பன்னிரு வரங்கள்... பன்னிருகை வேலவனின் பன்னிரு தலங்கள்!

ரிது அரிது மானிடர் ஆதல் அரிது’  என்றும், ‘மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்றும் மனிதப் பிறவியின் உயர்வை சிறப்பாகப் போற்றியுள்ளார்கள் அருளாளர்கள். காரணம், பிறப்புகளில் தலையாயது மனிதப் பிறப்பே!

 படைப்பில், வேறு எந்த உயிரினத்துக்கும் கிடைக்காத சிந்திக்கும் அறிவு மனிதனுக்கு மட்டுமே உள்ளது. எனவே சிந்திக்கத் தெரிந்த மனிதன், தன் பகுத்தறிவைக் கொண்டு தமது வாழ்வை தெய்வ சிந்தனையில் செலுத்தி, அதன் மூலம் இறையருளைப் பெறலாம். வாழ்வை அன்பு மயமாக ஆக்குவது இறையருட் சிந்தனையால் எளிதில் இயலும். அதுவே பிறப்பின் பயனாகும்.

இன்றைக்கு, அறிவியலில் மக்கள் வெகுவாக முன்னேறினாலும், வாழ்க்கையில் பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். மனித குலத்தின் சிரமங்களையும், துன்பங்களையும், வருத்தங்களையும் நீக்க காலந்தோறும் அருளாளர்கள் பலரும் தோன்றி நமக்கு வழிகாட்டி வருகிறார்கள். அவர்கள் அருளிய பக்தி இலக்கியங்கள் யாவும் நமது வாழ்வைச் செம்மைப்படுத்த வந்தவையே.

அவற்றைப் படித்து பாராயணம் செய்து மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும், நெறியுடனும் நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். நோய்க்குத் தக்கவாறு மருத்துவர் மருந்து கொடுத்து நோயைத் தீர்ப்பது போல, தம்முடைய தேவைக்குத் தக்கபடி பிரார்த்தனை செய்து கொள்ள வசதியாக பக்தி இலக்கியங்களை அருமருந்தாகப் பயன்படுத்தி வாழ்ந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் முருக வழிபாட்டுக்கு ஒரு பேரிலக் கியத்தைப் படைத்தவர் அருணகிரிநாத சுவாமிகள். அவர் தலம்தோறும் சென்று பாடிய திருப்புகழ்ப் பாடல்களில் மனிதனுக்குத் தேவையான வாழ்வியல் நெறிகள் அனைத்தும் உள்ளன. முருகனின் திருவருளால், மனித வாழ்வில் பல்வேறு நிலைகளில் அவனுக்கு ஏற்படும் தேவைகள், விருப்பங்கள் என அனைத்தும் நிறைவேறுவதற்கு, திருப்புகழ் எனும் மாமருந்து பயன்படுகிறது என்பது பலரது அனுபவ உண்மை.
சென்ற நூற்றாண்டில் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் முதலாக திருப்புகழ் அடியார்கள் பலரும் ஓதி உணர்ந்து, அன்பர்கள் யாவருக்கும் போதித்து, எல்லோரும் இன்புறும் வகையில் போற்றிக்கொண்டாடப்பட்ட ‘திருப்புகழ்’ எனும் இந்த அருட்செல்வத்தை, நீங்களும் பெற்று பயனுறும் வகையிலானது இந்தத் தொகுப்பு. இதன் மூலம் மஹா மந்திரமான திருப்புகழை ஓதி, திருத்தல வழிபாடு செய்து, திருமுருகன் திருவருளால் சகல செல்வயோகம் மிக்க பெருவாழ்வு பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டுகிறோம்.

திருமண வரம் அருளும் திருச்செந்தூர்

‘கயிலை மலை அனைய செந்திற்பதி’ என்று அருணகிரிநாத சுவாமிகள் வியந்து புகழ்ந்து போற்றும் ஒப்பற்ற தலம் திருச்செந்தூர். திரு முருகாற்றுப்படையில் நக்கீரர் ஆற்றுப்படுத்திய பதிகளில் இரண்டாவது தலம். சிந்து என்றால் கடல். எனவே சிந்துபுரம், சிந்து தேசம், செந்தில், திருச்செந்தூர் என அழைக்கப்படுகிறது. சிறப்புமிக்க அலைகள் முருகனின் திருவடி யில் வந்து வருடுவதால் ‘திருச் சீரலைவாய்’ எனவும், சூரபத்மனை வெற்றி கொண்ட இடமாதலால் ‘ஜயந்திபுரம்’ எனவும் அழைப்பர்.

செந்திலின் உறையும் கந்தன் ஒரு முகம் - நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உற்சவர் ஷண்முகப் பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் வள்ளி, தேவசேனை சமேதராக தெற்கு நோக்கி அருள்கிறார்.

புறத்தே அலை ஓயும் இடத்தில் செந்தூர் முருகன் கோயில் கொண்டுள்ளதுபோல், அகத்தே எங்கு எப்போது மன அலை ஓய்கின்றதோ, அங்கு அப்போது ஜோதி முருகன் கோயில் கொள்வான். எனவே, மனத்தால் வழிபட வேண்டிய தலம் திருச்செந்தூர் என்பார் அருணகிரிநாத சுவாமிகள். திருச்செந்தூர் முருகன் மீது 84 திருப்புகழ்ப் பாடல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீவந்த வாழ்வைகண் டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் மணம்நாறும்
மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே
நான்என்று மார்தட்டும் பெருமாளே.


