகாதேவியின் பேச்சு, மன்னனின் மனத்தை வாட்டியது. அவனால் இது சாத்தியமாகும் என்று தோன்றவில்லை. கனத்த மனத்துடன் மறுதலித்தான். ‘என்னால் இது இயலாது. எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை’என்றான்.
‘அப்படியானால் நான் போகிறேன்...’என்று சொல்லி, பெற்றோர், உற்றாரை விட்டு, ஊரையும் துறந்து வெளியேறினாள் மகாதேவி. அப்போது அவள் வயதோ 16. அழகு நிரம்பப் பெற்ற கன்னிப் பெண். அந்நிலையில் அவள் எங்கே போவாள்? யார் அவளுக்கு ஆதரவளிப்பர்? என்றெல்லாம் சுற்றத்தார் யோசித்து யோசித்துக் கலங்கினர்.
மகாதேவி தீர்க்கமான முடிவுக்கு வந்துவிட்டவள். தெளிவாகப் பதிலளித்தாள்... ‘மலை உச்சியில் வீட்டைக் கட்டிவிட்டு, வனவிலங்குகளுக்கு பயப்பட முடியுமா? கடலோரத்தில் வீட்டைக் கட்டிய பின் அலைகளுக்கு அஞ்ச முடியுமா? சந்தைக்கு நடுவே வீட்டைக் கட்டிவிட்டு கூச்சல் ஆரவாரத்துக்கு கவலைப்பட முடியுமா? எனக்கு சென்ன மல்லிகார்ஜுனனே துணை’என்று கூறி வீட்டை விட்டு வெளியேறினாள் மகாதேவி.
அப்போது கல்யாணி நகரில் வீர சைவ மரபிற்சிறந்த மகான் பசவண்ணர் வாழ்ந்து வந்தார். மேலும் பக்தி மார்கத்திற் சிறந்த அல்லாமா பிரபு, சென்ன பசவண்ணா உள்ளிட்ட மகாத்மாக்கள் பலர் அங்கிருந்தனர். அந்நகரத்தில் ‘அனுபவ மண்டப’எனும் ஆன்மிக கூட்டமைப்பு பிரபலமாக இருந்தது. 12ம் நூற்றாண்டின்லிங்காயத் சைவ நெறி மரபின் மகான்கள், தத்துவ அறிஞர்களின் கூட்டமைப்பை மையப்படுத்தி அல்லாமா பிரபு தலைமையில் அனுபவ மண்டப செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்தத் தகவல்கள் எல்லாம் மகாதேவியை ஏற்கெனவே அடைந்திருந்தன. ஆகவே, எப்படியேனும் கல்யாணி நகருக்கு வந்துவிட வேண்டும் என்று தீவிர எண்ணத்தில் மகாதேவி புறப்பட்டாள். ஒற்றைக் கம்பளி ஆடை. கூந்தலே உடலை மறைக்க, பசி, தாகம், காடு மலை பாராது மகாதேவி கல்யாணி நகரை அடைந்தாள்.
‘அனுபவ மண்டப’மகாதேவியை எளிதில் ஏற்கவில்லை. கேள்விக்கணைகள் பாந்தன. எப்படி பதினாறு வயதுக்குள் உடல், மனம் இவற்றின் ஆசைகளை வென்று, இறைவனை நாட முடியும் என்பதே முக்கியக் கேள்வி! அதற்கு மகா தேவி அளித்த பதிலைக் கேட்டு அனைவரும் ஆச்சரியம் கொண்டனர். ஆன்மா- உடல் குறித்த அந்தத் தெளிவு பசவண்ணர், அல்லாமா பிரபு ஆகியோரை வியப்பில் ஆழ்த்தியது.
ஆன்ம சாதனத்துக்கு உடல் அவசியத் தேவை. பாம்பின் விஷத்தை அகற்றிவிட்டால், பாம்புடன் நாம் வாழ இயலும்! நம் உடலுடன் நமக்குள்ள உறவைப் புரிந்து கொண்டால், உடலைக் கண்டு அஞ்சத் தேவையில்லை! ஆசையும் காமமும் கொண்ட உடலானது, நம் தாயே பேயா மாறியது போல்! ஆசையை விட்டொழித்தால் தாயாக இந்த உடலை மாற்ற முடியும்!" - மகாதேவியின் இந்த பதில் கேட்டு, அவளின் ஆன்ம சாதனை உச்சத்தை உணர்ந்தனர் பசவண்ணர் உள்ளிட்டோர்.
அவளை ‘அக்கா’என மரியாதையுடன் அழைத்தனர். அவளை அங்கேயே தங்கி, ஆன்ம சாதனை புரிய கேட்டுக் கொண்டனர். அதுமுதல் அவர் அக்கமகாதேவியானார்! கல்யாணியில் இருந்து ஸ்ரீசைலம் செல்லுமாறு அல்லாமா பிரபு சொல்ல, அதன்படி ஸ்ரீசைலகிரி அடைந்து, உருவமற்ற சிவனை, ஸ்ரீசைலநாதனாக உருவத்தில் கண்டு வழிபட்டார். தன் இளமைப் பருவத்தில் இருந்தே தனக்குரிய மணாளனாக வரித்த, தன் உள்ளங்கவர் கள்வன் சென்ன மல்லிகார்ஜுனரு டன் ஐக்கியமானார் அக்கமகாதேவி!
வீரசைவ இலக்கியத்திற் சிறந்த அக்கமகாதேவியின் வசனங்கள், இன்றளவும் கன்னட மக்களிடம் பிரசித்தம்! ஆழ்ந்த பக்தியையும், வீர சைவ விளக்கங்களையும் தாங்கிய வசனங்கள் அவை!

Comments