திருக்கயிலாய இசை வாத்தியங்கள்!

சென்னை, கோயம்பேடு லவபுரீஸ்வரர் திருக்கோயிலில் ஒருநாள் அதிகாலைப் பொழுதில் நடைபெற்ற, ‘திருவாசகம் முற்றோதுதல்’ நிகழ்ச்சியில் சிவனடியார்கள் பலர் பங்கேற்றனர். அப்போது, அங்கே இசைக்கப்பட்ட அபூர்வமான சில இசைக் கருவிகள் நம்மைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தின. எந்த ஒரு கோயில் விழாவிலும் கண்டிராத அந்த இசைக்கருவிகளும், அவற்றிலிருந்து வெளிப்பட்ட வித்தியாசமான இசையும் நம்மைப் பரவசப்படுத்தியதுடன், சிவபெருமானின் தன்மையையும், பெருமைகளையும் உணர்த்து வதாகவும் அமைந்திருந்தன.

நம் மனதில் புனிதமான உணர்வுகளைத் தூண்டி, சிவ சிந்தனையில் நம்மை ஆழ்த்தும் இந்த இசைக்கருவிகள் இசைக்கப்படும்போது பாடல்கள் ஏதும் பாடப்படுவதில்லை. இசைக்கப்படும் ஒலியின் அதிர்வுகளே, சிவனின் பாதங்களில் நாம் அடிபணியும் அனுபவத்தைத் தருகின்றன. பித்தளை மற்றும் வெண்கலத்தால் ஆன இக்கருவிகளின் பெயர் ‘திருக்கயிலாய இசைக்கருவிகள்’ என்றும், இக்கருவிகள் ஒவ்வொன்றும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்தவை என்றும் சொல்லி ஆச்சரியப்பட வைத்தனர்.
கொக்கறை, எக்காளம், தவண்டை, கொடு கொட்டி, நகரா என நீண்டுகொண்டே சென்ற இந்த இசைக்கருவிகள் ஒவ்வொன்றும் சிவாலயங்களிலே ஒருகாலத்தில் சிவ நாதமாக ஒலித்துக்கொண்டிருந்தவை. யாழ், உயிர்த்தூம்பு, குறும்பரந்தூம்பு போன்று காலத்தால் மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, இன்னும் சொல்லப்போனால் திட்டமிட்டே ஒதுக்கப்பட்ட நம் தமிழ் மண்ணின் பாரம்பரிய இசைக்கருவிகள்தான் இவை.

துத்தங் கைக்கிள்ளை விளரிதாரம் உழைஇளி

ஓசைபண் கெழுமப்பாடிச் சச்சரி கொக்கரை தக்கையோடு

தகுணிதம் துந்துபி தாளம்வீணை மத்தளங் கரடிகை வன்கைமென்றோல் தமருகங்

குடமுழா மொந்தை வாசித் தத்தனை விரவினோ

டாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே

- என காரைக்கால் அம்மையார் 11-ம் திருமுறையில் இக்கருவிகள் பற்றிப் பாடியுள்ளார்.

70-க்கும் மேற்பட்ட இந்த இசைக்கருவிகளின் பயன்பாடு சோழர்களின் காலத்துக்குப் பிறகு, படிப்படியாக குறைய ஆரம்பித்தன. அதற்குப் பிறகு வந்த மன்னர்களும் பெரிய அளவில் இக்கருவிகளை ஆதரிக்காமல் விட்டுவிட, பின்னர் வெளிநாட்டு இசைக்கருவிகளின் மோகத்தால் முற்றிலுமாக அழியும் நிலைக்குச் சென்றுவிட்டது. தற்போது இந்த வகையில் 30-க்கும் குறைவான இசைக்கருவிகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.
எழும்பூர் அருங்காட்சியகத்திலும் திருக்கயிலாய இசைக்கருவிகள் இடம் பெற்றிருக்கின்றன.

