கண்டோபாச்சி\

மகாராஷ்டிர மாநிலம், புனேவுக்கு அருகே உள்ள மலைக்கோட்டை நகரம் ஜேஜுரி. இத்தலத்தில் 2,355 அடி உயர மலை மீது அமைந்துள்ளது கண்டோபா திருக்கோயில். சிவபெருமானின் அவதாரமான ‘கண் டோபா, மராட்டிய மக்களின் பிரதான வழிபாட்டுக் கடவுளாக வணங்கப்படுகிறார். மலஹரி மார்த்தாண்ட், என்றும் பைரவ் என்றும் கண்டோபா இப்பகுதி மக்களால் போற்றப்படுகிறார்.
மகாராஷ்டிரா தவிர, கர்நாடகா, ஆந்திரப் பிரதேச மிகப் பழங்குடியினரான ‘டாங்கர்’ இன மக்களின் குல தெய்வமாகவும் இவர் விளங்குகிறார். ‘கண்டோபாச்சி ஜேஜுரி’ என்று வணங்கப்படும் இவரை, திருமணமான டாங்கர் இனத்தைச் சேர்ந்த புது மணத் தம்பதிகள் மலையேறி வந்து வணங்குவதை இன்றும் வழக்க மாகக் கொண்டுள்ளனர். அனைத்து மாநில மக்களா லும் வழிபடப்படுவதால் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது கண்டோபா திருக்கோயில்.
கருவறையில் மூலவர் கண்டோபா பெரிய சிலை வடிவில், கையில் கத்தியுடன் அமர்ந்த கோலத்தில், சிரித்த முகத்தோடும், பெரிய மீசையுடனும் காட்சியளிக்கிறார். மேலும், அருகில் கத்தி, டமரு, பரல் என்னும் மூன்று
ஆயுதங்களும் பல சிறிய சிலைகளும் காணப்படுகின்றன.
கண்டோபாவின் சரித்திரம், ‘மல்ஹாரி மாஹாத்மியம்’ மற்றும் ‘மார்த்தாண்ட விஜயம்’ ஆகிய நூல்களின் மூலமாகவும், நாட்டுப்புற பாடல்களிலிருந்தும் அறிய வருகிறது. கண்டோபா அசுரர்களை எதிர்த்து வெற்றி அடைந்ததையும், அவருடைய திருமணம் பற்றியும் இவை எடுத்துரைக்கின்றன.
‘மல்லா’ என்ற அசுரனும் அவனுடைய தம்பி ‘மனி’யும் பிரம்மாவிடம் வரம் பெற்று முனிவர்களையும் மக்களையும் துன்புறுத்தி வந்தனர். இந்திரனும், விஷ்ணுவும் தங்களால் இவர்களை வதைக்க இயலாது என்று கூறிவிட, சப்த ரிஷிகள் சிவபெருமானை சரண டைந்தனர். சிவபெருமான், மார்த்தாண்ட பைரவராக அவதரித்து அவ்வசுரர்களை வதைத்தார். இறக்கும் தறுவாயில், அசுரன் ‘மனி’ தமது வெள்ளை குதிரையை சிவபெருமானுக்குக் காணிக்கையாக்கி, எப்போதும் தாம் அவருடனே இருக்க வேண்டும் என்று வரம்
கேட்டுப் பெற்றான்.
பார்வதியும் கங்கையும் ‘மால்சா’, ‘பனாய்’ என்ற இரு பெண்களாகப் பிறந்து கண்டோபாவின் மனைவியராயினர். கோயிலில் பெரிய அணையா விளக்குகளில் பக்தர்கள் எண்ணெய் ஊற்றி வழிபடுகிறார்கள். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மஞ்சள் பொடியை அதிக அளவில் வாங்கி விக்ரஹங்களின் மேல்தூவுவது சிறப்பம்சம். கோயில் பூசாரிகளும் மஞ்சள் பொடியையே நெற்றியில் இட்டு வாழ்த்துகிறார்கள்.
சுற்றுப் பிராகாரத்தில் ஒரு பாறையையே அன்னபூரணி தேவியாக பக்தர்கள் வழிபடுகிறார்கள். இக்கோயிலில் பக்தர்கள் குதிரைக்கு கொள்ளு வாங்கி சமர்ப்பிக்கிறார்கள். குதிரை சிலையையும் வழிபடுகிறார்கள். இதனால் கண்டோபா தெய்வம், குதிரை உருவில் பக்தர்களின் கனவில் வந்து ஆசி வழங்குவார் என்பது ஐதீகம்.
மலை மீது அமைந்துள்ள இக்கோயிலை 200 படிகள் ஏறிச் சென்று தரிசிக்க வேண்டும். ஆனால், படியேறும் சிரமம் சிறிதும் தெரியாதவாறு சுற்றிலும் தென்படும் இயற்கைக் காட்சிகள் ரம்மியமாக நம் கண் களைக் கவர்கின்றன. மலை மேல் ஏறுகையில் ஆங்காங்கே கல்லால் ஆன மிகப் பெரிய தீப தோரணங்களைக் காண முடிகிறது. இவை குத்து விளக்கு போல் உயரமாக உள்ளன. மலையின் இருபுறமும் நிறைய தெய்வச் சிலைகளும், புகழ் பெற்ற தீப மாலைகளும் காணப்படுவது சிறப்பம்சம். தசரா பண்டிகையின்போது நடைபெறும் கத்திப் போட்டி இக்கோயிலில் மிகவும் விசேஷம். கனமான ஜேஜுரி கோயில் கத்தியையார் மிக அதிக நேரம் உயரத்தில் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்பதே போட்டியின் அம்சம்.
ஜேஜுரி, ஆன்மிகச் சிறப்போடு, சரித்திரப் புகழ் பெற்ற பட்டணமாகவும் விளங்குகிறது. இங்குதான் சத்ரபதி சிவாஜி, தன் தந்தை சஹாஜியை நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் சந்தித்தார். தென்னாட்டின் மிகப்பெரிய மலைக்கோட்டைகளில் ஒன்றாக விளங்கியது ஜேஜுரி. இங்குதான் சிவாஜி, தன் தந்தையுடன் சேர்ந்து முகலாயர்களை எதிர்ப்பது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தியது, சரித்திர முக்கியத்துவம் பெற்றது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் புகழ் பெற்ற பொருட்காட்சி அரங்கம் (Religious Fairs) ஏராளமான பக்தர்களைக் கவர்ந்திழுக்கிறது.
செல்லும் வழி: மகாராஷ்டிர மாநிலம், புனேயிலிருந்து தென் கிழக்கில் 47 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஜேஜுரி.

Comments