கல்வி ஞானம் தருவாள் ஸ்ரீசரஸ்வதி! வெற்றியைத் தருவார் ஸ்ரீவிஜயநாதர்!

கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது திருவைகாவூர். இந்தத் தலத்தில், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சிவனார். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீசர்வஜனரட்சகி. சிவனாரின் திருநாமம்- ஸ்ரீவில்வவனேஸ்வரர்.

சிவபெருமான் வேடனுக்குத் திருக்காட்சி தந்த இந்தத் தலத்தில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீதுர்கை, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா ஆகியோர் தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
இங்கே மும்மூர்த்திகளான சிவபெருமான், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீமகாவிஷ்ணு ஆகிய மூவரையும் தரிசிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இங்கு வந்து மூவரையும் வணங்கினால், தீராத நோயும் தீரும்; நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்று சொல்கின்றனர், பக்தர்கள். 
இந்தக் கோயிலில், ஸ்ரீசரஸ்வதிதேவி தனிச்சந்நிதியில் இருந்தபடி, தன்னை நாடி வரும் மாணவ- மாணவிகளுக்கு கல்விச் செல்வத்தை வாரி வழங்குகிறாள்.
'படிச்சதெல்லாம் மறந்து போயிடுது’ என்று புலம்புபவர்கள், ஞாயிற்றுக்கிழமையில் இங்கு வந்து, ஸ்ரீசரஸ்வதிதேவிக்கு வெண்தாமரைப் பூ சார்த்தி, தேர்வுக்குக் கொண்டு செல்லும் பேனா முதலான பொருட்களை சரஸ்வதிதேவியின் திருப்பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து வணங்கினால், அதிக மதிப்பெண்களுடன் தேர்வில் ஜெயிக்கலாம் என்பது உறுதி!
''ஸ்ரீவில்வவனேஸ்வரர் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது திருவிசயமங்கை திருத்தலம். இங்கேயுள்ள ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீவிஜயநாதர். அம்பாள்- ஸ்ரீமங்கைநாயகி. திருவைகாவூர், திருவிசயமங்கை இரண்டு தலங்களும், 10-ஆம் நூற்றாண்டில் சோழ மன்னரால் கட்டப்பட்ட திருக்கோயில்கள்.
திருவைகாவூர் தலத்துக்கு வந்து இறைவன், இறைவி மற்றும் ஸ்ரீசரஸ்வதி தேவியை வணங்கிவிட்டு, அப்படியே திருவிசயமங்கை தலத்துக்கு வந்து, ஸ்ரீமங்கைநாயகியையும் ஸ்ரீவிஜயநாதரையும் தரிசித்தால், கல்வியில் மேன்மை பெறலாம்; எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும்'' என்கிறார் குருக்கள் கோபாலகிருஷ்ணன். 
தேர்வுக் காலத்தையட்டி, முன்னதாக ஐந்து பிரதோஷ பூஜைகளில், மாணவர்களுக்காகச் சிறப்பு அபிஷேக- பூஜைகள் நடைபெறுமாம். இந்த நாளில், வெளியூரில் இருந்தெல்லாம்கூட பெற்றோர்கள், தங்கள் மகன் அல்லது மகளின் பெயர், நட்சத்திரம் ஆகியவற்றை எழுதி அனுப்பி, அர்ச்சனை செய்யச் சொல்வார்களாம்!
மார்ச் மாதம் துவங்கியதும்... தஞ்சை, திருவாரூர், கும்பகோணம், மன்னார்குடி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும், பிரதோஷ நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், திருவைகாவூர் ஸ்ரீசரஸ்வதிதேவியையும் திருவிசயமங்கையில் உள்ள ஸ்ரீவிஜயநாதரையும் வணங்குவதற்காகத் திரள்கின்றனர் பக்தர்கள்.
மாணவர்களே! கல்வியில் ஞானமும் பரீட்சையில் வெற்றியும் அருளக் காத்திருக்கின்றனர் ஸ்ரீசரஸ்வதி தேவியும், ஸ்ரீவிஜயநாதரும். தரிசித்துப் பலன் பெறுங்கள்!   

Comments