ஒரு மனிதனுக்கு நல்ல மனைவி அமைவதும், ஒரு பெண்ணுக்கு உயர்ந்த கணவன் அமைவதும் இறைவன் திருவருளேயாகும். எனவே முருகப்பெருமானை திருப்புகழால் போற்றி வழிபட்டு இனிய இல்லற வாழ்வு அமைய வழி காட்டுகிறார் அருணகிரியார். திருச்செந்தூர் திருப்புகழ் ஒன்றில் வள்ளியம்மைக்கு திருமண மாலை தந்து குறையைத் தீர்த்தது போல் தனக்கும் (இந்த ஜீவாத்மாவுக்கும்) மாலை தந்து குறையை நீக்க வேண்டும் என்று வேண்டுகிறார். ‘இத்திருப்புகழ் அடியார்களின் இடுக்கண் நீக்கும் மந்திரத்திருப்புகழ்’ என்று குகத்திரு வாரியார் சுவாமிகள் குறிப்பிடுவார்

செந்தூர் முருகனைத் தரிசிப்பதுடன், மேற்காணும் திருப்புகழ் பாடலை அனுதினமும் பாடி அவரை வழிபட்டால், மணமாலை விரைவில் தோள்சேரும்.

பிள்ளை வரம் அருளும்  சுவாமி மலை

இனிய இல்லற வாழ்வில் இறைவன் திருவருளால்தான் மகப்பேறு வாய்க்கும்.

அருணகிரியார் திருப்புகழில் பாடிப் போற்றிய எந்தத் தலத்திலும் அன்றி, திருவேரகம் என்னும் இந்த சுவாமிமலையில் அருள்பாலிக்கும் சுவாமிநாதப் பெருமானிடம் ஒரு பிரார்த்தனை வைக்கிறார். என்ன தெரியுமா?

‘முருகப் பெருமானே ஓர் குழந்தை வடிவில் பத்து மாதம் மனையாளின் கர்ப்பத்தில் வந்து பிறந்து உச்சி மோந்து கொஞ்ச வேண்டும். தோளில் உறவாடியும், மடியில் விளையாடியும், மணிவாயால் முத்தம் கொடுக்க வேண்டும்’ என்று வேண்டுகிறார் அருணகிரியார்.

 ‘‘ஏரக வெற்பெனும் அற்புதமிக்க சுவாமிமலைப் பதி” என்று தீர்மானமாக அருணகிரியார் போற்றும் இத்தலம் மலையே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் கட்டு மலையில் உருவான கவின்மிகு திருக்கோயில். இங்குதான், ‘திரு எழுகூற்றிருக்கை’ என்னும் சித்ரகவியை பாடியுள்ளார் அருணகிரி. சுவாமிமலையில் உள்ள குருபரன் பதினாறு உலகத்தினில் உள்ள பக்தர்கள் எதை நினைத்தாலும் அதனை முழுதும் அளித்து அருள்பவன் என்கிறார். தனக்கு திருவடிகாட்டி அருளிய ஒப்பற்ற முருகன் என்றும் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டில் சுவாமிமலை என்ற பெயரில் அமைந்த பழைமையான திருத்தலம் இது ஒன்றுதான். ‘ஸ்வாமி’ என்பது முருகனுக்கே உரிய திருப்பெயர் என்பதை அமரகோசம் என்னும் நிகண்டு குறிப்பிடுகிறது. ‘ஸ்வயம்’ என்றால் எல்லாவற்றையும் தன்னகத்தே உடையவர் என்று பொருள்.
ஜெகமாயை உற்றென் அகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்பம் உடலூறித்
தெசமாத முற்றி வடிவாய் நிலத்தில்
திரமாய் அளித்த பொருளாகி
மகவாவின் உச்சி விழிஆன னத்தில்
மலைநேர் புயத்தில் உறவாடி
மடிமீ தடுத்து விளையாடி நித்தம்
மணிவாயின் முத்தி தரவேணும்


இந்த ஞானபண்டிதனிடம் ‘ஞானப் புதல்வனைப்’ பெற்று இன்புறலாம் அல்லவா? அதுமட்டுமா! அவனிடம் சகல செல்வயோகமிக்க பெருவாழ்வும். சிவஞான முத்தியும் வேண்டிப் பெறலாம். அதற்கு மேற்காணும் திருப்புகழ் பாடல் உங்களுக்கு உதவும்.


ஆரோக்கியம் அருளும் பழநி மலை

மனிதப் பிறவி அரிதானது. அதிலும் ‘கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது’ என்பது ஒளவையின் வாக்கு. இதுபோன்ற உடற்குறைகள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி மனத்தை வருத்தும். இதற்கு முற்பிறவியின் வினைப் பயன் முக்கிய காரணம் என்றாலும், இப்பிறவியில் இதனை நீக்க வழியைக் காட்டுகிறார் கருணை முனிவர் அருணகிரி. முருகனை வழிபடுவோர் மனத்தாலும் உடலாலும் அவனைப் போன்றே அழகாக இருப்பர். பழநித் திருப்புகழ் ஒன்று இதற்குப் பாங்கான வழிகாட்டுகிறது.

முருகப் பெருமான் விரும்பி உறையும் மலைத்தலங்களில் புகழ் பெற்றது பழநிமலை. அடிவாரத்தில் திரு ஆவினன்குடி கோயிலும் மலைமீது பழநி ஆண்டவர் திருக்கோயிலும் அமைந்துள்ளன.

