தேர்வில் ஜெயிக்க... தெய்வ பாசுரங்கள்!

ஸ்ரீமந் நாராயணன்மீது தாங்கள் கொண்ட பக்தியை, அன்பை பாசுரங்களாக வடித்து உலகுக்குத் தந்தனர் ஆழ்வார் பெருமக்கள். பக்திப் பெருக்கில் திளைத்து அவர்கள் அருளிய பாசுரங்களைப் பாடி, மாலவனைத் தொழுதிட, எல்லா நலன்களும் பெறலாம். அவற்றுள், நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி (முதல் பத்து) பாடல்களில், கடைசி பதிகம் கல்வியையும் ஞானத்தையும் அள்ளித் தருமாம். இதை தனது பாசுரத்திலேயே தெளிவுபடுத்தியுள்ளார் நம்மாழ்வார்.
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை
தென்குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவு இலர் கற்பரேல் கல்விவாயுமே!
- என்று பாடியிருக்கிறார் நம்மாழ்வார். அதாவது, 'மிகச் சிறந்த ரத்னத்தைப் போல் மின்னுபவனும், வானவர்களுக்கெல்லாம் கண்ணனாய்... ரட்சகனானவனும், தனக்குத் தானே ஒரு ஆபரணம் போல இருக்கின்ற பெருமாளைக் குறித்து, நம்மாழ்வாராகிய சடகோபன் பாடின ஆயிரம் பாசுரங்களுள், இந்தப் பத்து பாசுரங்களையும் கருத்துடன் மீண்டும் மீண்டும் கற்பவருக்கு, நல்ல கல்வி ஞானம் உண்டாகும்’ என்பதே இந்தப் பாடலின் பொருள்.
பள்ளி இறுதித் தேர்வு நெருங்கும் இந்த வேளையில்... மாணவர்கள் அனுதினமும் கோயிலுக்குச் சென்றோ அல்லது வீட்டில் விளக்கேற்றி வைத்து, பெருமாளின் திருவுருவப் படத்தின் முன்போ நின்று வணங்கி, இந்தப் பாடல்களைப் படித்து வழிபட, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறலாம்.
இதோ, கல்வி வரம் அருளும் நம்மாழ்வாரின் பாசுரங்கள், உங்களுக்காக!
பொருமாநீள்படை ஆழி சங்கத்தொடு
திருமாநீள்கழல் ஏழுலகும் தொழ
ஒருமாணிக்குற ளாகிநிமிர்ந்த அக்
கருமாணிக்கமென் கண்ணுளதாகுமே. (1.10.1)
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால்தொழில்
எண்ணிலும்வரு மென்னினிவேண்டுவம்
மண்ணும்நீரு மெரியும் நல்வாயுவும்
விண்ணுமாய்விரியு மெம்பிரானையே. (1.10.2)
எம்பிரானையெந்தை தந்தைதந்தைக்கும்
தம்பிரானை, தண் தாமரைக்கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடைமார்வனை
எம்பிரானைத் தொழாய் மடநெஞ்சமே. (1.10.3)
நெஞ்சமேநல்லை நல்லை உன்னைப்பெற்றால்
என்செய்யோம் இனியென்னகுறைவினம்?
மைந்தனை மலராள் மணவாளனை
துஞ்சும்போதும் விடாதுதொடர்க்கண்டாய் (1.10.4)
கண்டாயேநெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
எண்டானுமின்றியே வந்தியலுமாறு
உண்டானையுலகேழு மோர்மூவடி
கொண்டானை கண்டு கொண்டனைநீயுமே (1.10.5)
நீயும்நானுமிந் நேர்நிற்கில் மேல்மற்றோர்
நோயும்சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமா யிவ்வுலகினில்
வாயுமீசன் மணிவண்ணனெந்தையே (1.10.6)
எந்தையேயென்று மெம்பெருமானென்றும்
சிந்தையுள்வைப்பன் சொல்லுவன்பாவியேன்
எந்தையெம்பெருமானென்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே (1.10.7)
செல்வநாரண னென்றசொல்கேட்டலும்
மல்கும்கண்பனி நாடுவன்மாயமே
அல்லும் நன்பகலும் மிடைவீடின்றி
நல்கியென்னை விடான்நம்பி நம்பியே (1.10.8)
நம்பியைத்தென் குறுங்குடிநின்ற அச்
செம்பொனேதிக ழும்திருமூர்த்தியை
உம்பர்வானவ ராதியஞ்சோதியை
எம்பிரானையென் சொல்லிமறப்பனோ (1.10.9)
மறப்பும் ஞானமும் நானொன் றுணர்ந்திலன்
மறக்குமென்றுசெந் தாமரைக்கண்ணொடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை
மறப்பனோவினி யானென்மணியையே? (1.10.10)

Comments