ராம நாம மகிமை

ராம நாமம் அம்ருதம்; ராமாயணம் அம்ருதம்; ராமரே அம்ருதம். அதனால்தான், ‘ராமாம்ருதம்’ என்று பெயர் வைக்கிறார்கள். குடும்ப பந்தத்தில் உள்ளவர்கள் ராம நாமத்தைச் சொல்லி வந்தாலே பிறவிப் பெருங்கடலைக் கடந்து விடுவர்.
நாத பிரம்மம் ஸ்ரீதியாகராஜர் ராம நாமத்தை தினமும் உச்சரித்ததின் பலனாக ஸ்ரீராமரை தம் கண் எதிரே கண்டார். அவரது கீர்த்தனைகள் சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்று அனைவராலும் பாடப்படுகின்றன.
சத்குரு கூறுகிறார், ஸ்ரீராமரின் கருணை பெற்றவன் பொய் சொல்ல மாட்டான். அற்பர்களிடம் ஒன்றையும் வேண்டமாட்டான். அரசர்களிடமே பணி செய்யமாட்டான். கதிரவனை வழிபட மறவான். புலால், மதுவை கைக்கொள்ள மாட்டான். பிறருக்கு துன்பம் விளைவிக்க மாட்டான். கற்ற கல்வியை மறக்க மாட்டான். நம்பிக்கை துரோகம் செய்யமாட்டான். ஜீவன்முக்தனானாலும் மகிழ்ச்சியை வெளியே காட்டிக் கொள்ள மாட்டான். சஞ்சல சித்தனாய், தன் ஆத்ம சுகத்தை இழக்க மாட்டான். இத்தனை தீவினைகளிலிருந்தும் காப்பாற்றும் உன் நாம மகிமையை நான் என்னவென்று சொல்வேன்" என்கிறார்.
ஓர் ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். இதில் அண்ணனுக்கு கடவுள் பக்தி உண்டு. துறவியர், ஞானியர்க்கு உணவு தந்து உபசரித்து வந்தான். தம்பியோ, கடவுள் பக்தி அற்றவன். அவன் துறவிகளெல்லோரும் வேடதாரிகள் என்ற எண்ணம் கொண்டு அவர்களை வெறுத்தான்.
ஒரு முறை துறவி ஒருவர் சீடர்களுடன் இவர்கள் வீட்டுக்கு வருகிறார். அண்ணன் அவர்களை வரவேற்று உபசரிக்கிறான். தம்பியோ, ஓர் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொள்கிறான். துறவி, கதவைத் தட்டி அவனை வெளியே வரவழைக்கிறார்.
கோபமாக வெளியே வந்தவனின் கையை துறவி பலம் கொண்ட மட்டும் பிடித்துக் கொள்ள அவன் வலி பொறுக்காமல் கத்துகிறான். துறவி அவனிடம், ஒருமுறை மட்டும் நீ ராம என்று சொல், கையை விடுகிறேன்" என்கிறார். தம்பியும் வேறு வழியில்லாமல், ராம ராம" என்கிறான். கையை விட்ட துறவி அவனிடம், எந்தக் காலத்திலும் இந்த நாமத்தையார் என்ன விலை கொடுத்தாலும் விற்காதே" என்று கூறிச் செல்கிறார்.
கால ஓட்டத்தில், தம்பி இறந்து விடுகிறான். யம தூதர்கள் அவனை யமதர்மரிடம் அழைத்துச் செல்ல, சித்ரகுப்தன் அவர் கணக்கைப் பார்த்துவிட்டு, இவன் நிறைய பாவம் செய்துள்ளான். எனவே, வெகு காலம் இவன் நரகத்தில் கிடந்து உழல வேண்டும். ஆனால், ஒரே ஒரு தடவை வேறு வழியின்றி ராம நாமத்தைக் கூறியுள்ளான். அதற்கான புண்ணியத்தை அனுபவித்து விட்டு பிறகு இவன் நரகம் செல்லட்டும்" என்கிறார்.
யமதர்மன் அவனிடம், நீ ஒரு தடவை ராம நாமம் சொன்ன தற்கு உனக்கு என்ன வேண்டுமோ கேள்" என்கிறார். அப்போது அவனுக்குத் துறவி சொன்ன, ‘ராம நாமத்தை விற்கக் கூடாது’ என்ற வார்த்தை நினைவுக்கு வருகிறது. அவன், ராம நாமத் துக்கு என்ன மதிப்பு நீங்கள் வைத்து இருக்கிறீர்களோ அதைக் கொடுங்கள்" என்கிறான்.
யம தர்மனுக்கு ராம நாமத்துக்கு என்ன மதிப்பு எனத் தெரியவில்லை. எனவே, இந்திரனிடம் கேட் போம்" என்று கூறி அவனை அழைத்துச் செல்கிறார்.
அதற்கு அவன், நான் பல்லக்கில்தான் வருவேன். அதைத் தூக்குபவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும்" என நிபந்தனை விதிக்கிறான். யம தர்மனும், ‘ராம நாமத்தின் மதிப்பு அதிகம் போலும்’ என நினைத்து, பல்லக்கில் அவனை அமர வைத்து இந்திர லோகம் சுமந்து செல்கிறார்.
ராம நாம மதிப்பை அளவிட இயலாமல், இந்திரனும், பின் பிரம்மனும், சிவபெருமானும் திணறினர். அனைவரும், வைகுண்டம் சென்று, மகா விஷ்ணுவிடம், ராம நாமத்தின் மதிப்பை எங்களால் கூற முடியவில்லை. இந்தப் பல்லக்கில் இருக்கும் ஜீவன் ஒரே ஒருமுறைதான் ‘ராம நாமம்’ சொல்லி இருக்கிறது. அதற்கு என்ன புண்ணியம் தர வேண்டும் எனச் சொல்லுங்கள்" என்றனர்.
அதற்கு விஷ்ணு, இந்த ஜீவனை நீங்கள் பல்லக் கில் வைத்து சுமந்து வந்ததில் இருந்தே ராம நாம மகிமை விளங்கவில்லையா? ஒரு முறை சொன்னதாலே இவன் அரசனாகவும், நீங்கள் சேவகர்களாகவும் ஆகவில்லையா? எனக்கூறி, முக்தி கொடுத்தாராம்.
ஆம்! ராம நாமம் கூறுவதனால் தீய எண்ணங்கள் மறைந்து, நல்ல எண்ணங்கள் தோன்றும். நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே; தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே; சென்மமும், மரணமும் இன்றித் தீருமே; இம்மையே ‘ராம’ என்ற இரண்டெழுத்தினால்

Comments