அரச மரத்தைச் சுற்றுவோம்!

வழிபாட்டில் ஒரு அங்கமாகவே திகழ்கிறது அரச மரத்தை வலம் வருவது. குறிப்பாக, திங்கட்கிழமையன்று அமாவாசை வந்தால் அதிகாலையில் அரச மரத்தை சுற்றி வழிபடுவது பல நன்மைகளைத் தரும். இதை அமா - சோமவார பிரதட்சணம் என்பார்கள். அப்படி வலம் வரும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
‘மூலதோ பிரம்ஹரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபிணே
அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜய தே நமோ நம’
108 முறை வலம் வருதல் மிகவும் சிறப்பு. இதனால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்!
‘மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்’ என்பது கீதையில் கண்ணன் வாக்கு. அரச சமித்துகளை மந்திர பூர்வமாக அக்னியிலிட்டு ஹோமம் வளர்க்க, கபம், பித்தம் போன்ற நோய்களை நீக்கும். அரச மரத்தை தொடக் கூடாது. ஆனால், சனிக்கிழமை மட்டும் தொட்டு வழிபடலாம்.
அரச மரம் சர்வ தேவதா ரூபம். வடமொழியில் இதன் பெயர் அஸ்வத்த விருட்சம். அரச மரத்தின் நிழல் போதம் என்ற தத்துவ ஞானத்தைத் தரும். சித்தார்த்தர் அரச மரத்தடியில் தவம் செய்து புத்தர் ஆனார். அதனால் இம்மரம் ‘போதிமரம்’ எனப் பெயர் பெற்றது. அரச மரத்தை வழிபடுவோரின் பாவம் மறுநாளுக்குள் அழிந்துவிடும்.
அரசமரத்தை திங்களன்று வலம் வந்தால் மங்கலம் உண்டாகும். செவ்வாய் தோஷங்கள் விலகும். புதன் வியாபாரம் பெருகும். வியாழன் கல்வி வளரும். வெள்ளியன்று வலம் வர, சகல சௌபாக்கியங்களும் கிட்டும். சனியன்று வலம் வர சர்வ கஷ்டங்களும் விலகி லட்சுமியின் அருள் கிடைக்கும். ஞாயிறு வலம் வர நோய்கள் நீங்கும்.
தென்காசியை அடுத்த ஆயக்குடி பாலசுப்ரமணியர் கோயிலில் அரச இலைகளின் மீது விபூதி வைத்து பிரசாதமாகத் தரப்படுகிறது. திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதி நியமம் ஆகிய சிவத் தலங்களிலும், திருக்கச்சி, திருப்புட்குழி, திருப்புல்லாணி போன்ற வைணவத் தலங்களிலும் அரச மரமே தல விருட்சமாக விளங்குகிறது.
அறிவியல் விளக்கம்: அரசும், வேம்பும் ஒன்றாக வளரும் இடத்தில் ஓர் உயிரியல் மின்சக்தி நிலவுகிறது. இவற்றை வலம் வரும்போது உடலில் உள்ள சுரப்பிகள் தூண்டப்பட்டு சுரப்பு நீர் சமப்படுத்தப்படுகிறது. அரச இலை அசையும்போது அதன் சத்து காற்றில் பரவுகிறது. விஞ்ஞான ஆய்வுப்படி ஓர் அரச மரம் நாள் ஒன்றுக்கு 1,800 கிலோ கரியமில வாயுவை உட்கொண்டு, 2,400 கிலோ பிராண வாயுவை வெளியிடுகிறது. அரச மரத்தை அதிகாலையில் வலம் வந்தால் அது வெளிவிடும் பிராண வாயுவில் ஓசோனின் தாக்கம் அதிகம் உள்ளதால் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. பெண்களின் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். ஆண்களுக்கு சுக்கில விருத்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைப்பேறு உண்டாகும்.
மரமே! அரச மரமே! நீ தேவ விருட்சம்! தேச கடாட்க்ஷம்! நீயே ஆதிபிராணன்! சூரியனை முதலில் உணரும் நீயின்றி இந்த பூமியில் எங்களுக்கு வாழ்வேது? இந்த பூமிக்கு அழகையும், எங்களுக்கு ஆரோக்கியத்தையும் தரும் உன்னை பணிந்து வலம் வந்து வணங்கி வளம் பெறுவோம்!

 

Comments