அரங்கம் ஏறிய அந்தரங்கம்!

ஏதிரே பெரும் ஸ்ரீவைஷ்ணவத்திரள். எல்லோரும் ரங்கா! ரங்கா! என்று இதுவரையிலும் ஓலமிட்டவர்கள் இப்போது ராமானுஜா! ராமானுஜா! என்று கொண்டாடி மகிழ்கின்றனர். அரங்கனும், அழகிய நாச்சியாரும் மகிழ்ந்து இதனை ரசிக்கின்றனர். சரி ராமானுஜனாக (பலராமன் தம்பியாக) தான் சாதிக்க முடியாததை ராமானுஜனாக (தற்போது ஆசார்யராக) சாதிக்கலாம் எனும் எண்ணம் அரங்கனின் அந்தரங்க திருவுள்ளம்.
எல்லோரும் குழுமியிருந்த இடத்தில் யாருமே கேட்காமலிருந்தாலும் அர்ஜுனனுக்கு கீதையைக் கூறியவன்; இப்போது எதிராஜர் என்ன சொன்னாலும் கேட்பதற்குத் தயாராக உள்ள இக்கூட்டத்தைக் கண்டு வாளா இருப்பானா என்ன! எனவே அவன் தன் அந்தரங்கக் கட்டளையை, அந்த ரங்கனின் கட்டளையை ராமானுஜருக்களித்தான்.
ரங்கன் ஒரு பித்தன். தன் பக்தர்கள்
எவ்வாறேனும் தன்னை வந்து அடைய மாட்டார்களா!" என்று ஏங்குபவன். மிகவும் கடினமான பக்தி முதலான வழிமுறைகளைச் சொன்னால், எங்கே இவர்கள் பயந்து தன்னிடம் வராமலேயே இருந்து விடுவரோ எனத் தயங்குபவன். பத்துடை அடியவர்க்கு எளியவனன்றோ! ஆகையால் எல்லோரும் வாழ்ந்து போகும்படியான ஒரு வழிமுறையை உலகிற்குணர்த்த அத் திவ்ய தம்பதிகள் தீர் மானித்தனர்.
முதலில் உபாயத்தின் மேன்மை அறிய லாம். பின்னர் வாய்திறந்த அரங்கனின் வைபவத்தை அறியலாம். எல்லாம் ராமானுஜர் அநுக்ரகம்.
பரமபதமாகிய மோட்சத்தை அடைய இரண்டே வழிகள்தான் உள்ளன. இது தவிர வேறெந்த உபாயத்தினாலும் மோட்சத்தை அடைய முடியாது. அது தவிர மோட்சத்தை அருளுபவன் எம்பெருமான் ஒருவனே. அவன் தவிர வேறு எவர்க்கும் மோட்சம் அளிக்கும் தகுதி இல்லை. எனவே, தேறும் கால் தேவன் ஒருவனே" என்று அறுதியிடு கின்றனர் ஆழ்வார்கள். இதுவே வேதமுரைத்தது.
இரண்டு வழிகளுள் ஒன்று பக்தியோகம். மற்றொன்று ப்ரபத்தியோகம். அதாவது ஒருவன் வேதம் கற்கக்கூடிய குலத்தில் பிறந்து (அதுவும் ஆண் மகனாக)
வேதத்தை நன்கு கற்க வேண்டும். அந்த வேதத்திற்கு ஆறு பிரிவுகள் உண்டு. அதையும் அறிய வேண்டும். இவ்விதம் அறிபவன் வேதத்தில் கூறப்பட்டுள்ளபடியே தனக்குரிய ஒரு உபாஸனையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தற்காலத்திலுள்ள நரசிம்ம உபாஸனை, ஹனுமத் உபாஸனை, தேவீ உபாஸனை போன்றல்ல இது. இதற்கு ‘வித்யா’ என்பது பெயர். அந்த உபாஸனையை அவன் வாழ்நாள் முழுதும் கடைபிடிக்க வேண்டும். அது தவிர மேலும் பல பிறவிகளும் அவனுக்கு உண்டாகும். அத்தகு பிறவிகளிலும் இதையெல்லாம் விடாது (ஒருக்கணமும் விடாது) உபாஸனை செய்ய வேண்டும். இதையெல்லாம் அதிகம் விவரித்தால் கதையிலுள்ள சுவராசியம் போய்விடும். மொத்தத்தில் நம்மால் முடியாது.
