இயற்கையோடு இயைந்த கோயில்கள்!

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் அருள் புரிவான்’ என்பர். சித்தர்கள் அரிய மூலிகைகளைக் கண்டறிந்ததும், முனிவர்கள் தவம் செய்ததும் மலை மீதுதானே! எனவேதான், மன்னர்கள் மலை மீதும், குன்றின் மீதும், நதிக்கரைகளிலும், கடற்கரையிலும் கோயில்களை அமைத்து வழிபாடு செய்தனர்.
மலைக்கோயிலுக்குச் செல்வதால் மனம்
அமைதி பெறுகிறது. திருவண்ணாமலை கிரிவலம், சதுரகிரி யாத்திரை போன்றவை புனிதமானவை. ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ என சரண கோஷம் சொல்லி சபரிமலை யாத்திரை சென்று ஐயப்பனை தரிசித்து பெரும் பயன் அடைகின்றனர்.
ஏழு மலை மீது கோயில் கொண்ட ஸ்ரீவேங்கடாசலபதி கலியுகத்தின் கண் கண்ட தெய்வமாக, நாடி வரும் பக்தர்களுக்கு நல்லருள் புரிகிறார். திருக்கயிலாய யாத்திரை சென்று கயிலைநாதனை தரிசித்து பிறவிப் புண்ணியம் அடையும் பக்தர்கள் எண்ணற்றோர். பழநி மலையில் போகர் நவபாஷாண மூலிகையால் ஸ்ரீபாலதண்டாயுதபாணி சிலையை அமைத்துள்ளதால், முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பஞ்சாமிர்தம் நோய்தீர்க்கும் மாமருந்தாகத் திகழ்கிறது.
மாமல்லபுரம், திருச்செந்தூர், ராமேஸ்வரம், கன்யாகுமரி, பூம்புகார் போன்ற கடற்கரைக்
கோயில்கள் சிறப்பு மிக்கவை. காவிரி நதிக்கரையில் அமைந்த ஸ்ரீரங்கம், கங்கை கரையில் அமைந்த காசி போன்ற பல திருத்தலங்கள் நதிக்கரையில் அமைந்தவை. குற்றால நீர்வீழ்ச்சி பொங்கி வழியும் இடத்தில் உள்ள குற்றாலநாதர் ஆலயம் சிறப்பு மிக்கது.
அறிவியல் விளக்கம்: கரடு முரடான மலைப் பாதையில் ஏறுவதால் பாதங்களில் உள்ள அக்யூபிரஷர் புள்ளிகள் தூண்டப்பெற்று உடல் நலம் சீராகிறது. நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தினால் மன அமைதி, உற்சாகம் கிடைக்கிறது. மலையில் உள்ள பலவித மூலிகைகளினால் சுத்தமான பிராண வாயு கிடைக்கிறது. இதனால் மூளை, இதயம், நுரையீரல் போன்றவற்றின் திறன் மேம்படுகிறது. நகர வாழ்க்கையில் மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் நமக்கு இயற்கை அழகுடன் இயைந்த மலைக்கோயில், கடற்கரை
கோயில், நதிக்கரைக் கோயில்களை தரிசிப்பதால் இறையருளுடன் புண்ணியமும், உடல் நலமும் கிடைக்கிறது.
கடற்கரையில் சுவாசிக்கும் அயோடின் கலந்த
காற்றால் தைராய்டு சுரப்பி நன்கு இயங்கும். முன்னோர்கள் இவற்றைக் கருத்தில் கொண்டே மலைக் கோயில், கடற்கரைக் கோயில், நதிதீரக் கோயில்களை அமைத்தனர். முன்னோர்களின் அனுபவங்கள் நம் வாழ்வின் அனுகூலங்கள்.

Comments