காலசர்ப்ப தோஷம் அகல...

உக்கிரமாக நடந்த போரில், இந்திரஜித் தொடுத்த சக்தி அஸ்திரத்தால் இலக்குவன் மயக்கமுற்று வீழ்ந்தான். அவன் உயிர் பிழைக்க சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வர அனுமன் இமயமலை நோக்கிப் புறப்பட்டான்.
அனுமனைத் தடுக்கும் நோக்கில் ராவணன், காலநேமி என்ற அரக்கனை அனுப்பினான். ஆனால், அவனை வதம் செய்தான் அனுமன். எனவே, ராவணன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சனியை அழைத்து, உன் பார்வை பட்டாலே அனுமன் போகும் காரியம் தடைபடும்" என்று சொல்ல, சனி தயங்கினான். கோபமடைந்த ராவணன், துணியால் மூடியிருந்த சனியின் வலது கண்ணைத் திறந்தான். சனியின் முதல் பார்வை ராவணன் மீது விழுந்தது. அதுவே அவனது அழிவுக்கான தொடக்கத்தைச் சொன்னது.
வேறு வழியின்றி சனி புறப்பட்டான். சஞ்சீவி மூலிகையைக் கண்டுபிடிக்கத் தாமதமாகும் என்றபடியால் அனுமன் அந்த மலையையே தூக்கிக்கொண்டு இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். இடையில் சனி வருவது அனுமனுக்குத் தெரிந்துவிட்டது. அவன் பார்வை தன் மீது படுவதற்கு முன்பாகவே, அவனை ஒரே அடியில் கீழே சாய்த்து அவன் முகம் தன்னைப் பார்க்காத வகையில் இடது காலால் அவன் தலையை நிலத்தோடு அழுத்திவிட்டான். வலது காலால் சனியின் கால் பகுதியை அழுத்தினான். அனுமனின் பிடியில் சிக்கிய சனி, என்னை விட்டு விடுங்கள். உங்கள் கட்டளைப்படி செய்கிறேன்" என்று அலறினான்.
இனி, எக்காலத்திலும் ராம நாமத்தை சொல்லுபவர்கள் மீது உன் பாதகப் பார்வை படவே கூடாது" என்று அனுமன் கூற, சனியும் ஒப்புக் கொண்டான். அதன் பின்னர் சஞ்சீவி மூலிகையால் இலக்குவன் மயக்கம் தெளிவுற்றதும் போரில், இராவணன் வீழ்ந்ததும் தெரிந்த புராண வரலாறு.
இராவணன், சனியைத் தாக்கிய இடம் பாலாற்றங்கரையில் உள்ள ஆம்பூர் நகரத்தை ஒட்டி இருக்கும் மலைப்பகுதியான ஆனைமடுவில் என்பது அந்தப் பகுதியில் நிலவி வரும் செவிவழிச் செய்தி. கி.பி. 1486ம் ஆண்டு கிருஷ்ண தேவராயரின் தளபதியான உத்தர ரங்கனாதன், ஆற்காடு நவாபுடன் போரிட்டான். ஆம்பூருக்கு அருகிலிருக்கும் உம்மராபாத் என்ற இடத்தில் போர் நடந்தது. போரில் நவாப் தோற்றான். அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆம்பூரில் ஆஞ்சநேயருக்கு ஒரு கோயிலைக் கட்டினான் உத்தர ரங்கனாதன் என்பது வரலாறு.
இன்று ஆம்பூர் நகரின் நெருக்கடியான பகுதியில் இருக்கிறது அந்தக் கோயில். அவருக்கு, ‘வீர ஆஞ்சநேயர்’ என்றும், ‘பெரிய ஆஞ்சநேயர்’ என்றும் திருநாமம். பதினொரு அடி உயரத்தில் சனியை தனது கால்களில் போட்டு அடக்கி வைத்திருக்கும் தோற்றத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். பாரம் பரிய ஆகம அமைப்புகள் இல்லாத சற்று வித்தியாசமான கோயில். உள்ளே நுழைந்ததும் பன்னிரண்டு அடி உயர தீபத் தூண் ஒன்று இருக்கிறது. பக்தர்கள் காரிய சித்திக்காக வேண்டிக் கொண்டு அதில் விளக்கேற்றுகிறார்கள்.
விளக்குத் தூண் தாண்டி கோயிலின் உள்ளே நுழைந்தால் ஆஞ்சநேயரை நேர்க்கோணத்தில் தரிசிக்க முடியாது. அக்கோணத்தில் மூலஸ்தானத்தில் ஆஞ்சநேயர் சுதைச் சிற்பமாகத்தான் இருக்கிறார். சனியை காலால் அழுத்திக்கொண்டிருக்கும் வீர ஆஞ்சநேயர், சுதை ஆஞ்சநேயருக்கு வலது பக்கத்தில் ஒதுங்கியே நிற்கிறார். மூலஸ்தானத்துக்கு அருகில் வந்தால்தான் வீர ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைக்கும்.
சுதை ஆஞ்சநேயர் இருந்த இடத்தில் முன்பு பாம்பு புற்று இருந்ததாகவும், ஒருமுறை பாலாற்று வெள்ளத்தில் அது கரைந்து போனதாகவும் சொல்கிறார்கள். பின்னர் காஞ்சி மகாபெரியவர் வழி காட்டுதலில் சுதை ஆஞ்சநேயர் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டார். கி.பி. 1400களில் கோயில் கட்டப்பட்டதாக வரலாறு சொன்னாலும் கி.பி. 242லேயே ஆஞ்சநேயர் சுயம்புவாக அங்கு தோன்றிவிட்டார் என்று கல்வெட்டு இருக்கிறது. சனி பகவானை தனது கட்டுப்பாட்டுக்குள் ஆஞ்சநேயர் கொண்டு வந்த ஸ்தலமாக இருப்பதால், சனி கிரக தோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க சிறந்த பரிகார தலமாக இது விளங்குகிறது. ஹனுமன் ஜயந்தி, ஸ்ரீராமநவமி ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் திரள்கிறது.
மாட்டுப் பொங்கல் நாளன்று இஸ்லாமிய மக்கள் சிலரும் கோயிலுக்கு வெளியே வழிபாடு செய்கிறார்களாம். கோலக்காய், வடை, வெற்றிலை மாலை ஆஞ்சநேயருக்குப் பிடித்தது என்பதால், தினசரி இவற்றில் ஏதாவது ஒன்றோடு காட்சியளிக்கிறார் ஆஞ்சநேயர். தமிழக இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான இக்கோயிலில் பகலில் அன்னதானம் நடக்கிறது. இஸ்லாமிய ஏழை பெண்களும் அங்கு சாப்பிட்டு மனநிறைவடைகிறார்கள்.
தொடர்புக்கு: 9443966433

 

Comments