கல்வியில் மேன்மை; பிறவியில் மோட்சம்!

சிவனாரின் திருவிளையாடல்கள் அனைத்தும் மதுரையம்பதியிலேயே நிகழ்ந்ததாகச் சொல்வார்கள். ஆனால் மதுரையம்பதியைச் சுற்றியுள்ள பகுதியிலும் சிவபெருமான் தன் திருவிளையாடலை நிகழ்த்தி அருளியிருக்கிறார்.

கருங்குருவி ஒன்றுக்கு மோட்சம் கொடுத்த 47-வது திருவிளையாடல் தெரியும்தானே? அந்தத் திருத்தலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில், சுமார் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பெருங்கரை கிராமம். பார்த்திபனூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரை, மேலப் பெருங்கரையூர் என்பர். இந்தத் தலத்து ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீஅட்டாள சொக்கநாதர்; சுயம்பு மூர்த்தம். அம்பாள் - ஸ்ரீஅங்கயற்கண்ணி. ஸ்ரீஅனுக்ஞை விநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீஐயப்பன் ஆகியோர் தனிச் சந்நிதியில் காட்சி தரும் அற்புதத் தலம் இது!
முற்பிறவியில் அறம் நிறையச் செய்தும்  சிறிதளவு பாவம் செய்ததால், ஒருவன் கருங்குருவியாகப் பிறந்தான். அந்தக் கருங்குருவியின் ஏக்கத்தையும் சோகத்தையும் புரிந்துகொண்ட முனிவர் ஒருவர், சோமசுந்தரக் கடவுளை வணங்கி தவமிருந்தால் இம்மையிலும் மறுமையிலும் மோட்சம் கிட்டும் என அருளினார்.
அதன்படி அந்தக் குருவி சிவனாரை நினைத்து, வனத்தில் இருந்தபடி கடும் தவத்தில் ஈடுபட்டது. குருவியின் தவத்தில் மகிழ்ந்து சிவபெருமான் காட்சி தந்தார். குருவி மற்றும் இதர பறவைகளுக்கு வலிமையை வரமாகத் தந்து மறைந்தார். அந்தத் திருவிடத்தில் இருந்தபடி, இன்றைக்கும் அருளி வருகிறார் ஸ்ரீஅட்டாள சொக்கநாதர். சுந்தரமூர்த்தி நாயனார் பாடிப் பரவிய திருத்தலம் இது!
ஸ்ரீஅட்டாள சொக்கநாதர் முக்தியைத் தந்தருள்கிறார் எனில், ஸ்ரீஅங்கயற்கண்ணி, ஞானச் செல்வத்தை வாரி வழங்குகிறாள்.  இங்கே, கார்த்திகை மாத முதல் மற்றும் கடைசி சோம வாரத்தில் (திங்கட்கிழமைகளில்), இங்கு வந்து ஸ்வாமிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து பிரார்த்தித்தால், நம் மனதைக் குளிரச் செய்யும் வகையில் எண்ணங்களையெல்லாம் ஈடேற்றித் தருவாராம் ஸ்ரீஅட்டாள சொக்கநாதர்.
புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இங்கு வந்து ஸ்ரீஅங்கயற்கண்ணிக்கு பாலபிஷேகம் செய்து, பச்சைப் புடவை சார்த்தி வணங்கினால், கல்வியில் சிறந்து விளங்கலாம்; ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம். 

Comments