கல்விச் செல்வம் தருவார் கல்லுக்குழி ஆஞ்சநேயர்!

யில்வே பணிகளுக்காக, சிறிய கோயி லாக இருந்த இடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டார் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர். ஆனால் அடுத்தடுத்த வேலைகள் தடைபட்டன. என்ன ஏது என்று புரியாமல் குழம்பினார்கள் ஆங்கிலேயர்கள். பிறகு 'பழைய இடத்தில் குடியமரவே விருப்பம்’ என்று அசரீரி கேட்டதை அடுத்து, மறுவருடமே பழையபடி கோயில் கொண்டு அருள்பாலிக்கத் துவங்கினார் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் என்கிறது கோயிலின் ஸ்தல வரலாறு. 
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்குப் பின்புறம் உள்ளது கல்லுக்குழி. ரயில்வே குடியிருப்புகள் கொண்ட இந்தப் பகுதியில் இருந்தபடி, இன்றைக்கும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர்.
மிகுந்த வரப்பிரசாதி இவர். அதேபோல், அழகும் கருணையும் ததும்பும் இவரின் திருமுகத்தை ஒருமுறை தரிசித்து விட்டால், பிறகு நாமே அடிக்கடி வந்து தரிசிப்போம் எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.
ஆரம்பத்தில் மிகச் சிறிய கோயிலாக இருந்தது. பிறகு இவரைத் தரிசித்துப் பிரார்த் தனை நிறைவேறியவர்கள் மற்றும் அனுமன் பக்தர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பில் மிக அருமையான திருப்பணிகள் நடந்தேறின. 
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயிலுக்கு, டோல்கேட், மன்னார்புரம் பகுதியில் இருந்தும் வரலாம். தன் மாணவப் பருவத்தில், ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அடிக்கடி இங்கு வந்து தரிசித்து, அருட்பணி ஆற்றியதாகச் சொல்வர்! 
அழகிய கோபுரத்துடன் அற்புதமாகத் திகழ்கிறது ஆலயம். இங்கே ஸ்ரீராம நவமி, பத்து நாள் விழாவாக வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல், புரட்டாசி நவராத்திரி ஒன்பது நாள் விழாவும் சிறப்பாக நடைபெறும். ஸ்ரீஅனுமன் ஜயந்தி நாளில், 10,008 வடை மாலை சார்த்தி சிறப்பு பூஜைகள், திருவீதியுலா, விசேஷ அபிஷேகம் என அமர்க்களப்படும்!  ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீபாண்டுரங்கன் ஆகியோரும் தனிச்சந்நிதிகளில் காட்சி தந்து அருள்கின்றனர்.
நல்ல வேலை, பதவி உயர்வு, கல்வியில் மேன்மை, ஞாபக சக்தி, தொழில் முன்னேற்றம் என எதுவாக இருந்தாலும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இங்கு வந்து அனுமனை வழிபட அனைத்தும் ஸித்திக்கும். எனவே, இந்த தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து வந்து, அனுமனைத் தரிசித்துச் செல்கின்றனர். திருச்சியின் பல பகுதிகளில் இருந்தும் சனிக்கிழமைகளில் ஏராளமான மாணவர்களும் இங்கு வந்து ஸ்ரீசுந்தர அனுமனை வணங்கிச் செல்கின்றனர். 
இங்கே, சந்நிதிக்கு எதிரில் நடைபெறும் ஸ்ரீசுதர்சன ஹோமம் வெகு பிரசித்தம். இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு, ஸ்ரீஅனுமனையும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் தரிசித்து, மனதார வேண்டிக் கொண்டால்... எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம்; ஞாபக சக்தி அதிகரிக்கும். கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கலாம். கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை!
செவ்வாய்க்கிழமைகளில், இங்கேயுள்ள தியான மண்டபத்தில், மாணவர் களுக்காக சிறப்பு தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தியான மண்டபத்தில் காட்சி தரும் ஸ்ரீதியான நிலை அனுமனுக்கு, 'ஸ்ரீராம ஜெயம்’ சீட்டு எழுதி, மாலை சார்த்தி தியானம் இருந்தால், மனதில் நிம்மதி யையும் புத்தியில் ஞாபக சக்தியையும் தந்தருள்வார் ஸ்ரீஅனுமன் எனப் பூரிக்கின்றனர் மாணவர்கள்!

Comments