யானை ஏறா மாடக் கோயில்

“கோச்செங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோயில்களில் ஒன்று இது” என்றார் நண்பர் பூதலூர் நடராசன்.
தஞ்சாவூர் ரயிலடியில் கிளம்பிய நமது பயணம் சுமார் 20 கி.மீ தாண்டி திருவையாறு - திருக்காட்டுப் பள்ளி வழியாக அரங்கநாதபுரம் கிராமத்தை அடைந் திருந்தது. திருச்சியிலிருந்து வந்தால் பூதலூர் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் வருகிறது அரங்கநாதபுரம். நெல் வயல்கள் சுற்றிலும் பசுமை போர்த்திக் கிடந்தன. வழி நெடுகே காவிரி, வாய்க்கால்களில் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது.
கோச்செங்கட் சோழன் என்ற கோச்செங்கணான் ‘களவழி நாற்பது’ நூலின் பாட்டுடைத் தலைவன். நாயன்மார்களில் ஒருவன். உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். அவனுக்குப் போர்களில் நாட்டமில்லை. ஆலயங்கள் எழுப்புவதிலேயே அதிக ஈடுபாடு கொண்டிருந்தான். இதையறிந்த சேரன் கணைக் கால் இரும்பொறை சோழ நாட்டை ஆக்கிரமிக்கப் போர் தொடுத்துச் சிறைப்பட்டான். புலவர் பொய்கையார் வேண்டுகோளுக்கு இணங்க சேரனை மன்னித்து விடுதலை செய்தான் கோச்செங்கணான். அதனால் எழுந்ததே களவழி நாற்பது.
கோச்செங்கணான் காவிரிக் கரையோரம் எழுபது சிவாலயங்களை எழுப்பினான். பெருமழைக் காலங்களில் மக்கள் அங்கு தங்குவதற்கும் ஏற்பாடு செய்தான். அவன் எழுப்பிய ஆலயங்களை ‘யானை ஏறா மாடக் கோயில்’ என்பர். திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் கன்னியாகுமரி கல்வெட்டுகளும் செங்கணானைக் கரிகாலன் வழித்தோன்றலாகவும், ஒன்பதாம் நூற்றாண்டு விஜயாலயச் சோழனுக்கு முன்னோராகவும் கூறுகின்றன. புறநானூறு, களவழி நாற்பது, சம்பந்தர், அப்பர், சுந்தரர் தேவாரப் பதிகங்கள், பெரிய திருமொழி, திருத்தொண்டத் தொகை, திருத் தொண்டர் திருவந்தாதி, பெரிய புராணம், திருவானைக்கா புராணம், கலிங்கத்துப் பரணி, மூவருலா போன்ற இலக்கியங்கள் மற்றும் அன்பில் செப்பேடுகளில் கோச்செங்கணான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
“கோச்செங்கட் சோழன் பற்றிச் சொல்லப்படுகிற புராணத் தகவலும் சுவையானது!” என்றார் நண்பர்.
வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் சிவலிங்கத்தின் மேல் விழாமல் காத்து வந்தது ஒரு சிலந்தி. காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டு வந்து அந்த லிங்கத்தை வழிபட்டு வந்தது யானை ஒன்று. அப்போது அது சிலந்தி வலையை அழித்துவிடும். சிலந்தி மறுபடியும் வலை பின்னி தன் வழிபாட்டைத் தொடரும். இது தினந்தோறும் நடந்து வந்தது. கோபப்பட்ட சிலந்தி யானையை தண்டிக்க எண்ணி அதன் துதிக்கையில் புகுந்தது. அதனால் இரண்டும் மடிந்தன.
அவற்றின் பக்திக்கு மெச்சிய சிவன் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறுபிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வ ஜன்ம வாசனை காரணமாக யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமானத்தின் மீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோயில்கள் கட்டினான் கோச்செங்கணான். அவை யாவும் ‘மாடக்கோயில்’ என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றே பூரட்டாதி நட்சத்திரக் கோயிலான அரங்கநாதபுரம் அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்.
