தொழுதகை துன்பம் துடைப்பான்’

தொழுதகை துன்பம் துடைப்பான்’ என்றும், ‘அழிவிலா ஆனந்த வாரி’ என்றும், ‘அழிவதும் ஆவதும் கடந்தோன்’ என்றும் மாணிக்கவாசகப் பெருமான் பாடிப் பரவிய ஐயன் சிவபெருமான், ‘பூமியில் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகிறோம் அவமே’ என்று தேவர்களும் ஏங்கித் தவிக்கும்படியாக இந்த பூமியில் காணும் இடமெங்கும் நீக்கமற நிறைந்து கோயில் கொண்டு அருளாட்சி நடத்தி வருகிறார். மகரிஷிகளாலும் முனிவர்களாலும் வழிபடப் பெற்ற ஆலயங்களுடன், மன்னர்கள் பக்தியுடன் நிர்மாணித்த எண்ணற்ற ஆலயங்களும் ஒருகாலத்தில் பக்திப் பயிர் செழிக்கச் செய்து, மனிதர்களின் வாழ்க்கையை நிம்மதியும் சந்தோஷமும் நிரம்பியதாகத் திகழச் செய்திருந்தன.

இதோ, இப்போது நாம் தரிசித்துக்கொண்டிருக்கும் மானம்பாடி அருள்மிகு நாகநாத ஸ்வாமி திருக்கோயிலும் அத்தகைய ஆலயங் களுள் ஒன்றுதான்! பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனால் நிர்மாணிக்கப் பெற்று எழிலார்ந்த தோற்றத்துடன், ஐயனின் பூரண அருள் திறம் கொண்டு விளங்கி, மனிதர்களின் வாழ்க்கையை விளக்கமுறச் செய்த ஆலயம் இது. ஒருகாலத்தில் அருளின் பிறப்பிடமாகவும், கலைகளின் உறைவிடமாகவும் திகழ்ந்த ஐயனின் இந்த ஆலயம் இன்றைக்கு வானம் பார்த்த நிலையில், மிகப் பரிதாபமாக இருப்பது கண்டு, மனம் பதறித் துடித்தோம்.

கூரைகள் சரிந்து, புதர்கள் மண்டி, வெட்ட வெளியாக இருந்த கோயிலுக்குள், ஒரு சிறிய கொட்டகையில் ஐயன் தரிசனம் தருகிறார். அந்தக் கொட்டகையிலேயே அம்பிகை சௌந்தர நாயகி, விநாயகர், முருகப் பெருமான் ஆகியோரும் திருக்காட்சி தருகின்றனர். பிராகாரத்தில் கலைநயம் மிகுந்த பல அழகிய சிற்பங்கள் மண்ணில் கிடந்த கோலத்தைக் கண்டு கண்கள் கலங்கின. தாங்கள் ஒரு வேள்வியைப்போல் பார்த்துப் பார்த்து வடித்த தெய்வத் திருமேனிகள் இப்படி வெயிலில் காயவும், மழையில் நனையவுமான நிலையில் இருக்கும் கோலத்தை விண்ணில் இருந்து பார்க்கும் அந்தக் கலைஞர்களின் ஆத்மா எப்படியெல்லாம் பரிதவிக்கும்! நாம் கொஞ்சமேனும் இதை நினைத்துப் பார்த்தால், ஆலயம் இந்த அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு இனியும் பொறுத்திருப்போமா?
கோயில் அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் விஜயா என்ற பெண்மணிதான் ஐயனின் சந்நிதி இருண்டுகிடக்கக்கூடாதே என்கிற ஆதங்கத்தில் தினமும் காலை, மாலை இரு வேளையும் தீபம் ஏற்றி வருகிறார்.

‘‘என்னுடைய தாத்தா இந்தக் கோயிலைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கார். இங்கே இருக்கிற சுவாமி ரொம்ப வரப்பிரசாதியாம். பல வருஷங்களுக்கு முன்னே இந்தக் கோயிலுக்கு வெளியூர்களில் இருந்தெல்லாம் நிறைய பக்தர்கள் வந்து தரிசிச்சிட்டுப் போவாங்களாம்.

சில வருஷங்களுக்கு முன்னாடி ரோட்டை அகலப்படுத்தறதுக்காக, சிதிலமடைஞ்சிருக்கிற கோயில்தானே, அப்புறப்படுத்திடலாம்னு அரசாங்கம் முடிவு செஞ்சப்ப, சில பெரியவங்களும் இந்த ஊர்மக்களும் சேர்ந்து போய் கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். அவருதான் கோயிலோட சிறப்புகளைத் தொல்பொருள் துறைக்கு எடுத்துச் சொன்னாரு.

அவங்க வந்து இங்கே இருக்கிற கல்வெட்டு களையும், சிலைகளையும் பார்த்துட்டு, கோயிலை அப்புறப்படுத்தக்கூடாதுன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. இப்ப அறநிலையத் துறை இதுக்கு நிதி ஒதுக்கி, கோயிலைப் புதுப்பிக்கிற வேலையைத் தொடங்கி இருக்கு. சீக்கிரம் வேலைகள் முடிஞ்சு, கும்பாபிஷேகம் நடந்தா அதைவிட எனக்கு வேற சந்தோஷமோ, சொத்து சுகமோ எதுவுமே வேணாம்’’ என்றார் விஜயா, குரல் கரகரக்க.

