ஆண்டளக்கும் ஐயன்

‘என்னை மனங்கவர்ந்த ஈசனை - வானவர்தம்
முன்னவனை மூழிக் களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை...’

என்கிறார் பெரிய திருமடலில் திருமங்கை ஆழ்வார். அவரால் பாடப்படும் ஆதனூர், சுவாமி மலையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. காமதேனுவும், நந்தினியும் வழிபட்டதால் - ஆ - தனூர். பிருகு மகரிஷிக்குப் பார்க்கவி என்ற மகளாக மகாலக்ஷ்மி அவதரித்து, திருமால் அவளை மணந்து கொண்ட இடம். இந்திரன் சாப விமோசனம் பெற்ற தலம்.
பிரம்ம கபாலம் சிவன் கையில் ஒட்டிக் கொண்டதும், அதை எரித்துச் சாம்பல் ஆக்குமாறு அக்னியிடம் சொன்னார். அக்னியால் அதை எரிக்க முடியவில்லை. அவனுக்கும் பிரும்மஹத்தி தோஷம் பீடித்தது. இத்தலத்தில் தவம் செய்து சாபம் நீங்கியது. எல்லா தேவருக்கும் அக்னி பிரதிநிதி. அந்த அக்னியின் தோஷமும், இந்திரன் சாபமும் நீங்கினபடியால், தேவாதி தேவர்களின் தலம் இதுவெனப் போற்றப்படுகிறது.
மூலவர் ஆண்டளக்கும் ஐயன், தலையணையாக மரக்கால் வைத்துள்ளார். இடது கரத்தில் ஏடும், எழுத்தாணியும் உள்ளன. இப்பெருமானுக்கு இரண்டு கரங்கள் மட்டுமே. சயனத் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
தாயார் பார்க்கவி. ரங்கநாயகி, கமலவாஸினி, மந்த்ரபீடேஸ்வரி என்பவை தாயாரின் மற்ற பெயர்கள்.விமானம்: ப்ரணவாகாரம், விருட்சம்: புன்னை, பாடலி.
ஸ்ரீரங்கம் போல் ஏழு பிராகாரங்கள் இங்கே இருந்ததாம். அதேபோல் இரண்டு திருமணத் தூண்கள் உள்ளன. காஷ்மீர அரசனின் மகளைப் பிடித்த பிரும்மராக்ஷஸ் இவ்வூர் வந்ததும் ஓடி விட்டதால், அந்த மன்னன் கோயிலைப் புதுப்பித்துக் கட்டியதாக வரலாறு. பில்லி, சூன்யம் நீக்கும் பரிகாரத் தலமாக இது திகழ்கிறது.
கலியன் ஸ்ரீரங்கம் மதில் கட்ட பணமில்லையே என்று ரங்கனை வேண்ட, கொள்ளிடக் கரைக்கு வா. பணம் தருகிறேன்" என்றார் பெருமாள். வணிகர் வேடமிட்டு தலைப்பாகை, கையில் ஏடு, எழுத் தாணியுடன், மரக்கால் சகிதமாக வர, திருமங்கையார் ‘என்ன’ என்று வினவ, உம் பொருட்டே ஸ்ரீரங்கத்து அழகிய மணவாளன் எம்மை அனுப்பினான்" என்றார். காலி மரக்காலுடன் வந்துள்ளீரே" என்று கேட்க, எம்பெருமானைத் தியானித்தால் தேவைப் பட்டது மரக்காலில் வரும்" என்றார் வணிகர். இங்குள்ளவருக்குக் கூலி கொடுக்க, மணலை அளந்து போடும்" என்றார் மங்கை. வணிகர் போட்டதும் உழைத்தவருக்குப் பொன்னாகவும், உழைக்காதவருக்கு மணலாகவும் ஆனது. மந்திரவாதி என மக்கள் அடிக்க வர, வணிகர் ஓட, மங்கை குதிரையில் ஏறித் துரத்தினார். ஆதனூருக்கு ஓடி வரும்போது -
ஓலையில் கணக்கு எழுதியது (ஊர்) - ஓலைப் பாடி,
கம்பீரமாக நடந்து வந்த ஊர் - விஜயமங்கை,
திரும்பிப் பார்த்த ஊர் - திரும்பூர்,
ஆழ்வார் விரட்டிக் கொண்டு வருகிறாரா என்று மயங்கி நின்ற ஊர் - மாஞ்சேரி.
மரக்காலில் கைவைத்து அளந்தது வையாவூர் / வைகாவூர்.
புகுந்தது - பூங்குடி.
அமர்ந்தது - ஆதனூர் என்பர். இன்றும் அவ்வூர்கள் உள்ளன.

சரபோஜி மன்னனால் 25-ம் பட்டம் அஹோபில மடம் ஜீயர் ஸ்வாமிக்குக் கொடுக்கப்பட்ட ஊர் நரஸிம்மபுரம். 25, 26, 30, 37, 38-ம் பட்டம் ஸ்வாமிகளின் பிருந்தா வனம் உள்ளது. இலங்கையிலிருந்து அயோத்தி செல்லும்போது அனுமன் இரண்டு நாள் இவ்வூரில் தங்கி இளைப்பாறினாராம். ராமன் பின்னர் வந்து என் சகா வந்தாரா என்று கேட்டு திருவடியை வைத்துச் சென்றாராம்.
வீர சுதர்ஸன ஆஞ்சநேயர், யோக நரஸிம்மர் சன்னிதியும் உள்ளன.
மூன்று மைல் தொலைவில் கொள்ளிடக்கரை அருகே உள்ள கிராமத்திலிருந்து நித்யப்படி தளிகை வந்ததாம் - முற்காலத்தில் பெருமாளுக்கு. அந்த ஊருக்குத் தளிகையூர் என்று இன்றும் பெயர் (தளியூர்).
மண் அளந்த களைப்பில், பெருமாள் தரையில் படுத்துக் கொண்டாராம். மகாலக்ஷ்மியும், ஆதி சேஷனும் அவரைக் காணாமல் தேடி வருகிறார்கள். ஆதிசேஷன் அவரைப் பார்த்ததும் தரையில் சயனித்திருப்பதைக் கண்டு மனம் வருந்துகிறார். தன் மீது படுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறார். பெருமாள் களைப்பு மிகுதியால், நீதான் ஆதிசேஷன் என்று எப்படி நம்புவது?" என்று கேட்கிறார். தாங்களே எனக்கு சங்கு, சக்கரப் பொறி ஒற்றினீர்களே" என்று காட்ட, அவன் மேல் பள்ளி கொண்ட திருக்கோலம். ஆதிசே ஷனுடைய படத்தில் சங்கு, சக்கரத்தையும் சேவிக்கலாம்.
கல்வியில் சிறக்கவும், வறுமை நீங்கி வளம் பெறவும் பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள்.
தரிசன நேரம்: காலை 7.30 மணி முதல் 12.30 வரை. மாலை 5.30 மணி முதல் 8.30 வரை.
கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.

 

Comments