கும்பேஸ்வரர் திருக்கோயில்

கும்பேஸ்வரர் ஆலயத்தில், கிராதமூர்த்தி சந்நிதியில் சிவபெருமான் வேடுவ கோலத்தில் காட்சி தருகிறார். கும்பகோணத்தில் ஒதுங்கிய அமுத கும்பத்தை இறைவன் வேடுவராக வந்து பாணம் தொடுத்து உடைத்ததை நினைவூட்டும் வகையில் இந்த சந்நிதி அமைந்துள்ளது.

ஆறு திருக்கரங்களுடன் ஆறுமுகப் பெருமான்

இங்கே அமைந்திருக்கும் கார்த்திகேயரின் சந்நிதியில் ஆறுமுகப் பெருமான் ஆறு திருக்கரங்களுடன் மட்டுமே காட்சி தருகிறார். மற்ற சிவத் தலங்களை விட இந்தத் தலம் இரு மடங்கு அதிக மகிமை உள்ளது என்பதால், ஷண்முகக் கடவுள் ஆறு திருக்கரங்களுடன் இருப்பதாக ஐதீகம்.

சோமாஸ்கந்த அமைப்பில் ஆலயம்

கும்பேஸ்வரர் ஆலய கருவறைகளின் அமைப்பு சோமாஸ்கந்த வடிவத்தில் சுவாமி சந்நிதி, கார்த்திகேயர் சந்நிதி, அம்பாள் சந்நிதி என்ற அமைப்பில் உள்ளது.

கெண்டியுடன் மங்களாம்பிகை

கும்பேஸ்வரர் ஆலயத்தில் அன்னை மங்களாம்பிகை என்ற திருப்பெயர் கொண்டு, தன்னுடைய வலது மேற்கரத்தில் கெண்டி ஏந்தி காட்சி தருகிறாள். அமுத கும்பத்தை இறைவன் உடைத்து, மீண்டும் அதை கும்ப வடிவில் லிங்கமாகப் பிசைந்து அதனுள் தான் பிரவேசித்தபோது, அதற்கு நீர் வார்த்தவள் மங்களாம்பிகை. அதனால் மட்டுமல்ல, ஆதிகும்பேஸ்வரரின்         அருள் கும்பத்தில் இருந்து அருளை நமக்கெல்லாம் அள்ளி அள்ளி வழங்குவதற்காகவும் அம்பிகை கெண்டி ஏந்தி காட்சி தருகிறாள்.

மாசி மக நன்னாளில்.. மகனாக வந்த மகேஸ்வரன்!

திருவண்ணாமலை! பனி நிறைந்த அந்தப் பின்னிரவுப் பொழுதில் ஊரே உறங்கிக் கொண்டிருக்க... அரண்மனையில் மன்னனும் அவன் மனைவியர் இருவரும் உறங்காமல் விழித்திருந்தனர். 'பிள்ளை இல்லையே’ என்று நெடுநாட்களாக அவர்களை வாட்டி வதைக்கும் துக்கமும் ஏக்கமும் அன்று அதீதப்பட்டது போலும்! துக்கம் நெஞ்சை வாட்ட, தூக்கம் எங்கிருந்து வரும்?!