இக்கருவிகளின்பால் ஈர்க்கப்பட்டு, இது பற்றி ஆராய்ந்து முழுமையாகத் தெரிந்து கொண்ட புதுச்சேரியைச் சேர்ந்த இராமலிங்கம் ஐயா என்பவர், பல்வேறு முயற்சிகளை மேற்கொண் டதன் பலனாக, இன்று தமிழ்நாட்டில் பரவலாக திருத்தணி, செய்யாறு, காஞ்சிபுரம், பவானி, தஞ்சாவூர், கும்பகோணம் என 30-க்கும் மேற்பட்ட தலங்களில் திருக்கயிலாய இசைக் கருவிகளை இசைக்கும் குழுக்கள் உருவாக்கப்பட்டு, இசைக் கருவிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஆங்காங்கே சிவாலயங்கள், திருமுறை ஊர்வலங்கள், குடமுழுக்கு திருவிழாக்கள், திருவாசகம் முற்றோதுதல் என சிவனைச் சார்ந்த அத்தனை விழாக்களிலும் இக்குழுக்களின் திருக்கயிலாய இசைக்கருவிகள் முழங்கி, சிவனடி யார்களைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன.  சிவாலயங்கள் இல்லாமல் வேறு எங்கேனும் இந்த இசைக் கருவிகளை இசைக்க நேரிடும்போது, சிவபெருமானின் திருவுருவத்தை வைத்து வழி பட்ட பிறகே இசைக்கத் தொடங்குகிறார்கள்.

மேலும், பாழடைந்து கிடக்கும் கோயில்களில் திருக்கயிலாய இசைக்கருவிகளை இசைத்தால், விரைவிலேயே அங்கு குடமுழுக்கு நடைபெறும் என்பது தொன்றுதொட்டு நிலவி வரும் நம்பிக்கை.
திருக்கயிலாய இசைக்கருவிகளை இசைப்பதில் பயிற்சி பெற்றவரும், ‘கோசை நகரான்’ என்ற பெயரில் இசைக் குழுவை நடத்தி வருபவருமான சிவகுமார் என்ற அன்பரைச் சந்தித்து, அவரிடம் திருக்கயிலாய இசைக் கருவிகள் பற்றி கேட்டோம்.
‘‘நான் ஒரு தனியார் மோட்டார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். சில வருடங் களுக்கு முன்பு, திருவாரூர் தியாகராஜர் திருக் கோயில் விழாவில் இக்கருவிகள் இசைக்கப் படுவதை ஒரு பார்வையாளனாக நின்று ரசித்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்துக்கு மேல் அங்கே என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. அந்த இசைக்கருவிகளின் இசையிலே ஒன்றிணைந்து, நான் அணிந்திருந்த சட்டையைக் கழற்றிவிட்டு, திருநீற்றை அள்ளிப் பூசிக்கொண்டு என்னை மறந்து ஆடத் துவங்கிவிட்டேன்.
பின்னர், எங்கேயெல்லாம் திருவிழாக்களில் இக்கருவிகள் இசைக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் செல்வதை வழக்கமாகக் கொண்டேன். ஒரு கட்டத்தில் முழுமையாக இக்கருவிகளோடு ஒன்றிணைய விரும்பினேன். அதற்காக, திருக் கயிலாய இசைக்கருவிகளை இசைக்கும் குழுவிலே சேர்ந்து பயிற்சி பெற்று, தற்போது தனியாக ஒரு குழுவையே உருவாக்கியிருக்கிறேன்.

இக்குழுவில் இருப்பவர்கள் மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என வெவ்வேறு தளங்களில் இயங்கக்கூடியவர்கள். அனைவருமே இந்த இசைக் கருவிகளால் ஈர்க்கப்பட்டு இணைந்தவர்கள்தான். இக்கருவிகளை வாசிப்பதற்காக இவர்கள் ஊதியம் பெறுவதில்லை; சிவனுக்குச் செய்யும் தொண்டாகவே நினைக் கிறார்கள். இக்கருவிகளை இசைக்கும்போது, தங்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்வு கிடைப்பதோடு மட்டுமல்லாமல், தம் சொந்த வேலைகளில் உற்சாகமாக இயங்குவதற்கான ஆற்றலும் கிடைக்கிறது என்கிறார்கள்.

