பசுமை செழிக்கச் செய்யும் பச்சையம்மன்!

கிராம தேவதைகளில் பச்சையம்மனுக்கு சிறப்பான இடம் உண்டு. பல இடங்களில் கோயில் கொண்டருளும் பச்சையம்மனுக்கு, சென்னை அண்ணாசாலை பகுதியில், எல்.ஐ.சி-க்கு எதிரில் உள்ள சாலையிலும் பழைமையான ஓர் ஆலயம் உண்டு.

பசுமை செழிக்கச் செய்யும் இந்த அன்னை, ஒருமுறை ஈசனைக் குறித்து தவம் இயற்ற திருவுள்ளம் கொண்டு, பூமியில் ஓர் இடத்தில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட விரும்பினாள். மணல் லிங்கம் சமைக்க தண்ணீர் தேவைப்பட்டதால் விநாயகரையும் முருகனையும் அனுப்பினாள். அவர்கள் நீர் எடுத்து வர தாமதம் ஆகவே, தன்னுடைய கைப்பிரம்பினால் பூமியைத் தட்டி நீர் வரவழைத்து லிங்கம் சமைத்து முடித்தாள். அன்னையின் பூஜை வேளையில் அருகில் இருந்த வனத்தில் இருந்த அரக்கன் ஒருவன் தொல்லை கொடுத்தான். ஈசனும் விஷ்ணுவும் வரமுனி, செம்முனியாக வந்து அரக்கனை வதம் செய்தனர். பின்னர் அன்னை சிவவழிபாட்டை முடித்துக் கொண்டு, கயிலாயம் புறப்பட்டுச் சென்றாள். தான் பூஜை செய்த இடத்தில் தன்னுடைய சாந்நித்தியம் இருக்கவேண்டும் என்று நினைத்த அம்பிகை பூமியில் பல இடங்களில் பச்சையம்மன் என்ற திருப்பெயரில் கோயில் கொண்டாள் என்கிறது அம்மனின் திருக்கதை.
அப்படி அமைந்த இந்தக் கோயிலில், சுதை வடிவிலான பச்சை அம்மனுடன் ஈசன் மன்னார்சுவாமியாக அருள்கிறார். விநாயகர், முருகன், வாழ்முனி ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். மிகப் பழைமையான இந்தக் கோயிலில் சித்திரை மாதம் நடைபெறும் அக்னி நட்சத்திர பூஜை விசேஷமானது. இங்கு வந்து, அம்மனை வழி பட்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வினை தீர்க்கும் நாயகி


தேவர்களுக்கும், தெய்வங்களுக்கும் அன்னையாக விளங்கும் பராசக்திக்கே தான் தாயாக வேண்டும் என்று பேராவல் கொண்டார் இந்திரகீலன் எனும் முனிவர். ஆகவே, கருணை நாயகியை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவர் முன் அன்னை தோன்றினாள்.

“அன்னையே... என் கர்ப்பத்தில் நீ குடிகொள்ள வேண்டும்” என்று வரம் வேண்டினார் முனிவர். அவரது பிரார்த்தனையைக் கேட்டு அன்னை புன்னகைத்தாள்.

“முனிவரே, ஒரு குன்றாக உருவெடுத்து தவத்தை தொடரும் காலம் வரும்போது, உமது வேண்டுதல் பலிக்கும்’’ என்று அருளி மறைந்தாள். அவள் ஆணைப்படி ஸஹ்யாத்ரி மலைத் தொடரில் ஒரு குன்றாக உருவெடுத்து தவத்தைத் தொடர்ந்தார் இந்திரகீலன்.

இது இப்படியிருக்க... ‘ஆண்களால் அழிவு நேரக்கூடாது’ என்று சிவனாரிடம் வரம் வாங்கியிருந்த சும்பன் - நிசும்பன் எனும் அசுரர்களின் அட்டூழியங்களும் பூமியில் அதிகரித்தன. அவர்களை அழித்து பூவுலகைக் காக்கத் திருவுளம் கொண்டாள் பராசக்தி.

அவர்களை அழிக்க தனது அம்சமான கௌசகியை அனுப்பினாள்.

கௌசகி சூரியனைப் போல் ஒளிர்ந்தாள். அவளின் பேரழகு குறித்து சும்ப-நிசும்பருக்கும் சேதி கிடைத்தது. “அழைத்து வாருங்கள் அந்த அற்புத அழகியை” என்று ஆள் அனுப்பினார்கள்.