மறுநாள் அரசவையைக் கூட்டினார் மன்னர். மந்திரிகள் கூடியிருந்த அந்த அவையில், குழந்தை இல்லாத மனக்குறையைச் சொன்னார்.
அதைக்கேட்ட மந்திரிகள் எல்லோரும் ஒருமித்த குரலில், ''மன்னா! குழந்தை பிறக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டு, யார் வந்து என்ன உதவி கேட்டாலும் செய்யலாம். முக்கண் முதல்வன் மகப்பேறு அருள்வான்'' என்றார்கள். சபை கலைந்தது.
மறுநாளே கோட்டையிலும் முக்கியமான இடங்களிலும் முரசும் ஒலித்தது, ''யார் வந்து, எது கேட்டாலும் மன்னர் அளிப்பார்'' என்ற அறிவிப்பும் கூடவே வெளியானது. பலரும் வந்து பலன் பெற்றுப் போனார்கள். மன்னரிடம் உதவி கேட்கும் அவசியம் இல்லாதவர்களும், மன்னருக்கு மகவு பிறக்கவேண்டும் என வேண்டிக்கொண்டு, தங்களால் இயன்றளவு தான தர்மம் செய்தனர். இவ்வளவுக்கும் பிறகு பலன் கிட்டாமல் போகுமா? கிடைத்தது.
ஒருநாள்... திருவண்ணாமலையில் சிவனடியார் கூட்டம் ஒன்று, ''அரும்பசி தணிய அன்னம் இடுவார் இல்லையா?'' என்று கேட்டபடியே வீதி வீதியாக வந்தது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வீட்டில் உபசரிப்பு நிகழ, அவர்களின் தலைவர் மட்டும் அரண் மனையை அடைந்தார்.
சிவந்த திருமேனி, உடலெங்கும் திருநீறு, கழுத்தில் ருத்ராட்சம்... என தெய்வக் களையோடு திகழ்ந்த அந்த அடியவரை வரவேற்று  உபசரித்தார் மன்னர். அவரிடம் அடியார் தலைவர், ''நீயும் உன் அரசும் நீடுழி வாழ்க! எனக்குப் பணிவிடை செய்யவும், என் ஆவலைப் பூர்த்தி செய்யவும் பெண்ணொருத்தி வேண்டும்'' என்றார். மன்னவன் திகைத்தார். 'இறைவா... இதென்ன சோதனை?
எந்தப் பெண்தான் இதற்கு சம்மதிப்பாள்?’ என்று உள்ளுக்குள் மருகினார். எனினும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், ''இதோ! சற்று நேரத்தில் வருகிறேன்'' என்று அடியவரிடம் சொல்லிவிட்டு, அந்தப்புரத்துக்கு விரைந்தார்.
மனைவியரிடம் விஷயத்தைச் சொல்லி வருந்தினார். உடனே அவரின் இளைய மனைவியான சல்லமாதேவி, ''இதற்காகவா வருந்துகிறீர்கள்! அனுமதி கொடுங்கள்; அடியவருக்குப் பணிவிடை செய்ய நான் போகிறேன்'' என்றாள்.
அதைக்கேட்டு உள்ளம் சிலிர்த்தார் மன்னர். அடியவரிடம் ஓடோடிச் சென்று, ''ஸ்வாமி... தங்களுக்குப் பணிவிடை செய்ய ஒரு வனிதை வருகிறாள்'' என்றார்.
'உத்தமனும் பெரியவர்க்கு உரைத்திட் டானால்’ என்று இந்த தகவலைத் திருவண்ணா மலை தல புராணம் கூறுகிறது.
'மாற்றானுக்கு மனைவியைக் கொடுத்தவன் உத்தமனாம். கேட்டுப் பெற்றவன் பெரியவராம். 'என்னய்யா கதை இது?’ என்று அறிவு கேட்கிறது அல்லவா? அவசரப்பட்டு குழம்ப வேண்டாம். ஆராய்ச்சியும் விஞ்ஞானமும் நெருங்க முடியாத நிகழ்ச்சிகள் ஏராளம் உண்டு. மனதுக்கு வெள்ளையடித்துக் கொண்டு வாருங்கள்! விடை கிடைக்கும்.
தோ! சல்லமாதேவி, அடியார் இருந்த அறைக்குள் நுழைந்துவிட்டாள். படுத்திருந்த அவர் அருகில் அமர்ந்து வீணையை சுருதி கூட்டி, இனிமையாகப் பாடினாள். நேரம்தான் போயிற்றே தவிர, அடியவரின் நித்திரை கலையவில்லை. பாட்டை நிறுத்திவிட்டு சல்லமாதேவி பன்னீரை எடுத்து சிறு திவலைகளாக அடியாரின் முகத்தில் தெளித்தாள். அப்போதும் அவரிடம் எந்தவித அசைவும் இல்லை. 'கொக்கரகோ’ என்று சேவல் கூவும் சத்தம் கேட்டது. சல்லமாதேவி பதறினாள். ''ஆ! மன்னர் வாக்கு தவறக்கூடாது அவரது வாக்கை காப்பாற்றியாக வேண்டும். ஆனால், அதற்குள் பொழுது விடிந்துவிடும் போல் இருக்கிறதே!'' என்று பதறியபடி, அடியாருக்குப் பணிவிடை செய்ய அவரின் பாதங்களைப் பிடிக்கப் போனாள். அப்போது...
