குரு பூஜை

இராமநாதபுரம் மாவட்டம், நல்லான்குடி விலக்கு, எக்கக்குடி கிராமத்தில் உள்ளது சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகளின் ஜீவ சமாதி. இவரது 115வது குருபூஜை விழா ஜனவரி 6 அன்று நடைபெற்றது. இவர், சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் சீடரும், சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் குருநாதருமா வார். செல்லப்ப சுவாமிகளின் ஜீவசமாதி திருப் பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகம் ஜனவரி 20ம் தேதி காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் மன்னார்குடியில் தோன்றி, கட்டிக்குளம், குவளைவேலி, புதுக்குளம் கிராமங்களில் கோயில்கள் எழுப்பிசித்துகள் பல செய்து, பக்தர்களுக்கு அருள்புரிந்தவர். அவர் வழிவந்த தஞ்சாக்கூர் சூட்டுக்கோல் செல்லப்ப
சுவாமிகள், தங்கள் குரு ராமலிங்க சுவாமிகள் பெயரில் பல இடங்களில் மடங்களை நிறுவினார்.
ராமலிங்க சுவாமிகள் மன்னார்குடியில் தமது தவ வலிமையால் பல அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார். தாம் விரும்பிய இடத்தில், திட்டமிட்டு குறித்த நாளில் ஜீவசமாதி அடைந்து அருள்பாலித்து வருகிறார். மன்னார்குடியில் ராஜ கோபால சுவாமி கோயிலுக்கு ஈசான்யத்தில், பாமணி நதிக்கரையில் அமைந்துள்ள ராமலிங்க சுவாமிகளின் திருக்கோயிலில் குரு பூஜை ஜனவரி 24ஆம் தேதி நடைபெறுகிறது.
மதுரையில் இருந்து மானாமதுரை செல்லும் வழியில் திருப்பாச்சேத்தியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது கட்டிக்குளம் கிராமம். இங்கு மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வந்த குப்பமுத்து வேளாளர் - கூத்தாயி அம்மாள் தம்பதியர், ஒரு முறை ராமலிங்க சுவாமிகளிடம் திருவருள் பிரசாதம் பெற்ற பாக்கியத்தால்,1858 ஜூலையில் அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ‘மாயாண்டி’ எனப் பெயரிட்டனர். இளம் வயதிலேயே அவருக்கு இறைஞானம் கிடைக்கப்பெற்றது.
ஒருநாள், தான் பூஜை செய்யும் உள்ளூர் ஐயனார் கோயிலுக்கு மாயாண்டியைக் கூட்டிச் சென்றபோது, மகனை வெளிக்கூடத்தில் அமர்த்திவிட்டு, கருவறைக்குள் சென்றார் குப்பமுத்து. ஐயனாருக்கு அபிஷேக, ஆராதனைகளை முடித்து விட்டு வெளியே வந்த அவர், தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது கண்டு அதிர்ந்தார். பீதியில், ஐயனாரப்பா எம் மகனைக் காப்பாத்து" என்று கருவறையை நோக்கிக் குரல் கொடுத்தார். பின் பயத்துடனும் திரும்பிப் பார்த்தால் நாகத்தைக் காணவில்லை.
தியானத்தில் இருந்து மீண்டிருந்த மாயாண்டியிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார் குப்பமுத்து. இதுபோன்ற சம்பவங்கள் தொடர, மாயாண்டியை ஒரு தெவ சக்தியாகவே ஊரார் பார்க்கத் துவங்கினர்.
பள்ளிப் படிப்பு ஒரு பக்கம்; ஆன்மிகத் தேடல் மறு பக்கம் என இருந்தார் மாயாண்டி. பெற்றோரின் வற்புறுத்தலால், புளியங்குடியைச் சேர்ந்த உறவுப் பெண் மீனாட்சியை மணந்தார். இல்லற வாழ்க்கையில் ஒரு மகனும் மகளும் உண்டு. காலம் செல்லச் செல்ல, மாயாண்டியை இறைவன் ஆட்கொண்டான். விளைவு, இல்லறம் இனிக்கவில்லை. தவத்திலும் சமாதி நிலையில் உடல் கூட வேண்டும் என்று விரும்பினார். அதற்கு தீட்சை பெற வேண்டுமே! உபதேசிக்க ஒரு குரு வேண்டுமே!
