பசுவுக்குள் பாலாயிருக்கும் இசக்கியம்மா!

கிராமங்களைக் காவல் காத்து மக்களை குறை இல்லாமல், மகிழ்ச்சியாக வைத்திருக்கும் குல தெய்வங்கள் பட்டியல் நீளமானது. அதன் கதைகளும் பாடல்களும் தாராளம். அதன் வரிசையில் வருபவர் காத்தவராயன்.
கிராமங்களில் சிலருக்காவது காத்தவராயன் என்ற பெயர் இல்லாமல் இருக்காது. இதற்கு துன்பம் வராமல் காத்த கடவுள் என்று பொது அர்த்தமாய் சொல்லுவர். விழாவின்போது கத்திகளால் படிக்கட்டு அமைத்து காத்தவராயன் வேடமிட்ட பூசாரிகள் கத்திகளின் மேல் நடந்து, பழங்களையும் பூக்களையும் பக்தர்கள் மீது வீசி ஆசி வழங்குவார். பூ கிடைத் தவர்க்கு புத்திர பாக்கியமும், பழம் கிடைத்தவர்களுக்கு பில்லி சூன்யம் விலகலும் காத்தவராயன் வழங்குகிறார் என்று நம்பிக்கை. ஊர் தெய்வங்களைப் பட்டியலிட்டு அழைக்கும்போது,
‘ஒலி தரும் சக்காதேவி
பலி கொளும் காத்தவராயா
என்டி முனி சன்டி வீரா
சண்டா பிரி கண்டதுண்டா’ என்றே தொடங்கும்.
பிரபலமான, ‘மாரியம்மன் தாலாட்டில்’
‘காத்தவராயனைத்தான்
கட்டழகி தானழையும்’
என்ற வரி இடம் பெறுகிறது.
இலங்கையில் ‘சிந்து நடை காத்தவராயன் கூத்து’ என்ற கலை வடிவம் பிரசித்தியானது. காதல் கலப்பு திருமணம் செய்து கழுவேற்றப்பட்ட காத்தவராயன் பின்னாளில் முத்துமாரியின் மகனாகப் பிறந்து முற்பிறவி சாபம் காரணமாக மரணம் எய்தி மீண்டும் ஈசனிடம் தஞ்சமானதாக கதை மாறியது என்பர்.
‘கடகடன்னு மழை கொட்டணுமா
காத்தவராயனை வேண்டிக்கோ
கானல் நீரிலும் நீந்தணுமா
காத்தவராயனைக் கூட்டிக்கோ
கஷ்டம் சாம்பலா பொசுங்கணுமா
காத்தவராயனை கெட்டியா பிடிச்சுக்கோ’
-என்ற பாடல் ஒன்று போதும், காத்தவ ராயன் பெருமை உரைக்க. இந்தப் பாடலின் கவித்துவமும் பக்தி பெருமிதமும் ‘கானல் நீரிலும் நீந்தலாம்- காத்தவராயன் துணை இருந் தால்’ என்பதில்தான் மிளிர்கிறது. என்னே ஒரு அபரி மிதமான நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் வாழ்வில் வசந்தத்தை வரவழைக்கிறது. அதுதான் பாமர பக்தியின் பாலபாடம்.
இன்றும் சில கிராமங்களில் இசக்கி அம்மன் குல தெய்வமாக குடியிருக்கிறாள். இசக்கி என்பது இயங்கி என்ற பொருளிலும் சொல்லப்படுகிறது. காளியின் யுத்த தேவதைகளில் ஒருத்தியான நீலியின்
சகோதரி இசக்கி என்பர். கன்யாகுமரி, சேலம், சிவ காசி, திருநெல்வேலி பகுதிகளில் இசக்கி அம்மன் வெகு பிரசித்தம். கையில் குழந்தையோடு இருக்கும் இசக்கி அம்மன் விக்ரகம் அமைந்திருக்கும் இடத்தில் பெரும்பாலும் ‘பால்கள்ளு’ என்ற செடி அதிகமிருக்கும். இந்தச் செடியின் கிளையை ஒடித்தால் உடனே வெண்ணிறபால் ஒழுகும். கோயில்களில் அமைந்திருக்கும் ஸ்தல விருட்சம் போல இதுவும் ஒரு குறியீடாக இருக்கலாம். கையில் குழந்தை - சுற்றிலும் பால் என்பதான குறியீடு.இசக்கி அம்மன் குறித்து பேராசிரியர் நாய. வானமா மலை ஆய்வு செய்த கட்டுரைகள் விசேஷமானது. ஆரல்வாய்மொழியில் இசக்கி அம்மன் பிரம்மாண்ட உருவில் இருப்பார். தன்னைக் கொன்ற ஒருவனை ஏழு ஜன்மமாகப் பழி வாங்க சபதம் எடுக்கிறாள் இசக்கி. ஏழாவது ஜன்மத்தில் அவனை பழிவாங்கிக் கொல்கிறாள். இதைக் கேள்விப்பட்ட அவனின் நிறை மாத கர்ப்பிணியான மனைவி மயங்கி விழுகிறாள். விழும்போது, என் குழந்தை உயிருடன் இந்த உலகில் வந்த பிறகே உயிர் பிரிய வேண்டும்" என கட வுளிடம் வேண்டி மயங்கி விழுகிறான். அப்படி விழுந்து கிடப்பவளின் வயிற்றிலிருந்து குழந்தையை பிரித்தெடுத்து, தன்கையில் ஏந்தி அவள் விருப்பத்தை பூர்த்தி செய்து சாந்தமாகி அமர்கிறாள். குழந்தையைக் காக்கிறாள். உச்சகட்ட பழிவாங்கும் தோரணையிலும் பக்தர்களின் கோரிக்கையை கருணையோடு பரிசீலித்து காப்பவள் இசக்கி அம்மன் என்பதாலேயே தவறு செய்பவர்களை அச்சுறுத்தும் சக்தியாகவும் கையேந்தி வரம் கேட்பவர்க்கு கருணை பொழியும் சாமியாகவும் விளங்குகிறாள் இசக்கி அம்மன்.