ஏதோ மாயம் நிகழ்ந்தது போன்று, அடியார் இருந்த இடத்தில் அழகான ஆண் குழந்தை கை-கால்களை உதைத்தபடி அழுதுகொண்டிருந்தது. சல்லமாதேவி திகைத்தாள். குழந்தையைத் தூக்க வேண்டும் என்று கூட அவளுக்குத் தோன்றவில்லை.
அதற்குள் குழந்தையின் அழுகை கேட்டு மன்னரும் மூத்த தேவியாரும் அங்கு ஓடி வந்தார்கள். குழந்தையைக் கண்டதும் மன்னர் தன்னிலை மறந்தார்; பரவசத்துடன் குழந்தையை அள்ளி எடுத்து உச்சிமுகர்ந்தார்; முத்த மழை பொழிந்தார். அப்போது மின்னல் ஒன்று பளிச்சிட்டது. அவர் கையில் இருந்த குழந்தையும் சட்டென மறைந்தது. மன்னவரும் அவரின் மனைவியரும் அதிர்ந்தனர். ''அண்ணாமலையாரே! அடியேனை சோதிக்கவா இப்படிக் குழந்தையாக வந்தீர்கள்... என் கதியென்ன?'' எனக் கதறினார் மன்னர். அதற்குப் பதில் சொல்வது போல் ஆகாயத்தில் இருந்து பூமாரிப் பொழிந்தது. ''அம்மா...ஆஆ!’ என்றொரு குரலும் கேட்டது. தொடர்ந்து அம்பிகையுடன் ரிஷப வாகனராக திருக் காட்சி தந்தார் அண்ணாமலையார். மன்னனும் அவரின் தேவியரும் சிரம் தாழ்த்தி கரம்கூப்பி வணங்கித் துதித்தார்கள்.
''மன்னா! நிலையில்லாத இந்த உலகில், எந்த விதமான கர்மத் தொடர்பும் இல்லாதவன் நீ. உனக்கு எப்படிப் பிள்ளை பிறக்கும்? ஆனாலும், நீ செய்த சிவ புண்ணியத்தின் பலனாக நாமே உமக்கு குழந்தையாக வந்தோம். கற்பில் சிறந்த உன் தேவியரின் பெருமையையும் உன் பக்தியையும் உலகுக்கு உணர்த்தவே ஒரு திருவிளையாடலும் புரிந்தோம்!'' என்று அருளினார் ஈசன். அரச தம்பதி அளவிலா ஆனந்தம் அடைந்தது!
அத்தோடு நின்றதா திருவிளையாடல்... ஒருநாள், உணவு உண்டு கொண்டிருந்தார் அரசர். அப்போது, தண்டை ஒலியெழுப்ப ஓடோடி வந்த குழந்தை ஒன்று, அவரின் மடியில் அமர்ந்து அன்னத்தில் கைவைத்துப் பிசைந்து ஓர் உருண்டையை எடுத்து அவருக்கு ஊட்டியது. அப்போது சிதறிய பருக்கைகளை எடுத்து தானும் உண்டது. அரசரும் மனைவியரும் அதைக் கண்டு ரசித்து சிரித்தார்கள். இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நிகழ்ந்தது!
ஒரு மாசி மாதம்-  மக நட்சத்திரத்தன்று, வழக்கப்படி பூஜையை முடித்த மன்னர், மனம் ஒன்றி 'ஹர ஹர’ என்று உச்சரித்தார். அதே நொடியில் அவரின் உயிர் பிரிந்தது. 'மன்னா’ என்று அலறியபடி அவர் மீது விழுந்த மனைவியரும் உயிர் நீத்தனர்.
ஊர் மக்கள் உள்ளம் கசிந்து கண்ணீர் சிந்தினார்கள். அதே நேரம்... ''அம்மா... அப்பா!'' என்றோர் இனிய நாதம் ஆகாயத்தில் எழுந்தது. திருக்கோயிலின் சிவலிங்கத் திருமேனியில் இருந்து ஜோதிமயமாக ஒரு குழந்தை வெளிப்பட்டு, அரண்மனைக்கு ஓடிவந்து, மன்னர் மீதும் அவரின் மனைவியர் மீதும் விழுந்து அழுது புரண்டது. தானே அந்தத் தம்பதிகளுக்கு ஈமச் சடங்குகளைச் செய்தது. பிறகு, எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மாபெரும் ஜோதியாக அங்கிருந்து மறைந்தது அந்தக் குழந்தை!
''அண்ணாமலையாரே வந்து அரச தம்பதிக்கு தன் கையாலேயே பிரேத சமஸ்காரங்கள் செய்திருக்கிறார். என்ன புண்ணியம்! என்ன புண்ணியம்! அண்ணாமலையாருக்கு அரோஹரா!'' என்று எல்லோரும் கூவினார்கள்.
அப்போது ஓர் அசரீரி... 'ஆண்டு தோறும் மாசி மக நன்னாளில் இந்த நிகழ்ச்சி ஒரு திருவிழாவாகவே நடைபெறும். நாம் குழந்தையாக வெளிப்பட்ட வல்லாள மகாராஜா கோபுர வாயில் அன்று மட்டும் திறக்கப்படும்'' என்று ஒலித்தது.
அதன்படியே இன்றும் மாசி மகத்தன்று ஸ்வாமி வெளியில் வந்து மன்னருக்கு சிராத்தம் செய்துவிட்டுப் போகிறார். நாம் நம்புகிறோமோ இல்லையோ. மாசி மக நன்னாளில், அண்ணா மலையாரின் குரல் அங்கே 'அம்மா! அப்பா!’ என்று ஒலிக்கும். அதைக் காதாரக் கேட்டவர்களும் உண்டு!

Comments