பூரட்டாதிக்குத் தனிச் சிறப்பு உண்டு. பஞ்ச பாண்டவர்களில் சகாதேவன் ஜோதிடக் கலையை நன்கு கற்றவன். மகாபாரதப் போர் தொடங்குவதற்கான நேரத்தைக் குறித்துத் தருமாறு துரியோ தனன் அவனிடம் கேட்டான். “அமாவாசை திதி அன்று காலை சூரிய உதயத்தின்போது ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்” என்று கூறினான் சகாதேவன். இதைக் கேட்ட கண்ணன் தன் மாய சக்தியால் அமாவாசையை முந்தி வரச் செய்தான். தவறான நேரத்தில் துரியோதனன் போர் துவங்கினான். எதிரி வந்து கேட்டாலும் சாஸ்திரத்தை மறைக்காத நேர்மைக் குணம் கொண்ட சகாதேவன் பிறந்தது பூரட்டாதி நட்சத்திரத்தில்!
“பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளைப் படைத்தார் காலபைரவர். அவற்றை ஏழு யானைகள் மீது ஏற்றி காலச் சக்கரத்தை உருவாக்கிய தலம் இது. இங்குள்ள திருவானேஷ்வரை வணங்கினால் சகாதேவனைப் போல் சாஸ்திரங்களைக் கற்றுக் கொள்ளலாம். பூரட்டாதி நட்சத்திர நாளன்று இத்தலத்தில் வழிபட்டு வந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். ஆடை தானம் செய்தால் ஏழேழு ஜன்ம பாவங்கள் தலைமுறையைத் தொடராமல் விலகும். இங்குள்ள மூலவருடைய விமானம் கஜ கடாட்ச சக்தி விமானம். தேவர்களின் தலைவன் இந்திரன் ஐராவத யானை மீது ஏறிப் பூரட்டாதி நாளன்று இங்கு வழிபாடு செய்வதாக ஐதீகம்” என்றார் அர்ச்சகர்.
மூலவர் திருவானேஷ்வரர் கருவறையில் கிழக்கு நோக்கியும், அன்னை காமாட்சி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரரும், விநாயகப் பெருமானும் புடைப்புச் சிற்பமாக உள்ளனர். பிராகாரத்தில், சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடனும், துர்கை அம்மன், கஜலட்சுமி, பிரம்மா, நவக்கிரகங்கள் தனித்தனி சன்னிதிகளுடன் காணப்படுகின்றனர்.
கோயிலைத் தாங்கியவாறு ஒரு பிரம்மாண்ட யானை நிற்பதைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள குறுகிய படிக்கட்டுகளில் ஏறிச் சென்றால் சிவனைத் தரிசிக்கலாம். தீர்த்தக்குளம், ‘ஏழு கால தீர்த்தக் குளம்’ எனப்படுகிறது. சுமார் ஒரு கி.மீ. தொலைவில் காவிரியின் தென்கரை ஓடுகிறது. காஞ்சி மகா பெரியவர் இத்தலத்தில் வந்து ஒரு வாரம் தங்கி இருந்து தியானம் செய்துள்ளார்.
“மாதந்தோறும் பூரட்டாதி நட்சத்திரத்தன்று ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் கொண்டு வரும் நைவேத்தியங்களை வைத்துப் பகல் 12 மணி அளவில் அன்னதானம் செய்யப்படுகிறது” என்றார் ஒரு பக்தர். காவிரி தென்கரை மணலில் அமர்ந்து இரவின் அழகில்லயித்தோம்.
திசை பலன்கள்: பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வலிமைசாலிகள். ஆட்களை எடை போடுவதில் சமர்த்து. தொழிலில் ஆர்வமும் வி.ஐ.பி.நட்பும் உண்டு. மனைவி மக்கள் மீது பாசம் அதிகம். மக்கள் மதிக்க வாழ விரும்புவார்கள். சாதுர்யப் பேச்சால் மதிப்புப் பெறுவார்கள். செலவு செய்தாலும் சேமிப்பு விரும்பிகள். திட்டமிடுதல், காரிய வெற்றிக்கு உழைத்தல் பொதுக்குணம், சொல் பொறுக்க மாட்டார்கள். வாழ்க்கைத் துணை, பெரும்பாலும் பணக்காரக் குடும்பத்திலிருந்து வரும். சந்திரனின் சக்தியும், குருவின் இரட்டிப்பு அருளும் ஒன்று சேர்ந்த அமைப்பு. கும்பத்தில் மூன்று பாதங்களைப் பதித்து, பக்கத்து வீடான மீனத்தில் நான்காம் பாதத்தை நீட்சி செய்கிறது. முதல் மூன்று பாதங்கள் கணுக்கால்களையும், 4ஆம் பாதம் முன்னங்கால் களையும் ஆளுமை செய்கின்றன.