‘பாடும் புலவர்க்கு பனுவல்தான் இசக்கி
பசுவுக்கள் பாலாயிருக்கும் இசக்கி
கரும்பு கனுவிலும் முளைவிடும் இசக்கி
அணுவுக்குள் அணுவாய் ஆளும் இசக்கி
அம்மான்னு சொன்னா அணைக்கிற இசக்கி
நாடி வந்து கேக்குறோம் இசக்கி
நல்லதை பண்ணு தாயே இசக்கி
பிள்ளை காத்து தாம்மா இசக்கி
பெரிய மனசு கடல்காரி இசக்கி...’ என்றெல்லாம் பாடும் பாடலில் கொஞ்சம் பயத்துடனே தன்
கோரிக்கையை வைக்கிறார்கள். நிச்சயம் இது ஆணின் தோரணையில் அமைந்த பாடலாகவே இருக்கும். ஏனெனில், இன்னொரு பாடலில் ஒருத்தி இப்படி உரிமையோடு கேட்கிறாள் பயமின்றி...
‘மோசம் பண்ணிட்டு முத்தம் கொடுக்கிறவனுக்கு
மோட்சம் தராதே இசக்கி
பாசம் காட்டி பாதாளத்தில் தள்ளுறவன் மேல்பார்வை வீசாத இசக்கி’
என்று ‘அம்மா’ என்று கொஞ்சுபவனுக்கெல்லாம் இசக்கி பணியக் கூடாது. மற்ற பெண்களிடம் அவன் எப்படி நடந்து கொள்கிறான் என பார்த்துதான் கருணை புரியணும் என்று அம்மனுக்கு பாடம் எடுக்கிறாள் கிராமத்தி. இதுதான் அதீத பக்தியின் உரிமை வெளிப்பாடு.
காத்தவராயன், இசக்கி... இப்படியான சிறு தெய்வ வழிபாட்டில் தெய்வங்களை வாழ்த்தி வர வழைக்கின்ற பூசாரியின் பாடலில் முதலில் வருகின்ற ஒரு தெய்வம் முத்தால ராவுத்தன். இந்த தெய்வம் வந்துதான் வரிசையாக மற்ற தெய்வங்கள் அழைக்கப் படுகிறது. தீய சக்திகளை அப்புறப்படுத்திகாக்கும் கடவுளாக முதலில் முத்தால ராவுத்தனை ஆராதிக்கிறார்கள்.
‘ஒலி தரும் சக்கரதேவி பலி கொளும் காத்தவராயா
ஒண்டிமுனி சண்டிவீரா சண்டாபிரி முத்தாலுராவுத்தா
உப்பு கருவாடு பொறியில் அப்புறம் கஞ்சா சுருட்டு
ஓரிருந்த பீப்பாயில் நேரிருந்த சாராயம்’
என்று பூசாரி பாடும் பாடலில், தான் என்ன உண்கிறானோ, தனக்கு எது சந்தோஷத்தைத் தருமோ, தன்னிடம் என்ன இருக்கோ அதை எந்த பேதமும் பார்க்காமல், கண்ணப்ப நாயனார்போல ‘இந்தா வா... சாப்பிடு’ எனக் கொடுக்கும் அன்பும் உரிமையும்தான் பாமர பக்தியின் உன்னதம். இறைவனுக்கும் மனித னுக்குமான இடைவெளி அழிந்த நிழலென தன்னோடு நிறுத்திக்கொள்வதுதான் அவன் பக்தியின் அசலான அழகு.
‘முடியாததை முடிச்சு வெக்கும் முத்தால ராவுத்தன் - என்
முனகல் பொறுக்க மாட்டா முத்தால ராவுத்தன்
அழுக்கு துணியாட்ட அடிச்சி தொலைப்பான் முத்தால ராவுத்தன்
அவனிருக்க கவலை இல்ல முத்தால ராவுத்தன்
ரத்தக்காரன் யுத்தக்காரன் என் முத்தால ராவுத்தன்
குத்தம் குறை ஏதும் இல்ல அவன் குருதிக்காரன் ராவுத்தன்’
என்பதில் என் குருதிக்காரன் - என் இரத்தமாக என் உடம்பில் ஓடி, என்னை உயிர்ப்போடு இயங்குபவன் எப்போதும் எனக்குள்ளேயே இருப்பவன் என்று சொல்லும் ஞானம் அபரிமிதமானதுதானே.
 
வீட்டிலேயே சிவராத்திரி பூஜை
சிவராத்திரி துளிகள்
உங்கள் வீட்டில் சிவலிங்கம் அல்லது நடராஜர்
சிலை இருந்தால், வீட்டிலேயே நான்கு ஜாமமும் பூஜை செய்யலாம். அன்று பகலில் சாப்பிடாமல் மாலையில் பழம், பால் மட்டும் அருந்தி பூஜையைத் தொடங்க
வேண்டும். மாலை 6.30, இரவு 9.30, 12.30, அதிகாலை 3 மணி ஆகிய நேரங்களில் வில்வ இலை மற்றும் மலர் தூவி தீபாராதனை காட்டினாலே போதும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து ‘சிவாய நம’ என்ற மந்திரம் சொல்ல லாம். சிவன் தொடர்பான கதை மற்றும் பாடல்களை பக்தியுடன் ஒருவர் சொல்ல, மற்றவர்கள் கேட்கலாம்.

Comments