பரிட்சைக்குத் துணை நிற்பார் ஸ்ரீபாணபுரீஸ்வரர்

ஞ்சை மாவட்டம் கும்பகோணம் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது ஸ்ரீபாணபுரீஸ்வரர் திருக்கோயில். ஊழிக்காலப் பிரளயத்தின்போது, ஸ்ரீசிவனாரிடம் பிரார்த்தித்தார் ஸ்ரீமகாவிஷ்ணு. அப்போது, சிவனார் பீஜகும்பம் ஒன்றைத் தந்தார் அல்லவா! அந்த பீஜகும்பம் சிதறி விழுந்த இடங்கள் யாவும் புண்ணிய தலங்களாகப் போற்றப்பட்டன. அப்படி விழுந்த 12 இடங்களில் இந்தத் திருக்கோயிலும் ஒன்று!

இங்கே ஸ்வாமி - ஸ்ரீபாணபுரீஸ்வரர். அம்பாள் - ஸ்ரீசோமகலாம்பிகை. இந்தத் தலத்துக்கு வந்து வணங்கினால், திருமண தோஷங்கள் யாவும் விலகி, விரைவில் மாங்கல்ய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்! பிள்ளை பாக்கியம் கிடைக்கும் பரிகாரத் தலமாகவும் போற்றப்படுகிறது, இந்தத் திருக்கோயில்.
வங்க தேச மன்னரின் மனைவி, தீராத நோயால் பெரிதும் அவதிப்பட்டு வந்தாள்; எத்தனையோ வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை எனும் நிலையில், தெற்கே ஸ்ரீபாணபுரீஸ்வரர் தலத்துக்கு வந்து வழிபட்டால், விரைவில் குணம் பெறுவாள் என்று அசரீரி கேட்கவே... மன்னர் தன் மனைவியுடன் இங்கு வந்து நெடுநாட்கள் தங்கி, இறைவனை வழிபட்டார்; அவளின் நோய்கள் யாவும் குணமாயின என்கிறது ஸ்தல புராணம். 
எனவே, இங்கு வந்து ஸ்ரீசோமகலாம்பிகைக்கும் ஸ்ரீபாணபுரீஸ்வரருக்கும் வஸ்திரம் சார்த்தி, பவளமல்லிப் பூவை அணிவித்து வழிபட்டால், சகல நோய்களும் தீர்ந்து, ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழலாம் என்கின்றனர், பக்தர்கள்.
இந்தக் கோயிலில் ஸ்ரீஅனுமன், ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர், ஸ்ரீவியாஸகலிங்கம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீபைரவர் ஆகியோர் தனிச்சந்நிதிகளில் இருந்து அருள்பாலிக்கின்றனர். 
சோமவாரம் எனப்படும் திங்கட் கிழமை, குரு வாரம் எனப்படும் வியாழக்கிழமை மற்றும் பிரதோஷ காலங்களில், ஸ்ரீபாணபுரீஸ்வரருக்கும் ஸ்ரீசோமலாம்பிகைக்கும் தேன் மற்றும் மாதுளைச் சாறு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சார்த்தி பிரார்த்தனை செய்தால், மாணவர்கள் கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்கிறார் கோயிலின் அர்ச்சகர் துரைசாமி குருக்கள்.
''கும்பகோணம் எனும் திருத்தலத்தில் உள்ள முக்கியமான,  புராதனமான ஆலயங்களில் முதன்மையானது இந்தக் கோயில். இங்கு மாணவர்கள் தங்களது எழுதுகோல் மற்றும் ஹால் டிக்கெட்டை சிவனாரின் சந்நிதியில் வைத்து வேண்டிச் சென்றால், தேர்வு பயம் விலகும்; தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறலாம் என்பது ஐதீகம். இதனை வெற்றி பெற்ற மாணவர்களே தங்களின் அனுபவரீதியாகச் சொல்ல, மற்ற மாணவர்களும் இங்கு வந்து ஸ்வாமியையும் அம்பாளையும் வணங்கிச் செல்கின்றனர்'' எனப் பெருமிதத்துடன் சொல்கிறார் கோயில் குருக்கள். 
படிப்பில் மந்தமாக இருக்கும் மாணவ- மாணவிகள், ஸ்ரீபாணபுரீஸ்வரரை வணங்கித் தொழுதால், பரீட்சையில் வெற்றி பெறுவது உறுதி! 

Comments