சிவபெருமானும் உமையம்மையும் ‘பழம் நீ’ என முருகனை அழைத்ததால் இத்தலம் பழநி என்றும், இங்கு முருகன் ஞானப்பழமாக விளங்குகிறான் என்பதும் புராண வரலாறு. மண்ணுலகில் வாழ்வோருக்கு வேண்டியவற்றை வேண்டியவாறு நல்கும் இறைவனும் உலகப் பொருள்களில் பற்று அற்றவனாக இருக்கிறான் என்பதையே பழநியாண்டவரின் துறவுக்கோலம் காட்டுகிறது. ‘சரவணபவ’ என்னும் ஆறெழுத்துக்கள்  பேரொளியாக அமைந்த மலை பழநிமலை என்று சிறப்பிக்கும் அருணகிரியார், வாக்கினால் பழநியை வழிபடவேண்டும் என்று வழிகாட்டுகிறார்.

திருவாவினன்குடி, பழநி இரண்டுக்கும் சேர்த்து அருணகிரியாரின் 100 திருப்புகழ்ப் பாடல்கள் கிடைத்துள்ளன. அவற்றில் மேற்காணும் பாடல், உடற்குறை நீங்கி வறுமை அணுகாமல் தேவர்கள் வடிவுடன் அறிவு, நீதி, ஒழுக்கத்துடன் வாழ பழநி முருகனை வேண்டிப் பரவும் அற்புதத் திருப்புகழ் பாடல் இது.

இப்பாடலைப் பாடி பழநி முருகனை வழிபட்டால் ஊனம் இல்லாமல், ஆரோக்கியத்துடன் குழந்தைகள் பிறக்க வரம் கிடைக்கும். ஊனங்களை ஏற்படுத்தும் விபத்துகளும் விலகும்.

திமிர உததி அனைய நரக
ஜெனனம் அதனில் விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியும் அணுகாதே
அமரர் வடிவும் அதிக குலமும்
அறிவும் நிறைவும் வரவேநின்
அருள தருளி எனையு மனதொ
டடிமை கொளவும் வரவேணும்


நினைத்ததை நிறைவேற்றும் திருவக்கரை

‘‘வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ” என்பார் மணிவாசகர். இறைவன் அடியார்கள் வேண்டியவை அனைத்தும் அருளும் வள்ளல்.

முருகப் பெருமான் அடியார்க்கு எளியன், அடியவர்களுக்கு அவர்கள் வேண்டும் அரிய பொருளை வேண்டும் அளவுக்கு வழங்கி உதவும் பெருமான், யார் வேண்டினாலும் கேட்ட பொருளை ஈயும் தியாகாங்கசீலன், அடியார்கள் கோடி முறை குறைகூறினாலும் கோபம் கொள்ளாமல் அருள்புரியும் தேவதேவன் என்றெல்லாம் கந்தவேளின் பெருங்கருணையை வியந்து போற்றுவார் அருணைமுனிவர். அழகு திருத்தணியில் உறையும் முத்தமிழிற் பெரியவன் நினைத்தவை எல்லாம் தவறாமல் அருள்பவன் என்று ஒரு பாடலில் (நினைத்ததெத்தனையில் தவறாமல்) குறிப்பிடுவார். இவை மட்டுமா? திருவக்கரை முருகனைப் பாடும்போது,  ‘‘அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்தருள் பெருமாள்” என்று புகழ்கிறார். அடியார் களின் மனத்தில் உள்ள ஆசைகள் அத்தனையும் பூர்த்தி செய்யும்  கருணை மூர்த்தி அவன் என்கிறார்.

திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக புதுச்சேரி செல்லும் வழியில் உள்ளது திருவக்கரை. இங்கே, இறைவி வடிவாம்பிகை சமேதராக அருள்மிகு  சந்திரசேகரர் அருளும் சிவாலயத்தில், பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் அருள்கிறார் ஆறுமுகப் பெருமான். இருபுறமும் தேவியர். வக்ரன் என்ற அசுரன் பூசித்ததால் வக்கரை என்று பெயர். மூலவர் மூன்று முகலிங்கம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள் கல்லுருவாக உள்ளன. திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். வக்ரகாளியம்மன் சந்நிதி சிறப்புடையது.
குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
நிசிசர னைப்பொரு மயில்வீரா
குணதர வித்தக குமர புனத்திடை
குறமக ளைப்புணர் மணிமார்பா
அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
மணிதிரு வக்கரை உறைவோனே
அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன
அவைதரு வித்தருள் பெருமாளே


இந்தத் தலத்துக்குச் சென்று முருகப்பெருமானைத் தரிசித்து, மேற்காணும் திருப்புகழ் பாடலைப்பாடி, உள்ளம் உருக அவரை வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் விரைவில் நிறைவேறும்.


மனக்கவலை தீர்க்கும் சிதம்பரம்

இன்றைய உலகில் பெரும்பாலான மக்களுக்குத் தீராத பிரச்னையாக உள்ளது மனக்கவலை மற்றும் மன இறுக்கமாகும். இவற்றுக்குப் பல காரணங்கள் உண்டு.

தேவைக்கு மேல் ஆசை, நிறைவேறாத ஆசை, வரவுக்கு மேல் செலவு, கடன் தொல்லை இப்படி ஒவ்வொன்றாலும் கவலை அதிகரிக்கின்றது. எல்லாவற்றிலும் போதும் என்ற மனத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதும் முக்கியமான காரணமாகும். வீட்டிலும் சரி, பணி இடங்களிலும் சரி, அதீத கவலையினால் கலங்கி நிற்கிறது மனித குலம். இதற்குப் பரிகாரம்தான் என்ன? இறை வழிபாடும், தியானமும், பாராயணமும்தான் கவலைகளை நீக்கி மன அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். அதற்கு அருணகிரியார், சிதம்பரம் கோயிலில் அருளும் முருகப்பெருமானைப் போற்றி, தான் பாடிய திருப்புகழில் வழிகாட்டுகிறார்; ‘வாராய்! மனக்கவலை தீராய்!’ என வடிவேலனை அழைக்கிறார்.

