அவசியமாகும் ஆலயங்கள்!

நமது பாரதப் புண்ணிய பூமியில் கோயில் இல்லாத ஒரு கிராமம்கூட கிடையாது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் இருக்கிறது. எப்போது முதல் இந்த நடைமுறை நம்மிடம் வந்திருக்கிறது? ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் தேவையா? கோயிலே இல்லாத கிராமம் ஒன்று இருந்தால் அதற்கு என்ன நேரும்?’’ என்றார் தமது சொற்பொழிவில்சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமிகள்.
அமைதியோடும், ஒற்றுமையோடும் வசிக்க வேண்டும் என்ற இயற்கையான விருப்பம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறது. இறைவன் அருள் இல்லாமல் அமைதி, சந்தோஷத்துடன் வாழ்வதற்கு வாய்ப்பில்லை. இறைவனின் அருளைப் பெறுவதற்கு கோயில்கள் இருப்பது அவசியம். இறைவனிடத்தில் மனம்லயிக்க உதவுவது ஆலயங்கள்.
உண்மையாகச் சொல்லப்போனால், சநாதன தர்மத்தின் விதிகளின்படி, இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறார். இறைவன் இல்லாத இடமேயில்லை என்றே சொல்லலாம். அப்படியிருக்க, கோயில்களுக்கு என்ன அவசியம் என்ற கேள்வி எழலாம். இம்மாதிரியான சந்தேகங்களை எழுப்புபவர்கள் இறைவனின் தத்துவத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வில்லை என்று அர்த்தம்.
அதற்காக அவர்களை அறிவற்றவர்கள் என்று கூற முடியாது. கடவுள் தத்துவத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாத காரணத்தால் இந்தக் கேள்வியை அவர்கள் எழுப்புகிறார்கள். எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அவன் எங்கும் இருக்கிறான் என்பதை உணர்ந்துகொள்ளக் கொடுத்து வைக்கவில்லை என்பதுதான் இந்தக் கேள்விக்கானபதில்.
இறைவனைத் தேடுவோருக்கு ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டவே கடவுள் இருக்கும் இடமாக
கோயிலை நாம் காட்டுகிறோம். பிரஹலாதன் போன்ற நல்லவர்களுக்கு இந்த யோக்யதை இருந்தது. ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து, பிரஹலாதனைப்போல் பெரிய பக்தனால் இறைவனை எங்கும் காண முடிந்தது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.
ஒருவனுடைய ஸம்ஸ்காரங்களும் யோக்யதைகளும் பிரஹலாதனுடையவை மாதிரி இருந்து, எங்கும் இறைவன் இருப்பதை உணர முடிந்தால், காண முடிந்தால், கோயில்களில்தான் இறைவனை வழிபட வேண்டும் என்பதில்லை. எந்த இடமும் அவனுக்குக் கோயில்தான். ஆனால், இப்படிப்பட்ட யோக்யதையைப் பெறும்வரை கோயில்களில் இறைவனுக்குப் பணி செய்து பூஜிக்க வேண்டியது அவசியம். ஆகையால், கோயில்கள் அவசியம்.
‘நாம் உதவி கேட்டு எழுப்பும் பிரார்த்தனைகளுக்கு இறைவன் செவி சாய்ப்பாரா?’ என்ற சந்தேகம் யாருக்கும் இருக்க வேண்டியதில்லை. இறைவன் அபாரமான கருணை நிறைந்தவர்.
‘அபாணிபாதோ ஜவஜோ க்ரஹிதா
பஸ்யத் யசசஷு ஸ ஸ்ருணோத்ய கர்ண!
ஸ வேத்தி வேத்யம் நசதஸ்யாஸதி வேத்தா
தாமாஹீரக்யம் புருஷம் மஹாந்தம்’
என்று ஸ்மிருதி சொல்கிறது.
இறைவனுக்கு இலை, மலர், பழம் அல்லது தண்ணீர் மற்றும் எதையும் பக்தியுடன் ஒருவன் சமர்ப்பித்தால் அவர் அதை ஏற்றுக் கொள்வார்.
‘பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்தியா ப்ரயச்சதி’
என்று பகவத்கீதையில் இறைவன் சொல்லியிருக்கிறார்.
கோயில் இல்லையென்றால் என்ன நடக்கும்? அப்போது, நாம் யாருக்கு முன்னர் நமது பிரச்னைகளை வைப்போம்? அவற்றையார் தீர்த்து வைப்பார்கள்? இறைவனால் மட்டுமே அது முடியும். எனவே, இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யவே நம் முன்னோர்கள் ஒவ்வொருகிராமத்திலும் குறைந்தது
ஒரு கோயிலையாவது கட்டி வழி பட்டனர்.

 

Comments