கௌசகி இந்தத் தருணத்துக்காகத்தானே காத்திருந்தாள்?
“உங்கள் சும்ப, நிசும்பனிடம் போய்ச் சொல்லுங்கள். இந்தக் கௌசகியைப் பிரியமான வார்த்தைகள் சொல்லி அழைத்துப் போக முடியாது. போர் செய்து வெற்றி கொண்டு அழைத்துச் செல்லட்டும். அதன்பின் அவர்களுக்கு நான் அடிமையாக இருப்பேன்” என்று வந்த தூதர்களிடம் சேதி சொல்லியனுப்பினாள்.

செய்தியைக் கேட்ட சும்பனும், நிசும்பனும் வெகுண்டார்கள். தங்களின் படைத்தலைவர்களையும், அமைச்சர் களையும் அழைத்தார்கள். கௌசகியை பிடித்துவரும்படி உத்தரவிட்டார்கள்.
அதை ஏற்றுச் சென்று தேவியுடன் போரிட்ட தூம்ரலோசன், ரத்த பீஜன் மற்றும் சண்டன், மண்டன் ஆகிய அசுரர்கள் யாவரும் வீழ்ந்தார்கள். அதையறிந்த சும்பனும், நிசும்பனும் கொதித்து எழுந்தனர்; போருக்குக் கிளம்பினர்.

ஆனால்... வெகுண்டு எழுந்த யானைக்கு எதிரில் சிறகு இழந்த இரண்டு ஈக்களைப் போல அவர்கள் நசுக்கப்பட்டார்கள். அம்பிகையால் அழிக்கப்பட்டார்கள். எட்டுத் திக்கிலும் வெற்றி முரசும் ஒலித்தது. நகரமே விழாக்கோலம் பூண்டது. அநியாயத்துக்கும், ஆணவத்துக்கும் அழிவு ஏற்பட்டதை நல்லவர்களும், முனிவர்களும் ஆரவாரமாகக் கொண்டாடினார்கள்.

அசுரர்களை அடியோடு அழித்தபோது ரௌத்திரம் கொண்ட அன்னை, இந்திரகீலனுக்குக் கொடுத்த வாக்கை மறக்கவில்லை. மலை உருக்கொண்டு மனம் தளராமல் தவம் செய்யும் இந்திரகீலனின் கருவில் உதிக்க இதுவே தருணம் என்று முடிவு செய்தாள். அவள் கடைக்கண் பட்டதும் அங்கே கனகதாரை அதாவது தங்க மழை பொழிந்தது. குன்றம் ஈன்ற கருவாய் கருணைநாயகி அங்கே உதித்தாள். இந்திரகீலாத்ரி மலையில் அன்னை சுயம்புவாக எழுந்தருளினாள். கனகமழை பொழிந்து, அசுரர்களை அழித்த கோலத்தில் துர்கையாக அங்கு உதித்த அம்மன், ‘கனக துர்கா’ என்ற நாமத்தால் அழைக்கப்பட்டாள்.
அன்னை வெற்றி பெற்ற இடம் என்பதால், விஜயபுரி என்று அழைக்கப்பட்டது. பின்னர் அதுவே சுந்தரத் தெலுங்கில் ‘விஜய வாடா’ என்ற பெயரில் விளங்கத் தொடங்கியது.

‘கிருஷ்ணா’ என அன்புடன் விளிக்கப்படும் கிருஷ்ணவேணி நதி, இந்தக் குன்றுகளின் பாதங்களைத் தொட்டுத் தழுவி, சிங்காரச் சிலிர்ப்புடன் சிணுங்கிச் செல்கிறது. குன்றத்தில் குடி கொண்டிருக்கும் கனகதுர்காவைத் தரிசிக்கும் முன் இந்தப் புனித நதியில் நீராடித் தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்கின்றனர், பக்தர்கள்.

சூரிய ஒளியில் பசுமையும், பாறையுமாகத் தகதகக்கும் இந்திர கீலார்த்ரி குன்றங்களின் நடுவில், ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அமர்ந்து ஆட்சிபுரிகிறாள், அன்னை கனகதுர்கா.அகத்தியர், பரசுராமர், பரத்வாஜர், பாண்டவர்கள், கிருஷ்ணர், ஆதிசங்கரர் என்று பற்பல புனிதர்கள் வந்து தொழுத தலம் இது.கோயில் நோக்கிச் செல்லும் படிகளில் மஞ்சள் தீற்றி, குங்குமம் இட்டுப் பெண்கள் தங்களின் கோரிக்கைகளை அன்னையின் முன் சமர்ப்பிக்கிறார்கள். இன்றைக்கும் ஆந்திர தேசம் முழுக்க பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ‘கனகதுர்கா’ என்ற பெயர் சூட்டப்படுவது வழக்கம்.