சைவர்களுக்குக் கோயில் என்றாலே அது சிதம்பரம் நடராஜர் கோயிலைத்தான் குறிக்கும். பஞ்சபூதத் தலங்களில் இது ஆகாயத்தலம். தினமும் ஆறுகால பூஜையும் ஆண்டுக்கு ஆறுமுறை நடராஜருக்கு விசேஷ அபிஷேக வழிபாடும் நடைபெறும் கோயில். இந்தத் தலத்தில் ஆறுமுகப்பரமனை அருணை முனிவர் போற்றிப் பாடிய திருப்புகழ்ப்பாடல் ஒன்று மனக்கவலை தீர மருந்தாக அமைந்த மந்திரமாகும்.

மற்றொரு தலமும் உண்டு. சைவத் திருமுறைகளில் ‘இடர்களையும் பதிகம்’ என்று சிறப்பாக குறிப்பிடப் பெறும் பதிகம் பெற்ற திருத்தலம் திரு நெடுங்களம். இது திருச்சி - துவாகுடி அருகில் உள்ளது. திருஞான சம்பந்தர் இத்தல இறைவனை போற்றிப் பரவிய ‘மறையுடையாய்’ என்று தொடங்கும் பதிகம் போல், அருணை வள்ளலும் இத்தல முருகனை ‘‘என் மனக் கவலையைத் தீர்த்தருள்க’’ என்று வேண்டுகிறார். இரண்டு தலங்களுக்கும் சென்று தரிசித்து, மனக் கவலைகள் நீங்க வரம்பெற்று வரலாம்.
நாடா பிறப்புமுடி யாதோ எனக்கருதி
நாயேன் அரற்று மொழி வினையாயின்
நாதா திருச்சபையின் ஏறாது சித்தம் என
நாலா வகைக்கும் உன தருள்பேசி
வாடா மலர்ப்பதவி தா தா எனக்குழறி
வாய்பாறி நிற்கும் எனை அருள்கூர
வாராய்  மனக்கவலை தீராய் நினைத்தொழுது
வாரேன் எனக்கெதிர் முன் வரவேணும்.


வறுமையை விரட்டும் திருவண்ணாமலை

‘கொடிது கொடிது வறுமை கொடிது’ என்றார் ஔவை மூதாட்டி. மனிதனுக்கு வறுமை (மிடி) என்னும் தரித்திர நிலை வந்துவிட்டால் அவனது மானம், மரியாதை, குலப்பெருமை முதலிய அனைத்தும் நீங்கி, இழிந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றான். இந்த வறுமை நிலை நீங்க வழிகாட்டுகிறார் அருணகிரியார். ‘‘கடையவனாகிய என்னுடைய வறுமை ஒழியவும், நோய் நீங்கவும் கனல் மால் வரை (அக்னிப்பெருமலை) கந்தப் பெருமான் - திருவண்ணாமலை ஆறுமுகப் பெருமானிடம் வேண்டுகிறார்.

‘அருணையை நினைக்க முத்தி’ என்பது ஆன்றோர் முதுமொழி. ஆறு ஆதாரங்களில் இது மணிபூரகத்தலம். பஞ்சபூதத் தலங்களில் இது தேயு (அக்னி) நெருப்புத் தலம். மலை அடிவாரத்தில் மிகப்பெரிய ஆலயம். அடியார்களை ‘வா! வா!’ என்றழைக்கும் மிகப்பெரிய கோபுரங்கள். கிரிவலத்தால் புகழ்பெற்ற கீர்த்தி நிறைந்தது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியாம் இறைவன் இங்கே கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் ஜோதி வடிவாகக் காட்சியளித்து உலகை உய்விக்கிறார்.

முருகப்பெருமான் அருணகிரியாரை ஆட்கொண்டு திருவடிக்காட்சி நல்கி ‘முத்தைத்தரு...’ என்று அடியெடுத்துக் கொடுத்து திருப்புகழ் பாட வைத்த திருத்தலம் இதுதான். மஹா சிவராத்திரியின் தோற்றுவாய் கொண்டதும், தேவிக்கு ‘இடப்பாகம்’ அளித்ததும் இத்தலச்சிறப்பாகும். இத்தலத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 அன்று திருப்புகழ்த் திருவிழா இனிது நடைபெற்று வருகின்றது.
அண்ணாமலைத் தலத்துக்கான திருப்புகழ்ப் பாடல்கள் 79 கிடைத்துள்ளன. அதில் ஒரு பாடல் இந்தப் பக்கத்தில் உள்ளது.
தவலோ கமெலா முறையோ எனவே
தழல் வேல் கொடுபோய் அசுராரைத்
தலைதூள் படஏழ் கடல்தூள் படமா
தவம் வாழ் வுறவே விடுவோனே
கவர் பூவடிவாள் குறமா துடன்மால்
கடனாம் எனவே அணைமார்பா
கடையேன் மிடிதூள் படநோய் விடவே
கனல் மால் வரைசேர் பெருமாளே


தீராத கடன் சுமையாலும், வறுமையாலும் வாடும் அன்பர்கள், திருவண்ணாமலை சென்று இறை தரிசனம் செய்வதுடன், அனுதினமும் மேற்காணும் பாடலை பாடி, முருகப் பெருமானை உள்ளம் உருக வழிபட்டு வந்தால், வறுமைப்பிணி விலகும்; வீட்டில் செல்வகடாட்சம் செழித்தோங்கும்.