அவரது ஊரில் சூட்டுக்கோல் ராமலிங்கசுவாமிகள் கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கிறார் என்பதால், ராமேஸ்வர யாத்திரை செல்பவர்களும், சாதுக்களும் தரிசனத்துக்கு வருவார்கள். அவர்களுக்கு அறுசுவை உணவு அளித் தும், அடியார்களுக்கு பணிவிடை செய்தும் பெரியோர்களிடம் ஆசி பெற்றார் மாயாண்டி.
இவ்வேளையில்தான் ராமேஸ்வர யாத்திரை செய்தார் தஞ்சாக்கூர் செல்லப்ப சுவாமிகள். அவர், சூட்டுக் கோல் ராமலிங்க சுவாமிகளையே குரு வாகக் கொண்டு உபதேசம் பெற்று, சஞ்சரித்து வந்தவர். ராமநாதபுரம், திருச்சுழி என்று வெவ்வேறு இடங்களில் அரிய சித்துகளைச் செய்து சஞ்சரித்து வந்த செல்லப்ப சுவாமிகள் ஒருநாள், ராமநாதபுரம் கண்மா மடக் குழியில் இறங்கினார். வெகுநேரம் அவரைக் காணாமல் அன்பர்கள் தவித்தனர். ஆனால், சுவாமிகள் அப்போது ராமநாதபுரம் அரண்மனை வாசலில் இருந்து கொண்டு, ராஜாவுக்கு அவரது நோக்கான பச்சிலை மருந்துகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அன்பர்கள் இதைக் கண்டு அதிசயித்துப் போயினர். அன்று முதல் ராமநாதபுரம் ராஜா முத்துராமலிங்க
சேதுபதி அவரைப் பெரிதும் போற்றி வந்தார். இத்தகைய சிறப்புகளுடன் திகழ்ந்த செல்லப்ப
சுவாமிகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த மாயாண்டி சுவாமிகள், அவரையே குருவாகக் கொண்டார். செல்லப்ப சுவாமிகளும் மாயாண்டியை அரவணைத்து உபதேசம் செது வைத்தார். துறவறத்துக்கான திறவுகோல் கிடைத்தது. கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.
திருத்தலங்கள் பல தரிசித்தார். ஆங்காங்கே சமாதி நிலையில் கூடினார். மதுரை மீனாட்சி அம்மனும், திருப்பரங்குன்ற முருகனும் அவரை ஈர்த்தனர். இறுதியாக, அவர் வந்து சேர்ந்தது திருப்பரங்குன்றம், திருக்கூடல்மலை எனப்படும் காக புசுண்டர் மலைக்கு. அதைத் தன் நிரந்தர வாசஸ்தலமாக்கினார். அன்றிலிருந்து மேலும் புனிதம் பெற்றது அம்மலை. மாயாண்டி சுவாமிகளின் சித்து விளையாட்டுகளும் துவங்கின.
கட்டிக்குளத்தில் இருந்த சூட்டுக் கோல் ராமலிங்க சுவாமிகள், கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும், தீயவர்களுக்குத் தண்டனை தருவ தாகவும் இருந்தது. ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பின்னர் இந்த சூட்டுக்கோல் அவரது சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும், அதன்பின் அவரது சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது. இன்றைக்கும் இந்த சூட்டுக்கோலை மாயாண்டி சுவாமிகளின் சமாதியில் தரிசிக்கலாம்.
வழிபாட்டுத் தலங்கள்
*சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள் திருக்கோயில், கட்டிக்குளம். கைபேசி: 73736 42020 *சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள் ஜீவ சமாதி, மன்னார்குடி. கைபேசி: 94435 03926 *சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள் ஜீவசமாதி, எக்கக்குடி, இராமநாதபுரம். கைபேசி: 94427 51868 *மாயாண்டி சுவாமிகள், சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதி, திருப்பரங்குன்றம். கைபேசி: 94422 72220 *சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் இல்லம், கட்டிக்குளம். கைபேசி: 90473 12640 *சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் தவச்சாலை, கட்டிக்குளம். கைபேசி: 81221 41659 *சூட்டுக்கோல் இராமலிங்க சுவாமிகள் மடம், கோரிப்பாளையம், மதுரை. கைபேசி: 94436 19244 *சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மடம், ஆழ்வார்திருநகரி. கைபேசி: 94878 98346

Comments