ஸ்ரீராமாநுஜர் 1000

ஸ்ரீராமாநுஜரின் 1000-மாவது ஆண்டு தொடங்கி உள்ள இந்த நேரத்தில், நாடெங்கிலும் ஸ்ரீராமாநுஜ ஜயந்தி ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. நாமும்  கொண்டாடு வோம் உடையவரை.  ஸ்ரீராமாநுஜரின் மகிமையைச் சொல்லும் சில திருத்தலங்கள் உங்களுக்காக...

திருவல்லிக்கேணி

ஆசூரி கேசவசோமயாஜி-காந்திமதி தம்பதியினர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, தங்களுக்குப் புத்திர பாக்கியம் வேண்டியபோது, பார்த்தசாரதி பெருமாள் இளையாழ்வாரின் அம்சமாக ஒரு புத்திரனை அருள்வதாக வரம் தந்த தலம் இது. பிற்காலத்தில் ஸ்ரீராமாநுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது, அவருடைய அவதார ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூரில் அவருடைய விக்கிரஹத்தை பிரதிஷ்டை செய்தனர். ஸ்ரீராமாநுஜர் மனம் உவந்து ஏற்றுக்கொண்டதால், இங்குள்ள ஸ்ரீராமாநுஜரின் திருமேனி `தானுகந்த திருமேனி' ஆகும்.

திருவரங்கம்

ஸ்ரீரங்கம் கோயிலை நிர்வகித்து வந்த ஆளவந்தார், தம்முடைய இறுதிக் காலம் நெருங்கிவிட்டபடியால், காஞ்சிபுரத்தில் இருந்த ஸ்ரீராமாநுஜரை வரவழைத்து, அவரிடம் கோயில் நிர்வாகத்தை ஒப்படைக்க விரும்பினார். ஆனால், ஸ்ரீராமாநுஜர் வருவதற்குள் ஆளவந்தார் பரமபதம் எய்திவிட்டார். அவருடைய விருப்பத்தின்படியே ஸ்ரீராமாநுஜர் ஸ்ரீரங்கநாதர் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இங்குள்ள ஸ்ரீராமாநுஜரின் திருமேனி `தானேயான திருமேனி' ஆகும்.

திருப்பதி

திருப்பதி திருமலைக்கு செல்லும் பாதை மிகவும் பாழ்பட்டு இருப்பதை அறிந்த ஸ்ரீராமாநுஜர், பாதையை சீர்படுத்தி நித்திய மலர் கைங்கர்யம் செய்ய விரும்பினார். அவருடைய விருப்பத்தை அனந்தாழ்வான் நிறைவேற்றினார். பின்னர் ஸ்ரீராமாநுஜர் திருமலைக்குச் சென்றபோது, புனிதமான மலையில் தம் கால் படக்கூடாது என்பதற்காக முழங்காலால் தவழ்ந்தே சென்றார். இங்கே உள்ள ஸ்ரீராமாநுஜரின் திருமேனியை தன்னுடைய குருவாக - உபதேசக் கோலத்தில் பிரதிஷ்டை செய்தார், அனந்தாழ்வான்.

மேல்கோட்டை

ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது சோழ மன்னனால் ஸ்ரீராமாநுஜருக்கு உயிராபத்து ஏற்பட இருந்த நிலையில், கூரத்தாழ்வான் அவரை அங்கிருந்து சென்றுவிடுமாறு வற்புறுத்தவே , ஸ்ரீராமாநுஜர் கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டைக்குப் புறப்பட்டார். மேல்கோட்டையில் ஓர் இடத்தில் பூமிக்கு அடியில் பெருமாளின் மூலவரைக் கண்டெடுத்தார். உற்ஸவர் விக்கிரஹம் டில்லி பாதுஷாவின் அரண்மனையில் இருப்பதாக அறிந்து, அங்கே சென்று கேட்டார். டில்லி பாதுஷா உற்ஸவரை அழைக்கும்படியும் வந்தால் எடுத்துச் செல்லும்படியும் கூறவே, ஸ்ரீராமாநுஜர், ‘வாரும் என் செல்லப் பிள்ளாய்’ என்று அழைத் தார். உடனே அரண்மனை அந்தப்புரத்தில் இருந்த விக்கிரஹம் ஸ்ரீராமாநுஜரிடம் வந்து சேர்ந்தது. மேல்கோட்டையில் இருந்து அவர் புறப்பட்டபோது, அங்கிருந்தவர்கள் துடித்தனர். பிறகு, தனது விக்கிரகம் ஒன்றை வார்ப்பித்து, அதில் தனது சக்தியினைச் செலுத்தி, பிரதிஷ்டை செய்து, அதற்கு ‘தமர் உகந்த திருமேனி' எனத் திருநாமமிட்டு, அனைவரையும் ஆசீர்வதித்தார்.

திருக்குறுங்குடி

ஸ்ரீராமாநுஜர் வடுகநம்பியுடன் அன்றைய சேர தேசத்தில் இருந்த திருவனந்தபுரம் கோயிலுக்குச் சென்றார். எங்கே அவர் தங்கள் வழிபாட்டு முறைகளை மாற்றிவிடுவாரோ என்று அங்கிருந்த வர்கள் அஞ்சியதுடன், ஸ்ரீராமாநுஜருக்கு ஆபத்து விளைவிக்க நினைத்தனர். அப்போது இரவோடு இரவாக கருடாழ்வார் ஸ்ரீராமாநுஜரை மட்டும் கொண்டுவந்து திருக்குறுங்குடியில் விட்டுவிட்டார்.

விடிந்ததும் கண் விழித்த ஸ்ரீராமாநுஜர், தம்முடைய சீடன் வடுகநம்பியை அழைத்தார். அப்போது திருக்குறுங்குடி பெருமாளே வடுக நம்பி யாக வந்தார். வந்தவர் ஸ்ரீராமாநுஜரிடம் உபதேசம் கேட்டபோது, வந்திருப்பது பெருமாளே என்று உணர்ந்துகொண்டார். மேலும், ‘சீடரின் நிலையில் இருந்து கேட்டால் உபதேசிக்கப்படும்' என்றும் கூறினாராம் ஸ்ரீராமாநுஜர். பெருமாளும் சீடரின் நிலையில் இருந்து உபதேசம் பெற்றதாக ஐதிகம். இங்குள்ள ஸ்ரீராமாநுஜரின் திருமேனியும் திருப்பதியைப் போலவே உபதேசக் கோலத்தில் அமைந்திருக்கிறது

Comments