தாலி பாக்கியம் தருவாள்

சிவகங்கை, இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலத்தில் கன்னித் தெய்வமாய் கோயில் கொண்டிருக்கிறாள், ஸ்ரீமுத்துமாரியம்மன். இத்தெய்வம் கன்னித்தெய்வமாக இருப்பதால் திருமண வரம் வேண்டுவோர், தாலிப்பொட்டினை அம்மன் காலடியில் சமர்ப்பித்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கன்னித் தெய்வமாக இருந்து சுற்றுப்பட்டு 22 கிராம மக்களுக்கும், தாயாகவும், மாங்கல்ய பாக்கியம் எனும் மங்கல வரம் அருளும் நாயகியாகவும் இருந்து அம்மன் அருள்பாலிக்கும் ஊர் என்பதால், ‘தாய்மங்கலம்’ என இவ்வூர் அழைக்கப்பட்டதாம். அதுவே, பின்னர் தாயமங்கலமாக மருவியது என்கிறார்கள்.
பன்னெடுங்காலம் முன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த வணிகர்கள், தங்கள் பகுதியில் விளையும் பொருட்களை விற்பனை செய்வதற்காக, அடிக்கடி மதுரைக்குச் சென்று வருவது வழக்கம். அவர்களில் ஒருவர், மீனாட்சியம்மன் மீது அதீத பக்தி கொண்டவர். அவருக்கு நெடுநாட்களாக குழந்தை இல்லை. ஒவ்வொரு முறையும் மதுரைக்கு வியாபார நிமித்தமாக செல்லும் அவ்வியாபாரி, தவறாமல் மீனாட்சியம்மையையும், சொக்கநாதரையும் வழிபட்டு, தனது உள்ளக்குமுறலைக் கொட்டி தீர்த்துவிட்டு வருவார்.
அப்படி ஒருநாள், மதுரையில் இருந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்தார் வியாபாரி. வழியில், சிறுமி ஒருத்தி பாதை தெரியாமல் அழுதுகொண்டிருந்ததை கண்டார். அந்தச் சிறுமியை விசாரித்தபோது, அவளுடைய பெயர், ‘முத்துமாரி’ என்று தெரிய வந்தது. அன்னை மீனாட்சியே அந்தக் குழந்தையை தனக்கு அளித்திருக்கிறாள் என்று பேருவகைக் கொண்ட வியாபாரி முத்துமாரியை தன்னுடன் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.
வழியில் ஆறு ஒன்று குறுக்கிட்டது. சிறுமியை கரையில் உட்கார வைத்துவிட்டு ஆற்றில் குளிக்க இறங்கினார் வியாபாரி. அங்கு, குளித்துக் கரையேறியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கரையில் இருந்த சிறுமியைக் காணவில்லை. இதனால் மனமுடைந்த வியாபாரி, தன் விதியை நினைத்து வருந்தியவாறு தனியாளாக வீட்டுக்குத் திரும்பினார். நடந்ததை இல்லாளிடம் பகிர்ந்து கொண்டார். அத்துடன், இரவு உணவையும் மறுத்துவிட்டு படுக்கச் சென்றார். அவர் கனவில் அம்மன் தோன்றினாள். வழியில் சிறுமியாக வந்தது தான்தான் என்றும், அப்பகுதியில் உள்ள கள்ளிக்காட்டில் தான் உறைய இருப்பதாகவும், அங்கே கோயில் கட்டி தன்னை வழிபடு பவர்களுக்கு வேண்டும் வரம் அளிப்பேன் என்றும் அருள்புரிந்து மறைந்தாள். விழித்தெழுந்த வியாபாரி மனம் நெகிழ்ந்தார்.

