நல்லனவெல்லாம் நல்கும் குக்கே சுப்ரமண்யா

ர்நாடகாவின் ஏழு முக்கிய, பிரதான புனித க்ஷேத்திரங்களில் குக்கேயும் ஒன்று. குமார பர்வதம் எனப்படும் குமாரமலைக்கும், சேஷ பர்வதம் எனப்படும் சேஷ மலைக்கும் இடையில் குக்கே அமைந்துள்ளது. இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் குக்கே, புராண காலத்திலிருந்தே மிகவும் புகழ் வாய்ந்தது. 

இங்குதான் தாரகாசுரனையும், சூரபத்மனையும், பத்மாசுரனையும், அல்லல்கள் அளித்த அசுரர் அநேகரையும் ஷண்முகன் சம்ஹாரம் செய்தான் என்று இங்கிருப்பவர்களால் நம்பப்படுகிறது.

அசுரரை அழித்த பின் தனது வாளையும், மற்றைய ஆயுதங்களையும் குமாரமலைக்கு அருகில் ஓடிய நதி நீரில் தூய்மைப்படுத்தினான் குமரன்; அன்றிலிருந்து அந்நதி குமார தாரா என்று அழைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. 
மக்களின் மகிழ்ச்சியானது குமாரதாரா நதியின் நீரோட்டம் போன்று மகிழ்ச்சி வெள்ளமாகச் சென்றது. அல்லல்கள் நீங்கி ஆனந்தம் அடைந்த மக்கள் தங்களைக் காத்த தலைவன் குமார சுவாமிக்கு முடிசூட்டினர். குமாரபர்வதத்தில் கொலுவீற்றிருக்கச் செய்தனர்.
தேவேந்திரன் மயில்வாகனனிடம் தன் மகள் தேவசேனாவை மனைவியாக ஏற்குமாறு மன்றாடினான். கன்னியின் கரம் பற்ற கார்த்திகேயன் சம்மதித்தான். தேவேந்திரன் குமார பர்வதத் தின் அடிவாரத்தில், நதியோரத்தில் சுவாமி கார்த்திகா என்ற நகரத்தை நிர்மாணித்தான். மண விழாவையும் மகிழ்வுடன் நடத்தினான். அந்த நேரத்தில் பறவைகளின் பாதுகாவலன் கருடனுக் கும், அரவங்களின் அரசனான வாசுகிக்கும் இடையில் போர் மூண்டது. 

கருடனிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கயிலைநாதனைக் குறித்து குமாரபர்வதத்தில் கடுந்தவம் மேற்கொண்டான் வாசுகி. 

வாசுகியின் தவத்தால் மனமிரங்கிய மகேசன் அவனைக் குமாரபர்வதத்தில் எழுந்தருளியிருக்கும் சுப்ரமண்யனோடு ஐக்கியமாகுமாறு ஆணையிட் டார். அது மட்டுமன்றி, அண்டி வரும் பக்தர்களின் அல்லல்களைக் களையுமாறும் கட்டளையிட்டார். வாசுகியும் அவ்வாறே இணைந்தான். அன்றிலிருந்து இந்தத் தலத்தில் வாசுகியே சுப்ரமண்யாவாக அருள்பாலிக்கிறான். குக்கேயின் புகழ் அகிலமெங்கும் பரவ அதுவே காரணமாய் உள்ளது.
குமார பர்வதத்தின் அடிவார ஊரான குக்கே யில் மலைக்கு நேரெதிரே ஆறுமுகனின் ஆலயம் அமைந்துள்ளது. ஆலய வாசலில் பிரமாண்டமான தேர், சுப்ரமணியரின் சரிதத்தைச் சித்திரிக்கும் மரச்சிற்பங்களுடன் மாண்புடன் காட்சியளிக்கிறது.

உள்ளே நுழைந்தால், இருபுறமும் திண்ணைகள். இடதுபுறத் திண்ணையில் பல்லால ராயர் விக்கிரகம். திண்ணைகளை அடுத்து பக்தர்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்ள விசாலமான மண்ட பம். அதனைக் கடந்தால் கொடிமரம். எதிரில் ஒரு சந்நிதியில் துவாரபாலகர்கள் சகிதம், குக்கே லிங்கத்தேவர் குடிகொண்டுள்ளார். 

குமார பர்வதத்தில் ஒருமுறை தீப்பிடித்தபோது, அங்கு இருந்த அரவங்கள் அக்னியில் சிக்கின. உயிர் பிழைக்க உபாயம் ஏதுமின்றி, அவை அங்குமிங்கும் நெளிந்து அலைந்தன.

