ஊர் செழிக்க அருள்புரிந்த ஆதினமிளகி ஐயனார்!

சிவகங்கை மாவட்டம், கீழக்கோட்டை என்னும் கிராமத்தில் இரண்டு சேமக்குதிரைகளின் நடுவில் பூரணா மற்றும் புஷ்கலா தேவியருடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஆதினமிளகி ஐயனார்.
தல வரலாறு: 187678ம் ஆண்டுகளில் (தாது வருடம்) ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின்போது, சிவகங்கை மாவட்டம் கீழக்கோட்டை எனும் கிராமத்தில் இருந்த மக்கள், அருகிலிருந்த எட்டு ஊர்களுக்குப் புலம் பெயர்ந்தனர்.
அப்போது, அப்பகுதியின் பஞ்சத்தைப் பார்வையிட வந்த சிவகங்கை மன்னர், கீழக் கோட்டை பகுதியில் குடிசை அமைத்து,  கண்ணாங் குடி என்னும் விவசாய கண்மாயை ஏற்படுத்திய
தோடு, அதற்குக் காவலாகவும், ஊர் செழிக்கவும் புலம்பெயர்ந்த மக்களின் குல தெய்வமான ஆதினமிளகி ஐயனார் கோயிலைக் கட்டியதாகத் தலவரலாறு.
இந்தக் கோயிலின் அருகிலேயே சிவகங்கை மன்னரின் குலதெய்வமான பொக்கிஷக் கோட்டை காளியின் கோயிலும் அமைந்திருக்கிறது. மன்னர் இந்தக் கோயிலைக் கட்டிய பிறகு, அங்கே பஞ்சமே ஏற்பட்டதில்லை என்கிறார்கள் ஊர்மக்கள்.
சேங்கையில் மீன் சேர்க்கும் விழா: விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்தி வரும் கண்ணாங்குடிக் கால்வாயில் மீன்களைப் பிடிப்பதற்கும் ஒரு வழிபாட்டு முறையைக் கடைப் பிடிக்கின்றனர் அங்குள்ள மக்கள். ஆண்டுதோறும் கண்ணாங் குடிக் கால்வாயில் சித்திரை மாதம் நீர் வற்றும் காலத்தில், ஏழு மண் பானைகளில் மீன்களைப் பிடித்து, ஐயனார் கோயில் அருகில் உள்ள சேங்கை என்னும் குளத்தில் விட்டுவிட்டு, அதன் பிறகே கண்மாயில் மீன் பிடிக்கிறார்கள். இதனால், ஊரில் தண்ணீர்ப் பஞ்சம் வராது என்பது மக்களின் நம்பிக்கை. இங்கு இருக்கும் ஆதினமிளகி ஐயனார் கோயிலில் ராஜ கோபுரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
விசேஷம்: மகாசிவராத்திரி நாளில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதனால், அனைத்துக் குடும்பக் கஷ்டங்களும், பணப்பற்றாக்குறையும் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்தக் கோயிலில், பூரணா புஷ்கலா தேவியர் சமேதராக கிழக்குப் பார்த்து அருள்புரியும் ஆதினமிளகி ஐயனாருடன், அகோர வீரபத்திரர், பைரவர், சின்னக்கருப்பர் மற்றும் பெரிய கருப்பர், கண்ணாங்குடியார், நீலி அம்மன், சப்த கன்னியர் ஆகியோரும் தனிச் சந்நிதியில் காட்சியளிக்கின்றனர்.
தினமும் காலை 6 முதல் 10 மணி வரையும், மாலை 4.30 முதல் 7.30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.
எப்படிச் செல்வது? காரைக்குடியில் இருந்து கல்லல் மார்க்கமாக சிவகங்கை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் ஆதினமிளகி ஐயனார் கோயிலின் வளைவு வரை செல்கின்றன. அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோயிலுக்குச் செல்ல ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. தவிர, திருப்பத்தூரில் இருந்து காலை 8.30, பிற்பகல் 12.30, மாலை 5.00 மணி ஆகிய நேரங்களில் நேரடியாக கோயில் வரை செல்வதற்குப் பேருந்துகள் உள்ளன.  

Comments