சரி இவ்விதம் சொன்னால் பின் எப்படி சாமான்யர்கள் மோட்சம் அடைவது. நாமெல்லாம் நற்கதி அடைய வழியே இல்லையா! எனும் கேள்வி எழுகிறதே. இதற்குத்தான் பரம தயாமூர்த்தியான பெருமாள் ராமானுஜர் மூலமாக விடை தருகிறார்.
நான் அனைவர்க்கும் பொதுவானவன். எல்லோருமே எனக்கு வேண்டியவர்களே" என்கிறான் கீதையில் கண்ணன். இப்படிச் சொன்னவன் யாரோ ஒரு சிலர் மட்டும் தன்னை வந்தடையட்டும் என எண்ணுவானா? அங்கு கீதையில் சொன்ன ஒரு அர்த்தத்தை இன்று இங்கு அரங்கத்திலும் சொல்லுகிறான் . ஹே அர்ஜுனா எத்தனையோ புண்ணியப் பிறவிகள் கழிந்துதான் நாராயணனாகிய நானே அனைத்தும்" எனும் நினைவுடன் ஒரு பக்தன் என்னை வந்தடைகிறான். ஆனால், இத்தகையதொரு நிலையுடன் என்னை அணுகும் அந்த மஹாத்மா கிடைப் பது மிக, மிக துர்லபமாயுள்ளது" என்கிறான்.
இதனால், என்னிடம் பக்தர்கள் அதிகம் வர வேண்டும். நான் அவர்களுக்கு மோட் சமளித்து அளவில்லா ஆனந்த வாழ்க்கை தர காத்திருக்கிறேன்" எனும் திருவுள்ளம் நன்கு தெரிகின்றதன்றோ! அதற்குரிய வழிமுறை களையும் இப்போது தெளியலாம்.
முன்னம் நாம் பார்த்த பக்தி கடினமானது. எப்போது பலனளிக்கும் என்பது தெரியாது. நாம் அதைச் செய்யும் வல்லமையற்றவர்கள். ஆனால், மோட்சத்தில் விருப்பமுடையவர்கள். இதனால் நாம் அவனை அடையும் வழி சுலபமானதாகவிருந்தால் மேலானது. அத்தகையதொரு வழிமுறைதான் ‘சரணாகதி’ என்பது.
நான், என்னைச் சேர்ந்த அறிவுடைய, அறிவற்ற என அனைத்தையும், ஹே ப்ரபோ! தேவதேவ! நீ உன் கைங்கர்யத்துக்காக ஏற்றுக்கொள்" என அனைத்தையும் அவன் திருவடி யில் சமர்ப்பிப்பதற்குத்தான் சரணாகதி என்பது பெயர். இதனை யாரும் செய்யலாம். எக்காலத்திலும் செய்யலாம். எவ்விடத்திலும் செய்யலாம். எவ்வித நியமநிஷ்டைகளும் கிடையாது. ஒன்றே ஒன்றைத்தவிர. அது மஹா விச்வாஸம். எல்லாம் நாராயணனே. அவனே நம்மை ரட்சிப்பவன். அவனை அடைவது தவிர இப்பிறவிக்கு பயன் ஏதுமில்லை எனும் உறுதியிருந்தால் போதுமானது.
மகானாகிய ஆசார்யருடைய சம்பந்தத்தை அடைந்து இந்த ஆத்மாவை" மேற்கூறியபடி பகவானின் திவ்யமான திருவடித் தாமரை களில் சமர்ப்பித்தால், இனி நமக்கு பிறவி எனும் பயம் என்றுமே கிடையாது. ஒரே ஒருமுறை விரைவாக செய்து முடிக்கக்கூடிய கார்யம் இது. இந்த மாபெரும் அமுத வெள்ளத்தை அகில உலகமும் அடைந்து, அழியாத ஆனந்தமாக பேரின் பத்தைப் பெற வேண்டும்" என நினைத்த அரங்கன் ராமானுஜரைப் பேசவைத்தான். தானும் பேசினான்.