அந்தக் கிராமத்துப் பெண்மணி இந்தக் கோயில் மீதும், இங்குள்ள இறைவன் மீதும் இந்த அளவுக்குப் பக்திபூர்வமாக இருந்ததைக் கண்டு, அவருடைய நல்ல மனசு குளிர்வதற்காகவேனும் கோயில் திருப்பணிகள் விரைவில் பூர்த்தி அடைந்து கும்பாபிஷேகம் நடக்கவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கத் தோன்றியது நமக்கு!
வரலாற்று ஆய்வாளர்கள்,   ஆன்மிக ஆன்றோர்கள் மற்றும் ஊர்மக்களின் வேண்டுகோளின்படி, சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இந்தக் கோயில் அகற்றப்படாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்தவர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன்.

முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டுச் சிதிலமடைந்த நிலையில் இருந்த இந்தக் கோயிலை அப்புறப்படுத்துவதில் இருந்து காப்பாற்றிய ஆட்சியரின் பெயரும் ராஜேந்திரன் என்பதைக் கேள்விப்பட்டபோது, இறைவன் எப்படியெல் லாம் லீலைகள் புரிகிறார் என்பதை எண்ணிச் சிலிர்த்துப் போனோம்.

கோயில் வளாகத்தைச் சுற்றி வந்தோம். முகமண்டபத்தின் தென்புறச் சுவரில் உள்ள மூன்று கோஷ்டங்களில் பிட்சாடனர், நடராஜர், கணபதி ஆகியோரும், வடபுறச் சுவரில் உள்ள கோஷ்டங்களில் கங்காதரர், கொற்றவை, அம்மையப்பர் ஆகியோரும், கருவறை தென்புறச் சுவரில் உள்ள கோஷ்டத்தில் வீராசன தட்சிணாமூர்த்தியும், மேற்குப்புற சுவரில் உள்ள கோஷ்டத்தில் அடிமுடி காணா அண்ணல் லிங்கோத்பவரும், வடபுறச் சுவரில் உள்ள கோஷ்டத்தில் பிரம்மாவும் திருக்காட்சி தருகின்றனர். ஆனால், பிரம்மாவின் திருமுகம் சிதைக்கப்பட்டு இருப்பது அவலத்தின் உச்சநிலை.

இந்தக் கோயில் திருப்பணிகள் விரைவிலேயே முழுமை பெறவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார் திருவடிக்குடில் சுவாமிகள். கும்பகோணத்தில் ஆன்மிக சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அவரைச் சந்தித்தோம்.

‘‘நாகத்தையே ஆபரணமாகப் பூண்ட சிவபெருமான் நாகநாத ஸ்வாமி யாக பல கோயில்களில் அருள்புரிகிறார். எம்பெருமான் நாகநாதர் என்னும் திருப்பெயர் கொண்டு அருள்புரியும் தலங்கள் எல்லாமே நாக தோஷம் உள்ளிட்ட சகலவிதமான சர்ப்ப தோஷங்களையும் போக்கும் ஆற்றல் கொண்டவை. அந்த வகையில், மானம்பாடி கோயில் இறைவனும் தம்மை வழிபடும் அன்பர்களின் சகல சர்ப்ப தோஷங்களையும் போக்குவார் என்பதில் சந்தேகமே இல்லை’’ என்றவர், பத்மநாபன் என்பவரை நமக்கு அறிமுகப்படுத்தினார்.
அவர், ‘‘கோயிலை அப்புறப் படுத்துவதில் இருந்து காப்பாற்றி விட்டோம். அதேபோல், அறநிலையத் துறையினரும் உடனே நிதி ஒதுக்கீடு செய்து திருப்பணி களைத் தொடங்கிவிட்டனர்.
ஆனால், என்ன காரணத்தாலோ கடந்த ஒரு மாத காலமாக திருப் பணிகள் நடக்காமல் அப்படியே நின்றுவிட்டன. இதுபற்றி நீங்கள் தான் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து, திருப்பணிகள் மீண்டும் மும்முரமாக நடைபெறவும், விரைவிலேயே கும்பாபிஷேகம் நடக்கவும் ஆவன செய்யவேண்டும்’’ என்றார்.

‘அன்பர்க்கு அன்பனாய், ஆற்றின்ப வெள்ளமாய், தோற்றச் சுடரொளியாய்’ திகழும் ஐயன் திருக்கோயிலின் நின்றுபோன திருப்பணிகள் மீண்டும் சுறுசுறுப்பாகத் தொடர அறநிலையத் துறை உடனே உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பக்தர்களும் இந்தத் திருப்பணிகள் தொய்வின்றி தொடர தங்களால் இயன்ற நிதியுதவியைச் செய்யவேண்டும். அப்போதுதான் ஆலயம் விரைவில் பூரண புதுப்பொலிவு பெறும்; பூஜை வழிபாடுகளால் அங்கே ஐயனின் அருள் சாந்நித்யம் நிலவும்; நாமும் அனைத்து நலன்களையும் பெற்றுச் சீரும் சிறப்புமாக வாழ்வோம்.


எங்கு இருக்கிறது..? எப்படிச் செல்வது..?

கும்பகோணம் - சென்னை சாலையில், சுமார் 13 கி.மீ. தொலைவில் சோழபுரம் என்னும் கிராமத்துக்கு அருகில் உள்ள மானம்பாடி கிராமத்தில் சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.

Comments