அப்போது அங்கு வசித்து வந்த மலேகுடியா எனும் ஆதிவாசிகள், அரவங்களை மீட்டு ஒரு கூடையில் இட்டுக் காத்து, கோயிலில் கொண்டு வந்துவிட்டார்கள்.  அந்தக் கூடையே நாளடைவில் லிங்கமாக உருக்கொண்டது. கன்னட மொழியில் குக்கே என்றால், கூடை என்று பொருள். ஆதலால் இந்த லிங்க சுவாமி குக்கே லிங்கத்தேவர் என்று அழைக்கப்பட்டார். ஊருக்கும் குக்கே என்ற பெயர் நிலைத்தது. இந்தக் காரணம் பற்றியே ஆலயத்தின் அனைத்து திருவிழாக்களிலும், பூஜை புனஸ்காரங்களிலும் பங்கேற்க மலேகுடியா ஆதிவாசிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
லிங்கத்தேவரை வணங்கிவிட்டுப் பிராகார வலம் வந்தால், நேர் பின்னால் கந்தனின் கருவறை. இங்கே எறும்புப் புற்றுதான் பிரதான தெய்வமாகக் கொண்டாடப்படுகிறது. 

புற்றுக்கு முன்னால் மயில் மீது அமர்ந்திருக்கும் சுப்ரமண்யரும், அவருக்குக் கீழே வாசுகி நாகமும், அதற்கும் கீழே சேஷ நாகமும் உலோகச் சிற்பங் களாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள். தீபங்களின் ஒளியில், சுப்ரமணியர் ஒளிர்கிறார். சந்நிதி வாசலில் ஆனந்தமான அமைதியின் ஆட்சி. புற்றுமண் இந்தத் தலத்தின் புனிதமான பிரசாதம். இந்தப் பிரசாதமானது ஒவ்வொரு கார்த்திகை ஏகாதசி அன்றும் தூப, தீப ஆராதனை களுக்குப் பிறகு அர்ச்சகர்களால் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. 

மூலவர் கருவறைக்கு நேர் எதிரே உமாமகேஸ்வரர் சந்நிதி. இங்கே உமாமகேஸ்வரரோடு விஷ்ணு, விநாயகர், ஆதித்யன், துர்காதேவி, உத்சவ சுப்ரமண்யர் ஆகியோரும் உலோக வடிவில் எழுந்தருளியிருக்கிறார்கள்.

சுப்ரமணியரின் கருவறைக்கு வலதுபுறம் லக்ஷ்மி நரசிம்மருக்கென ஒரு தனிக்கோவில். கர்நாடகத்தின் அனைத்து முருகர் ஆலயங்களிலும் நரசிம்மருக்கென ஒரு சந்நிதி இருப்பது உண்டு.  குக்கே ஆலயத்தின் நரசிம்மர் சந்நிதியை நிறுவியவர் மத்வாச்சாரியாரின் சகோதரரும், சிஷ்யருமான விஷ்ணுதீர்த்தாச்சாரியார்.  

சந்நிதியில் ஓர் உலோகப் பெட்டி மீது லக்ஷ்மி நரசிம்மரின் திருவுருவம் வடிக்கப்பட்டுள்ளது. அவரைச் சுற்றிலும் தசாவதார உலோகச் சிற்பங்கள். பெட்டியின் உள்ளே என்ன இருக்கிறது என்பது இதுவரை யாரும் அறியாத ரகசியம்.

உள்ளே இருப்பதை அறிய, அரசன் ஒருவன் ஒரு யானையை ஏவி, பெட்டியின் முகப்பை முட்டச் செய்தான். ஆனால், யானை திடீரென்று உயிரிழந்தது.
அதேபோல, பெட்டியில் இருப்பதை அறிந்துகொள்ள அதைத் திறக்க முயன்றிருக்கிறார் இளம் துறவி ஒருவர். பெட்டி திறக்க வில்லை. காதோரம் வைத்து ஆட்டிப் பார்த்திருக்கிறார். பெட்டியில் அசைவேதும் இல்லை. ஆனால் அதன் பிறகோ, துறவியின் தலை தானாக ஆட ஆரம்பித்தது. அந்த ஆட்டம் அவர் கடைசியில் சமாதி ஆகும் வரை ஓயவே இல்லை. 

விநோதமாகத் தோன்றினாலும், இந்த உண்மை நிகழ்வுகள், ஸ்ரீரீவாதிராஜா எழுதிய தீர்த்த பிரபந்தத்தில் பதிவாகி உள்ளன.