இந்தச் சரணாகதி மந்த்ரத்துக்கு ‘த்வயமந்த்ரம்’ என்பது பெயர். திருவுடன் சேர்ந்த பகவானுடைய திருவடித் தாமரைகளை அடைக்கலமாக அடைகிறேன். திருவுடன் கூடிய திருமாலுக்கு (நாரா யணனுக்கு) கைங்கர்யம் செய்கிறேன் என்பது அந்த மந்திரத்தின் பொருள். அத்தகைய உயரிய மந்திரத்தைக் கூறி என்னையே அடைக்கலமாக அடைவாயாக," நான் உன்னை அனைத்து வினைகளிலிருந்தும் காப்பாற்றுகிறேன்" என்று கீதையின் சரம ச்லோகத்தில் கண்ணன் உபதேசித்தான். கவலைப்படாதே" எனும் அவன் வாக்கியத்தின் பொருளை இன்று உலகம் உணருகின்றது.
பரமபவித்ரமான பங்குனி உத்திரத் திருநன்னாளில் அரங்கனின் ஆணைப்படி உலகறிய ராமானுஜர் சரணா கதி செய்தார்! ராமானுஜர் எவ்வழியோ! உலகம் அவ் வழி என்பதற்கேற்ப, தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் ரங்கநாதன் திருவடிகளில் சமர்ப்பணை செய்தார்.
அந்தச் சமயம் ராமானுஜரால் அருளிச் செய்யப் பட்ட அமுத மொழிகளுக்கு ‘கத்யத்ரயம்’ என்பது பெயர். அரங்கன் திருவடிகளில் அடைக்கலம் அடைய ‘சரணாகதி கத்யம்’ ஸ்ரீவைகுண்டத்தின் பெருமையை வர்ணிக்கும் ‘வைகுண்டகத்யம்’ பூலோக வைகுண்ட மான ஸ்ரீரங்கத்தின் அழகை வர்ணிக்கும் ‘ஸ்ரீரங்க கத்யம்’ என மூன்றும் ஆசார்யரால் அருளப்பட்டன.
எம்பெருமானே! உன் திருவடித் தாமரைகளில் வேறொன்றிலும் பற்றில்லாத எனது மனதுலயிக்க
வேண்டும். இதுவரையிலும் நான் செய்த தீவினைகளிலிருந்து நீ காக்க வேண்டும். அவற்றை இனியும் நான் செய்யாதபடி நீ தடுத்தாட் கொள்ள வேண்டும். ‘கருணாநிதியே! குணக்கடலே, இனிமையானவனே உன்னையே சரணடைந்தேன்’ என்று இதில் பகவத் ப்ரார்த்தனையைச் செய்கிறார். பிராட்டியாம் ரங்கநாயகித் தாயாரை முன்னிட்டு ராமானுஜரால் ரங்க நாதனிடம் சரணாகதி செய்யப்பட்டது.
இங்கிருக்கும் காலம்வரை அடியேன் தேவரீர் உகந்த கைங்கர்யத்தை - ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னு வழிவிலா அடிமை செய்ய வேண்டும்" என்று ப்ராத்தனை செய்தார். உடனே பேசும் தெய்வம் அரங்கன் அப்படியே ஆகுக. உன் விருப்பங்கள் அனைத்தும் ஈடேறும். இந்நில உலகில் இருக்கும்வரை முன் சொன்ன த்வய மந்திரத்தைச் சொல்லிக் கொண்டேயிரு. இந்தத் திருவரங்கத்திலேயே பரம சுகமாக வசிக்கக் கடவாய்" என்று திருவாய் மலர்ந்தருளினான். இந்த அதிசயத்தை உலகமே கண்டு போற்றியது.
எளிமையான இந்த உபாயம் எல்லோருக்கும்தானே. தன்னடியார்கள் இதைச் செய்தால் அவர்கள் திறத்தில் இரங்கும் அரங்கன் பித்தன்" என்கிறார் ஆழ்வார். அன் பர்களே இனியும் என்ன குறை. கவலை உய்ய ஒரே வழியான உடையவர் திருவடியை அடைந்துய்யலாம். அரங்கத்தில் நிகழ்ந்த அந்தரங்கம் இந்த உலகிற்கோர் அற்புதம்.

Comments