யே மாயி துகாய் தேவி

எருமைத்தலை அவுணனான மகிஷாசுரனை மாய்த்தவள் மகிஷாசுரமர்த்தினி என நாம் அறிவோம். அந்த மகிஷ வதத்தையொட்டி நடைபெற்றதுதான் ‘ரக்தபீஜன்’ என்ற அ”ர வதமும். அவனை தன் பிறிதொரு அவதாரமான ரேணுகா தேவியுடன் சேர்ந்து அழித்ததற்காகவும் போற்றப்படுகிறாள் அம்பிகை. தன் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கேயே இருவரும் காவல் தெய்வங்களாக எழுந்தருளியும் விட்டனர். அப்படிப்பட்ட புண்ணியத் தலம்தான் ராஷின்.
ராஷினை ஆண்ட ரக்தபீஜன், தான் அழிவற்றவன் என்ற நினைப்பில்,தோழர்கள் சும்ப - நிசும்பர்களுடன் சேர்ந்து அனைவருக்கும் பல கொடுமைகளை இழைத்து வந்தான். அவன் உடலிலிருந்து பூமியில் தெறித்து விழும் ஒவ்வொரு ரத்தத் துளியிலிருந்தும் அவனையொத்த பண்புடைய மற்றொரு ரக்தபீஜன் உயிர்த்தெழுவான் என்பது பரமசிவனிடமிருந்து அவன் பெற்ற வரம். பொறுமையிழந்த ரிஷி - முனி, தேவர்கள் ஆதிசக்தியிடம் முறையிட்டனர். அதன்படி ராஷின் அருகில் சுமார் 20 கி.மீ.தொலைவில் குலதாரண் என்ற இடத்தில் அவதரித்த ஜகதாம்பாவின் நோக்கத்தை அறிந்த கோல்ஹாபூர் மஹாலக்ஷ்மியும், அவளது காவல் தெய்வம் கேதாரேஷ்வர் எனும் ஜோதிபாவும், ‘யே,மாயி’ (வாருங்கள் அன்னையே) - என வரவேற்றனர். பின்னர் அதுவே ராஷின் தேவியின் பெயராக அமைந்துவிட்டது
ரக்தபீஜன், சும்ப - நிசும்பர்களுடன் கடுமையாகப் போரிட்டாள் அன்னை. கோரத்தின் மொத்த உருவாக, கோபக்கனல் தெறிக்கும் விழிகளுடன், தலை முதல் பாதம் வரை அச்சமளிக்கும் ரத்தச் சிவப்பு வண்ணத்தில் ஒளிரும் மேனியுடன், பலவித ஆயுதங்கள் ஏந்தி ருத்ர தாண்டவமாடினாள். அசுரர்களையே உண்ணத் தொடங்கினாள். அசுரப் படை அழிந்தாலும், அவனது உடலிலிருந்து பூமியில் விழுந்த உதிரத் துளிகளினின்று பல ரக்தபீஜர்கள் உயிர்த்தெழுந்ததைக் கண்டுப் பீதியடைந்த தேவர்கள் மாஹூர் ரேணுகா தேவியைச் சரணடைய, அவளும் ரக்த தந்திகா மகா காளி உருவெடுத்து, ‘துகாய் தேவி’ என்ற நாமத்துடன் களம் புகுந்தாள்.
‘மிருதுவான நுண்ணிய மணல் துகள்கள்’ எனப் பொருள்படும் பெயருடைய ரேணுகா தேவியின் நீண்டுத் தொங்கிய நாக்கு, சாட்டை போல் சுழன்று அசுரர்களை வாயினுள் இழுத்துக் கொண்டது. ரக்த பீஜனின் உதிரம் பூமியில் விழாமல் நாக்குத் தடுத்து உறிஞ்சிக் கொண்டது. போராடி, வலுவிழந்த அசுரனை இருதேவியரும் பிறகு வெகு எளிதாக வதம் செய்து விட்டனர். அசுரப் படையில் மிஞ்சியவர்களை யே மாயி தாமரைப் பூக்களாக உருமாற்றி விட்டாள். அடுத்துக் களம் புக வேண்டிய மகாமந்திரி சுத்ரிகன் குணசாலி. அவன் யே மாயியைப் போற்றித் துதித்துச் சரணடைந்தான்.
ராஷின் நகரைச் சீராகப் பரிபாலித்து, மக்களின் துயரங்களைப் போக்கவும் அவனைப் பணித்தாள். தான் எப்போதும் தேவியருடன் உடனிருந்துப் பணி விடையாற்றவும் வரம் பெற்றான் ”த்ரிகன். எப்படிச் சக்தி பீடங்களில் காலபைரவர் துணையிருக்கிறாரோ, அப்படியே மாயி ஆலயங்களில் சுத்ரிகன் வீற்றிருப்பான். சுத்ரிகனை வழிபட்ட பிறகே ஆலயத்திலிருந்து விடைபெற வேண்டும் என்பது நியதி!