பிணிகள் தீர்க்கும் திருத்தணிகை

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது நம் முன்னோர் கண்ட அனுபவ உண்மை. ‘‘மெய்யுறு நோயை ஒழிக்கப் பரிகாரம் வேணும்” என்று கதிர்காமக் கந்தனிடம் வேண்டுவார் அருணகிரியார். நோயின்றி வாழ்தல் ஒரு கலை. உடம்பு ஓர் ஒப்பற்ற கருவி. ‘‘உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேன்” என்பார் திருமூலர். நோய் என்ற சொல்லுக்கு வியாதி என்று பொதுப் பொருள் இருந்தாலும் துன்பம், வருத்தம், குற்றம், அச்சம், துக்கம் எனப், பல பொருள்கள் உண்டு. இதனைப் பிணி என்றும் கூறுவர்.

இறைவன் மந்திரமும், தந்திரமும், மருந்துமாகி தீரா நோய் தீர்த்தருள் புரிகின்றான்.  வாழ்க்கையில் உடல் நலம் பேணும் வகையிலும், மருத்துவ வகையிலும் அவன் குடியிருக்கும் ஆலயங்களே முன்னிற்கின்றன. திருக்கோயில் திருக்குளங்களில் நீராடி இறைவனை பூசித்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றவர்களைப் பற்றித் தல புராணங்கள் விரிவாகப் பேசுகின்றன.

அருணகிரிநாதர், மனிதனுக்குத் தொல்லைகள் பல தந்து உயிரையே போக்கும் நோய்களைப் பட்டியலிட்டு, இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அவை என்னை வருத்தக் கூடாது என்று தணிகைக் கந்தனிடம் வேண்டுகிறார். மலைத் தலங்களில் முதன்மையான தணிகாசலத்தை உடலால் சென்று வழிபட வேண்டும் என்றும், திருப்புகழை ஓதிக்கொண்டு திருத்தணிகை மலை ஏறிச் சென்று வழிபடுவோர்க்குப் பிறவி என்னும் நோயே ஒழியும் என்றும் அறிவுறுத்துகிறார்.

‘‘இருமல், உரோகம்... என்று தொடங்கும் திருத்தணிகைத் திருப்புகழ் நோயற்ற வாழ்வு வாழ சிறந்த மந்திரம் போன்றது. இதனைத் தினமும் ஆறு முறையாவது ஓத வேண்டும். ஆண்டுக்கு ஒரு நாளாவது தணிகை வேலன் சந்நிதிக்குச் செல்ல வேண்டும். நோய் வந்தால் இத்திருப்புகழை ஆறுமுறை அன்புடன் ஓதி திருநீறு பூசிக்கொண்டால் நோய் நீங்கிவிடும்’ என்பது வள்ளிமலை சுவாமிகளின் வாக்கு. நாமும் தணிகை வேலவனைத் தரிசித்து, அவனருளால் நோயில்லாப் பெருவாழ்வை பெற்று மகிழ்வோம்.
இருமல் உரோகம் முயலகன் வாதம்
எரிகுண நாசி விடமே நீர்
இழிவு விடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே
பெருவயி றீளை எரிகுலை சூலை
பெருவலி வேறும் உள நோய்கள்
பிறவிகள் தோறும் எனை நலியாத
படிஉன தாள்கள் அருள்வாயே


கல்வியும் புகழும் தரும் திருவிடைக்கழி

மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி வாழ்வதுதான் மனிதவாழ்வின் குறிக்கோள் என்று கருவூர் திருப்புகழில் வழிகாட்டுகிறார் அருணகிரியார்.

அவரே, ‘முத்தமிழ் நூல்களின் பொருளை உணர வேண்டும். தவப்பயனை உடைய வாழ்வு பெற வேண்டும். கற்பக விருட்ச தேவலோக வாழ்வு, நல்ல புத்தியுடன் கூடிய அற்புதமான அரச வாழ்வு, உன்னைப் புகழும் திடம், அறிவின் பலம், நாவின் வன்மை ஆகியவற்றையும் தர வேண்டும்’ என்று பெரிய பட்டியலிட்டு வேண்டுகிறார். எங்கே தெரியுமா? திருக்குராவடி என்னும் திருவிடைக்கழி முருகனிடம்.

குராமரம் தலவிருட்சமாக உடைய புண்ணியபூமியில் முருகன் உலவினானாம். இம்மரத்தடியில் முருகன் சிவபூஜை செய்து சூரபத்மனின் மகன் இரண்யாசுரனை வென்றான். காலனை காலால் உதைத்த திருக்கடவூர் தலத்துக்கு அருகில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த அற்புதமான கோயில். இங்கு குராமரத்தடியில் ‘ராகு’ முருகனை பூசித்து அருள் பெற்றான். கருவறையில் கந்தவேளின் பின்புறம் மற்றொரு கருவறையில் பாபநாசப் பெருமான் காட்சியளிப்பது, வேறெங்கும் காண்பதற்கரிய தரிசனம்.இத்திருக்கோயிலில் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், நடராஜர், பிரதோஷ நாயகர், சண்டேசர் ஆகிய அனைத்து வடிவங்களும் சுப்ரமண்ய சொரூபமாக காட்சியளிப்பது அற்புதம். ஒன்பதாம் திருமுறையில் சேந்தனார் இத்தலத்தில் திருவிசைப்பா பாடியுள்ளதும், அவர் தைப்பூச நன்னாளில் முக்தி பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும். தேவசேனைக்கு மட்டும் தனிச் சந்நிதியுள்ள இக்கோயிலில், அவளை மகிழ்விக்கும் பெருமானாக ‘குஞ்சரி ரஞ்சித குமரன்’ எனும் அற்புத வடிவத்தை சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவினர் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
     பயனு மெப்படிப் பலவாழ்வும்
பழைய முத்தியிற் பதமு நட்புறப்
     பரவு கற்பகத்  தருவாழ்வும்
புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
     பொலியும் அற்புதப் பெருவாழ்வும்
புலன கற்றிடப் பலவி தத்தினைப்
     புகழ்ப லத்தினைத்  தரவேணும்


நாமும் திருவிடைக்கழி சென்று அழகன் முருகனைத் தரிசித்து, மேலேயுள்ள திருப்புகழ் பாடலைப் பாடி வழிபட்டு, கல்வி கேள்விகளில் சிறக்கவும், அதன் மூலம் பேரும் புகழும் பெறவும் வரம் வாங்கி வருவோம்.