அம்மன் கூறியபடியே, அவளைச் சிறுமியாக கண்ட இடத்தில், ஆற்றுமணலில் சிலை செய்து சிறுகுடிலில் அமர்த்தி வழிபடத் துவங்கினார்; அம்மனின் அருளாட்சி ஆரம்பமானது. காலப்போக்கில் பல தரப்பு மக்களால் திருப்பணிகள் நடைபெற்று ஆலயம் பொலிவு பெற்றது. இன்றைக்கும் இப்பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறாள், முத்துமாரியம்மன்.
கருவறையில், நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் அருள்மாரிப் பொழியும் கற்பக விருட்சமாய் காட்சி தருகிறாள், அன்னை முத்துமாரி. தரிசித்த கணத்திலேயே நம் சஞ்சலங்கள் யாவும் விலகியோடுகிறது, அம்மனின் சந்நிதியில். அவ்வளவு சாந்நித்தியம். அன்னையைத் தவிர, சின்னக்கருப்பர், பெரிய கருப்பர், காளியம்மன் ஆகிய தெய்வங்களையும் தனித் தனிச் சந்நிதிகளில் தரிசிக்க முடிகிறது.

இப்பகுதி மக்களுக்கு எல்லாமே அன்னை முத்துமாரிதான்.  வறண்ட பூமியான சிவகங்கை மாவட்டத்தில், புன்செய் நிலங்களே அதிகம். அதில் அறுவடை செய்யும் தானியங்களை அம்மனுக்கு முதல் காணிக்கை செலுத்துகிறார்கள் விவசாயிகள். அதனால் மகசூல் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும், அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, செவ்வாய்-வெள்ளிக் கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து தீர்த்தம் பெற்று, சென்று கொடுத்தால், விரைவில் நோய் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். அதேப்போல், குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள் அம்மனின் சந்நிதிக்கு வந்து அவளைப் பிரார்த்தித்து, கோயிலில் உள்ள வில்வம் மற்றும் வேப்ப மரங்களில் தொட்டில் கட்டிச் செல்கின்றனர். இப்படி பிரார்த்தனை  செய்துவிட்டுச் செல்லும் பக்தர்கள் வீட்டில், அம்மன் அருளால் விரைவில் தொட்டில் சத்தம் கேட்கும் என்பது ஐதீகம்.
பங்குனி மாதம் விழாக்கோலம் காண்கிறது அன்னையின் ஆலயம். பத்துநாட்கள் கோலாகலமாக நடைபெறும் விழாவில், பிடிமண் வழிபாடு வைபவம் விசேஷமானது. அம்மன் பிடிமண்ணில் இருந்து வந்தவள் என்பதால் அதை நினைவுகூறும் வகையில், விழாவுக்கு முந்தைய நாள் இரவு, கோயிலுக்குள் பிடிமண் எடுத்து அம்மனாக பாவித்து பூஜைகள் செய்து திருவிழாவைத் துவக்குகின்றனர். மேலும், பாற்குடம், தீர்த்தவாரி, பூக்குழி வைபவம் என திருவிழாவின் ஒவ்வொரு நாளும் களைகட்டுகிறது.
இந்த வருடம் பங்குனி 15 (மார்ச்-28)-ல், காப்புக் கட்டப்பட்டு, விழா துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக, பங்குனி 22-ம் நாள் பொங்கல் விழாவும், மறுநாள் தேரோட்டமும் விமரிசையாக நடைபெறவுள்ளது. விழா நடக்கும் அனைத்து நாட்களிலும் மதுரை, பரமக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் இந்தப் பங்குனிப் பெருவிழாவில் கலந்துகொண்டு அன்னை முத்துமாரியைத் தரிசித்து,  அருள்மாரி பெற்று மகிழலாம்!
அம்மன் : அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன்

தலம் இருப்பிடம் : தாயமங்கலம் ,சிவகங்கை மாவட்டம்


எப்படிச்செல்வது: சிவகங்கையிலிருந்து தாயமங்கலம் வழியாக இளையாங்குடிக்கு குறிப்பிட்ட நேர இடைவேளியில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. காளையார்கோயிலில் இருந்து வருபவர்கள் இளையாங்குடி பேருந்தில் ஏறி, தாயமங்கலம் விலக்கில் இறங்கினால், அங்கிருந்து கோயிலுக்குச் செல்ல அடிக்கடி ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. 

நடைதிறந்திருக்கும் நேரம்: திருக்கோயிலின் நடைதினமும் காலை 9.00 மணியிலிருந்து 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணியிலிருந்து 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Comments