நரசிம்மரைத் தரிசித்து பிராகார வலத்தைத் தொடர்ந்தால், கருவறை கோபுரத்தில் அழகழகான மரச் சிற்பங்களின் அணிவகுப்பு. வித்தியாசமானதொரு தோற்றத்தில் சிவபெருமானும், விநாயகரும் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறார்கள்.

வெளிப் பிராகாரத்தில் பூததேவதை ஹோசாலிகம்மாவின் சந்நிதி. ஆலயத்தின் காவல் தெய்வம். அனைத்து கர்நாடக ஆலயங்களிலும் பூததேவதைகள் காவல் தெய்வங்களாக எழுந்தருளியுள்ளனர். 

கருடனின் பிடியில் இருந்து தப்பிக்க, சிவனை நோக்கி வாசுகி தவமிருந்த இடம் பிலத்துவாரம் என்றும், ஆதிசுப்ரமண்யர் ஆலயம் என்றும் அறியப்படுகிறது. இந்த ஆலயம் பிரதான கோயிலில் இருந்து சற்று தூரத்தில் உள்ளது. சரிவான கேரள கூரையுடன் ஓர் இல்லம் போல் காட்சி தரும் இதன் கருவறையிலும் புற்றுதான் மூலவராகக் கொண்டாடப்படுகிறது.

குக்கே இந்தியாவின் மிக முக்கியமான 108 சைவ க்ஷேத்திரங்களில் ஒன்று. இந்த க்ஷேத்திரம்ஆராதனைக்குரிய அரவங்களின் புனிதத்தலமாகக் கருதப்படுகிறது. 

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்களின் பாவங்களில் இருந்தும், சாபங்களில் இருந்தும் விடுபடுவதற்காக குக்கே சுப்ரமண்யா ஆலயத்துக்கு வந்து, அங்கு எழுந்தருளியுள்ள வாசுகி சுப்ரமணியரை வணங்குகிறார்கள். நோய் நொடிகளில் இருந்து தங்களைக் காத்தருளுமாறு வேண்டுகிறார்கள். ஆரோக்கியத் துக்காகவும், பொருளாதார மேம்பாட்டுக்காகவும் வேண்டுகிறார்கள். மழைக்காகவும், மண் வளத்துக்காகவும் மன்றாடுகிறார்கள்.

ஆலயத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தாலும், குமாரதாரா நதியில் மூழ்கி எழுந்தாலும் தோல் வியாதிகள் எதுவாக இருந்தாலும் நீங்குகின்றன.

பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவது பெரும்பாலும் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் திருவிழாவின்போதுதான்! 

இந்தத் திருவிழா பருவத்தில் அமையும் ஸ்கந்த சஷ்டி அன்று தேரோட்டம் நிகழ்கிறது. பழைய, பிரமாண்டமான தேரில் சுப்ரமணியரின் திருவீதி உலா மிகக் கோலாகலமாக நிகழ்கிறது. 

குக்கே வாருங்கள்; குமாரசுவாமியான சுவாமிநாதனை தரிசியுங்கள். அகத்தில் ஆனந்தம் பெருகி, நிலைப்பதை அனு பவித்து உணருங்கள்!
படங்கள்: பொன்.காசிராஜன்

திருத்தலக் குறிப்புகள்:

தலத்தின் பெயர்: குக்கே
சுவாமியின் திருநாமம்: சுப்ரமண்யா
எங்கே உள்ளது?: கர்நாடகாவில், மங்களூரில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில்.
எப்படிப் போவது?: சென்னையில் இருந்து மங்களூருக்கு விமானம், ரயில், பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம். மங்களூரில் இருந்து குக்கேவுக்கு பேருந்து மற்றும் காரில் செல்லலாம்.
எங்கே தங்குவது?: குக்கேயில் குறைந்த செலவில், வசதியான தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன. ஆலயத்தில் இரு வேளையும் அன்னதானம் அளிக்கப்படுகிறது. இந்த அன்னதானத்தை தங்களுக்கு வழங்கப்படும் கௌரவமாகக் கருதி மக்கள் ஏற்கிறார்கள்.
தரிசன நேரம்: காலை 7.00 மணி முதல் 1.30 வரை; மாலை 3.30 முதல் 9.00 வரை. ஆதி சுப்ரமண்யர் ஆலயமான புற்றுக் கோயில் தரிசன நேரம்: காலை 6.00 மணி முதல் இரவு 7.00 வரை.

Comments