இக்கருவிகளை இசைத்துப் பழக விரும்புபவர் களுக்கு இவர்கள் இலவசமாகவே கற்றும் கொடுக் கிறார்கள். இவர்களின் மனதில் இருக்கும் ஒரே எண்ணம், இந்தத் திருக்கயிலாய இசை உலகம் முழுவதிலும் ஒலிக்க வேண்டும், சாம கான பிரியனான அந்த ஆதி சிவனுக்கே உரிய இசைக் கருவிகளின் அடையாளத்தை இவ்வுலகம் உணர வேண்டும் என்பதுதான்!’’ என்கிறார் சிவகுமார்.
செவிமடுக்கும் தருணத்தில் நம்மையும் சிவ கணத்தில் ஒருவராகவே உணரச்செய்யும் மகத்துவமான திருக்கயிலாய இசைக் கருவிகளில் சிலவற்றைக் குறித்து அறிவோமா?
கொம்புத்தாரை: விலங்குகளின் கொம்பு களைக் கொண்டு அக்காலத்தில் தயாரிக்கப்பட்ட இக்கருவியானது நாட்டுப்புற இசையிலும் கோயில் விழாக்களிலும் பயன்படுத்தப்பட்டது.
கொக்கறை:  மாட்டின் கொம்பையும் இரும்புக் குழலையும் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்த இசைக் கருவி, கோயில் விழாக்களில் பயன்படுத்தப்பட்டது.
சேமக்கலம்: வெண்கலத்தாலான இக்கருவி, கோயில் விழாக்களில் இசைக்கப்பட்டது. பின்னர், திருமாலின் அடியவர்களாகிய தாசர்களைப் போற்றி ஆண்கள் மட்டுமே ஆடும் தாதராட்டம் என்ற நடனத்திலும் இக்கருவி இசைக்கப்பட்டது. தற்போது, ஸ்ரீரங்கம் முதலான சில ஆலயங்களில் மட்டும் சேமக்கலம் இசைக்கும் வழக்கம் தொடர்கிறது.
சங்கு: இன்றைக்கும் புழக்கத்தில் இருக்கும் இந்த இசைக்கருவி மகா விஷ்ணுவின் சின்னமாகத் திகழ்கிறது. பழங்காலம் முதலே கோயில் வழிபாடு களில் இசைக்கப்பட்ட மிக முக்கிய இசைக்கருவி இது.
நகரா: கோயில்களின் நுழைவாயில்களிலேயே மிகப்பெரியதாக இடம்பெற்றிருந்த இந்த இசைக்கருவி, கோயில் விழாக்கள், சிறப்பு ஆராதனை களில் இசைக்கப்பட்டது.

தற்போது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் இசைக்கப்பட்டு வருகிறது.

உடுக்கை: கிராமிய இசைக்கருவி வகையைச் சேர்ந்தது. மரத்தால் செய்யப் பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்துப் பருத்திருப்பதால், இதை ‘இடைசுருங்கு பறை’ என்றும், ‘துடி’ என்றும் அழைத்தனர்.
பிரம்மதாளம்: பலதரப்பட்ட இசைக்கருவிகள் வாசிக்கப்படுகையில், அந்த இசையின் கால அளவுகளைச் சீர்படுத்தும் கருவியாக தாளம் செயல்படும். கைகளுக்கு அடக்கமாக வட்ட வடிவில், உலோகத்தினாலான இரு பாகங்களைக் கொண்டது இது. அவ்விரண்டையும் சேர்த்்துத் தாளம் இசைப்பர். இது ஒரு கஞ்ச வகை இசைக்கருவியாகும்.
தப்பு: தமிழ் இசையில் நெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய இசைக் கருவி. இதற்குப் பறை என்ற பெயரும் உண்டு. அரிப்பறை, மென்பறை, இன்னிசைப்பறை,  தீட்டைப்பறை, மன்றோல் சிறுபறை, தொண்டகப் பறை, தொண்டகச் சிறு பறை,  பொருநர்பறை, ஆடுகளப்பறை எனப் பல பெயர்களில் சங்க இலக்கியங்களில் பறை குறிப்பிட்டப்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பறை, முல்லைப்பறை, மருதப் பறை, நெய்தற்பறை, பாலைப்பறை என ஐந் திணைகளிலும் பறை இசைக்கப்பட்டிருக்கிறது. இதன் பெருமையை அறிந்திராத தற்கால மக்களில் பலர் பறையையும், அக்கருவியை இசைப்பவர்களையும் தவறாகச் சித்தரித்து வருவது வருத்தத்தை அளிக்கிறது.

இவை போக நெடுந்தாரை, கர்ணா, தமருகம், குழித்தாளம், உறுமி, கொடுகொட்டி எனத் தமிழர்களின் பாரம்பரியத்தில் பயணித்து வந்த இந்த இசைக்கருவிகளை தற்காலப் பண்பாடு, கலாசார முன்னேற்றம் என்ற மாயை களில் சிக்கி, அலட்சியம் செய்வதை விடுவோம்; இந்தப் பாரம்பர்ய இசையோடு இணைந்து பயணிப்பதே உண்மையான தமிழர் பண்பாடும் கலாசாரமும் என்பதை உணர்வோம்!

Comments