வீடு வாங்கும் யோகம் அருளும் சிறுவாபுரி

தெய்வச் செந்தமிழ் வெள்ளத்தை சந்தக்கவி அணையால் தேக்கி, சந்ததமும் கந்தவேள் திருவடிகளைத் துதிக்க, இன்பத் திருப்புகழ் அமுதமாக வழங்கிய கருணை வள்ளல் அருணகிரிநாதர் மகிழ்ச்சியுடனும் குளிர்ச்சியுடனும் உயர்ச்சியுடனும் போற்றிய தலம் சிறுவாபுரி. இன்று நமக்குக் கிடைத்துள்ள 1331 திருப்புகழ்ப் பாடல்களில் மகிழ்மீற, மகிழ்கூர, மகிழ்வாக, இன்பமுற மகிழ்கூற என்று நான்குமுறை மகிழ்ச்சியைக் காட்டியுள்ள ஒரே தலப்பாடல் சிறுவாபுரி. அது மட்டுமா ‘தண் தரள மணிமார்பன், தந்தமிழின் மிகுநேயன்; தண் சிறுவை’ என்று குளிர்ச்சி (தண்)யை மூன்றுமுறை பாடியுள்ளதும் இந்த ஒரே பாடலில்தான். எனவேதான் மகிழ்ச்சியும் குளிர்ச்சியும் நிறைந்த சிறுவாபுரி திருப்புகழ் பாடி அத்தலத்தை வழிபட் டால் சொந்த வீட்டில் மகிழ்ச்சியுடன் வாழலாம் என்ற ரகசியத்தை வள்ளி மலை சுவாமிகள் நமக்குக் காட்டியுள் ளார். அடியார்கள் சிந்தையில் குடியேறி அவர்கள் விருப்பம்போல் சொந்த வீட்டிலும் குடியேற வழிசெய்வான் என்று அறுதியிட்டுக் கூறுகிறார் அருணை முனிவர். குபேர பட்டணம் போல வளம் நிறைந்த சிறுவையில், வேண்டிய வரத்தை மிகுதியாக அளிக்கும் பெருமானாகத் திகழ்கிறார் முருகன்.

இத்தலத்தை மக்களிடையே 1981-ம் ஆண்டு முதல் அறிமுகப் படுத்திய சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவினர் பிரதிஷ்டை செய்துள்ள ‘வள்ளி மணவாளப் பெருமாள்’ என்னும் கல்யாண முருகன் வடிவம் உலகில் வேறு எங்கும் இல்லை. அருணகிரியார் இத்தலத்தில் தாம் கண்ட அருட்காட்சியின் பதிவாக சிறுவாபுரி தலத்தில் பாடியுள்ள ‘அண்டர் பதிகுடியேற...’ என்று தொடங்கும் தலப் பாடலை நூறுமுறை ஒரே நாளில் பாராயணம் செய்த அன்பர் ஒருவருக்கு, மறுநாளே (புதுடெல்லியில்) வீடு கிடைத்ததாம்!  சென்னை - கும்மிடிப்பூண்டி வழியில், சென்னையில் இருந்து சுமார் 40 கி.மீ.

தொலைவில் உள்ள சிறுவாபுரிக்கு (சின்னம்பேடு), ஒருமுறை சென்று வாருங்கள்; விரைவிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
     அண்டர்மன மகிழ்மீற அருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
     ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
மண்டலமு முநிவோரும்  எண்டிசையில்
                         உளபேரும்
     மஞ்சினனும்  அயனாரும் எதிர்காண
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற
     மைந்துமயில் உடனாடி வரவேணும்


சகலமும் அருளும் மதுரை!

தமது திருவடித் தாமரைகளை தினமும் துதித்து வழிபட சந்தத் தமிழை அருணகிரிநாதருக்கு அளித்தார் முருகப்பெருமான். 

செந்தமிழ் சொல் நாலு கவிதைக்காரன், செந்தமிழ் சொல் பாவின் மாலைக்காரன், தண்தமிழின் மிகுநேயன், தமிழ்க்கினிய குருகுமரன், தமிழ்கொடு ஏத்தினார்க்கெளிய பெருமாள்; தெள்ளுதமிழ்ப் பாடல் தெளிவோன்; முத்தமிழை ஆயும் வரிசைக்காரன் என்றெல்லாம் தமிழில் பாடிய பாமாலையை அணிந்து இன்புறும் முருகப் பெருமானை தானும் தலங்கள்தோறும் சென்று பாடினார். அந்த தலங்களில் குறிப்பிடத்தக்கது மதுரை.

தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த பெருமையுடையது திரு ஆலவாய் என்னும் மதுரையம்பதி. கடம்பவனம், நான்மாடக்கூடல், பூலோக கயிலாயம் என்னும் பல பெயர்களை உடையது.
மீனாட்சியம்மையுடன் சோமசுந்தரக் கடவுள் அருள்பாலிக்கும் இத்தலத்தில் கூடல் குமரனாக அடியார்க்கு வேண்டும் வரங்களை அருளக் காத்திருக்கிறார் முருகப்பெருமான்.  இவருடைய திருவடியைப் போற்றி மகிழ்கிறார் அருணகிரிநாதர். அத்துடன், இவரை வளமான செந்தமிழால் புகழ்ந்துபாடிட, அதனைக்  கேட்கும் அன்பர்களின் அகம் மகிழும்படியான வரங்களைத் தந்தருள்வாய் என்றும் வேண்டிக் கொள்கிறார் அருணகிரியார்.

மதுரையைப் போலவே நாகப் பட்டினத்தில் அருளும் கந்தனைப் போற்றும் பாடலிலும் அவனது செவ்விய திருவடியைப் போற்றி மகிழ்கிறார். ‘‘இறைவனே! நீ எதைக் கொடுக்க வேண்டுமென்று எண்ணுகின்றாயோ அதைக் கொடுத்தருள்க. உனது திருவடியே எனக்கு உற்ற உறவாகும். அப்படி ஒப்பற்றதும் அழியாததுமான வரத்தைத் தந்தருள்க’’ என்று நாகையம்பதி கந்தப்பெருமானிடம் வேண்டுகிறார். நாமும் இந்த இரு தலங்களுக்கும் சென்று, கந்தனின் திருவடியைப் பணிந்தால் சகல சந்தோஷங்களும் கிடைக்கும். 
‘பரவு நெடுங்கதிர் உலகில் விரும்பிய    
பவனி வரும்படி அதனாலே
பகர வளங்களும் நிகர விளங்கிய
இருளை விடிந்தது நிலவாலே
வரையினில் எங்கணும் உலவி    
        நிறைந்தது
வரிசை தரும்பதம் அதுபாடி
வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரும்
மகிழ வரங்களும் அருள்வாயே


இடையூறுகள் நீங்க குன்றுதோறாடல்

அடியார்களின் இடைஞ்சல்களை - இடையூறுகளை - துன்பங்களை நீக்கி அருள்புரிபவன் அறுமுகப்பரமன். அவரை ‘அறிவால் அறிந்துன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே’ என்று அற்புதமாக அருணகிரியார் போற்றுவார்.

இறைவழிபாட்டுடன் எந்தக் காரியத்தை செய்யத் தொடங்கினாலும் இடையூறுகள் ஏற்படாது என்பது அனுபவ உண்மை. இதன் அடிப்படையில் ‘கந்தவேளை எந்த வேளையும் இதயத்தில் தியானித்து வழிபாடு செய்பவர்களது இடையூறுகள் சூரியனைக் கண்ட பனிபோல் மறையும்’ என்று குன்றுதோறாடல் குறித்த திருப்புகழில் வழிகாட்டுகிறார் அருணகிரியார்.

‘குன்றுதோறாடல்’ என்பது பல மலைகளுக்கும் பொதுவாக வழங்கும் சொல். முருகக் கடவுள் மலைக் கடவுள் ஆதலின் ‘மலைகிழவோன்’ ‘கிரிராஜன்’ ‘குறிஞ்சி வேந்தன்’ ‘சேயோன்’ என்றெல்லாம் அழைக்கப்பெறுபவன். பலமலையுடைய பெருமான், மலை யாவையும் மேவிய பெருமான் என்றெல் லாம் போற்றுவார் அருணை முனி.

‘‘உன்னையே தஞ்சம் என்று சரண் புகுவேன்; என்னுடைய உள்ளத்தில் நீ வீற்றிருந்து அருள்கூர்ந்து எனக்கு நேரும் இடையூறுகளும், துன்பங்களும், கலக்கங்களும் அஞ்சி என்னை விட்டு அகல அருள்புரிவாயாக’’ என்று பல குன்றிலும் அமர்ந்த பெருமானைப் பாடி வேண்டுகிறார் அவர்.

அடியார்கள் அவரவருக்கு விருப்பமான மலைத்தலங்களுக்குச் சென்று, அங்கே கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டு, இங்கே கொடுக்கப் பட்டுள்ள குன்றுதோறாடல் குறித்த திருப்புகழ் பாடலைப் பாடி வழிபட்டு வரம் பெறலாம்.

எந்தவொரு நற்காரியத்தைத் துவங்குவதாக இருந்தாலும், இந்தப் பாடலைப்பாடி கந்தனை தியானித்து வழிபட்டுவிட்டுத் துவங்கினால், இடையூறுகள் - தடைகள் யாவும் நீங்கி அந்த நற்காரியம் இனிதே நடந்தேறும்.  அதனால் உண்டாகும் பலன்களும் கந்தன் திருவருளால் இரட்டிப்பாகும்.

அதிரும் கழல் பணிந்துன் அடியேனும்
அபயம் புகுவ தென்று நிலைகாண
இதயம்தனில் இருந்து கருபையாகி
இடர்சங் கைகள் கலங்க அருள்வாயே
எதிர்அங் கொருவர் இன்றி நடமாடும்
இறைவன் தனது பங்கில் உமைபாலா
பதிஎங்கிலும் இருந்து விளையாடிப்
பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே.


உயர்பதவி யோகம் தரும் ஆண்டார்குப்பம்

ஞானப் பழம் வேண்டி வேழ முகத்தானுடன் போட்டியிட்ட பாலன்... சூரனை வதம் செய்த இளைஞன்... வள்ளிக் குறத்தியை மணமுடிக்க, அவளோடு சதிராடிய கிழவன்... இப்படி, மூன்று (பருவ) கோலத்துடனும் முருகன் தரிசனம் தரும் தலம்- ஆண்டார்குப்பம்!

சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச்சாலை வழியாக பொன்னேரி செல்லும் வழியில் அமைந் துள்ளது. முருகனாகிய ஆண்டவன் அருளும் தலம் என்பதாலும், ஆதியில் ஆண்டிகள் நிறைந்த- அவர்கள் வழிபட்ட தலமாதலாலும் ஆண்டவர் குப்பம் என்றும், அந்தப் பெயரே மருவி ஆண்டார்குப்பம் என்றும் வழங்கப்படும் ஊர் இது. பிரணவத்துக்குப் பொருள் உரைக்கும்படி, பிரம்ம தேவனைக் கேள்வி கேட்கும் அதிகாரத் தோரணை யுடன் இடுப்பில் கரம் வைத்து இங்கே காட்சி தருகிறார் முருகப் பெருமான். சம்வர்த்தனர் என்ற அடியவரின் பொருட்டு முருகன் கோயில்கொண்ட தலம் இது.

பிரம்ம தேவனைச் சிறையிலிட்டு அவருடைய அதிகாரத்தைக் கையிலெடுத்த ஆண்டார்குப்பம் முருகன், தம் அடியவர்களுக்கும் அதிகாரம் நிறைந்த பதவிகளை வழங்குவதாக நம்பிக்கை. ‘... தெற்காகு மிப்பாரில் கீர்த்திக் கிசைந்த தச்சூர்  வடக்காகு மார்க்கத் தமர்ந்த பெருமாளே’- என்று அருணகிரியாரும், ‘யாக்கையே பனிப்பென்று...’ எனத் துவங்கி பாம்பன் சுவாமிகளும், ‘திகழாண்டார்குப்பம் திருநகரில் மேவும் தகவுடைய கந்தன் சரணம்’- என்று வாரியாரும், போற்றிப் பாடிய இந்தத் தலத்துக்கு தொடர்ந்து மூன்று வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் வந்து, நெய் தீபம் ஏற்றி முருகனை வழிபட, பதவி உயர்வும், புத்திர பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பரணி நட்சத்திர நாளன்று கோயிலுக்கு வந்து, அன்றிரவு அபிஷேக- ஆராதனைகளை தரிசித்து, அங்கேயே தங்கி, மறுநாள் கிருத்திகை வழிபாடுகளையும் தரிசிக்க... சிக்கலான வாழ்க்கைப் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும்.
தச்சா மயில் சேவலாக்கிப் பிளந்த
சித்தா குறப்பாவை தாட்குள் படிந்து
சக்காகி அப்பேடையாட்குப் புகுந்து
        மணமாகித்
தப்பாமல் இப் பூர்வ மேற்குத் தரங்கள்
தெற்காகும் இப்பாரில் கீர்த்திக்கிசைந்த
தச்சூர் வடக்காகு மார்க்கத்தமர்ந்த பெருமாளே.


இன்னும் சில திருத்தலங்கள்...

சென்னை-பெங்களூர் சாலையில், பாலாற்றின் தென்கரையில் உள்ள புதுவசூர் என்னும் கிராமத்தில் மலைமீது அமைந்திருக்கிறது தீர்த்தகிரி வடிவேல் ஆலயம். இந்தத் தலத்தில்தான் முருகப்பெருமான் ஔவையிடம், ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று சொல்லாடல் நிகழ்த்தியதாகச் சொல்கிறார்கள். அதற்குச் சாட்சியாக மூலவர் சந்நிதிக்கு எதிரில் பெரிய நாவல் மரம் உள்ளது. 500 வருடப் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில், கோடையிலும் வற்றாத நீர் ஊற்று ஒன்றும், புனிதக் கிணறு ஒன்றும் உள்ளது. இவற்றின் தீர்த்தம் சகல பிணிகளையும் போக்கும் சக்தி கொண்டது.

ஈரோட்டில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது சென்னிமலை. இங்கே மலைக்குமேல் குடியிருக்கும் முருகனைத் தரிசிக்க படிக்கட்டுப் பாதையும், சாலை வசதியும் உண்டு. மிக அற்புத சக்திகள் நிறைந்த கந்தசஷ்டி கவசம் அரங்கேறியது இங்குதான் என்பர். மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கும் மாமாங்க தீர்த்தமும் இந்தத் தலத்தின் சிறப்பம்சம். சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை, மாசிமகம், பங்குனி உத்திரம்... என திருவிழாக்கள் காணும் சென்னிமலை ஆண்டவனை வழிபட, பொன்னும் பொருளும் செழிக்கும்!

திருமண தோஷம் மற்றும் தடைகள் உள்ளவர்கள், முதல் நாள் இரவே இங்கு வந்து தங்கி, மறுநாள் சக்தி தீர்த்தத்தில் நீராடி, சுப்ரமணிய ஸ்வாமிக்கு ‘கல்யாண உற்சவம்’ நடத்தி வழிபட்டால், திருமணம் நடந்தேறும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

திண்டிவனம் அச்சிறுப்பாக்கத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள மலையின்மீது அமைந்துள்ளது நடுபழநி முருகன் கோயில். கண்டிகை என்ற ஊரைச் சேர்ந்த முத்துசுவாமி என்ற பக்தருக்குக் கனவில் முருகன் தோன்றி கட்டளை இட்டதால், அவர் காவடி சுமந்து ஊர் ஊராகச் சென்று திருப்புகழ் பாடி, நிதி திரட்டிக் கட்டிய கோயில் இது. இங்கு வருகை புரிந்த காஞ்சி மஹாஸ்வாமிகள், இந்தத் தலத்தை ‘நடுபழநி’ என்று அழைத்துச் சிறப்பித்துள்ளார். இங்குள்ள முருகப்பெருமானை தரிசித்தால் நாகதோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

Comments