யாருடைய சொத்துக்கும் ஆசைப்பட மாட்டார்கள். தங்கள் சொத்தையும் யாருக்கும் விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள். சிறு வயதிலேயே பெரிய அனுபவங்களையும், கசப்பான சம்பவங்களையும் சந்திப்பார்கள். 27 வயது முதல் முன்னேற்றங்கள் ஏற்பட்டு பொருளாதாரம் உயர்வடையும். கல்வி ஆசிரியர்களாகவும், அறிவியல் அறிஞர்களாகவும், பலர் கல்லூரி பள்ளி போன்றவற்றை நிர்வகிப்பவர்களாகவும் இருப்பார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்காக இயக்கங்களை நடத்துவார்கள். இசை, இலக்கியத்தில் ஈடுபாடு உண்டு. பணம் புரளும் இடம், தங்கம் விற்குமிடம், எக்ஸிகியூட்டிவ் துறை போன்றவற்றில் பணிபுரிவார்கள். சிலர் விளையாட்டு வீரர்கள்.
முதல் பாதத்தின் அதிபதி செவ்வாய். நட்சத்திர அதிபதியாக குருவும், ராசியாதிபதியாக சனியும் வருகிறார்கள். ஏறக்குறைய 14 வயது வரை குரு தசை. நட்சத்திர நாதனான குருவும், பாதத்தின் அதிபதியான செவ்வாயும் நண்பர்கள். எனவே, சிறிய வயதிலேயே பொறுப்பாக இருப்பார்கள். மகான்களின் பார்வை படும். 15 வயதிலிருந்து 32 வரை சனி தசை நடக்கும். ராசிநாதனின் தசையாக இருப்பதால், ஓரளவு நன்றாக ஓடும். தொடக்கச் சிரமம் அதிகம். பாதி கொடுக்கும்; பாதி கெடுக்கும். 25 வயதிலிருந்து ஏற்றம்தான். காவல்துறை, ராணுவம், விமானப்படை என சிலர் போவார்கள். எஞ்சினீயரிங், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்டிரானிக்ஸ், கெமிக்கல் படிப்புகள் முன்னேற்றத்தைக் கொடுக்கும். பி.பார்ம், கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, ஜெனடிக் எஞ்சினீயரிங் போன்றவையும் எதிர்காலம் தரும்.
இரண்டாம் பாதத்தைச் சுக்கிரன் ஆள்வதால் வசீகரமும், கண்களில் காந்தப் பார்வையும் இருக்கும். ஏறக்குறைய 10 வருடம் குரு தசை. குருவும் சுக்கிரனும் சேர்ந்திருப்பதால் மந்திரமும் தெரியும்; தந்திரமும் தெரியும். சனியும், பாதத்தின் அதிபதியான சுக்கிரனும் நெருங்கிய நண்பர்கள். சனியின் மந்த புத்தி, காலம் தாழ்த்துதல் இவற்றைச் சுக்கிரன் அழித்து விடுவார். அதனால், பலர் அறிவும் அழகும் பொருந்தியவராக இருப்பார்கள். எந்தப் படிப்புக்கு எதிர்காலம் எனப் புரிந்து படிப்பார்கள். 11 வயதிலிருந்து 29 வயது வரை சனி தசை நடைபெறும். சிலர் பிறவிக் கலைஞர்கள். அவர்கள் திரைத்துறை சார்பான தொழில்நுட்பக் கல்வியைப் படிக்கலாம். விஸ்காம், ஃபேஷன் டெக்னாலஜி, ஆட்டோமொபைல் எஞ்சினீயரிங் போன்றவை சிறந்தது. இசை பயின்றால் நிச்சயம் சமூகத்தில் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்.
மூன்றாம் பாதத்தின் அதிபதி புதன். ராசியாதிபதியான சனிக்கு புதன் நட்பு. நட்சத்திரத் தலைவர் குரு. இந்தக் கூட்டணியால் இவர்கள் நிறைகுடமாக இருப்பார்கள். ஏறக்குறைய 6 வயது வரை குரு தசை. ப்ரைமரி காம்ப்ளக்ஸ் வந்து நீங்கும். 7 வயதிலிருந்து 25 வரை சனி தசை நடக்கும். சட்டென்று ஒரு மாற்றம் ஏற்படும். சிறிய வயதிலேயே ஆராய்ச்சி மனப்பான்மை இருக்கும். ஆசிரியருக்கே பல விஷயங்களை விளக்குவார்கள். படிப்பு, படித்ததைச் சொல்லிக் கொடுப்பது என்று வாழ்க்கை நகரும். நினைவாற்றல் மிகுதியாக இருக்கும். கல்லூரி முடிந்தவுடன் வெளிநாடுகளுக்கு ஆராய்ச்சிக்குச் செல்வோர் சிலர். 26 வயதிலிருந்து 42 வரை புதன் தசை நடைபெறும்போது அந்தஸ்து உயரும். புள்ளியியல், சட்டம், அக்கவுன்ட்ஸ், பொலிடிகல் சயின்ஸ், சி.ஏ., ஆர்க்கிடெக்ட், அனிமேஷன், கேட்டரிங் டெக்னாலஜி போன்றவை நல்ல எதிர்காலம் தரும்.