தேவியரின் ‘பால்கி’ (பல்லக்கு) ஊர்வலம் செல்லும் தெருவில் சென்றால் சிறு குன்று போல் தோற்றமளிக்கும் மேடான பகுதியில் ஆலயம் நெடி துயர்ந்து நிற்கிறது. படிக்கட்டுகள் ஏறிச் சென்றுதான் சக்திபீட நாயகியரைத் தரிசிக்க இயலும். ஒன்பது நிலைகள் கொண்ட கம்பீரமான கோபுரம். சிகரத்தில் கலசங்களின்றி வட்ட வடிவக்கல் பதிக்கப்பட்டு அதில் வண்ணக் கொடி படபடக்கிறது. ஒவ்வொரு நிலையிலும் உள்ள அநேகப் பிறை மாடங்களில் கடவுளரின் சிலைகளும், தெய்வங்களின் அவதாரத் திருமேனிகளும் அலங்கரிக்கின்றன. அசுரனின் சிரசும் சிலாரூபமாக வைக்கப்பட்டுள்ளது. விசாலமான திறந்த வெளிப்பிராகாரம்.
பரந்து விரிந்த மண்டபத்திலுள்ள தூண்கள் சிற்பிகளின் கைவண்ணத்தில் மிளிர்கின்றன. நுழைவாயிலுக்கு எதிரே சரவிளக்குத் தூண்கள் மேலும் அழகூட்டுகின்றன. சுற்றுச் சுவர்கள் கருஞ்சிவப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளன. நம் கவனத்தை மிகவும் கவர்வது இங்குள்ள ஈசனின் லிங்கத் திருமேனியும், எதிரே கம்பீரமாய் அமர்ந்திருக்கும் நந்தியம்பெருமானின் சிலையும்தான்! இவ்வாலயத்தை நிர்மாணித்தவர்கள் யார் என்பது தெரியாமலிருப்பது ஆதங்கத்தைத் தருகிறது.
விசாலமான கருவறையில் பூரண அலங்காரத்தில் அருள்பாலிக்கும் தேவியரைத் தரிசிக்கலாம். சுமார் ஆறு அடி உயரத்தில் கருமை நிறக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளனர். ஆம்; போர்க்களத்தில் இருந்தக் கோர ரூபத்திலேயே இங்குத் தரிசனமளிக்கின்றனர். நாம் மனதில் நினைக்கும் விதத்தில் இந்த ஜகதாம்பாவை பார்க்க இயலும் என்பது ஆச்சரியமளிக்கும் விஷயம்! தன்னைச் சரணடைபவர்களுக்குக் கருணாமூர்த்தியாய், அன்பும், பாசமும் கொண்டவளாக எங்கும் அமைதி நிலவப் பாடுபவளாய்த் தோன்றுவாள். அதேசமயம், அகங்காரம், குரோதம் கொண்டவர்களின் பார்வைக்குக் கோபக் கனல் வீசும் சாமுண்டியாகத் தோற்றமளிப்பாள்! ‘அம்(ச்)சி தேவி அஹீ யேமாயி தேவி’- எங்கள் தெய்வம் யேமாயி தேவி - என்ற பக்தர்களின் கோஷம் எங்கும் எதிரொலிக்கிறது.
சற்றுத் தள்ளிக் கிழக்குப் புறம் உள்ளது சுத்ரிகனின் சன்னிதி. அங்கே அன்பர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் இருப்பதைக் காணலாம்! கோயிலில் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. அதிகாலை நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டுத் தேவியருக்கு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் செய்விக்கப்படுகிறது. நண்பகலில் மகாநைவேத்தியம், இரவு எட்டு மணிக்கு அர்த்தஜாம பூஜை. பால் பேடா நிவேதிக்கப்படுகிறது. மகா சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி தசரா ஆகியன வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
செல்லும்வழி:
மகாராஷ்டிர மாநிலம், அகமத் நகர் ஜில்லாவுக்குத் தெற்கே 90 கி.மீ. புனே நகரிலிருந்து கிழக்கே சுமார் 115 கி.மீ.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 12 வரை. மாலை 5 மணி முதல் 8 வரை.

 

Comments