அகில உலகுக்கும் தங்கமழை பொழிந்த கனகதுர்காவின் விமானத்தில் தங்கக் கலசம் ஒளி வீசுகிறது. கோயிலுக்குள் நுழைந்து கருவறையில் அன்னையைத் தரிசிக்கிறோம். அம்பிகை சுயம்பு வடிவம். தீயவர்களை அழித்து விட்டு வந்ததால் அவளின் எட்டுத் திருக்கரங்களிலும் அரிவாள், கேடயம், அங்குசம் முதலான ஆயுதங்கள். யாவற்றிலும் பிரதானமாகப் பாதம் வரை நீண்டிருக்கும் சூலம்.
அசுர வதம் முடித்து வந்த போதிலும் அன்னையின் முகத்தில் ரௌத்ரம் இல்லை. மஞ்சள் பொலியும் முகத்தில் கருணையும், சாந்தமும்! பட்டாடைகள் உடுத்தி வர்ணம் கொஞ்சும் மலர்களால் அலங்கரித்துப் பார்க்கும்போது அன்னையை விட்டுக் கண்கள் அகலாது. கனகதுர்காவே மிகச் சக்தி வாய்ந்த அன்னை. தவிர, கோயிலின் நான்கு புறங்களிலும் ஆதிசங்கரர் நிறுவியுள்ள சக்தி வாய்ந்த சக்கரங்கள் கோயிலின் சக்தியை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த சக்கரங்களுக்கு கட்டளை பூஜை நடக்கிறது.

எத்தனை வயதுக் குழந்தையாக இருந்தால் என்ன, அம்மாவின் மடிக்கு இணை உண்டா? ஆலய பிராகாரத்தில் படுத்திருந்தால், அன்னை சக்தியின் மடியில் படுத்தது போல் அவள் அன்பும் பாசமும் நேரடியாகக் கிடைக்கும் என்பது இந்தத் தலத்தில் ஒரு மாறா நம்பிக்கை. குடும்பத்தோடு வந்து கோயிலில் இரவு படுத்திருந்து, காலையில் துயில் எழுந்து, கிருஷ்ணாவில் நீராடி, அன்னையை தரிசித்துப் பரவசம் கொள்ளும் பக்தர்கள் பலர்.
ஐயப்ப சாமிக்கு விரதம் இருந்து மாலை போட்டுக் கொள்வது போல், கனகதுர்காவுக்கு விரதமிருந்து மாலை போட்டுக் கொள்ளும் வழக்கம் இங்கே இருக்கிறது. அன்னையைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தால், அடுத்த குன்றத்தில் இருக்கும் மல்லேஸ்வர சுவாமியின் சந்நிதிக்கு அழைத்துச் செல்கிறது ஒரு பாதை.

மல்லேஸ்வர சுவாமி இங்கே லிங்க ரூபத்தில் எழுந்தருளி இருக் கிறார். சதா சர்வ காலமும் அவரைக் குளிர்வித்துக் கொண்டி ருக்க, சொட்டுச் சொட்டாக அபிஷேகம் செய்யும் தீர்த்த பாத்திரம் லிங்கத்துக்கு நேர் மேலே அமைக்கப்பட்டுள்ளது.

பிள்ளையார், வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர், நடராஜர், சிவகாமி, நவகிரஹம் என்று விருப்பமான கடவுள்கள் அத்தனை பேருக்கும் இந்தக் கோயிலில் சந்நிதிகள் உள்ளன. இந்த மலைக்கோயிலைச் சுற்றி வரும்போது கீழே அன்னையின் ஆட்சியின் கீழ் அமைந்த நகரமும், பரபரப்பாக ஓடும் கிருஷ்ணா நதியும் கண்களுக்கு விருந்து.
நவராத்திரி நாட்களில் கோயில் விழாக்கோலம் பூண்டு பூலோக சொர்க்கம் போல் காட்சி தரும். இந்த நாட்களில் அன்னையைத் தரிசிப்பது வெகு விசேஷம். நீங்களும் வாழ்வில் ஒருமுறையேனும் அன்னை கனகதுர்காவைத் தரிசித்து வாருங்கள்; அதன் பிறகு  உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் வெற்றியுமே தொடர்வதை அனுபவபூர்வமாக உணர்வீர்கள்.

திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர் : விஜயவாடா

அன்னையின் திருநாமம்  : கனகதுர்கா

எங்கே உள்ளது? : ஆந்திர மாநிலத்தில்

எப்படிப் போவது? : சென்னையில் இருந்து விஜயவாடாவுக்கு ரயில், பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம். 
                 
எங்கே தங்குவது? : விஜயவாடாவில் நிறைய தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன.

தரிசன நேரம்: காலை 6 முதல் பகல் 12 மணி வரை; மாலை 4 முதல் இரவு 9 மணி வரை.



Comments