நான்காம் பாதம் மீனம். அந்த ராசியிலேயே குருவினுடைய நட்சத்திரத்தை உடையது பூரட்டாதிதான். பாதத்தின் அதிபதியாக சந்திரன் வருவதால் அளவு கடந்த கற்பனை வளம் இருக்கும். ஏறக்குறைய 3 வயது வரை குரு தசை இருக்கும். 4 வயதிலிருந்து 22 வரை சனி தசை நடைபெறும். வியக்க வைக்கும் பொறுப்புணர்வு சிலரிடம் காணப்படும். புத்தகத்தின் அட்டையைக் கூடக் கிழிக்காது பத்திரமாக வைத்துக் கொள்வார்கள். எல்லாவற்றிலுமே சிஸ்ட மேட்டிக்காக நடந்து கொள்வார்கள். முதலிடத்துக்கு நெருக்கமாகவே மதிப்பெண் எடுப்பார்கள். தனிமை, நிறைய படிப்பு என்று வாழ்க்கை நகரும். ஃபேஷன் டெக்னாலஜி, எம்.பி.ஏ. பைனான்ஸ், மெரைன் எஞ்சினீயரிங், இ.என்.டி., மனநோய் மருத்துவம் போன்றவை படித்தால் நிச்சயம் ஏற்றம் உண்டு.
பிற நட்சத்திரங்களில் பிறந்தவர்களும்: வண்டி வாகனம் வாங்குதல், கடன்களை தீர்த்தல், விக்ரகங்களை பிரதிஷ்டை செய்தல், மந்திரம் ஜபிப்பது, மந்திர உபதேசம் செய்வது நல்லது, கிணறு வெட்டுவது, மரக்கன்று நடுவது, செங்கல் சூளையிடுவது நல்லது.
கோயில் முகவரி: அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில், அரங்கநாதபுரம் போஸ்ட் - 613 104, திருக்காட்டுப்பள்ளி வழி, திருவையாறு தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 9 வரை. மாலை 5.30 மணி முதல் 7 வரை. உட்புறக் கிராமக் கோயில் என்பதால் போன் செய்து விட்டுச் செல்லவும்.
தொடர்புக்கு : 94439 70397, 97150 37810
அருகாமையில்: தஞ்சாவூர் பெரிய கோயில் உள்ளிட்ட தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் உள்ள ஏராளமான ஆலயங்கள். திருச்சியிலிருந்து போகிறவர்கள் திருச்சி உச்சிப் பிள்ளையார் உட்பட ஸ்ரீரங்கம், திருவானைக்கோயில் என்று வரிசையாகத் திட்டமிட்டுக் கொள்ளலாம்.
திருமணப் பொருத்தம் (பொது)
பூரட்டாதி 1, 2 - 3ஆம் பாதங்கள் கும்ப ராசி. குருவின் நட்சத்திரம். ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, மகம், பூரம், சித்திரை, மூலம், பூராடம், திருவோணம், அவிட்டம் பொதுவாகப் பொருந்தும். கும்ப ராசிக்கு மகரம் 12ம் வீடு. ஆகவே, மகர ராசிக்கு உரிய திருவோணத்தை சிலர் விலக்கி விடுவார்கள். கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம் ரஜ்ஜுப் பொருத்தம் இல்லாதவை. ஏக நட்சத்திரம் பொருந்தாது! அஸ்வினி, ஆயில்யம், ஹஸ்தம், ஸ்வாதி. அனுஷம், சதயம் ஆகியவை மத்திமம். பரணி, பூசம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி பொருந்தாது. பூரட்டாதி (4) மீனம் என்பதால் மிருகசீரிஷம், திருவாதிரை, சித்திரை(1-2),அனுஷம், மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகியவை உத்தமம். திருவோணம், பூராடம், கேட்டை, ஹஸ்தம், பூசம், ஸ்வாதி ஆகிவை மத்திமம்.

Comments